About Me

2012/08/20

மிஸ்ட் கால் (missed call )


2010ம் வருடம்............. ...........!

என்  ரிங்டோனாய் இடப்பட்டிருந்த  ஒலியின் அலைவு பலமாக என்னுள் நுழைந்து என் கவனத்தை அதன்பால் திசை திருப்பியது...

கைபேசியை அவசரமாக எடுத்து அழைத்தவர் யாரெனப் பார்ப்பதற்கு முயல்வதற்கிடையில், அது "மிஸ்ட் கோலாக"ப் பதிவாகியிருந்தது. அன்றைய தினம் கைபேசியில் அந்த அழைப்பு ஒலிப்பதும், நான் தூக்குவதற்கிடையில் அது துண்டிக்கப்படுவதும், ...........எரிச்சல் என் மனதின் கொதிநிலையைக் கூட்டியது....

"யாராவது என்னுடன்  விளையாடுகின்றார்களா !"

என் வினாவின் தொக்கலில் மனதின் அடித்தளத்தில் எரிச்சலும், ஆச்சரியமும் மாறி மாறி என்னைக் கௌவிப் பிடித்துக் கொண்டன. இருந்தபோதும் என் சினத்தைக் கட்டுப்படுத்தி உண்மைநிலையை எனக்குள் ஆராய்ந்தேன்.

"எனது அந்தத் தொலைபேசி இலக்கம் என் குடும்பத்தினர் தவிர வேறு யாருக்கும் நான் பரிமாறியதில்லை. எனவே இவ்வழைப்பில் வம்பு நோக்கமில்லை. இது அறியாத பிழையான அழைப்புத்தான் "

என முடிவெடுத்த நிலையில் நானே குறித்த அவ்விலக்கத்தை டயல் செய்தேன்...

"ஹலோ".........நான்

"ஹலோ"..........மறுமுனை

"ஓயா கவுத".......... நான் ( நீங்கள் யார் )

".................... இன்னவாத " மறுமுனை  (...........இருக்கின்றாரா)

" ஓ சொறீ.....ரோங் நம்பர் " ........நான்

தொடர்பைத் துண்டித்த நான்,  அவ்வழைப்பை மறந்தவளாய் என் கடமைகளுடன் மூழ்கியிருக்க,  குறித்த நம்பரிலிருந்து இரண்டு மணித்தியாலத்தின் பின்னர் மீண்டும் எனக்கு அழைப்பு வந்தது.

எடுத்தேன் அதே குரல்.............!

என்னைப் பற்றிய தேடலுக்கான அழைப்பது. வழமையாக என்னைப் பற்றிய விபரங்களை அறிமுகமில்லாதவர்களுக்கு நான் கொடுப்பதில்லை. அதிலும் அவர் பெண்ணாக இருப்பதனால்  "பாத்திமா" என ஒற்றைச் சொல்லில் அறிமுகப்படுத்தினேன்.

தன் விபரங்களையும் அப் பெரும்பான்மைத் தோழி கூறினார். அவ பேசின விதமும், பண்பும் என்னைக் கவர்ந்ததால் எங்கள் உரையாடல் உடனே அறுபடவில்லை. ஆவலுடன் .....நீளமானது

"எனக்கு நீங்கள் உதவவேண்டும். நான் தமிழ் பயிற்சிநெறி கற்கின்றேன். தேவைப்பட்டால் உதவுவீர்களா" 

என அவர் சிங்களத்தில் கோரிக்கை விட, நானும் அவரிடம் சிங்கள உச்சரிப்பை பழகிக்கொள்ளலாமென்ற நப்பாசையில் மகிழ்வோடு சம்மதித்தேன்.

அன்று தொடக்கப்பட்ட எம் நட்பு பாலம் மூன்று மாத காலமாக சிங்கள - தமிழ் மொழிபெயர்ப்பில் தன்னை முழுமையாக அடக்கிக் கொண்டது, இருவருமே மொழிப்பயிற்சி நன்கு பெற்றோம். காலங்கள் மூன்றும் மறைந்த போது அவள் பரீட்சையும் திருப்தியுடன் எழுதி முடித்திருந்தாள்.

ஒருநாள் அவளழைப்பே எனக்கு அலாமானது. பதறித்துடித்தெழுந்தேன்.

"ஏய் என்னடி ஆச்சு"

மனம் பதற்றப்பட, சிரித்தவாறே கைபேசியினூடே என் தலையில் ஒரு "நறுக்" வைத்தாள்.

