About Me

2012/07/14

பரீட்சை !



சூரிய உதயத்தின்
இரகஸியங்களை அம்பலப்படுத்தும்
கைபேசி அழைப்புக்களாய் 
சிரிக்கும் சிட்டுக்களின் குரலேனோ
இன்னும் 
ரசிக்கவேயில்லை !

விரல்களின் ஸ்பரிசத்திலே
துவண்டிருக்கும் 
புத்தகங்களின் சிலிர்ப்பேனோ
இன்னும் 
சிந்தைக்குள் குவியவுமில்லை!

வண்ணத்தியின் சிறகுடைத்தே
கைப்பற்றும் 
அறிவின் மனனத்திற்காய்
அலையும் மனசின் அங்கலாய்ப்பும்
இன்னும் 
தணியவேயில்லை!

உணர்வுகள் களைந்த
இயந்திரமாய்
உருமாறிய மனதும்  
பாட வரிகளுள் இளைப்பாறிக்
கிடக்கும் ஒலியலைகளும்
இன்னும் 
தொலைவாகிப் போகவேயில்லை!

விழிக்குள் சுருண்ட கனவெல்லாம்
வில்லத்தனத்தோடு
பரீட்சையாய் முறைக்கையில் 
உதடுகளின் மௌனித்தலில்
கிறங்கிய பாட ங்களின் இறக்கம்
இன்னும் 
இறக்கவேயில்லை ஞாபகம் விட்டு!

என் உணர்வு தேசத்தின்
அறிவிப்புக்களெல்லாம்
பரீட்சையில் விழுந்து கிடக்க 
நாட்களோ 
நாடியறுத்து
மனவழுத்தத்தின் வீரியத்தை
இன்னும் 
நெஞ்சிலே பரப்பத்தான் செய்கிறது!

மனமோ வெற்றி யுத்தத்திற்காய்
பரீட்சைக் களத்தில் போராட 
பல 
நம்பிக்கை எதிர்வுகூறலில்
இரவும் பகலும் நசிந்து கிடக்கின்றன
தோல்வியின் மீட்சிக்காய்!

ஒளி விரல்களில்- என்
சுபீட்சம் பூட்டி 
விடைத்தாள்களின் தடத்தில் 
பயணிக்கும் என் பேனாச் சுவடுகளால்
நாளை 
என் இலட்சியங்கள் பேசப்படலாம்
நம்பிக்கைதனை உள்வாங்கியபடி!

ஜன்ஸி கபூர் 







2012/07/11

பெருமிதம்


ஒவ்வொரு பொழுதுகளும் அழகாகத்தான் விடிகின்றன. குருவிகளின் இசைச் சுரங்களின் இனிமையில் மனம் வீழ்ந்திடத்தான் துடிக்கின்றது.இருந்தும் அந்தக் கொடுப்பனையில்லாத பாவி மகளாய் இந்தப் புவிப் பரப்புக்குள் வீழ்ந்து கிடக்கின்றேனே!.

பாசம் தர உறவிருந்தும் சிறகறுந்த சின்னச் சிட்டாய் சோக முற்றத்தில் விளையாடிடும் கண்ணீர் வாழ்வின் மொத்த உருவமாய் நான்!

" அப்பா"

எனக்குள் ஓர் உருவமும் உயிரும் கொடுக்கக் காரணமாய் இருந்தவர். எல்லாப் பிள்ளைகளைப் போல் எனக்கும் ஓர் அன்பான அப்பா இருக்கிறார். மனசு சொல்லத் துடித்த கணங்கள் பற்பல. ஆனால் ஏனோ வார்த்தைகள் சிறைப்பட்டு வெளியேற மறுக்கின்றது.

நான் வாழ்க்கையைக் கற்றுக் கொண்டதே அவரிடமிருந்துதான்..எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அவர் தந்த அனுபவங்களே என்னைச் செதுக்கியிருக்கின்றன. என் வயதை விட அனுபவச் செறிவின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதனாலோ என்னவோ நானும் சராசரி பெண்ணாய் இல்லாமல் இன்னும் இன்னும் வாழ்வின் தன்மையைப் படிக்க பல தேடலுக்குள் உள்ளிறங்கித் தேடுகின்றேன்..

அப்பா........!

