About Me

2013/04/10

பிறை



வான் தேவதை துப்பிய
நகத் துண்டு!

விண்மீன்களைப் பறித் தெடுக்கும்
கொழுக்கி!

மேகத் திரள்களை விரட்டிடும்
அரிவாள்!



-Jancy Caffoor -







அன்று



அந்த நடுச்சாம நிசியின் அமைதியைக் கிழித்தவாறு ஆட்காட்டி குருவி சப்தமிடத் தொடங்கிய போது ஹெலியின் உறுமலும் லேசாக செவிகளை ஆக்கிரமிக்கத் தொடங்கியது..........

"இன்னைக்கும் தூங்கினபாடில்லை"

அச்சம் முகிழ்க்க, மனது எதையோ எதிர்பார்த்து, பங்கருக்குள் ஒளிந்து கொள்ளத் தயாரானது..........

ஹெலியின் அண்மையை அதன் சிறகுகளின் படபடப்பு உணர்த்திய போது, வீட்டு லைட் வெளிச்சத்தை சற்று அணைத்து விட்டு சுவரோரம் பதுங்கிக் கொள்கின்றோம்.

ஹெலியின் படபடப்பும், அதன் சிறகுகளின் துடிப்பும் காதுகளுக்குள் நன்கு கேட்கத் தொடங்கியது.

"பட் பட் பட்"

இயந்திரத் துப்பாக்கிகள் ஆக்ரோஷமாக தம்மில் பொருத்தி வைத்திருக்கும் குண்டுகளை பாய்ச்சத் தொடங்கின,

அது யாழ்ப்பாணக் கோட்டைக்குள் நிலை கொண்டிருந்த இராணுவத்தினரை மையப் படுத்தி புலிகள் மேற் கொண்ட தாக்குதல்....

"பெடியளும் சுடத் தொடங்கிட்டினம், இனி என்ன நடக்கப் போகுதோ!"

உள்ளுணர்வுகள் அச்சத்தில் மேலும் பிசையத் தொடங்க, யுத்தத் தாக்குதல் மேலும் தீவிரமாகியது. அதன் உச்சக் கட்டமாக நாலைந்து பொம்பரும், இரண்டு ஹெலிகொப்படர்களும் யுத்தத் தளத்தில்
தீயைக் கக்கத் தொடங்க, ..........
மறுமுனைகளில் விடுதலைப் புலிகளின் ஆட்லறிகள் ஷெல்களைப் பீய்ச்சத் தொடங்கின.

"கண்களை இறுகப் பொத்தி, மனதில் இறைவனைத் தியானித்து, காதுகளை இறுக்கிப் பொத்தியவாறு பங்கர்த் தரையில் சுருண்டு கிடந்திருந்தோம்.

லேசாக பங்கருக்குள் ஒளி நுழையும் துவாரத்தினுள் வெளிக் காட்சிகள் மங்கலாய் தெரிந்தன.....

பொம்பர் தரை நோக்கி தன் முகம் காட்டி வேகமாய் கீழிறங்கிக் கொண்டிருக்க,அதன் முன்முனையிலிருந்து ஷெல்கள் பாய்ந்து வெடிக்கின்றன.

"படீர்"

சுவாச மையங்களும் சிதைந்து நானும் மரணித்ததைப் போன்ற பிரமை..........
கண்களை இறுக மீண்டும் மூடிக் கொள்கின்றேன்.. கண்களிலிருந்து குருதி கண்ணீராய்ப் பாய்ந்து கொண்டிருந்தது.


சுகமான காதலும் சுமைகளும்...


ஆகாயம் குடை பிடிக்க
அழகாய் ஒரு பயணம்
நிலாவின் நெஞ்சத் தரையில்!

சில்லென்ற காற்றில்
உன் குறும்புகள் தைத்து
நேசப் பயணம் உன் மனவெளியில்!

இராக்கள் கூட பசுமை சிந்தும்
நீ அருகினில் நின்றால்
தீ கூட குளிரேந்தும்
உன் அன்பினைக் கண்டால்!

காதல்!
சுகமானதுதான்
வாழ்க்கைப் பிரபஞ்சத்தின் சுகங்களை
தரிசிக்காதவரை!

துகள்களாய் வீழும்
ஒவ்வொரு பனித்துளிகளும்
மனசுக்குள் கசிந்து
உணர்வாகி முகிழ்க்கும் போது
காதல் சுகமானதுதான்!

ஆனால்!
புரிந்து விலகிக் கொள்!

யதார்த்த வாழ்வின் தழும்புகள்
கறைகளாகி
வாழ்வை நனைக்கையில்

சுகமான காதல் கூட
சுமையாகி
சமாதியாகின்றது வாழ்க்கைப்
போராட்டத்தினுள்!


- Jancy Caffoor-
    09.04.2013

நாள் குறி



மெல்லன கவிழ்ந்தன விழிகள்
வண்டாய் நீயோ சுவைக்கையில்

ஹிருதயம் சிறகு முளைத்து பறந்ததுன்
பருவத் தோட்டத்தில் எனைத் தேடித் தேடி!

உன் கிறுக்கல்களையெல்லாம் கவிகளாக்கி
நான் சுவைக்கையில்
தமிழ் இலக்கணமே குடி கொண்டன
நம் நேசிப்புக்குள்!

கொஞ்சம் பொறு!

மெல்லப் புறாக்களை உன்னிடம்
தூதனுப்புகின்றேன்
உன் உள்ளடக் கிடங்கினுள்
பதுங்கிக் கிடக்கும் என்னை
உன் வசப்படுத்தும் நாள் குறிக்க!

- Jancy Caffoor-
    09.04.2013