"எப்ப பாரு........ஒரே பயம்தான்.....நான் 90 மாக்ஸ் என் தமிழ் கோர்ஸில் எடுத்து பர்ஸ்டா வந்திருக்கிறேன்டீ. உனக்குத்தான் இத பர்ஸ்ட்  சொல்லனும் என்று நெனைச்சேன்"


அவள் மகிழ்வு எனக்குள்ளும் நிரம்ப, அன்று முழுவதும் எங்கள் அன்புத் தொல்லையினால் எங்கள் கைபேசியின் பற்றரி மின்வலுவை இழந்து பல தடவை உயிர்ப்பிக்கப்பட்டது!


இவ்வாறாக எங்கள் நட்பும் நாட்களின் விரைவான சிறகடிப்பில் இறுக்கமாகப் பிணைந்தது . இந்த இரண்டு வருடமும் நாங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காத நிலையில் உண்மையான நட்பைத் தினமும் பரிமாறிக்கொண்டோம் இப்போது எங்கள் நட்புக்கு இரண்டு வயதும் கடந்துவிட்டது.

சென்றமாதம் திடீரென அவளிடமிருந்து அழைப்பு வந்தது.

"உன்னைப் பார்க்க எனக்கு ரொம்ப ஆசையாக இருக்கிறதடீ....இனியும் எனக்கு பொறுமையில்ல..உன்ன நேரில பார்க்கணும், வீட்டுக்கு வரட்டா" 

அவள் கைபேசியில் தன்னுணர்வைப் பதித்த போது.....


"வாவ்" 


நானும் உற்சாகமாக அவள் வருகைக்கு நாள் குறித்தேன், அந்த நாளும் வந்த போது அவள் காலடி என் வீட்டுத்தரையில் படிந்து அன்பைச் சிதறியது.

பல நாள் முகந்தெரியாமல், ஏதேதோ உருவ எதிர்பார்ப்புக்களுடன் நாங்கள் பண்ணியிருந்த கற்பனையுரு அன்று கலைந்தது..

அவள் அழகாய் இருந்தாள்.......ரொம்ப ரொம்ப ....பல கோணங்களில் அவளழகை, அன்பை, குறும்பை ரசித்தேன்...கண்களால் பார்வையுருட்டி , அபிநயத்து பண்ணும் பகிடியை.......அவள் எல்லாமே எனக்குப் பிடித்திருந்தது.

அவளுக்கும் என்னை................ரொம்ப ரொம்ப !

இத்தனை நாளும் அகத்தின் ஆட்சியில் அடங்கிப் போயிருந்த எங்கள் நட்பு , முதன்முதலாய் அன்று உருவங்கள் கண்டு மகிழ்வின் பேரலையில் சிக்கித் தவித்தது. நிறையப் பேசினோம்...இந்த இரண்டு வருடங்களும் பேசி முடிக்காத பல விடயங்களை அந்த இரண்டு மணித்தியாலத்தில் பேசி முடித்த திருப்தி!

அவளைப் பிரியும் நேரம் இருவர் கண்களும் கலங்கியது. என் கைகளைக் கண்ணில் ஒற்றிக் கொண்டாள்.....

விடைபெறும் இறுதி நொடியில் .........!

அவள் கரம் என் கரத்துடன் பிணைக்கப்பட்டபோதுதான் எதையோ அவள் என் கைகளுக்குள் அழுத்தும் விசையொன்றை உணர்ந்தேன். பார்க்க முயற்சித்த போது அழகாய்ச் சிரித்தாள்....

"இது என் அன்பான கிப்ட் உனக்கு! நான் வெளில போனதும் பாரு " .....

அவள் கோரிக்கையேற்று மௌனமாகத் தலையாட்டிய பின்னர்  சற்று குரலில் சூடேற்றினேன் !

" ஏய் .........என்னடி இது ! இத நான் உன்கிட்ட எதிர்பார்த்தேனா" 

நான் சற்று உரப்பை அதிகரித்த போது அவள் வார்த்தைகளி னன்பு  என்னைச் சற்றடக்கின.

"கூல்மா...........நீ.........ஏசுவேன்னு தெரிஞ்சுதான் நான் முதல்ல இத சொல்லல"

அவள் என்னை விட்டு மறையும் போது, அவள் எனக்காக சற்றுமுன் உதிர்த்த வார்த்தைகளும் தொலைவாகிப் போகின!