இப்புவியில் உங்கள் பிள்ளையாய் நான் பிறந்ததால் என் வயதையொத்த பெண்கள் தொலைத்த எல்லாவற்றையும் என்னுள் நிரப்பி அதிசய பெண்ணாய் அடுத்தவர் என்மீது வீசும் புதிர்ப் பார்வையையும் சுமந்தபடி விதி வழியே போகின்றேன்.....

வாழ்வின் அழகிய பருவம் மழலைப் பருவம்....அம்மா அடிக்கடி சொல்வார்....தாங்கள் திருமணமாகி பல வருடங்கள் தவமிருந்து பெற்ற பிள்ளையாம் நான்... என்னுள் தந்தையின் முகச் சாயல் அதிகமாய் இருப்பதால்  அப்பாக்கு என் மீது கொள்ளைப் பிரியமாம்........பல நாட்கள் என்னைத் தோளிலிட்டு பாட்டுப் படித்து நீங்கள் தூங்க வைத்ததும் சின்னச் சின்ன ஞாபகங்களாக இன்னும் நெஞ்சக் குழியில் இறங்கிக் கிடக்கின்றன..

நான் சின்னவளாய் உங்கள் நெஞ்சை உதைத்த போது கோபங் கொள்ளாமல் ரசித்த சராசரித் தந்தையாகவும் இருந்ததை எண்ணி என்னுயிர்க் கணுக்கள் ஒரு கணம் மகிழ்வோடு தம்மை மறந்து உணர்ச்சிவசப்படுகின்றன....

அப்பா

உங்களை நான் நல்ல பாடசாலை அதிபராக, கலைஞனாக, எழுத்தாளனாக , சிறந்த ஓவியனாக கண்டு ரசித்துள்ளேன். ஒரு மருத்துவனாக, தொழினுட்பவியலாளனாக, பொறியியலாளராக, நல்ல ஆலோசகராகவும் கண்டு பெருமிதப்பட்டுள்ளேன். யாருக்கிந்த கொடுப்பனை கிடைக்கும். நீங்கள் பல் துறை வேந்தர். 

கல்வி கற்றவர்கள் கூட உங்கள் ஆங்கிலப்புலமை கண்டு மெச்சாத நாள் உங்கள் வாழ்க்கையில் குறைவென்று தான் சொல்லுவேன். உங்கள் அந்தத் திறமைகள் தான் பாரம்பரீய வழியாக என்னையும் ஆட்கொண்டு நானும் ஏதோ கல்வித் துறைக்குள் என்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளேன். நன்றி தந்தையே !

 
 
ஜன்ஸி கபூர் 
  



2012/07/10

சிப்பிக்குள் முத்து!


என்.........
வாழ்க்கைச் சாலையில்
அவன்............
பயணிப்பெல்லா மிப்போது
முகங்காட்டுகின்றன நேசச் சுவடுகளாய் !

விண் சுற்றும் மேகங்களில்............
பவ்வியமாய் தனையொளித்தே
எட்டிப் பார்ப்பவன்............
நனைந்தே கிடக்கின்றான்
மழைத்தூறல்களாய்.............
என் வீட்டுமுற்றங்களில்!

தோற்றுப் போகும் வாழ்விலும்
நேற்று முளைத்த காளானாய்- என்
மனப்பூமி வெம்மையெல்லாம்
உறிஞசியவனாய்...........
விட்டுச் செல்கின்றான் தன்
சரிதங்களை!

தரிசனங்கள் மறுக்கப்பட்ட
எம் பக்கங்களின்...................
முன்னுரையாய்
வீழ்ந்து கிடக்கின்றது
அவன் முகவரி!

அன்புத் துடிப்போடு...........
அலையு மெங்கள் நாட்காட்டியில்.........
வலைப்பின்னலின் வருடல்
தகவலாகின்றன தினமும் எங்கள்
வாசிப்புக்களைச் சுமந்த படி!

அவன் புன்னகைச் சாறைப்
பிழிந்தெடுத்தே.............
என் தோட்டத்துப் பூக்களெல்லாம்
சாயம் பூசிக் கொள்கின்றன
தம் மழகைப் பறைசாட்ட!



