About Me

2012/09/23

தொடருமோ காமம்


கழுகுகளாய் காமக் கண்கள்
பறக்கின்றன சதைப் பிண்டங்களுக்காய்.......
மாற்றுப் பிறப்புறுப்புத் தேடிச்
சிரிக்கின்றன  மன்மதன்களாய்!

உடல்கள் உரசி
விழிகள் விழுங்கி
எழுதப்படும் காதல் சரித்திரங்கள்.....
இப்போதெல்லாம்
காமத்தின் அர்ப்பணிப்பில்
சுருண்டு கிடக்கின்றன.........
எங்கோ அன்பைத் துவம்சம் செய்தபடி!

காதலை மந்திரமாக்கி
பென்மைக்குள் நா சுவைக்குமிந்த
பொறுக்கிகளின் மனசுகள்.......
வரம் வாங்கி வந்தனவோ "சாபங்களை"
சரித்திரங்களின் உமிழ்நீரால்
இவர்கள் சுத்தம் செய்யப்பட வேண்டும்!

கண்டதும் காதலென்பார்...
கருத்தினில் நிறைந்ததும்
இதழ்களை இறுக்கிடுவார்.......
முத்திரைகள் பல பொறித்திட்டே
நித்திரைக்குள்ளும் ஆணியறைவார்
நிம்மதி பிடுங்கி!

ஆசையின் பலத்தில்
பழம் பறிக்கும் ஏவாள்களை
கண்டாலோ இவர்கள்
பெண் ....................
பலவீனத்திற்குள் தம் பலம் புதைத்து
வளைத்துப் பிடித்திடுவார்
வின்னர்களாய்
இந் நவீன ஆதாம்கள்!

வெட்ட வெளிகளும்
வெளிச்சம் துறந்த பற்றைகளும்........
காதல் தேசத்தின் விலாசங்களாய்
மாறிப் போகும்
காதலால் வெம்பிப் பழுத்த - இவர்கள்
சதையுறுஞ்சுவதற்காய்!

கூரை மறந்த காற்றாடையில்
பிண்ணிப் பினைந்து காதல் செய்து......
காமம் சுவாசிக்கும்
இவர்கள் வாழ்வில்.................
மோகித்துக் கிடக்கும் பொய்மைகள்
மெய்போல் மெய்க்குள்
நம்பிக்கை புதைக்கும்
வருங்கால கனவுகளுக்காய்!

தாய்மையின் கற்புக்குள்ளும்
காமமுறிஞ்சும் இச் சாத்தன்கள்..........
வேர் பரப்பி பிணைந்திருக்கின்றன
இவ்வுலகை .....
மயானங்களாய் மாற்றி
தம் வாலிபங்களின் கறைப்படிவில்
தடம் பதித்துலாவ!

தம் மொழுக்கத்தில் தீமூட்டி - ஆபாச
வார்த்தைக்குள்  மனம் புதைத்து..........
பிஞ்சில் பழுக்குமிந்த "ஓமோன்கள்"
ஓசியில் .............
பிணங்களிலும் சுகம் தேடும்
இரசாயனக் கழுகுகள்!

சபலத்தில் தம்மெண்ணம் புதைத்து
அப்பாவி வாழ்வோடு நச்சுக் கலக்கும்
இப் பிசாசுகள்.......
என்றும்
இறை சந்நிதானத்தில்
சபிக்கப்பட்ட சாத்தான்கள்!

இரவு விரிக்கும் கனாக்களில்
இதம் தேடி  மருண்டு நிற்கும்- தம்
ஆண்மைக்குத் தீனி தேடி
அட்டகாசமாய் அலைந்து திரியும்
இவ் வல்லுறுக்கள்
நல்ல பிறப்பில் புவி தொடாதவர்கள்!

விடியலில் சிவக்கும் வானில்
கூட.........பெண்
இரத்தம் துப்பி ரசனை தேடுமிந்த
இங்கிதமற்ற பேய்களுக்கு
யாரிட்டாரிந்த  "கௌரவ" வாழ்க்கை
மனிதரென!

கறைப் படிவுகளின் கூடாரத்தில்........
இரை தேடியலையுமிந்த
வேட்டைநாய்களின் ஆயுதமாய்
"காதல்" நசுக்கப்பட்டு
புனிதம் கற்பழிக்கப்படுகின்றது தினமும்
கண்ணீர்ச் சிதறல்களுடன்!

மரணங்களின் விளிம்பேறி
மீளுமிந்த காமத்தால்..........
காவு கொள்ளப்படும் பூக்கள்
நிரப்புகின்றன மகரந்தங்களை - தம்
கர்ப்பப்பைக்குள் நிரந்தரமாய்....
அனாதைகளை உற்பத்தி செய்தபடி!