என் கரங்கள் அவள் விட்டுச்சென்ற அடையாளத்தை எனக்கு காட்சிப்படுத்த மெதுவாக விரிந்தது . உள்ளே...  கண்ணாடி மூடியால் மூடப்பட்ட சிறு பெட்டி ஆறு வெவ்வேறு நிறங்களுடன் கூடிய இரத்தினக்கற்களுடன் !

இரத்தினக்கற்களை விடப் பெறுமதியான அவள் நட்பைத்தான் எனக்கு விட்டுச் சென்றுள்ளாளே!................... அதை  நிரூபிக்கவா இது!

மனம் மிகையாக நெகிழ்ந்தது கண்ணீர்த்துளிகளுடன்!

அவள் என்றோ ஒரு நாள் சொன்ன அந்த வார்த்தைகளின் நிருபணமாய் இரத்தினக்கற்கள் என்னைப் பார்த்து சிரித்தன. ஒளிக்கதிர்களை ஞாபகங்களாக வெளிவிட்டபடி!

"நான் உன்ன எப்ப சந்திக்கிறேனோ அன்று உனக்கொரு இரத்தினக்கல் செட் தருவேன். அந்தக் கற்களைப் பாவித்து நீ மோதிரம் செய்து , உன் கைல அதப் போட்டுக்கணும்...ஏன்னா எப்பவும் நான் உன் கூட இணைந்திருக்கனும்"

அவள் அன்று  கூறிய வார்த்தைகளை நான் வேடிக்கையாக நினைத்து அதனையே , மறந்திருக்கின்ற ஓர் பொழுதில், அவள் அதனை உயிர்ப்பித்து என்னைக் கடனாளியாக்கிச் சென்று விட்டாள்...

அடுத்த எங்கள் சந்திப்பில்  நானும் அவளுக்கொரு ஏதாவது ...................

அவள் அன்பு மனசுக்குள் வீழ்ந்து கண்ணீர்த்துளிகளையும் கிளறிவிட்ட போது, அழுதேன் அந்தக் கணத்தில் நிறைய கண்ணீர்த்துளிகள் கன்னத்தில் உருண்டன..............

அவை ...........

ஆனந்தக் கண்ணீர்!

முகம் பார்க்கும் நட்புக்கள் கூட சீக்கிரம் அற்பக் காரணத்தால் முறிந்து விடும் இக்காலத்தில் அந்த "மிஸ்ட் கோல்" பாசம் உயிரில் நினைவுகளை விதைத்து போஷித்து வருகின்றது......

எங்கள் ஆயுள் வரை இவ்வன்பு தொடரும் எனும் நம்பிக்கையுடன் அவளை நினைவுகளால் அரவணைத்தவாறே பயணிக்கின்றேன் எங்கள் நட்புலகில்!





2012/08/19

மரணப்பூக்கள்


ஒவ்வொரு விடிகாலையும் - எனக்கு
நிச்சயமற்ற பொழுது !

இரவின் சயனத்தில் வீழ்ந்துகிடக்குமிதயம்
அறுந்துவிடத் துடிக்கின்றது பலமாய்!

கனாக்கள் காலாவதியாகிப் போனதில்
காவுகொள்ளப்பட்டனவோ உணர்வு வேரறுக்கப்பட்டு!

பறக்கத் துடிக்குமென் எத்தனங்களில் - யாரோ
சிறகுகளை கத்தரிக்கின்றனர் சளைக்காமல்!

வெந்நீரின் சகவாசத்தில் வீழ்ந்த மனசும்
ஆவியாகிபோகின்றது  அடிக்கடி மகிழ்வும் துறந்து!

எங்கோ தொலைந்த சந்தோஷங்கள்- நீராய்
இங்கிதமின்றி  விழிமடலுக்குள்  ஊற்றப்படுகின்றன!

குரல்வளையின் பட்டிகையாய் தூக்குக்கயிறொன்றும்
வரமாகி மூச்சுக்காற்றில் தரித்து நிற்கின்றது!

ஒட்டடைபடியாத மயானமொன்று எனக்காய்
காத்துக் கிடக்கின்றது அந்தரிப்புடன்!

பாறைகளின் போர்க்களத்தில் பதியமிடப்பட்ட வாழ்க்கை
கோரமாகிக் கிடக்கின்றது தினமும் !

