About Me

2013/04/19

வானவில்


தன்னைக் கருக்கி, மெழுகுதிரிக்கு ஒளியூட்டும் தீக்குச்சி!
தீக்குச்சியின் தியாகத்தை நினைத்து கண்ணீர் வடிக்கும் மெழுகுதிரி!

அன்பும் இவ்வாறே..........இருவரும் ஒருவரையொருவர் உணர்ந்து நேசத்தைப் பகிரும் போதே, அது ஆயுள் முழுதும் நீள்கின்றது!
-------------------------------------------------------------------------------------------


பயமென்ற ஒரு சொல்லே போதும். இயக்கமுள்ள நம் வாழ்வை முடிவுக்குக் கொண்டு வரும்.
----------------------------------------------------------------------------------

சவால்களுடன் நாம் போராடும் போராட்டக்களமே வாழ்க்கை. துணிவு, விவேகம், முயற்சி எனும் ஆயுதங்கள் நம்மை வெற்றி என்னும் பக்கம் தள்ளிச் செல்லும்.
---------------------------------------------------------------------------------------

பூமியைப் பிளந்து செல்லும் வேர்களால்தான் தண்டுகளும் உறுதியாகத் தாங்கப்படுகின்றன. அதனைப் போல் மனதைப் பிளக்கும் கஷ்டங்கள் வந்தால்தான் நம் மனதிலும் வாழ வேண்டுமென வைராக்கியமும் வளர்க்கப்படும். வாழ்க்கையில் நம்பிக்கை கொள்வோம். அவ் வாழ்வையும் வெற்றி கொள்வோம்.
-----------------------------------------------------------------------------------------


சந்தர்ப்பவாதங்களே நம்மைக் குற்றவாளியாக்குகின்றன. அப்பொழுதெழும் விமர்சனங்கள் கூட  நம்மை நோக்கி பிறரைத் திசை திருப்புகின்றன.
-------------------------------------------------------------------------------------------


ரசிக்கும் மனதிருந்தால்
இயற்கை கூட பேரழுகே!
ரசனை  நம் வசமானால்
சோகம் கூட வெறுந் தூசே!

 ------------------------------------------------------------------------------


உணர்வோடு, உயிரோடு
மனதோடு , வாழ்வோடு
என்னோடு, உம்மோடு
உலகத்தின் இயக்கத்தோடு
இரண்டறக் கலக்கும் எம் தமிழுக்கு
என்றும் வீர வணக்கம்!

- Ms. Jancy Caffoor -



நீ காதல் சொன்ன போது

முதன் முதலாய்
உணர்வுக்குள் ஏதோ பிசைவு!

கண்களை இறுக்கிக் கொள்கின்றேன்
காதோர ஒலியதிர்வுகள் மெலிதாய்
சிணுங்குகின்றன உன் பெயர் சொல்லி!

இருண்ட கானகத்திலிருந்து ஓர்
ஒளிப்பிழம்பாய்
நீ என்னை ஊடுறுவுகின்றாய்
பட்டாம் பூச்சியாய் சிறகடித்து!

நீ எனக்குத்தான்............
உள்ளுணர்வுகள் சேமிக்கப்படுகின்றன
மனதுக்குள் ரகஸியமாய்

எனக்காக வாழ்ந்த நான்
முதன் முதலாய் உனக்காய் வாழ்வதாய்
உணர்கின்றேன் தனிமை துறந்து!

உறக்கமும் பசியும் துக்கமும்
துறந்து போக...........
பறக்கின்றேன் சிறகடித்து உன்னுடன்
வரம் நீயான சந்தோஷிப்பில்!

உன்னிழல் பற்றும் நிஜங்களுடன்
ஊர்கோலம் போகும் நம் நினைவுகள்
வர்ணக் கலவையாய் - நம்
வாலிபத்தின் சுவரேறி குந்தியிருக்கின்றன!

ஒருவரை ஒருவர் அறியாது
இத்தனைநாள் எங்கிருந்தோம்.......
வினாக்கள் நெஞ்சுக்குள் முகிழ்க்கும் போது
உன்னிடம் என் உதடுகள் குவிகின்றன!

உன் அழகுப் பார்வையில் எனை மேய்ந்து
இறுக்கி அணைக்கின்றாய்.......
இனி பேசுவது நாமல்ல...
நம் உணர்வுகளும் உதடுகளும் தான்!

காதலைச் சிதறியவாறு
திரும்பிப் பார்க்கின்றாய் என்னுள் மின் பாய்ச்சி!





2013/04/17

மருந்து



நள்ளிரவின் நிசப்தத்தில் என் அறைக் கதவு பலமாக தட்டப்படுகின்றது. அப்பாதான் பெயர் சொல்லி அழைத்தார். வெளியே வந்த போது அவரது கைகளால் மார்பினைப் பொத்தியவாறு வலியால் துடித்துக் கொண்டிருந்தார். 