அலைபேசிக்குள் நிதம் தூதுவிட்டு
விலைமகளாய் தன் காதலியை மாற்றும்.....
கவர்ச்சி நாகரிகம் கூட - இக்
காமதேசத்தின் பக்கங்களை
நிரப்பிச் செல்கின்றன வீரியமாய்!

துளி மழைக்குள்ளும் - பூமிக்குள்
துணை தேடும் காளான்களாய்...........
வெட்கத்தைத் தொலைத்து விட்டு
சல்லாபிக்குமிந்த தீநாக்குகளின் உரசலில்
நிறை பிரசவமாய் காமம் பிறக்கும்
திரையரங்குகளின் இருள் மூலைக்குள்!

இவர்கள் திருந்தப் போவதில்லை.......
அன்பின் வேட்கைக்குள்
அக்கினியை நனைத்து விட்டு......
சபலத்தால் தம்முணர்வை நக்குமிந்த
ஜடங்களுக்கு........
காமத்தின் பார்வையிருந்தால் போதும்
தப்பிவிடுவார்கள்
கல்லறைக்குள் வீழ்ந்தாலும் - தம்
ஆத்மாவுக்கும் சுகம் தேடிக் கொடுக்க!

உயிர் தரித்த தடத்தில் கூட
உறவு தேடும் ஈனர்களின் படையெடுப்பின்
வலிமையில்..........
வெடித்துச் சிதறுமோ
பொறுமை பூமி- இனியும்
தன் சோகம் தாங்காது!


2012/09/21

நட்பும் குழந்தைத்தனமும்


நம் வாழ்க்கை முழுமை பெற்று , நாம் மரணிப்பதற்குள் பல பருவங்களைக் கடந்து விடுகின்றோம். ஒவ்வொரு பருவங்களும் பல அநுபவங்களால் சூழப்பட்டு , வாழ்வினை வளப்படுத்த முயற்சிக்கின்றன. உறவினர், நண்பர், சமுகத்தினர், அயலார், யாரோ ஒருவர் இவ்வனுபவத்தைத் தருபவராக இருக்கலாம். நல்ல அனுபவங்கள் மனதைக் குளிர்ச்சிப்படுத்தும் அதே நேரம், தீயவை அல்லது எதிர்பாராதவை மனதை சங்கடப்படுத்தக் கூடியவையாக இருக்கின்றன!

அனுபவங்களைத் தருவோர் பட்டியலில் முதன்மைப்படுத்தப்பட வேண்டியவர்கள் யாரென்று நினைக்கின்றீர்கள் ? நான் நினைக்கின்றேன் நண்பர்களென .......!

(சரியா.....நண்பனென்ற வார்த்தை ஆண்பாலுக்குரியதாக இருப்பினும், நான் நண்பிகளையும் இதற்குள் இணைத்தே "நண்பரெனறு ' இங்கு கதைக்கின்றேன்.

பெரும்பாலும் ஒத்த குணத்தினரே, நம் நண்பராக இணைவார்கள்.......அவர்கள் தரும் அனுபவங்கள் விசாலமானவை. நம் துன்பத்தில் தாமும் கரைந்து , சந்தோஷங்களில் நம் சிரிப்புக்களுடன் இரண்டறக் கலந்து , சாதனைகள் புரியும் போது மானசீகமாக வாழ்த்தி, தவறுகளை நம் வாழ்வில் காணும் போது சுட்டிக்காட்டித் திருத்தி . நம் மனவோரங்களில் உயர் அன்பை வெளிப்படுத்த முனைகின்ற நல்ல நட்புக்கள் வாழ்வில் கிடைப்பது சந்தோஷமே!

ஆனால் சிலர் , நண்பராக பிறர் பார்வைக்கு செயல்பட்டுக் கொண்டே , நம் முன்னேற்றத்திற்கு குழி வெட்டுபவராக இருப்பார்கள். இவர்களிடம் அன்பை எதிர்பார்க்க முடியாது. நேரில் சிரித்துக் கொண்டு , புறமுதுகில் முரண்பாடுகளை எழுதுபவர்களாக இருப்பார்கள்.....)

இப்படியானவர்களையும் நான் நிறைய சந்தித்துள்ளேன். இவர்கள் துன்பம் தந்தாலும் கூட, என் வாழ்வின் வியத்தகு முன்னேற்றத்திற்கு தமது பொறாமையுணர்வை ஏணியாக்கித் தந்துள்ளனர்.

இன்னும் சிலரோ....நண்பர்கள் தான் .....எப்போதாவது கண்டால் முகமலர்ந்து கதைப்பார்கள். காணாமல் நாம் போகும் போது அதாவது நாம் சந்திக்காத போது எதுவுமே அலட்டிக் கொள்ள மாட்டார்கள். மீண்டும் எப்போதாவது நாம் சந்திக்கும் வரை , நம்மை ஞாபகப்படுத்தமாட்டார்கள்...

