About Me

2012/12/07

அவஸ்தை



நிசப்தத்தின் கூடலில்
விழுந்து கொண்டிருக்கின்றது நம்
வார்த்தைகள்!

ஒளிக்கலவை
விழுங்கிக் கொண்டிருக்கும் - நம்
நிழல்களைத் தவிர.......................

இருளின் மயக்கத்தில்
பூவுலகம் சாய்ந்து கொண்டிருக்கின்றது!

பனித் துளிகளின் பரவசத்தில்
வியர்த்துப் போன என் விரல்களுக்கு..........

உன்னிதழ் ஒத்தடம்
மூச்சுத் திணற வைக்கின்றது லேசாய்!

விழிகளை மூடுகின்றேன்
முறுவலிக்கும் உன் பார்வைக்கு
திரை விரித்தபடி!

இருந்தும்..............எனை
வருடி யுன்னில் பதியமிடுகின்றாய் என்னை!

அறிவாயா...................

என் ஞாபகத்தின் மொழிபெயர்ப்பில்
உள்வாங்கிக் கிடக்கும் உன்னிடம்.........

எனை நிரப்ப வரும் போதெல்லாம்
இரக்கமின்றி நாணம் துவம்சம் செய்கின்றதே!

தம் இடைவெளியறுக்க மனமின்றி
சுவற்றில் தடுமாறும் பல்லிகளின் ஸ்பரிசத்தில்

 மன சஞ்சலங்கள் விழித்துக் கொள்ள..............
புகைமூட்டங்களாய் விலங்கிடுகின்றது
காமம் சூழ்ச்சியுடன்!

"ஏதாவது பேசடீ"

உரிமையோடு உறவாக

தவிப்பில் உறையும் உன் குண்டுக் கண்கள் ..............
துகிலுரிக்கின்றன என் உதடுகளை!

என் மௌனக் கதவுடைக்கும்
உன் காதல் போர் கண்டு மிரண்டு போகின்ற
என் பெண்மை....................

இடையின் இடைவெளியைக் கூட
விரட்டுமுன் ஆதிக்கம் கண்டு
இரகஸியமாய்
இரசிக்கின்றது மனசும் உன்னை உள்வாங்கியபடி!

அணைக்கின்றாய் கன்னத்தில்
கன்னம் வைத்து..................
படர்கின்றேன் முல்லையாய்
திரண்ட வுன் மார்பினில் !

ஆச்சரியம்தான்......................
உன்னைச் சேமிக்கவா தனித்திருந்தேன்!

தென்றல்


அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலய விடுதி மாணவர்களின் வெளியீடான தென்றலை, கவிதாயினி உள்வாங்கிக் கொள்கின்றது விமர்சனமாய்.......!

சஞ்சிகையின் பெயர் - தென்றல்
சஞ்சிகை ஆசிரியர் - நேகம பஸான்
விலை - 200 ரூபா
பக்கங்களின் எண்ணிக்கை 58

உணர்வுகளின் ஆளுகையை வெளிப்படுத்துவது மனம். அந்த மனதின் அருட்டல்கள் வரிவடிவமாகும் போது , அவையே இலக்கியத்தின் அஸ்திவாரக் கற்களாக மாற்றப்படுகின்றன. அந்தவகையில்  பேசப்படும் இலக்கியங்களே காலத்தையும் வென்று நிற்கின்றன என்பது கண்கூடு.

"தென்றல்" சஞ்சிகை .............!

மாணவர்களின் உணர்வுகள் சங்கமிக்கப்பட்ட தளம்.........

கன்னிச் சஞ்சிகை..........மாணவர்களுக்கான முன்னோடிச் சஞ்சிகை! அநுராதபுர ஸாஹிரா மகா வித்தியாலய விடுதி மாணவர்களால் அரங்கேற்றப்பட்ட முதல் கனவு..................இலக்கிய வருடல்!

எப்போதும் நம் எல்லோர் மனங்களையும் "தென்றல்" நனைத்துச் செல்ல வேண்டுமென்ற எதிர்பார்ப்பில்,  சஞ்சிகையின் நாமம் தென்றலாகி , நம்மை எட்டிப்பார்க்கின்றது. 

