About Me

2013/03/08

நீதான்

கண்களால் எனைச்
சீண்டினாய்!

கண்மணியாய் விளித்தே
என் விழியுறக்கமும்
அறுத்தாய்!

கன்னம் வைத்து மனசுள் நுழைந்து
கன்னத்தை நொறுக்கினா யுன்
முத்தச் சத்தங்களால்!

கண் முன்னே யுன்னைப் பரப்பி
நிதமும் - என்
கல்பினுள் நிறைந்தாய்
தனிமை விரட்டி!

எனைக் கவியாக்கி
ரசித்தாய் என்னை
என்னுள் உனை வீழ்த்தி
சிரித்தாய் மெய் மறந்து!

கருத்தினுள் எனை நிறைத்து
கருவும் சுமந்தாய்
அருமையான வுன் சிசுவை!

கற்பனையைப் பிய்த்தெடுத் துன்
வாலிபங்களை ஜாலியாய் முலாமிட்டே
தாலியும் தந்தாய் மனையாளாய்

கனவுகள் மெய்ப்படும் வேளை
மற்றோர் நம்மில் கடுப்பாக
மறுப்பிலும் வெறுப்பிலும்
பெற்றோர் சம்மதம் காதல் பெற்றிட

அடடா

கனக்க கேட்கவில்லை
காரும் பங்களாவும் வேண்டுமென்றாய்
நம் பிள்ளைகள் சொகுசாய் வாழ்ந்திட!

சில பவுண்களும்
சில லட்சங்களும்
வரதட்சணை தந்துவிடு- இப்
பரந்த பூமியில் நம்மவர் பேர்
அடுத்தவர் சொல்லிட வென்றாய்

கோலமிட்டவுன் சீதன ஆசையால்
அலங்கோலமாகின
அழகான நம் காதல்
சில நொடிகள்!

நீயுரைக்க
நானும் முறைக்க
கனவுகள் எனை அறைந்தே சென்றது
"சீ" இவனெல்லாம் ஒரு..................


   - Jancy Caffoor-
         08.03.2013







வேண்டாமினி

சூரியனை இன்னும் கீழ்வான்
விரட்டவேயில்லை
இருந்தும்
விடியல் மறுக்கப்பட்ட- மரணக்
கைதிகள் இவர்கள்!

கனவுகள் தரிசிக்கும்
வாழ்க்கைக் கூடாரங்கள்
செல்கள் அரிக்கப்பட்டு
சொல்லாமலே காணாமற் போயின!

இவர்கள் பூமியில் விதைக்கப்படாத
மனிதாபிமானங்கள்
விட்டுச் செல்கின்றன
அரக்கர்கள் எழுதிச் செல்லும்
இறப்புக்களை!

உறக்கத்திற்காகத் தாழிடப்படும்
விழிகளினி
திறக்கவே போவதில்லை
கண்ணிமைகளை வருடியபடி!

ஆயுத விளைச்சல்களின் ஏறுமுகங்கள்
ஊற்றிச் செல்லும்
இரத்த ஊற்றுக்களில்
இரக்கங்கள் அழிக்கப்பட்டுச் செல்கின்றன
தாராளமாய்!

வேண்டாமினி
மூடிவிடுங்கள் யுத்தக் குழிகளை!
பிணங்களால்
ரணமாகாமலிருக்கட்டும் நம் பூமி!

   - Jancy Caffoor-
         08.03.2013

தீனின் ஒளியாய்



இப்ராஹீம் நபியவர்கள் இறைஞ்சுதல்கள்
இறை சந்நிதானத்தில் வலு சேர்க்கவே.........
ரபியுல் அவ்வல் பிறை பனிரெண்டில்
தரணிக்குள் தடம் பதித்தா ரெம் பெருமானார்!

பிரபஞ்ச இருள் வெளிக் கீற்றுக்களில்
பிரவேசித்த வைரமாய் எம் பெருமானார். ...........
நல்லறங்கள்  பல விட்டுச் சென்றார்- பல
உள்ளங்கள் இஸ்லாத்தைத் தொழவும் செய்தார்!

விண்ணகர் மலக்கொளிகள் வாழ்த்தி நிற்க
மண்ணக அறியாமை கறையகற்றி.........
தீன் வழிச் சுவட்டோரம் நடைபயின்றே
வாழ்ந்தும் காட்டினா ரெம் பெருமானார்!

அன்னை ஆமினா உதிரம் நனைந்தே
இன்முகம் காட்டும் நனி பூவானார் ............
தந்தை அப்துல் முத்தலிப் லயிப்பில் தான்
தரணிக்குள் தரித்தும் நின்றா ரெம் பெருமானார்!

அருந்தவப் புதல்வரா யன்னையவர்
கருவறை தங்கிய வெம் கோமகன்......
பெருந்தவப் பேறாய் பேருலகில் தீனைப் பரப்பி
பொக்கிஷமாய் திருமறையையும் தந்தே நின்றார் ........

அரபிச் சுவரோர அறியாமைப் படிவுகள்
குற்றங்களாய் மனித மனங்களில் நீட்சி பெற்றே...............
இன்னல்களாய்  தீப்பற்றி எரிகையில்..........
அன லுறிஞ்சும்  புனிதமுமானார்
அஹமதெனும் எம் பெருமானார்!

