About Me

2012/07/22

விடியல் பொழுதில்



சூரியச்சிறகுகளில்
கரி தடவி...........
மௌனித்துப் போன வானம்
சேவலின் ஸ்பரிசத்தில்
சிவந்து போகின்றது!

காற்றின் சீண்டலில்
வெட்கித்துப் போன பூக்கள்..........
மயக்கத்தோடு
மௌனித்துக்கிடக்கின்றது!

சிட்டுக்களின் குரற் சலங்கையில்
சுருதி கோர்க்கும் மொட்டுக்கள் - தாம்
மெட்டமைத்த கிறக்கத்தில்
வண்டுகளின் முத்தத்தை
மொத்தமாய் உள்வாங்கத்துடிக்கின்றன!

பறவைகளின் சலசலப்பில்
உறக்கம் மறக்கும் விழிகள்!
ஊமையாகிப் போன ஊரும்
ஊசலாட்டம் காட்டுகின்றன!

இயற்கையின் தரிசனத்தில்
நேற்றைய சோகம் தொலைத்து - என்
நெஞ்சும்............
புது விடியலில் நாணிக் கொள்கின்றன
நயமாக!



-Jancy Caffoor -




இரவின் மடியில்



பனித்துளிகள் மோதும் இரவினை
ஊசியாய் துளைக்கும் காற்று!

நிலவொளியின் ஒளிக்கசிவில்
களவாய் விழித்திருக்கும் வானம்!

ஓசை தொலைத்த நிசப்தங்களின்
மெல்லிசையில் மயங்கும் நம் விழிகள்
அடிக்கடி
கனாக்களுக்கு மனுப்போட்டு
காத்துக் கிடக்கும்!

இருள் வயலில் விதைக்கப்பட்ட
வான் வைரங்கள்
வெட்கிக் கிடக்கும்
பூகோளத்தின் புன்னகை கண்டு!

அல்லிக் காகிதத்தின்
மையல் வரிகளில் - தன்
மொட்டவிழ்த்து - நறுமண
மெட்டுக்கட்டும் மல்லிகைகள்!

சூரியக்குமிழின்
நேசம் நிரப்பி
சந்து பொந்துகளில்- தம்
பெருமை பேசும் மின்விளக்குகள்!

பூமிப் பாறையின்
நங்கூரத்தில் - மனித
உயிர்கள் தரித்து நிற்கும்
உறக்கத்திற்காய்!

இரவுத்தூரிகையுன் ஓவியத்தில்
மௌனிப்புக்கள்
மனசையறுக்கும் மானசீகமாய்!

கலைந்தோடும் மேகங்கள்
கரித்தேசத்தினை
தத்தெடுக்கத் துடிக்கும்!

குளிர்ச்சீண்டலில்
விழி விளக்குகள் விறைத்துக்கிடக்க
இயக்கச் சாவி துறந்து
இளைப்பாறும் இவ்வுலகம்!

அழகின் சொப்பனத்தில்
வழுக்கிச் செல்லுமிந்த இரவின் மடியினில்
என் விழிகளோ ஏக்கம் நிறைத்து
காத்துக் கிடக்கும்- புது
விடியலொன்றிற்காய்!


என் அழகிய தேசம்!



வாழ்க்கை தொலைவினில்!
அது 
எட்டா வானவில்லாய்
என் கண்களுக்குள்!

நிதம் புன்னகையேந்தும் - என்
கன்னங்களிரண்டும்
சினக்கின்றன- இனியும்
நடிக்காதேயென்று!

விழிகளோ கெஞ்சுகின்றன
விஷம் தந்து தமை கொன்றுவிடும்படி!

ஹிருதயமோ 
விண்ணப்பிக்கின்றது விருப்புடன்- தன்
துடிப்பைத் துறக்கும்படி!

அழகான என் கையெழுத்து
அழுகின்றது - தன்
தலையெழுத்தை
நினைந்து நினைந்தே!

மனசேனோ 
மௌனத்தின் நெருடலில்
நொருங்கிக் கிடக்க 
நேசங்கள் முறைக்கின்றன
தம்மை மறந்ததாய்!

சோகத்தின் சுகங்களை
வாசிக்கும் மனமோ 
ஏக்கத்தில் பூத்துக்கிடக்கின்றது
பக்கத்தில் வெறுமையை ரசித்தபடி

பூச்சியமான என் ராச்சியத்தின்
சரிதங்கள் 
பதிக்கப்படமுன்னரே
காலாவதியாகிப் போனதால்
வாழ்வை 
கண்ணீர் சுமக்கின்றன பொறுப்போடு!

கனவுகள் கண்டறியாத விழிகள்
ஈரலிப்பிலழுகிக்
கிடக்கின்றன
கைக்குட்டையேதுமின்றி !

மகிழ்ச்சித் தேடலில்
தேய்ந்து போன என் பாதச்சுவடுகள் 
பயணிக்கத் துடிக்கின்றன
மயானம் தேடி!

முட்களால் சுவாசம் பூட்டி
முகவரியாய்
கண்ணீர் நிறுத்தி 
தோற்றுத்தான் போனேன்
பாசம் தேடி!

புரியாத குடியுருப்புக்குள்
புழுக்களின் தேசமாய் மாற
புளாங்கிதமாய் மனுக் கொடுத்தேன்
படைத்தோனிடம்
அழகான மரணத்திற்காய்!

நாளைய புலர்வுக்குள்
சருகாய் நானும் வீழ்ந்துதிர 
திடம் கொண்டேன் - என்
அழகிய தேசம் "ஆறடியென"
உச்சரிக்கும் உதடுகளை
உயிரோ காதலுடன் வருடுகின்றது
மெதுவாக!


மழைத்தோரணங்கள்


மழையின் சலசலப்பு
ஊசியாய் தேகம் துளைத்துப் போகும்!

காற்றின் ரகஸிய கிசுகிசுப்பு
கூதலில் வீழ்ந்து தவிக்கும்!

இருள் குவிந்த மேகங்கள்
இளைப்பாற ஓரிடம் தேடும்!

நீராடும் மலர் மேனிகள்
புல்லரிப்பில் நாணி மோகிக்கும்!

வீதிக் கன்னத்தினில்
நீர்ப்பருக்கள் மெல்ல வருடும்!

போர்வைக்குள் தூங்கிக் கிடக்க
நம்மனங்கள் ஏங்கித் தவிக்கும்!

குடைக்காளான்கள் குஷியாய்
நடைபாதையில் நளினம் காட்டும்!

தவளைகளின் காதலோசையால்
கற்குவியல்கள்  கதறியதிரும்!

நீர்த்தோரண அலங்காரம் கண்டு
வெள்ளமொன்று எட்டிப் பார்க்கும்!

வானேட்டில் வண்ணத் திருசியமாய்
வானவில்லும் எட்டிப்பார்க்கும்!

குளியலில் நனைந்தேதான் பூமியும் நடனமாடும்- அதை
குஷியாய் மின்னலும் படமெடுத்துப் போகும்!

வாலிப மனங்களின் கரகோஷம் கேட்டு
இடியும் வெடி கொளுத்தி மகிழும்!

இயற்கை ஏஸிக்குள் விறைக்கும்  நம்முணர்வால்
இதய மேனி சிலிர்த்தே மகிழ்ந்து கிடக்கும் !

மழை ரசிப்பில் மனமோ லயித்து - தினமும்
கவி பல கொட்டி ரசிக்கும் காதலுடன்!