2012/07/05
வருடும் நினைவு!
மயிலிறகாய் மெல்ல மெல்ல..........
அவன் நினைவுகளுனைக் கிள்ளக் கிள்ள
பஞ்சனையுன் மேனியில்.......
காதலின் ஸ்பரிசங்கள் மெலிதாய் வீழ்ந்திடற
மனசோ இதமாய்.......
பனித்துளிகளுடன் மோதித் தவிக்க
இந்த இரவின் வெப்பத்திலும்......
ஏக்கங்களுனைத் துகிலுரிக்க
கனவுகளின் முகப்பாய்
முகம் பார்த்துச் செல்லும்............
அவனேயுன் கவிதை யினி.....
ஜன்ஸி கபூர்
மனசு
பொழுதின் புலர்வினில்
இருள் துடைக்கும் சூரியனாய் நீ!
தனி வழிப்பயணத்தில் - என்
கரந்தொடுக்கும் வழித்துணையாய் நீ!
படிக்க அமர்கையில் - வந்தமரும்
மனப்பாட வரிகளாய் நீ !
என் கைபேசி அழைப்பினில்
ஒலிக்கும் குரலாய் நீ !
கண்ணாடி முன்னின்றால்
கண்ணடிக்கும் விம்பமாய் நீ!
இப்போதெல்லாம் நான்
உன் விதி வழி நகர்வில் தான்!
இத்தனைக்கும் நீ.........
என் மனசு !
ஜன்ஸி கபூர்
2012/07/02
சிறகறுந்து !
நள்ளிரவின் நிசப்தத்தில்
ஊரே மௌனித்துக் கிடக்க
என்னுள் மட்டும் ஏதோவொன்று
உயிர் பிசைகின்றது!
நெஞ்சுக்குள் அருட்டும் அருவமாய்
கண் வழியிறங்கியது பார்வை பிடுங்க..
ஐயகோ
சிறகுடைந்து வீழ்கின்றேன் அனலில்
உனையிழந்த வெறுமையில்!
அன்றோர் நாள்
எனக்காய் முகிழ்த்த - உன்
ரகஸியக் கவிதை மட்டும்
என்னுள் வீழ்ந்து கிடக்க
நீயோ
தொலைதூரம் போகின்றாய்
என்னுள் வலி தந்தபடி!
விழியிறுக்கின்றேன் உனை மறக்க
நீயோ
வீம்பாய் முறைக்கின்றாய் என்னுள்!
உன் மௌன யுத்த உரப்பில்
என் மனம் எரிந்து போக
வெற்றிடபூமிக்குள் சுவாச மறுத்து
சிறகுடைந்து போகின்றேன்!
எங்கே சுற்றினாலும்
உள்ளம் பற்றும் காதலில்
ஊமைவலி கண்டு
உயிரறுந்து போகின்றேன் !
உன் வேரறுப்பில்
உலகம் வெறுத்தே நானும்
பயணிக்கின்றேன் மயானம் தேடி
இனியுன் காலடிசேராமலே!
என் சமாதியில் வீழ்ந்து கிடக்கும்
உனக்கான கவிதைகளை மட்டும்
நட்டிவிடுவுன் தேசத்தில்
நாளை என் கவிதைகளாவது உயிர்க்கட்டும்!
ஜன்ஸி கபூர்
2012/07/01
அட...செல்லமே!
ஏந்திழையே!
நமக்குள் முகிழ்த்தது நட்பென்று
என்னுள் வீறாப்புத் தொட்டாலும் .................
ஏனோ......
உயிரோர வேலிகளில்
எட்டிப் பார்க்கின்றாய் வாஞ்சையுடன்
நீயென் காதலியாய்!
சகியே.!
சல்லடை போட்டுத் தேடுகின்றேன்
உன்னை......!
மயிலிறகின் ஸ்பரிசமாய்
என்னுள் வீழ்ந்துகிடக்குமுன்னுள்
என்னுயிர் நாட்டிட!
வெட்ட வெளியில் மோகம் பிழிந்து
எட்டிப் பார்க்கும் நிலாவாய் நீ காத்திருக்க..........
மொட்டைமாடிக் குளிரில்
லாப்டொப்பின் நரம்புகளாய்
நான் புடைத்திருக்க......
பயணிக்கின்றேன் உனைக் கோர்த்தவாறே!
உன்னிதழில் எனைப் பிழிந்து
விழியுறக்கம் தனைக் கலைத்து- நம்
நெஞ்சுக்குள் சாரல் துளைக்குமந்த
நெருடலே "காதலாய்" மொழி பேச............
கைபேசியினில் உரசிடும் வார்த்தைகளில்
சித்தம் கரைந்து கிடக்கின்றேன்- உன்னுள்
என் முத்தத்தை நனைத்தவாறே!
என் வெம்மையை உடைத்தெறிந்தே............
உன்னுள் எனைப் பத்திரப்படுத்தும்
உன் ஆன்மாவுக்குள்
நானே நிரந்தரமாகின்றேன்
இப்போதெல்லாம்!
என் கவித் தேசத்தின் உலாவுகை
இப்பொழுதெல்லாம் - உன்
விரல் பற்றியே எழுதுகின்றது
உன் காதலை என்னுள்
வார்த்தபடி!
மேகம் பிழிந்தோடும்
தூறல்கள் நீயாக !
உன்னுடன் சயனிக்கையில்
நீயே என் கவிதைகளாய்
களமிறங்குகின்றாய்
உன் செவ்விதழ் வடிக்கும்
குறும்புகளில் நசிந்தும்............
என் விரல் ரேகைக்குள்
தடம் பதித்தும்.............
கூத்தடிக்குமுன்னை
பிரியேன் ஓர் பொழுதும்!
அடச்....செல்லமே!
அறிவாயா..இப்பொழுதெல்லாம்............
ஊடலுக்குள் உனை வீழ்த்தி
கூடிக் களிக்குமென் னாசைகள்
காதல் அவஸ்தைகளாய்
அறுத்தெறிகின்றதுன் மௌனத்தையும்
உயிரை வருடியபடி!
ஜன்ஸி கபூர்
Subscribe to:
Posts (Atom)