இந்த மூன்று வகைக்குள்ளும் என் நட்புக்கள் உள்ளடக்கப்ட்டு நிறைய அனுபவங்களைத் தந்துள்ளனர். சிறுவயது, கட்டிளமைப் பருவம், வாலிபம், நடுத்தரப் பருவம், முதுமைப்பருவம் எனும் பருவச் சுழற்சியில் ஒவ்வொரு விதமான நட்பினர் இணைவார்கள் . இணைய வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை சுவாரஸியமாகவும், அர்த்தத்துடனும் விளங்கும். (என்ன நான் சொல்லுறது சரிதானே)

அவ்வாறாக என்னுள் ஆதிக்கம் செலுத்திய ஒரு சிலரைப் பதியப் போகின்றேன் இங்கு...

எங்கள் குடும்பத்தில் எனக்கு ஆண் சகோதரர்களில்லை. படித்ததோ கட்டுப்பாடுள்ள பெண்கள் பாடசாலையொன்றில் !

 என் பள்ளிப்பருவ நாட்களில் தனியார் கல்வி நிறுவனங்களின் (ரியூஷன்) வாசற்படியை நான் மிதிக்கவேயில்லை.  என் நட்புக்கூட்டங்கள் யாவரும் பெண் மாணவிகளே! அதுவும் யாழ்ப்பாண இந்து மகளிர் கல்லூரி மாணவிகளே என்னுடன் பழகி, நட்பு முத்திரையைப் பதித்தவர்கள். இவர்களுடன் எங்கள் வீட்டுக்கருகிலுள்ள ஒரு சில என் வயதையொத்த பொம்பிளைப் பிள்ளைகளும் நண்பிகளாக இணைந்தனர். பாடசாலை முடிவடைந்து, மாலையில் நாங்கள் விளையாடும் விளையாட்டு பள்ளிக்கூடம்தான்...நான்தான் அதிபர்......எனும் ரீதியில் அவர்களுக்கு பள்ளிக்கூடம் நடத்துவேன். இது வயது பத்துக்குள்...எனக்குத் தெரிந்து நான் மண் சோறு , கறி ஆக்கிய ஞாபகமில்லை..மாலையில் நண்பிகளை "டபிள்" ஏத்தியவாறு சைக்கிளிலில் ஊரைக் கொஞ்சம் சுற்றுவேன்...(இதெல்லாம் சின்ன வயசில பண்ணிய குறும்பான அனுபவங்கள்)

எங்கள் வீட்டுக்கு முன்னால், எங்கள் உறவுக்காரக் குடும்பம் இருந்தார்கள். அவர்களுக்கு ஒரே ஒரு ஆண்மகன்...அவன் எனக்கு சகோதரன் முறை!

அம்மகன் மீது கொண்டுள்ள அதீத பற்றால், அவனது பெற்றோர் அவனை ரொம்பக் கண்டிப்புடன் அதே நேரம் கட்டுப்பாட்டுடன் வளர்த்தார்கள்.. அவன் வீதியில் இறங்கி நண்பர்களுடன் விளையாடியதென்பது அபூர்வமான விடயம். அவனுக்கு யாரும் நண்பர்களாக இல்லை. ஆனால் அவனது தந்தைக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். அவனை என்னுடன் மட்டும் விளையாட அனுமதிப்பார். எங்கள் வீட்டிலும் அவர்கள் வீட்டுக்குப் போகத் தடையிருக்கவில்லை. எனவே எனது நண்பன் அவனாகவும், அவனின் நண்பி நானாகவும் இருந்தோம். என் வாழ்க்கையில் நான் சந்தித்த முதல் நண்பன் அவன்தான்..

எப்போதாவது அவன் வீட்டுக்குப் போவேன்..அவன் என்னை கிரிக்கெற் விளையாடத்தான் அழைப்பான். நாங்கள் இருவரும் கிரிக்கெற், அல்லது கள்ளன்,  பொலிஸ் என ஓடி பிடித்து விளையாடுவோம். அல்லது "நொண்டிக் கோடு". "காடா வீடா" என ஏதோ விளையாட்டுக்களை உருவாக்கி விளையாடுவோம். அந்தப் பருவம் ரொம்பச் சுவையானதும், புதுமையானதுமாக இருந்தது.

என்னை விட அவன் ஒரு வயது சிறியவனாக இருந்தாலும், பெயர் சொல்லியே அழைப்பான். சில நேரம் சண்டை பிடித்தும், பல நேரம் சிரித்துப் பேசியும் எங்கள் சிறுவயது ஞாபகங்கள் புரண்டிருக்கின்றன. இன்று அவன் ரஷ்யாவில் மருத்துவனாக (ராக) பணிபுரிகின்றான்...

தொடர்ந்து வரும் நாட்களில் இப் பதிவில் எனது ஏனைய நண்பர்களும் இடம் பிடிப்பார்கள்...

சுவையான நண்பர்களின் அனுபவம் தொடரும் !