About Me

2014/08/08

காலங்கள்



நம் அன்பானவர்கள்
கடந்த காலத்தை மறந்து விடச் சொல்லுவார்கள்

நிகழ்காலத்தில் நம்முடன் இணைந்து
இன்ப துன்பங்களில் பங்கு கொள்வார்கள்

எதிர்காலத்திற்கு நம்பிக்கையூட்டுவார்கள்

நீ கொண்ட அன்புக்கு சாட்சியமாய்
என் காலங்கள் உன் வசமாய்!



- Jancy Caffoor -

மனதின் இருப்பு


மனம் ஒருவரை நேசிக்கும்போது அவரின் குறைகள் எல்லாம் நிறைவாகிப் போகும். இதனால் அவரை ரசித்து மகிழ்கின்றோம்!
ஆனால்
காலத்தின் விதிவசத்தால் அவரை வெறுக்கின்றபோது  அவரின் ஒவ்வொரு சாதாரண அசைவிலும் குற்றமும் குறைகளும் தேடிக் கண்டுபிடித்து   வலி கொடுத்தவாறே நமது விலகலை வௌிப்படுத்துகின்றோம்
விருப்போ, வெறுப்போ மனதின் வௌிப்பாடு நம்மை தன்னுள் அடக்கியாள்கின்றது என்பதே யுண்மை!
----------------------------------------------------------------------------------------

நண்பர்களுக்கு நாம் வழங்கும் மிகச் சிறந்த பரிசு
" உண்மையான அன்பு"
---------------------------------------------------------------------------------
கடல் .....!

அலையடிக்கும்போதுதான் அதன் நுரை கரையோடு மோதி அழகு காட்டும். அலைகள் பாய்ந்து வரும்போது பயம் கொள்ளும் மனது,
தரை தொட்ட  அலைகள் கால்களை வருடும்போது சிலிர்த்து நிற்கின்றன..

வாழ்க்கையும் இப்படித்தான்...
துன்பங்கள் நெருடும்போது மனதை கட்டிப்போடும் பயம், அவ்வலியை நீக்க நாம் போராடும்போது பலமாக மாறி விடுகின்றது..

பலம் பலகீனமாகவும், பலகீனம் பலமாகவும் மாற்றிப் போராடும் இந்த வாழ்க்கைச் சக்கரத்தில் எல்லாவற்றையும் நாம் கற்றுக் கொள்ளும்போது காலம் போய் விடுகின்றது. அனுபவம் எஞ்சும்போது நாமோ வாழ்க்கையின் பசுமையை இழந்து விடுகின்றோம்.
----------------------------------------------------------------------------------------


உன்
உரிமை
உறவெல்லாம்

சினமாகி
என்னுள் தூறிக் கொண்டிருக்கின்றது
இப்போதெல்லாம்!

வருந்தவில்லை நானும்
ரசிக்கின்றேன் உன் அன்பை!

திட்டி விடு
அன்றேல் கொஞ்சி விடு
--------------------------------------------------------------------------------------
எதனையும் நாம் மனப்பாடம் செய்து பேசுவதில்லை. சந்தர்ப்பங்கள்தான் நம் வார்த்தைகளைத் தீர்மானித்து விடுகின்றன. ஒருவரின் வார்த்தைகள்தான் அவர்களது மனதைப் படம் பிடித்துக் காட்டும் கருவி.

அன்போ
நட்போ
பாசமோ
உரியவர்களிடம் அதிகம் பேச வைத்து விடுகின்றது..
முடிவில் அதன் விளைவு்.

அவர்கள் நம்மிடம் கொள்ளும்
நல்லபிப்பிராயம் அல்லது தப்பெண்ணம்!
------------------------------------------------------------------------------------------
அவசரம்
அறியாமை
ஆத்திரம்
முட்டாள்தனம்
என்பவற்றின் பின்னல்தான்
தவறுகள்

நம் தவறுகளின் வலி
நம்மை மீளவும் புது மனிதராய்
மாற்றக்கூடியது

ஏனெனில்

ஒருவரின் வார்த்தைகளின் வலி
நம்மைச் செதுக்கும் உளி!
-------------------------------------------------------------------------------------------
ஒவ்வொரு ஆரம்பமும்
முடிவொன்றின் அடித்தளம்
எனது பாடசாலை இடமாற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில்,
கற்பித்தல் பணியிலிருந்து நீங்கி
தனிமையில் நான்!

- Jancy Caffoor-
    08.08.2014

பிரிதலும் கூடலும்




நீ வருவாயென..
இருளென்றும் பாராமல்
விடி விளக்காய் - என்
விழி யிரண்டும் ஏற்றி வைத்தே காத்திருந்தேன்...

