About Me

2012/07/30

அந்த சில நிமிடங்கள் !


இரவின் நிசப்தத்தில் என் சுற்றுப்புறம் அடங்கிக் கிடந்தது. கடிகார முட்களின் ஓசை தவிர்ந்த வேறெந்த ஒலிகளும் கலக்காத மௌனத்தில்  ஊர் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தது, அந்த அமைதியைச் சற்று சலனப்படுத்தும் விதமாக என் வீட்டுக் கடிகாரம் நள்ளிரவு மணி 12 ஐ அடித்தோய்ந்தது.

மனசேனோ கடந்த கால சில கசப்புக்களை நினைவிலிருத்தி, விழித் தூக்கத்தை விரட்டிக் கொண்டிருந்தது. சுடும் யதார்த்தங்களால் இருளின் செழிப்பில் கூட கனவுகள் எட்டிப்பார்க்க விரும்பவில்லை. அந்த இருண்டவெளியில்  ஊர்க்குருவிகளின் சிறகடிப்பும், சிறு குரலெழுப்பலும் அவ்வவ்போது வெறுமை வெளிக்குள் சலனத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. சின்னக்குருவியிடம் இருக்கும் இந்தப் பறக்கும்  துணிச்சல் கூட என் வசமில்லாமல் போனது ஆச்சரியமே! பல்வேறு சிந்தனைக்குள் மனம் தடுமாறிக்கொண்டிருந்தபோதுதான், அந்த இருளை ஊடுறுவும் வண்ணம் டோச்லைற் வெளிச்சமொன்று நான் படுத்திருக்கும் அறையை எட்டிப் பார்த்தது.

அச்சத்தில் உயிர் உறைந்து கொள்ள, மனசு மட்டும் பலகீனப்பட்டு அலறிக்கொண்டிருந்தது. ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது எனும் உணர்வுடன் சற்றுத் தலையை உயர்த்தி அந்த வெளிச்சத்தை நோக்கினேன்.

அந்த அறையின் மேற்பரப்பில் காற்று நுழைவதற்காக சிறு பூக்கற்கள் அடுக்கப்பட்டிருந்தன. அந்தக் கற்களினூடாகவே ஓளி வந்திருக்க வேண்டும். மீண்டும் அந்தப் பூக்கற்களை நோக்கி பார்வையைச் செலுத்தியவாறு படுக்கையிலிருந்து எழ  முயன்றேன். மின்னல் வேகத்தில் ஏதோ திரவ ஸ்ப்றேயொன்று நாசிக்குள் கலந்தது. அதன் வாசனை மலத்தியோன் என்பதை அநுபவ வாயிலாக உணரத்தொடங்கும் நேரம் .............. மெல்ல மெல்ல விழிகளும் தம்மை மயக்கத்தில் சொருகத் தொடங்கின. ..உடலோ தன் வலிமையை இழந்து வெற்றுக்கூடாய் உருமாறும் பிரமை!

"கள்ளன்.......கள்ளன்"

என்னருகில் உறங்கிக் கொண்டிருந்த என் தாயார் கலவரப்பட்டு சப்தமிடும் வார்த்தைகளின் உரப்பொலி படிப்படியாக என் நினைவுலகத்திலிருந்து மங்கத் தொடங்கியது.....

பல  நிமிடங்கள்..........

மூச்சை மட்டுமே ஏந்திய என்னுடல் இவ்வுலகை மறந்து கிடக்க, இருதயத்துடிப்பொலி மட்டும் என்னுயிர்ப்பை அடுத்தவருக்கு பறைசாற்றிக் கொண்டிருந்தது.











விதவை


கருக்கலைக்கப்பட்ட கனாக்கள்
கல்லறைச் சுவருக்குள்
நசுங்கிப் போகும்!