ஒருவேளை சந்தோசங்களின் மீள்பிறப்பு
இறப்பின் காலடியிலோ!

இளமையின் போஷிப்பில் துடிக்கும் நாடியே..........
உனக்கேனின்னுமென் மூச்சறுக்கத்  தயக்கம்!

சபிக்கின்றேன் என் ஆரோக்கியத்தை.........!

இருந்தபோதும்...................!

நாளை சேதியொன்றும் வரும்!- என்
ஆயுள் அண்டம் ஆறடிக்குள் சிதைக்கப்பட்டதாய்!

அன்று மண்ணறை மடி  தர- உறவினர்
கண்ணீர்த்துளிகளென்னைத் தாங்கிப் பிடிக்க...

பதித்துக் கொண்டிருப்பேன் என்னையும் .....
மதியில் இம்சைகள் தொடாத புதுத்தேசத்தில்!

ஜன்ஸி கபூர் 

Azka + Sahrish (19.08.12)....



















2012/08/18

கசக்கப்படும் மலர்கள்



                                                Fathima Afra 

இவ்வுலகம் எவ்வளவு விரைவாக நவீனத்தை நோக்கி முன்னேறிக் கொண்டு செல்கின்றதோ, அதற்கு எதிர்மாறாக வக்கிர உணர்வுகளையும் அதிகளவு சம்பாதித்துக் கொண்டு செல்கின்றது. மூடநம்பிக்கைகள், நரபலி என அற்பமான சிந்தனைகள் இன்னும் இவ்வுலகத்தின் நடைப்பயணத்திலிருந்து விலகிப் போகாமலிருப்பது ஆச்சரியமே!

கொலை, கொள்ளை, களவு, கற்பழிப்பு என தொடரும் பஞ்சமாபாதகங்களின் ஆணிவேர் முற்றாக அறுக்கப்படாத நிலையில், மனித சமுகம் எவ்வளவுதான் நாகரிகமடைந்ததாக தன்னைக்காட்டிக் கொண்டாலும் அதன் பெறுமதி பூஜ்ஜியமே

அண்மையில் நான் கேள்விப்பட்ட சம்பவமே என்னை இவ்வாறு எழுதத்தூண்டியுள்ளது.

இறைவனின் அழகிய, அற்புத படைப்புக்களில் குழந்தையும் ஒன்று. குழந்தைப்பருவம் ஒரு சில வயதேற்றங்களின் பின்னர் பிள்ளைப்பருவமாக மாற்றப்பட, வீடென்று இருந்த பிள்ளையின் உலகம் பாடசாலை வரை நீளுகின்றது..மலரைப் போன்று மென்மையான உணர்வும், உடலும் கொண்ட இந்த சின்னவர்களின் அன்பும் , அவர்கள் சார்பான உலகமும் எம்மை மகிழ்ச்சிப்படுத்தும் நந்தவனங்கள் என்பதனை  மறுப்பவர் யாருமில்லை !

பாத்திமா அfப்ரா...................!

வெலிகம, கோட்ட கொடையைச் சேர்ந்த தரம் ஒன்று கற்கும் பால்மணம் மாறாத சிறுமி...பாடசாலை வாழ்விற்குள் நுழைந்து இன்னும் ஒருவருடம் கூட பூர்த்தியாகாத மலரிவள்..

அச் சிறுமிக்கு அவன் முகம் ஏற்கனவே பழக்கப்பட்ட நிலையில், அவன் அன்று அச்சிறுமியை அணுகி பூச்செண்டு தருவதாக கூறி ஆசைப்படுத்தவே அப்ராவும் அவனுடன் அவன் வீட்டுக்குச் சென்றுள்ளாள்.

அவன் காமுகன். பெண்கள் குளிப்பதையெல்லாம் மறைந்திருந்து பார்த்து, பல தடவைகள் பிடிபட்டு நையப்புடைக்கப்பட்டவன். அவன் பொழுதுபோக்கே ஆபாசப்படக்காட்சிகளை ரசிப்பதுதான்!

அவன் முன்பு மனநலப்பாதிப்படைந்து குணமடைந்தவன். அந்தக் கொடியவன் மூடநம்பிக்கைகளிலும், அதிக விசுவாசம் கொண்டிருந்தான்.. அவனது தீராத நோய் குணப்படுத்தப்பட வேண்டுமானால், சிறுவர் ஒருவரை நரபலியிட வேண்டுமென்பதில் அவன் குடும்பத்தினரும் அதிக  நம்பிக்கை வைத்திருந்தனர். அவர்களின் அந்தத் தேடலுக்கு அfப்ரா இரையானாள்.