வந்த நிலாவும் போனதுவே யுன்
சந்தடி யென் காற்றில் கலக்காமலே..
எந்தன் மனம் யுனக்காய் துடித்திருக்க - நீயோ
எனை மறந்துன் வழிப்பாதையில்!
------------------------------------------------------------------------------------

பிரியும்போதுதான்
புரிகின்றது - நம்
சண்டைகள்கூட .......
அன்பின் வருடலென்று!
-----------------------------------------------------------------------------------

நேற்றைய சரி
இன்றைய பிழை!
-----------------------------------------------------------------------------------

நம்
வாழ்வைத் தீர்மானிப்பது வயதல்ல
மனம்
ஏனெனில்
வயது எனபது வெறும் எண்கூட்டம்!
-----------------------------------------------------------------------------------

பிரிந்துதான் செல்கின்றாய்
இருந்தும்
என்னை நீ யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டாய்
ஏனெனில்
முன்னைய நாட்களில்
உன் அன்பில் நான்!
----------------------------------------------------------------------------------

ஒவ்வொரு சிரமத்திலும் ஒரு வாய்ப்பு உள்ளது..
ஒவ்வொரு வாய்ப்பும் முயற்சியின் வழியாக நம்மை பலப்படுத்துகின்றது!
---------------------------------------------------------------------------------


மௌனம்..............
நாம் கற்றுக் கொள்ள வேண்டிய முதல் பாடம்!
ஏனெனில் மனவேதனைகளின் இறுக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாக்கும் கேடயம் இதுதான்!

- Jancy Caffoor -




2014/08/04

கவாஸ்கர்






வாழ்க்கை அழகான கனவுகளின் கூடாரம். வாலிபம் அக் கனவுகளை மூடிக் கிடக்கும் திரை. இந்த வசந்த வனப்புக்களையும் அறுத்தெறியும் சதியாக விதி!

இன்னும் வாழத் தொடங்காத வயது..
இருபத்திரெண்டு!
பருவத்தின் விளிம்பில் நடமாடும் உணர்ச்சிப் பிழம்பாய்!

காலம் யாருக்கும் காத்திருப்பதில்லை. கலங்க வைத்து தன் ஆட்டத்தில் பலரை கசக்கிப் பிழிந்து கொண்டிருக்கின்றது என்பதுதான் உண்மை!

அதற்கு இவனும் விதிவிலக்கல்ல...

கவாஸ்கர்...!

வறுமைச் சிறையை உடைத்தெறிந்து வாழத் தெரிவு செய்த மார்க்கமாய் இஞ்ஜினியரிங் படிப்பு இவன் நிழலாகியது. ரொம்ப நல்லவன் என்பதால் எப்போதும் தன்னைச் சூழ்ந்திருப்போரை சிரிக்க வைத்துக் கொண்டிருப்பான். இவனது இந்த அழகான இரசனை அவனுக்கு பல நண்பர்களைப் பெற்றுக் கொடுத்தது..

வள்ளியூர் ....
திருநெல்வேலி....
இவன் பாதம் பட்ட  தரைச்சுவடுகள்!
M.E.T College of Engineering ..இவனைச் செதுக்கிய கல்விக்கூடம்..

இந்து , நாடார் குலம்...இவன் கலாசார சின்னம்..
வாழ்க்கையைக் கற்க புறப்பட்டவன் காலனிடம் சிக்கித் தவித்த போது, அவன் கனவுக்கூடாரங்கள் சிதைந்து கல்லறையாகியது..
தான் ஆசையாக வாங்கிய உந்துருளியில் பயணித்த போது விபத்துக்குள்ளானான். வேகமாகப் பயணித்ததில் ஏற்பட்ட விபத்தா அல்லது கொலைச் சதியா ...


இறைவன்தான் அறிவான். இவனுக்குள்ளும் ஆயிரம் ஆசைகள் எதிர்பார்ப்புக்கள் மொய்த்திருக்கும். அவற்றைத் தனக்குள் சேகரித்திருப்பான் அல்லது தன் மனதைக் கவர்ந்தவர்களிடம் பகிர்ந்திருப்பான்.


மெல்லன விரிந்த மொட்டொன்று, தன்னிதழ்களை விரிக்க முன்னரே வாடிப்போனதுதான் கவலை..

தன்னைக் கடந்துபோன ஒவ்வொரு நொடிகளிலும், தான் அற்ப ஆயுசில் போவேனென நினைத்திருப்பானா.... விதியின் சதிராட்டத்தில்....இவனும் ஒரு பங்காளி!

ஜூன் 5ம் திகதி தனது பிறந்த நாளைக் கொண்டாடியவன், நினைத்தும் பார்த்திருக்க மாட்டான் ஜூன் 24ல் தன் கல்லறையை மண் திரட்டுக்களும் அக்கினியும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்குமென்று!

மரணம்..............

இவனைத் தேடி வரவில்லை மாறாக மரணத்திற்கான அழைப்பானை இவனால் விடுவிக்கப்பட்டது மறக்க முடியாத சோக வடு! வாழ வேண்டிய வயது...அற்ப ஆயுசில் உயிர்ப்படங்கிப் போவது யாராலும் தாங்கிக் கொள்ள முடியாத சோகம்தான்..


அவன்  சோகத்தினை வாசிக்கும் கண்ணீர்த்துளிகள்!

ஒவ்வொரு பெற்றோரும். தம் பிள்ளைக்கு உயிர்ப்பூட்டி வாழ்க்கையும் தந்து நடமாடச் செய்யும்போது பலரோ அந்த வசந்தத்தை ஏதோ ஒரு வகையில் கரைத்து விடுகின்றனர். விதி பறித்த அந்த உயிர் மீள வருமா..

நம் வாழ்க்கையின் பெரும் பகுதி குடும்பத்தினருடனான சந்தோசத்தில் பகிரப்பட வேண்டும். ஆனால் மாறாக பலரோ அவர்களைக் கண்ணீரில் தள்ளி விட்டு காணாமல் போய் விடுகின்றனர்.

மரணக் குகைக்குள் நுழைந்த அந்தச் சின்னவனின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்...

- Ms. Jancy Caffoor -