ஓட்டை விழுந்த வாழ்க்கைக்குள்
ஒட்டடைகள் தொங்கிக் கிடக்கும்
வெள்ளைக்குள் விழுந்தவுடலும்
மங்களம் துறந்து வாடும்

முரண்பட்ட விதியால்
விரண்டோடும் பௌர்ணமிகள் 
அமாவாசைகள் மட்டுமே
அப்பாவியாய் எட்டிப்பார்க்கும்!

சகுனங்கள் சரித்திரம் பேசும்
தரித்திரங்கள் உடன்பிறப்பாகிப் போகும்!
பரிவில்லாத் தேசத்தில்
வாழ்வும்
இற்றுப் போகும்  !

நாங்கள் 
வாழ்வைத் தொலைத்தவர்கள்!
மயானங்களில் மௌனம் தேடும்
மானசீகவாதிகள்!

ஜன்ஸி கபூர் 

புகைவண்டி தரும் சிந்தனை


புகைவண்டியில் பயணிக்கும் போதெல்லாம் எனக்குள் எழும் சிந்தனையிவை
-----------------------------------------------------------
நாம் அனுபவங்கள் வாயிலாகவே அனேகமானவற்றைக் கற்றுக் கொள்கின்றோம். பாடசாலைக் காலத்தை விட, ஏனைய வயதுகளில் கற்றுக் கொள்ளும் விடயங்கள் தான் அதிகம். ஒவ்வொரு காட்சிகளும், சம்பவங்களும் நமக்குள்  புதுப்புது விடயங்களைக் கற்றுத் தருகின்றது..அந்த வகையில் புகைவண்டிப் பயணங்களின் போது  நான் கற்றுக்கொண்டவை,,,

*புகைவண்டியை எதிர்பார்த்து ஒரு குறித்த இடத்திலிருந்தே தரித்து பயணித்தல்.- நமக்குள்ளும் வாழ்க்கை தொடர்பான இலக்குகள் இருத்தல் வேண்டும்.

* ஒரு குறித்த நேரத்தில் பயணித்தல் - ஒவ்வொரு செயல்களையும் நாம் குறித்த நேரத்திலேயே செய்தல் வேண்டும்.

*பல பெட்டிகள் இணைக்கப்பட்டிருத்தல்- பிறருடன் எப்போதும் நாம் ஒற்றுமையுடன் செயலாற்றி வாழ்வை நகர்த்துதல் வேண்டும்.

* ரயில் ஸ்நேகம் - அவ்வவ்போது மனதை அரிக்கும் பிரச்சினைகளையும், துன்பங்களையும் உடனுக்குடன் நீக்குதல்.

* ஓர் பெட்டியில் பலரிருத்தல்- பலருடன் நட்புமுகம் பேணல்

*வேகமாகப் பயணித்தல் - செய்யத்தொடங்கும் வேலைகளையும், கருமங்களையும் விரைவாக நேர்த்தியாகச் செய்தல்.

* நிலையக் கட்டளைகளுக்குக் கட்டுப்படுதல்_ பிறரின் நல்ல அறிவுரைகளுக்கு கட்டுப்படுதல்.

* ஓர் குறித்த பாதை வழியே இயங்குதல் - ஒவ்வொரு வேலைகளையும் திட்டமிட்டே செய்தல்.

*அதன் பயணப்பாதையின் அருகாமையில் யாரும் நிற்காமை- கெட்ட விடயங்களை நம் வாழ்விலிருந்து நீக்குதல்.

*அது வீதியை குறுக்கிடும் போது ஏனைய வாகனங்கள் வழிவிட்டுக் காத்திருத்தல் - பிறருடன் புரிந்துணர்வுடன் பேணி செயல்கள் நிறைவேற ஒத்துழைத்தல்.

* அபாயச்சங்கிலி காணப்படல் - எப்பொழுதும் விழிப்புடனிருத்தல்.

* அதன் வருகையை அயல் வாசிகளுக்குணர்த்தல்- நமது நல்ல செயல்கள் பற்றி அடுத்தவருக்கு அறியச் செய்தல்.