பாலையூற்றுக்களின் பாவக் கறைகள் நீங்கி
சோலைவெளிகளாய் இப்பிரபஞ்சம் நிரம்பிட...........
பிரவேசித்தா ரெம் பெருமானார்
பிரகாசித்தார் அரபுத் தேசம் சிறப்புப் பெற!

சமுதாயப் பேரேடுகளில் சாந்தி வரையும் 
சரித்திரமுமானார் பலர் தரித்திரங்களும் நீக்கி.......
சன்மார்க்க போதனைகளில் எம் சிந்தைகளை  நிறைத்திட
விட்டும் சென்றார் வழிமுறைகளாம் .....
அல்-ஹதீஸையும் ஸூன்னாவையும்!

விண்ணகம் இறக்கித் தந்த தீன்நெறியால்
இன்னல் களையும் வழியும் தந்தார்!
மண்ணக சேமிப்போரங்களெல்லாம்..........
எண்ணற்ற அருளையும் சேர்க்கச் செய்தார் -எம்
அண்ணல் நபியவர்கள்!

வானின் பௌர்ணமி எழிலொளியாய்
வையகத்தில் வந்திறங்கினார் எம் பெருமானார்!
நன்மையின் விளைவகம் நாமாக...........
தீனை உணர்விலும் தந்து நின்றார்!

கஷ்டங்கள் பல கண்டனுபவித்தும்
இஷ்டத்துடன் இறை தொழுதே நின்று........
இஸ்லாமெனும்  தூணில் உலகைப் பொருத்தி
பெருமையும் கண்டார் எம் பெருமானார்!

சாப வினைகள்  நீக்கத்தான்
சத்திய நெறிகள் போதிக்கத்தான்........
வந்துதித்தார் நித்திய வுலகின் அச்சாணியாய் - எம்
முகம்மது நபி (ஸல்) அவர்கள் !

வறுமை விரட்டும் மருந்துமானார்.........
சிறுமை களையும் அன்புமானார்..........
மறுமை வாழ்வுக்கும் வழியும் தந்தார்.........
இறுதித் தூதுவர் அவருமானார்!

மீலாத் தினமின்று பல மாண்புகளும்
மீட்சிகளும் இறையருளும் நாம் பெற்றிடவே .........
பெருமளவில் ஸலாம் சொல்வோம்- முகம்மத்
பெருமானார் திருமொழி நவின்றே












ஒற்றை மழைத்துளியாய்


உறைந்திருக்கும் கனவுகளுடன்
என் விழிகள்!
இருந்தும்
சமுக நகக் காயம்
இன்னும்
விழிகளில் சிவப்பாய்!

நெஞ்சமதில்
நேசம் நெய்யாமல்
விசமாகும் விட்டில்களால்- என்
ஆன்மா சிதறுகின்றது
அழுகுரலாய்!

கவலை நுரைக்குள்
வழுக்கி வழுக்கியே - என்
ஜீவன்
ஜீவிதம் காணாமலே
கரைந்து போகின்றது!

என்
கனாச் சிரிப்பின் படிமங்களில்
வெம்மைகளை துடைத்தெறிய
வலிதற்ற கரங்கள்
தொலைவாகிப் போகின்றன
வெறும் அத்தியாயமாய்!

என்
விரலிடுக்கில் பேனா சுமக்கின்றேன்
விடியலுக்காய்!
விரல் நகம் கழற்றும்
துரோக வீரியங்களாய்
என்னவர்கள்!

விரக்தி வலியால் - என்
வசந்தங்களில் ரணம்!
இருந்தும்
சிதைந்த நம்பிக்கைகளை
சிலுவையாச் சுமந்து
வேரூன்றுகின்றேன்
கால பூமியில்- வீழும்
ஒற்றை மழைத்துளியாய்

Jancy Caffoor






ரணம்


என் விழி ஜன்னல் திறந்தே
கிடக்கின்றது
உன் வரவிற்காய்!
இருந்தும் - நீ
இன்னும் இருட்டில்!

இந்த பிரபஞ்சத்தில்- என்
ஜீவிதம்
வெறுப்பேறிக் கிடக்கின்றது
நீயின்றி!

உன்
குரல் தேடித் தேடியே - என்
குரல்வளை கூட
உடைந்து விட்டது!

உன்
சுயரூப ஜனனத்தில் - என்
ஆத்மா மரணித்து விட்டது!
இருந்தும் - என்
ஒவ்வொரு நிமிட நகர்வும்
உன் ஞாபகங்களில்தான்
மயங்கிக் கிடக்கின்றது!

என்னை - நீ
எரிக்கும் போதெல்லாம்
எட்டிப் பார்க்கும் சாம்பர் முகடு
என் தேசத்தின் சிகரமாய்
நெடுங்காலம் ஜீவிக்கும்!

அடுத்தவர்க்காய் - என்
சந்தோஷங்களில் நகம் பிடுங்கும்
உன் விசம்தான்
இப்பொழுதென் கவிக்கு கருவாகின்றது


 - Jancy Caffoor-