முகப்பட்டையை பார்க்கும் போது, கடற்கரையோரமொன்றில்  வளைந்து நிற்கும் தென்னை மரமொன்று, மானசீகமாக தென்றலை உறிஞ்சி மகிழ்வோடு இலயித்துக் கொண்டிருப்பதைப் போன்ற  பிரமிப்பு நமக்குள் முகிழ்க்கின்றது...........

என்னையுமறியாமல் மாணவர் ஆக்கங்களை விழிகளுக்கு விழ வைக்கும் எதிர்பார்ப்புடன் தென்றலின் ஒவ்வொரு பக்கங்களையும் மெதுவாகப் புரட்டுகின்றேன். அடடா.......கனாதியான வரிகள்........அழகான சிந்தனைப் புரட்டல்கள். தரம் 6 தொடக்கம் உயர்தரம் வரையிலான மாணவர்களின் கலை அறுவடைகளலல்லவா அவை!

பாடசாலை அதிபர், பிரதி அதிபர், இதழாசிரியர் நேகம பஸான், விடுதி நிர்வாகக்குழு உறுப்பினர் ஏ.எல்.மிஸ்கீன் ஆசிரியர் ஆகியோரின் ஆசிச் செய்திகளுடன் தனது கன்னி, இலக்கியப் பயணத்தை ஆரம்பிக்கும் தென்றல், தனது இறுதிப் பக்கத்தில் தன்னுடன் ஒட்டியுறவாடிய விடுதி மாணவர்களின் பெயர் விபரங்களை இணைப்புச் செய்துள்ளது.

கவிதைகள், கட்டுரைகள், நம் சிந்தனையைத் தொட்டு நிற்கக் கூடிய தகவல்கள், உரையாடல்கள், வரலாற்றுத் தகவல்கள்,சிறுகதை, மருத்துவத் தகவல் போன்ற மகுடங்களில் நிமிர்ந்து நிற்கும் மாணவ ஆக்கங்கள்  தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளிகளோடு உறவாடிக் கொண்டிருந்தன.

கட்டுரைகளும் நம் சிந்தனையோட்டத்துக்கு வாய்க்கால் நீட்டுகின்றன."உலக ரீதியில் முஸ்லிம்களின் நிலை", "இளைஞர்கள்","விண்வெளிப் பயணங்களின் பலாபலன்கள்", "மருத்துவத்தில் முஸ்லிம்களின் பங்கு", "அறிவியலும் குர்ஆனும்", "கல்வி" எனும் தலைப்புக்களில் தலைகாட்டும் பதிவுகள் சிறந்த கருத்துக்களை நம்முள் தூவி நிற்கின்றன.

மாணவர்களின் சிந்தனைத் தூண்டல்கள் பெரும்பாலும் கல்வியைச் சுற்றி நிற்பது ஆரோக்கியமான விடயமே. அவர்கள் வித்தியாசமான பார்வைகளில், கோணங்களில் கல்வி பற்றிய பதிவுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

"இரகஸியம்" உரைநடைச் சிறுகதை வித்தியாசமான கதையமைப்பு.

"நட்புக்காக ஒரு நண்பன்"  எனும் தலைப்பின் கீழ் பதிவாகியுள்ள இந்த வரிகளின் ஆழத்தைப் பாருங்கள்.

 "மனிதன் திகதி குறிக்கப்பட்ட மரண தண்டனை கைதியாவான், ஆதலால் உன் வாழ்வை இம்மைக்காக செலவிடுவதோடு நின்று விடாமல், மறுமைக்காகவும் நேரத்தை ஒதுக்கிக் கொள்.."

உயர்தரம் கலைப் பிரிவில் கற்கும் இம் மாணவனின் சிந்தனையின் உயிர்ப்போட்டம் ஆழ்மனதை லேசாய் வருடிச் செல்கின்றது.

கல்வி, தாய்மை, இயற்கை, யதார்த்தமான வாழ்வியலின் படிநிலைகள் போன்ற அம்சங்கள் கருக்கட்டப்பட்டுள்ளன கவிதைகளுக்காக

"தாயின் துயரம்" எனத் தலைப்பிட்டு, அன்னையின்  நிகரற்ற பாசத்தைக் கவி யாத்த ரஸ்மியின் கவியுடன் , தென்றல் தன் பக்கங்களை மெதுவாக வருட ஆரம்பிக்கின்றது.