காற்றின் மௌனம்
தொலைக்கும் அவன் குரலலைகள்.......
நினைவகத்தின் நரம்புகளில்
நசிந்து கிடக்கின்றன
நினைவுகளாய் !
.
"அக்கா"வென்பான் அடிக்கடி.........
அவன் பெருமிதம் கண்டு
ஆகாயம் குடைபிடிக்க
சமுத்திரங்கள் தரைக்குள் ஒடுங்கி
பாசவேலிக்குள் தனை
முடிந்து கொள்ளும்!

கனவுகள் புல்லரித்துக் கிடக்க
விரல் தருகின்றான்- என்
கன்னப் பருக்களாய் வீழ்ந்து கிடக்கும்
கண்ணீர் கழற்றி
தன்னுள் ஒற்றிக்கொள்ளவே!

நம்பிக்கையிருக்கின்றது!
நாளை..............
என் மூச்சின் வேரறுக்கப்பட்டாலும்
கண்ணீரஞ்சலி தரும்
பாச விழிகளாய் அவன்................
ஊடுறுவிக் கிடப்பான் ஆத்ம சரீரத்துள்!




2012/07/06

கண்ணீர் பேசும் ஞாபகங்கள்!


வாழ்க்கை அழகானதுதான். ஆனால் அந்த அழகு, அந்தஸ்து, ஆரோக்கியம், அமைதி அனைத்துமே நிலையற்ற இவ்வுலகின் வெறும் ஞாபக எச்சங்களாகவே நம்முள் எட்டிப்பார்க்கின்றன..

புளாங்கித  வருடலுடன் விடிந்திருக்கின்ற இன்றைய பொழுதின் ஒவ்வொரு கீறலிலும் கனத்த சுமையாய் சோகமொன்று மெலிதாய் தாக்க கண்கள் பனிக்கின்றன...

சில ஞாபகங்கள் சில்லறையாய் என்னுள் வீழ பொறுக்கியெடுக்கின்றேன் அவற்றை...அந்த ஞாபகப் பரப்புக்களின் எல்லைச் சுவர்களில் அந்த முகம் புன்னகைக் கசிவுகளுடன் என்னை எட்டிப் பார்க்கின்றது.........

ஏனோ என்னாலின்று இக்கட்டுரையை எழுதமுடியாதபடி மன அழுத்தம் இழுத்துப்பிடிக்க, அந்தத் தடையையும் மீறி அவருக்காக சில வரிகள் என் இணைய வலைப்பூவிலின்று கண்ணீருடன் பயணிக்கின்றது!

அது.........

அவர்.......

ஜனாப் . எச்.எம்.எம்.அப்துல் வஹாப் மௌலவி ஆசிரியர்
இருப்பிடம் - காத்தான்குடி

என்னுடன் கடமையாற்றிய சக ஆசிரியர், இனிய சகோதரன், தோழமைமிகு நண்பர், நலன்விரும்பி , என் தந்தையின் மதிப்பிற்குமுரிய குடும்ப நண்பர் என என்னுள் பன்முகம் காட்டிச் சென்றவர் இவர்..

நாங்கள் இருவரும் ஒரே காலத்தில் ஆசிரியப் பயிற்சியைப் பெற்றவர்கள் என்பதால் ஓரே ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப்பட்டு எமது தொழில் ரீதியிலான விடயங்கள் பலவற்றை அடிக்கடி பகிர்ந்து கொண்டோம். இவர் என்னை விட பல வருடங்கள் வயதில் மூத்தவரென்றாலும் கூட, அந்த வேறுபாடுகளையெல்லாம் ஓரந் தள்ளி விட்டு நல்ல நண்பராக என்னுடன் பழகினார். அவர் அழகான புன்னகையே அவர் நட்பு தேசத்தின் முகவுரையாக எல்லோருக்கும் மனதைத் தொட்டுச் சென்றது...

புதிய புதிய இஸ்லாமிய கீதங்கள் புது வரவு காட்டுகையில் "புளூ டூத் " வழியாக அவர் பதிவுகள் என் கைபேசிக்குள் இடமாறும். இன்று அந்தப் பதிவுகளெல்லாம் என் கைபேசிக்குள் சேமிப்பாகி அவரை ஞாபகப்படுத்துகின்றது.