அந்த ஆறு வயதுச் சிறுமி அfப்ராவை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்ற அவன் , வீட்டில் மறைத்து வைத்திருந்தமண்வெட்டியினால் அf ப்ராவைத் தாக்கி , அவள் முகத்திலும் பயங்கரக் காயங்களை ஏற்படுத்தி, சிறுமி சிந்திய இரத்தத்தில் தன் நரபலி வெறியைத் தணித்துள்ளான் அந்தக் காமுகன்.

அவனது தாக்குதலில் துடிதுடித்துக் கசக்கப்பட்ட அப்பிஞ்சு, தனது  மூச்சையடக்கிய  பின்னர், அவளது சிதைந்த  உடலை ஒரு குறித்த வாழைமரத் தோட்டத்தில் மறைவாக வீசியிருக்கின்றான். எனினும் அவனது துரதிஷ்டம் இறந்த அfப்ராவின் உடல் வெளியுலகப் பார்வைக்குத் தென்பட்டு விட்டது.


பிள்ளை கொல்லப்பட்ட செய்தி கேட்டு திரண்ட உறவுகளும், ஊரும் அவனைத் தேடிக் கண்டுபிடித்து நையப்புடைத்து சட்டத்தின் கரத்தில் ஒப்படைத்துள்ளனர். அவன் இப்பொழுது சட்டத்தின் பிடியில் சிக்குண்டிருக்கின்ற ,  ஓர் கைதி..............!



அfப்ராவைக் கொலை செய்த பாதகன் இவன்தான்


அfப்ரா.........!

இப் பூவுலகில் இன்னும் பல காலம் வாழ்ந்து  , தனக்கு விதிக்கப்பட்ட வாழ்வை வாழ வேண்டிய பூ ! சத்தியமும், மனிதாபிமானமுமற்ற மனிதர் சதியினால்  தன் காலடித்தடம் பதித்தோடித்திரிந்து , விளையாடிய  மணற்றரையிலேயே  அப்பிள்ளை நிரந்தரமாக உறங்குகின்றாள். மனித உயிர்களை தம் சுயநலத்திற்காக காவு கொள்ளும் எவரையும் என்றும் மன்னிக்கவே முடியாது!

சிறுமியைக் குருரமான முறையில் கொலை செய்த இவனுக்கு உயர்ந்த பட்சத் தண்டனை வழங்கவேண்டுமென்பதே, மனிதாபிமானமுள்ள மக்களின் ஒருமித்த குரலாக ஒலிக்கின்றது.

இந்த மென்மையைக் கூடச் சிதைக்கும் வக்கிரத்தைப் பெற்றுள்ள இவனைப் போன்றவர்களை இப்புவியில் தரிக்க விட்டால், இன்னும் பல அப்ராக்கள் கசக்கப்படுவார்கள் என்பது கசப்பான, வேதனையான உண்மை! இந்தக் கொடும் பாவிக்கு மன்னிப்பு எனும் வார்த்தை லாயக்கற்றது.

இலங்கைச் சட்டத்தில் இப்பொழுது மரணதண்டனை நிறைவேற்றப்படுவதில்லை.  இவ்வாறான கொலைக் குற்றமெல்லாம் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுவதனால்தான் இந்தப் பாவிகளும் மரணதண்டனை அவஸ்தையிலிருந்து தப்பித்து விடுகின்றார்கள்...

சட்டம் ஒரு இருட்டறை என்பார்கள். சட்டத்தின் பிடியில் இவர்கள் தப்பித்துக்கொண்டாலும் கூட இறை தண்டனைக்கு நிச்சயம் ஆளாவார்கள் என்பதும்  மறுக்கப்படாத உண்மை!

காலம் பதில் சொல்லும்............!

இரத்தங்களால் அசுத்தமாகாத பசுமையான பூமியொன்றில் மனிதர்கள் வாழ்கின்றார்கள் எனும் சேதியை அது தாங்கிக் கொள்ளும்......இவ்வாறான காலமொன்று வருமா....அல்லது இதுகூட  நிறைவேற்றப்படமுடியாத காத்திருப்பா!

நம்பிக்கைதான் வாழ்க்கை......காலம் பதில் சொல்லும்!