மேலும் சப்ரான்,

"மறை தந்த இறைதூதர் குறையிலா நபி நாதர்
உலகெல்லாம் புகழ் பாடும் நிகரில்லாப் பணியாளர்
எம் பெருமான் முஹம்மது நபி"

என நபி (ஸல்) அவர்களின் புகழ்  பாடுகின்றார்.

தொடர்ந்து வருகின்ற சில கவிதைகளில் என் பார்வையைச் செலுத்திய போது, பின்வருவன என கருத்துக்களாக இங்கு உறைந்து நிற்கின்றன..

இந்த மாணவ மனங்களை பாலஸ்தீனக் கதறல்களும் உலுக்கியுள்ளன என்பதை "பாலஸ்தீனுக்கான உனது அர்ப்பணிப்பு என்ன" எனும் கவிதை வலிப் போடு பின்வருமாறு ஒலிக்கின்றது.

"இஸ்லாமிய இளைஞனே- இனி
               பாலஸ்தீனுக்கு விடிவு பிறக்க - உன்னால்
ஆயுதம் எந்த முடியவல்லை- தினம்
               இரு கை ஏந்தியவாறு பிரார்த்தித்து விடு!"

 "விரும்பிச் செயலாற்று" எனும் தலைப்பிலிடம் பெற்ற ஹாகாசின் சிந்தனையோட்டம்...இவ்வாறு அலைகின்றது நம்முள் !

" நாளும் வாழ்ந்திட நீ விரும்பு
                  நாட்டில் நீயொரு செங்கரும்பு
காலம் என்பதை பொன்னாக்கி
                  கல்வி என்பதை பொருளாக்கி"

மப்ராஸ் எனும் மாணவனின் கல்வி பற்றிய கவிதையில், காணப்படும் இவ்வரிகளும் என்னைக் கவர்ந்தன.

"திரையிட்டு இருந்த - என்
திரையைக் கிழித்து
சமூகத்தினுள் என்னையும்
பூச்சியாய் மாற்றியது
இப் புனித கல்வியே!"

தமிழை நேசிக்கின்ற, வாசிக்கின்ற அனைவருமே இலக்கியம் புனைந்து மனம் மகிழ துடிக்கின்றவர்கள். அந்த வகையில் " விடியலை நோக்கிய விவரணம்" எனும் தலைப்பில் விடியலை புது விதமாய் நிரோஷ்கான் நமக்கு அறிமுகப்படுத்துகின்றார்.

" காலை தரிசனத்தில்
பறவைகளின் முத்தம்
பிழிந்து
எச்சங்களின் மிச்சம்
பனித்துளிகளின் மேல்
பாயின்றி படுத்துக் கிடக்கும்"

(விடியலை  நோக்கிய விவரணம், சிரம் தாழ்த்துவோம் எனும் இரண்டு கவிதைகளும் 49ம் பக்கத்திலும் 53ம் பக்கத்திலும் தவறுதலாக இடம் பிடித்து விட்டன . இயற்கை எனும் கவிதையும் இரண்டு பக்கங்களை ஆக்கிரமித்துள்ளது.)

இந்த பதினாறு வயது மாணவனின் புதுக்கவிதையாற்றல் மன மகிழ்வு தருகின்றது.

கல்லூரிக் காலமென்பது யாவருக்கும் மறக்க முடியாத இனிய காலம். அதிலும் விடுதி வாழ்க்கையென்பது அலுப்பும், சலிப்பும், குறைகளும் கூட குதுகலமாக, வேடிக்கையாக மாற்றப்படுகின்ற காலமென்பதை அர்ஷாத் எனும் மாணவன் தனது "வீடா? விடுதியா" எனும் கவிதையில் பதிவிட்டுக் காட்டுகின்றார்.

இவ்வாறு பல மாணவர் ஆக்கங்கள். அவற்றுள் இவை சிறு துளிகளே!