 நாங்கள் இருவரும் வகுப்பாசிரியராக கடமையாற்றும் போது எங்கள் வகுப்புக்கள் பக்கத்திலேயே அமைந்திருக்கும். அவருக்கும் எனக்கும் பொதுப்படையான சில விடயங்களுண்டு. எங்கள் பொறுப்பில் ஒப்படைக்கப்படும் வகுப்புக்களை இயன்றளவு அழகுபடுத்துவோம். 2005 ம் வருடம் எமது பாடசாலையில் "5S" பேணலுக்கான போட்டி நடைபெற்ற போது அவர் வகுப்பும் (தரம் 11A) , எனது வகுப்பும் (தரம் 11 B) வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது இன்றும் மறக்க முடியாத ஞாபகங்களே!

அவர் மௌலவி ஆசிரியராக இருந்ததால் பல மார்க்கம் சம்பந்தமான சந்தேகங்களை அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்வேன். அவ்வாறே அவரும் தொழிலுடன் தொடர்புபட்ட சந்தேகங்களை என்னிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார்.  ஒருவருக்கொருவர் நல்ல நட்பு முகம் காட்டினோம்.

ஒழுக்கம் மிகு விழுமியக் கல்வியையூட்டும் இஸ்லாம் பாடத்தினை அழகாக , ஆழமாக அவர் மாணவர்களுக்கு கற்பிப்பார். ஆனால் மறுதலையாக கற்பித்தலில் பின்னடையும், நன்னெறிகளில் மூர்க்கத்தனம் காட்டும் மாணவர்களிடம் அவர் கடுமையான போக்கையே காட்டுவார். அவரின் இந்தக் கண்டிப்பான போக்கே பாடசாலையில் பல மாணவர்களின் குழப்படி நிலையை கட்டுப்படுத்தியிருந்தது..

" வஹாப் சேர்"

என்றதும் பயந்து நடுங்கும் பல முரட்டுத்தனமான மாணவர்களை நான் கண்டிருக்கின்றேன். பாட ஆசிரியர்களிடம் முரண்டுபிடிக்கும் மாணவர்கள் அவ்வாசிரியர்களால் இவரிடமே ஒப்படைக்கப்படுவார்கள். விசாரணையும் ஆலோசனையும் வழங்கும் நீதிமன்றமாக பல வருடங்கள் அவர் எம் பாடசாலையில் நிலையூன்றியிருந்தார். 

அவ்வாறே பல வருடங்கள் "மாணவ ஆலோசனையும் வழிகாட்டலும்" சேவையும் அவர் மூலம் பெருமிதமும் பயனுமாற்றியது. எமது பாடசாலை மாணவர்களின் கோலாட்டப் பயிற்சி அவருக்கிருந்த இலக்கிய ஈடுபாட்டின் சிறப்பான ஓரடையாளமாகும்!

எமது பாடசாலையின் பௌதிக வள வளர்ச்சியின் ஏறுமுகம் வஹாப் ஆசிரியரின் கரங்களிலேயே தங்கியிருந்தது. பல பிரமுகர்களைச் சந்தித்து பாடசாலையின் பல வளத் தேவைகளை நிறைவேற்றினார். பாடசாலைக் கட்டிட  அலங்கரிப்பு வேலைகள், ஆரம்ப வகுப்பு மாணவர்களின் நூலகம், ஒலிபெருக்கிச் சாதனங்களின் செயற்படுத்துகை என்பன வஹாப் ஆசிரியரை ஞாபகமூட்டுவன.

அவர் பேச்சாற்றலைக் கண்டு நான் வியக்காத நாட்களில்லை. எந்த தலைப்பைக் கொடுத்தாலும் மார்க்க நெறியின் வழிப்படுத்தலுடன் கூடிய உரையை உடனே ஆற்றுவார். எமதூர் பள்ளிவாசலின் பல ஜூம்- ஆ குத்பா பிரசங்கங்கள் அவர் சொற்பொழிவுகளால் மன நிறைவடைந்துள்ளது.