ம்ம்......

என் சிந்தனை உங்களுக்குப் பிடித்திருக்கா. இன்னும் சிந்திப்போம்

- Ms. Jancy Caffoor -

அன்பு வந்தது


அன்பு கொள்ளுவதும் , அன்பால் ஆட்படுவதும் இவ்வுலகில் பணம் கொடுத்து வாங்க முடியாத இனிமையான உணர்வு. பிறரின் நல்ல குணங்களால் ஈர்க்கப்பட்டு மானசீகமாய் நட்புக்குள், அன்புக்குள் நாம், நம்மை வீழ்த்தும் போது சந்தோஷம் சங்கீதம் பாடும்.

நாம் பிறரை நேசிக்கும் ஒவ்வொரு கணங்களும் நாமும் அவர்களால் நேசிக்கப்படுவோம். நேசிக்கப்படுகின்றோம். குடும்பம் , நட்பு, உறவுகள், காதல் என விரியும் இவ்வன்பின் எல்லை முடிவிலியே! அன்பின் சுகந்தத்தில் வசந்தங்கள் நம்மோடு ஒட்டியுறவாடும்.

அன்பான வார்த்தைகளுக்கு அடிபணிதல் கூட ஆனந்த மயக்கமே! மனித இயக்கம் மட்டுமல்ல, இவ்வுலகின் நகர்வு கூட அன்பின் ஆதிக்கத்திலேயே அழகு மொழி பேசுகின்றது.


நம்மை நாம் அன்பு கொள்ளும் போதுதான் பிறரையும் நாம் நேசிக்கத் தூண்டப்படுகின்றோம். அன்பின் வலிமை அதிகம். அன்பால் எதையும் சாதிக்கலாம். அந்தச் சாதனையின் வெற்றிக் களிப்பில் சோகங்களையும் விரட்டப்படலாம்.


"நேசிப்போம்...........!
நேசிக்கப்படுவோம் !! "

- Ms. Jancy Caffoor -






சொந்தம் எப்போதும்!


கால நகர்வில் சிதையாத- என்
மன தேசத்தின்
மானசீக தேசிய கீதம் நீ!

உன் 
ஞாபகப் பிரகடனங்களிலேயே - என்
இருப்பும் உறுதிப்படுத்தப்படுகின்றன!

உன் 
அசைவுகளை மோப்பம் பிடித்தே
என் புலனங்கங்கள்
விருது பெற்றன உளவாளியாய்!

என் 
உணர்வுத்தூறலில் உனை நனைத்து
கவிதையாய்ச் சுமக்க - என்
ரேகைகள் உடன்பட்டன!

உன்னை உச்சரிப்பதால் 
சொந்தமான சுருதி - என்
குருதிக்குள் குடியிருப்பானது!

பனித்துளிக்குள் பதுங்கியிருக்கும் - உன்
நாணம் கண்டு
சூரிய ரேகைகள் குளிரானது!

என் 
இமையோரம் ஒளியுமுன்
மலர் முகம் காக்க 
பூட்டிவைத்தேனுன்னை
என் கவிச்சோலைக்குள்!

உன் 
நளின நடையில்
சுளுக்குக் கண்ட என் இலட்சியம்
இப்போ
உன் ஆணையிலொட்டிக் கிடக்கின்றது!

நீயுன் 
நக முனைகளின் தலை சீவுகையில்
வலிக்கின்றன
என் விரல்கள்!

இவ்வுருளுமுலகின்
மிரளும் யதார்த்தம் கண்டு- உன்
காலடியில் பரவிக் கிடக்க
என் ஆத்மா துடிக்கின்றது
சில கணங்களேனும்
நிம்மதிச் சுகத்திற்காய்!

நரை கண்டாலும்
பிரிவுத் திரை காணா நம் சொந்தம் 
என்றும்
கறை காணா நேசத்தின்
இருக்கை!

ஜன்ஸி கபூர்