இவை மாணவர் ஆக்கங்கள்.......அவர்களது ஆர்வத்தின் உந்தமே இப்படைப்புக்கள். சகல ஆக்கங்களிலும்  இங்கு இலக்கிய வரம்புகளைத் தேடுவது பொறுத்தமற்றது. எனினும் சில இடங்களில் எழுத்துப்பிழைகள் நம்மை மறைந்தும், முகம் காட்டியும் எட்டிப் பார்க்கின்றன. எதிர்காலங்களில் இவ் வெழுத்துப்பிழைகளைத் தவிர்ப்பது நலம்..மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கம் அருகி வருவதனால், இலக்கணப் பிழைகளும், எழுத்துப் பிழைகளும் அதிகரித்து வருவதை நாம் காணலாம்.

மிகச் சிறப்பான முயற்சியே இச் சஞ்சிகை.....ஆனால் இனிவரும் வெளியீடுகளில் படங்களை சிறிதாக்கி, பதிவுகளின் எழுத்துக்களின் அளவை சற்று அதிகரியுங்கள். இது தென்றலின்  செழுமையை சற்று குறைத்து விடலாம் என்பது என் பார்வை...

குறுகிய காலத்தினுள், நிறைவுடன் வெளி வர முயற்சித்த தென்றலே, காலப்போக்கில் நீ சிறு சிறு கீறல்களைக் கலைந்து நிறைவு பெறுவாய் என்பது என் நம்பிக்கை.......வாழ்த்துக்கள் விடுதி மாணவர்களுக்கும் சஞ்சிகை ஆசிரியருக்கும்! !

தென்றல் ஆசிரியர் பதிப்பித்த என் விமர்சனம் காண


2012/12/06

புரிந்து கொள் மனமே



இரச விம்பங்கள்
வாந்தி எடுக்கின்றன இப்பொழுதெல்லாம்
என்னைப் பார்த்து..................

முட்களுக்குள் நிழல் தேடிப் போனதில்
ஆணிகளின் கூடாரங்கள்
அடம்பிடித்தன என் இருப்புக்காய்!

நனைந்த காகிதத் துண்டுகள்
களவாய் என் பெருமூச்சுறுஞ்சி...................
உலர்ந்து கிடக்கின்றன மேசையின் மேல்!

பருத்த சூரியன் கூட
இளைத்துப் போனதோ......தன்
வெம்மையை என் தேகத்துள் திணித்தே!

கடிகாரங்களின் தவிப்பில்- என்
மௌனம் உரசிச் செல்கின்றது
தியானங்களை மறுத்து!

கண்ணா...............
தோற்றுத்தான் போனேன் ......
என் வலிக்குள்
உன் வழிப்பாதையை அமைத்த
உன்னிடம்!

அமிலங்களுக்குள் என்
விழிநீர் தேய்த்து விளையாடுமுன்னிடம்
யாசகம் கேட்கிறேன் என்னுயிரை
திருப்பித் தா!

என்றோ வரைந்த சிறுபுள்ளிக்குள்
உன்னுலகத்தைச் சுருக்கி...............என்
நெஞ்சுக்குள் முகடு வரைகின்றாய்
அடிக்கடி!

பரிவோடு சொல்கின்றேன்...........
புரிந்துகொள் மனமே!
கறைபடிவுகளின் சாம்பரில்
வரையப்பட வேண்டாம் நம்காதல்!



பிஞ்சுக் காதல்



அவன்................!

இன்னும் பதினான்கு வயது நிரம்பாதவன்...பருவ வயதுக்குள் உள்நுழைய விளிம்பில் நிற்பவன்.. அரும்பி நிற்கும் மீசையை ரகஸியமாக தடவித் தடவி இன்பம் காணும் பருவத்தினுள் வாசம் செய்பவன்...........

ஒருவாரமாக அவனை அவதானிக்கின்றேன்.....சற்று பரபரப்புடன் காணப்பட்டான். அவனுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். பாடசாலை முடிவடைந்ததும் வீட்டுக்கு செல்ல முதல் பல தடவைகள் "பொயிட்டு வாரேன்  மிஸ் " என்பான்.... ஆனால் போகாமல்  என்னையே சுற்றிச் சுற்றி வலம் வருவான்.

அவனது தாய் கூறிய பின்னரே, அவனுக்கு என்னை அதிகம் பிடிக்கும் என்பதை நான் அறிந்தேன்..........