"நெஞ்சுக் குத்துது மக........ரெண்டாவது அட்டாக் வந்திட்டுது போல"

அவர் சிரமப்பட்டு சொன்னபோது, என் மனமும் இற்று துடிக்கத் தொடங்கியது. 

"உங்களுக்கு ஒன்னும் ஆகாதுப்பா"

அப்பாவைத் தைரியப்படுத்தினாலும் கூட, மனசு அப்பாக்கு ஏதும் நடந்திடுமோ என்று பயந்தது..

அந்த நடுநிசி நேரத்தில் எங்கள் வீட்டில் மட்டும் விளக்குகள் எரிந்து கொண்டிருக்க, கொடுக்க வேண்டிய மருந்துப் பக்கெற்றுக்களை துலாவுகின்றேன்.. 

அப்பா தொடர்ச்சியாக மருந்து பாவிப்பதில்லை என்பதால், மருந்துகள் தீர்ந்திருந்த விடயம் கூட தெரிந்திருக்கவில்லை. வருத்தம் வந்தால் எப்போதாவது பாவிப்பார்.  எப்படியோ தேடி கண்டுபிடித்து இரண்டு அஸ்பிரின் சார் மருந்து வில்லைகளை குடிக்கச் செய்தேன். அப்பா நாளைக்கு வாங்கித் தாரேம்பா "

என் உறுதி மொழியில் அப்பாவும் சற்று வேதனை துறந்து சிரமப்பட்டு தூங்கிய போது கண்கள் பனித்தது. 

"பிரிந்திருப்பதை விட பிரியப் போகின்றோம் என நினைக்கும் போது அதன் வலி அதிகம்."

நாளை கட்டாயம் அப்பாக்கு பாமஸில மருந்து எடுத்துக் கொடுக்கணும். மனசு பல தடவை மனப்பாடம் செய்ய உறங்கிப் போனேன்......

அதன் பின்னர் விரட்டி வந்த இரண்டு நாட்களும் மன அழுத்தங்களுடன் இறங்கிப் போனது. அந்த விடயத்தை மறந்தே போனேன்...

"மக மருந்து வாங்கினீங்களா"

அப்பா கேட்ட போது மனசுக்கு யாரோ சம்மட்டியால் அடித்த வலி...

"சொறிப்பா.........மறந்திட்டன், நாளைக்கு வாங்கித் தாரேன்"

நான் பதிலளித்த போது அப்பா எதுவுமே பேச வில்லை...

அந்த மௌனம் என் வலியை இன்னும் அதிகரிக்கச் செய்தது. இரண்டு ஏச்சு ஏசியிருந்தாலும் கூட அந்தக் கணத்துடன் கோபம் கரைந்திருக்கும் இப்படி மனசு வலித்திருக்காது...

அப்பா சாறீப்பா...........மனசு மீண்டும் எனக்குள் பல தடவைகள் மன்றாடியது.

அப்பா அந்த மௌனிப்புக்களுடனேயே உறங்கிப் போனார்...

நானோ குற்ற உணர்ச்சியில் உறக்கத்தை தொலைத்தவளாக அழ ஆரம்பித்து விட்டேன்..

"அப்பா........என்னை மன்னிச்சுடுங்கப்பா"

விடிந்ததும் அப்பாக்கான மருந்துகள் கைகளில்!

2013/04/16

உன்னால்


ஒளி தேடி மதியிழந்து சிறகறுக்கும்
விட்டிலாய்
வீழ்ந்து போகின்றது என் வாழ்க்கை
உன்னால்!

மனப் பஞ்சுக் குவியலுக்குள்
மடிந்து கிடக்கும் கனவுகளை உரச
உன் வார்த்தையெனும்
சிறு குச்சி போதும்!

வாலிபத்தில் வில்லொடித்து
கடி மணம் புரிந்த உனக்கு
கலிகால சூழ்ச்சிகளைக் கற்றுத் தர
கால அவகாசம் தேவையில்லை!

சிதைக்கப்பட்ட என்னிலிருந்து
சீழும் இரத்தமாய் ஏதோ வடிகிறது
யார் யாரோ தடம் பதித்து நாடியளக்கின்றனர்
நான் அழவேயில்லை
உன்னிலிருந்து விடுதலை தந்தவன்
நீதானே!

உணர்வறுந்த கனவோரம்
மயானவெளியில் நாட்டப்படுகையில்
அயர்ந்த கண்கள் விரிகின்றன
விழித் துவாரத்திலிருந்து வீச்சோடு கண்ணீர்
சிறுதுளியாய்!
இது ஆனந்தக் கண்ணீரோ!

எத்தனை தடவைகள்
உன்னால் நான் புதைக்கப்பட்டாலும்
எழுவேன் விதைகளாய்
அழிவு எனக்கில்லை!

- Jancy Caffoor-
     16.04.2013