தன் குடும்பத்தை விட தான் சார்ந்திருக்கும் தொழிலை, கடமையை, சமூகத்தை நேசித்தார் என்பது அவரைச் சூழ்ந்திருப்போர் கண்டறிந்த உண்மை.
அந்த நேசிப்புத் தந்த கௌரவமாய் எமது பிரதேசத்தில் நடைபெறும் பல அரச விழாவிற்கு அவர் கௌரவ மதப் பிரமுகராக அழைக்கப்பட்டிருந்தார்."அரேபி தேச" குடிமகனாய் அந்த ஆடையில் அழகு தரும் இவரைக் கண்டு நாமும் மகிழ்ச்சியடைந்திருக்கின்றோம்.

அரபு மொழியில் பாண்டித்தியம் பெற்ற வஹாப் சேர் இஸ்லாமிய மார்க்கத்தின் பால் தீவிர பற்றுள்ளவர். வருடந்தோறும் எமது பிரதேச மக்களின் ஹஜ் , உம்ரா பயணத்தின் போது வழிகாட்டியாக அவரே செயற்பட்டு மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்.

தன் இளமைக்காலத்தையெல்லாம் அநுராதபுர மண்ணில் கழித்து விட்டு, இவ்வருட ஜனவரி மாதம் தன்னூரான காத்தான்குடிக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றார். அவரின் சேவையைக் கௌரவப் படுத்தி எம் பிரதேசமே தம் வேறுபாடுகளை மறந்து அவருக்கு பெருவிழா எடுத்து கௌரவித்து வழியனுப்பி வைத்தது.....

அந்த நண்பரின் ஞாபகங்கள் எம்மை விட்டகலமுன்னரே........

கடந்த மாதம் அவர் திடீர் சுகவீனமுற்றுள்ளார் எனும் தகவல் நெஞ்சை அழுத்தியது. இத்தனை வருடங்களாக சுயநலம் பாராமல் சேவையாற்றிய அந் நல்லவரை "புற்றுநோய்" விட்டுவைக்கவில்லை என்பதை இந்திய மருத்துவனையொன்று நிரூபிக்க, புற்றுநோய் வேரூன்றலின் ஆழமான தாக்கத்தினால் "மஹரகம" வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளியானார். உயிருக்கு உத்தரவாதமற்ற நிலையிலும் அவர் தன் புன்னகையை, தன்னம்பிக்கையை இழக்கவில்லை...

மரணிப்பதற்கு சில நாட்களின் முன், அவர் மஹரகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது கைபேசியழைப்பெடுத்துப் பேசினேன். குரலில் தன் சோர்வை வெளிப்படுத்தாமலிருக்க அவர் முயன்றாலும், என்னால் வேதனையை தடுக்க முடியவில்லை..

சென்ற 2012.07.01 ந் திகதி வஹாப் மௌலவி அவர்கள் இவ்வுலக வாழ்விலிருந்து நீத்தார்.....

கண்முன்னால் நிறைந்திருக்கும் அந்த உருவம், ........
இனிமையான பேச்சுக்கள் , ..........
அந்தப் புன்னகை..............
அடிக்கடி சுகம் விசாரிக்கும் பண்பு..............

இவை இன்னும் என்னுள் ஆக்கிரமிக்க, அவர் பிரிவை மறைவை நம்ப முடியாதவளாய் நான் விக்கித்து நிற்கின்றேன் !

தன் தொழில் நிமித்தம் பல வருடங்களாக அவரைப் பிரிந்திருந்த அவர் மனைவி, பிள்ளைகள் மீண்டும் அவருடன் வாழ இணைகையில் மரணம் அவரைப் பிரித்தது துர்ப்பாக்கியமே!


எல்லோருக்கும் மரணமுண்டு மறுப்பதற்கில்லை. இருந்தும் இழப்புக்கள் தரும் வேதனையினை கட்டுப்படுத்தும் வல்லமையற்றவர்களாய் நாம் கண்ணீருக்குள் நம்மைத் தொலைத்து நிற்கின்றோம் என்பதே மறுக்க முடியாத உண்மை.


அவரின் இம்மை வாழ்வின் முற்றுப்புள்ளியைத் தொடர்ந்து, மறுமையின் வாசல்கள் திறந்திருக்கும் இந்நேரம்......

அவர் செய்த தவறுகளை மன்னித்து அல்லாஹ் த ஆலா அவருக்கு சுவர்க்கமளிப்பானாக!

"இன்னாளில்லாஹி வஇன்னா இலஹிராஜிஊன்"


- Ms. Jancy Caffoor -