"எப்ப பார்த்தாலும் மிஸ் உங்களைப் பற்றியே கதைப்பான் "

அவன் தாய்  என்னைச் சந்திக்கும் போதெல்லாம் இதனைக் கூறிச் சிரிப்பார்.

அவன் சற்று முரட்டு மாணவன்...அந்த முரட்டுத் தன்மையை என் அன்பு நெகிழ வைத்ததில் எனக்கும் சந்தோஷமே!

"உன் மனசுல ஏதோ பிரச்சினை  இருக்கு, சொல்லுடா ராஜா........"

ஒருநாள் என் துலாவுகைக்குள் அவன் பிடிபடவேயில்லை.....ஒரு வார என் முயற்சி பலனளிக்காமல் போகவே, என் வேலைப் பளுவில் அவனை நான் மறந்தே போனேன்...

நேற்று......

எல்லா மாணவர்களும், வகுப்பறையை விட்டு வெளியேறிய பின்னர் என்னிடம் வந்தான்... தன் மனதிலுள்ள விடயத்தை சொல்வதற்கு துடிப்பதை உணர்ந்தேன்...சொல்லும்படி தூண்டினேன்....

"யாருக்கும் சொல்லாதீங்க, மிஸ்"

அவன் பீடிகை என்னுள் ஓரளவு விடயத்தை ஊகிக்க வைத்தது. இருந்தும் அவன் வாயால் அதைக் கேட்க நினைத்து அமைதியானேன்..........

என்னிடம் பெற்ற சத்தியத்தின் வலிமையால் தன் மௌனம் உடைத்தான்......

நாணம் கலந்த புன்னகை அவனுள் இறுகிக் கிடந்தது........

"மிஸ்.......நான் ஒரு ஆள லவ் பண்ணுறன்"

அப்பாடா.....போட்டுடைத்தான் தன் மனதைக் குடைந்திருக்கும் காதல் ரகஸியத்தை!

அவள்................அவன் வயதுக்காரிதான்...........பெயர் சொன்னான்....

அவளுக்கும் நான் பாடம் எடுக்கிறேன்...நல்ல பிள்ளை....எப்போதும் அவள் மொழி புன்னகைதான்.....என்னை அவளுக்கும் ரொம்பப் பிடிக்கும்...

"அட................அப்ப டீப்பான லவ்வுதான்..எப்ப இருந்துடா"

நான் ஆச்சரியத்தை வெளிப்படுத்தாமல் கேட்ட போது, முகத்தில் பிரகாசம் குன்றாமல் 3 வருஷம் என்றான் பட்டென்று!

"அப்போ சின்ன வயதுக் காதலோ..........ஆமா, அவளும் உன்னை லவ் பண்றாளா" அப்பாவித்தனமாய், நான் அறியாதவளாய் கேட்ட போது, சிரித்த அவன் முகம் சற்று வாடியது......மீண்டும் மௌனித்தான்...........

"இல்ல மிஸ், இன்னும் நான் என் விசயத்தச் சொல்லல, ஆனா அவள 9ம் வகுப்பு பெடியனும் லவ் பண்ணுறான் " என்றவாறு அந்தப் பையனின் பெயரை அவசரமாக வெளிப்படுத்த, அருகில் நின்ற அவன் நண்பன் மேலும் ஒரு ரகஸியத்தை என் காதில் போட்டுடைத்தான்...

"மிஸ்.நேற்று, அவனுக்கும், இவனுக்கும் பெரிய பைட் போச்சு, இவன்தான் நல்லா அடி வாங்கினான்"

"ஓ.........இவ்வளவு நடந்திருக்கா..ஏன்டா அவன் உன்ன அடிச்சான்"
நானும் விடவில்லை.

"இல்ல மிஸ், அவனும் அவளக் காதலிக்கிறானாம், விட்டுக் கொடுடா என்று அடிச்சான். நான் மாட்டேன்னு சொல்லிட்டேன்"

"ம்ம்.....சினிமாவ பார்த்து ரொம்பத்தான் கெட்டாச்சு.........இல்லையா!"

நான் சற்று அழுத்திக் கேட்ட போது அழுதே விட்டான் அவன்,  "அவள எனக்கு ரொம்பப் பிடிக்கும் , இங்க பாருங்க மிஸ், 3 நாளா இத அவளக்குக்  கொடுக்க ட்ரை பண்ணுறன்.....தனிய போகாமல் ப்ரெண்ட்ஸோடத்தான் சேர்ந்து போறாள்..."

என்றவாறு தன் காற்சட்டைப் பைக்குள்ளிருந்து சில டொபி, கன்டோஸ், 2 பேனாக்களை வெளியே எடுத்தான்...

" ஏதடா காசு இதுக்கு"

நானும் விடவில்லை........

"மிஸ்.......நான் வீட்டில ஆசையா வளர்த்த மீன்கள எல்லாம் அவளுக்காக வித்துட்டேன்.அந்த காசிலதான் இத வாங்கினேன்"

அவன் காதல் ஆழம் புரிந்தது.. ஆனாலும் அது ஒரு தலைக் காதல்..அந்தப் பெண்பிள்ளை சற்று வசதியான பிள்ளை....இவன் காதலுக்கு முதல் தடையாக அந்தஸ்தே வாய் பிளந்து நிற்பதை அவன் உணரவில்லை,

"நான் ஒன்னு சொல்லட்டுமா.....அவள் பணக்காரிடா"

"பரவால மிஸ், எனக்கு அவள்ர காசு வாணாம்....அன்பு போதும்...அன்பா  ரெண்டு வார்த்தை பேசினாப் போதும்.........."

அவனும் அவளை விட்டுக் கொடுப்பதாக இல்லை.

"சரிடா................பர்ஸ்ட், அவள்ர போய் உன் காதலைச் சொல்லு..........சரின்னா நீ கனவ வளர்க்கலாம், ஆனால் இந்தக் காதல் அவஸ்தையில நீ படிக்காம விட்டா, அப்புறம் என் கூடப் போசக் கூடாது சரியா"

"ம்ம்"

தலையாட்டினான்... அன்றைய தினமே அவளுக்காக காத்திருந்தான் தன் காதல் சொல்ல!

மாணவர்களுக்கான இலவச புத்தக விநியோக வேலைப் பளுவில் நான் அவன் காதலை மறந்து போக, மீண்டும் இன்று என் பின்னால் சுற்றினான்..........

"மிஸ்...மிஸ்"

"என்னடா........."

"அவள் எனக்கு வாணாம் மிஸ்"

" என்னடா திடீரென்று லைன் மாறிட்டே"

"நான் நேத்து அவள்ட என்ட லவ்வச் சொன்னேன்.  ஓவென்று அழுதிட்டாள்..சேரிட்டயும் என்ன மாட்டிட்டாள்" அந்த சேர் பெயர் சொன்னான்..

"ஓ......அந்த சேர் அடிச்சாரா"

"இனி அவள தொந்தரவு பண்ணாத என்று சொல்லிட்டார்.............அவளுக்குத்தான்  என்னைப் பிடிக்கலயே............."

சொல்லும் போது, அவனது கண்களிலிருந்து கண்ணீர்த்துளிகள் தெறித்தன.

. அவனாகவே தன் தவறை உணர்ந்தது எனக்கு மகிழ்வு தந்தது...

"அப்பாடா......................"

பெருமூச்சு விட்டேன்.............அந்தப் பெருமூச்சு உலர முதல் இன்னுமொரு குண்டைத் தூக்கிப் போட்டானே.............

"அவள் வாணாம் மிஸ்...அவளுக்கு வாங்கின டொபி, கண்டோஸ நானே தின்றுவிட்டேன்.........இப்ப நான் இவள லவ் பண்ணுறன்"

அவன் புதுக் காதலி பெயர் சொன்னான்.......!

அவள் 6ம் வகுப்பில் படிப்பவளாம்........நண்பன் வகுப்பைப் பற்றிச் சொன்னான்

இது காதல் இல்ல கண்ணா.......பருவக் கிளர்ச்சி...............

சொன்னேன். ஆனால் நிச்சயம் அதை அவன் உணரப் போவதில்லை. அவனுக்கு புத்தி சொன்னால் அதைக் கேட்கும் வயதில்லை அவனுக்கு. இவளும் சலிச்சுப் போய் விரைவில், அவனாகவே இன்னுமொருத்தியின் பெயர் சொல்வான்.......