About Me

2014/09/30

வாழ்க்கை


சூழ்நிலைகள்தான் நம்மைத் தீர்மானிக்கின்றன. அதனால்தான் நேற்று எடுத்த முடிவுகள் இன்று அவசியமாகாமல் நாளை மாற்றப்படலாம். மாற்றங்கள்தான் வாழ்க்கை..காலமும் நம்மை நமது தேவைக்கேற்ப மாற்றிக் கொண்டே இருக்கின்றது. அதுதான் வாழ்க்கையின் பலம். சுவாரஸியங்களை நமக்குள் விட்டுத் தரும் தோற்றங்கள்.....

வாழ்வோம்!
வாழ்ந்து காட்டுவோம்!!
நமக்குப் பொருத்தமான வாழ்வுக்குள் நம்மைத் தயார் படுத்துவோம்!!!


-----------------------------------------------------------------------------------

ஈரம் மறந்த பூமியோரம்
வேரூன்றும் உயிர்க்கூடுகளின்....
கனவுகளில்  நீராகாரம்!
கண்களிலோ விழிநீர் கோலம்!


-------------------------------------------------------------------------------------------------


சிதறிக் கிடக்கும் சின்னச் சின்ன விசயங்களில்தான்
பென்னம் பெரிய சந்தோஷங்கள் வீழ்ந்து கிடக்கின்றன....
அதுபுரியாம நாம அந்தக் கணங்களையும் தொலைத்துவிட்டு எங்கேயோ போய் தேடிக் கொண்டிருக்கின்றோம் மன அமைதியை!

வாழ்க்கையை ரசிப்பதற்கு நம்மை நாமே ஏற்றுக் கொள்ளும் மனம் போதும்.............நம்மை நாமே ஆளும்போதுதான் நமது பலமும் பலகீனமும் புரிய ஆரம்பிக்கின்றது! வாழ்கின்றோம் என்பதைவிட இப்படித்தான் வாழனும் எனும்போது மனதும் பக்குவப்படுகின்றது!

இந்தப் பக்குவம்தான் நிம்மதிக்கான அடிவருடல்!
வாழ்ந்துதான் பார்ப்போமே!

--------------------------------------------------------------------------------------------------

உன்னை எனக்குத் தெரியும் - நீ
என்னிடம் உன்னை விட்டு விட்டுப் போன
கணத்திலிருந்து!



இருந்தும்............
உனக்காய் காத்திருக்கின்றேன்
சிறு பிள்ளையாய் நானும்!
என்னை நீயும் அணைத் தென் நெற்றியில்
அழுத்து மந்த அன்புக்காய்
காத்திருக்கின்றேன்.........
இன்னும்!

------------------------------------------------------------------------------------


பளபளக்கும் ஔி நாடி
பறந்து வரும் ஈசல்களெல்லாம் - தம்
சிறகறுக்கின்றன அற்ப ஆயுள்தேடி!
.
சிறப்பான மாந்தரும் - தம்
தவறுகளுக்காய் வருந்தாது வழி
தவறிப் போகின்றனர் அற்பர்களாய்!

--------------------------------------------------------------------------------------


அன்பு சாகா வரம்
அதனால் நீயோ......
எனக்கு இன்பஸ்வரம்!
பூக்களுக்கும் வலிக்குமோ
நீ விரல் தீண்டா உன் பூவை அவை
தாங்குவதால்!

--------------------------------------------------------------------------------------

இருட்டில் இறுமாந்திருந்த
குப்பி லாம்பு.................
ஔிப் பிராவகத்திலே
அழுது வடிகின்றது!
ஏற்றுவோர் யாருமின்றி!
.
அடுத்தவருக்காக தன் சுயமிழப்போரும்
கவனிப்பாரற்று காலத்துள் புதைந்து விடுகின்றனர் 
தன்மானமிழந்து!
.
இதுதான் வாழ்க்கைப் போக்கு!

------------------------------------------------------------------------------------------

கனவுகளுக்கும் கால்கள் இருக்கின்றதா
தினம்..........
உன்னிடம்தானே வந்து நிற்கின்றன.......
இருந்தும்
விரல் நீட்டுகின்றாய்
உன்னை மறந்து போவதாய்!

------------------------------------------------------------------------------------------


அதிகாரம் ஒரு ஆட்சிபீடம்...
அதன் கையசைப்பில்
ஆயிரம் தலை கவிழ்ப்புக்கள்!
இருந்தும்....
சூடிக் கொள்ளும் முடி
வாடி வீழும்போது......
ஓடியணைத்துக் கொள்ள யாரும் வருவதில்லை - தன்
நிழல் தவிர!

-------------------------------------------------------------------------------------------

2014/09/27

கற்றல் பெறுபேறு B. Ed

கடந்த 25.09.2014 அன்று எனது கல்விமானிப் பட்டப் பரீட்சை இறுதி வருடப்​பெறுபேறுகள் வௌியாகியுள்ளன.

அல்ஹம்துலில்லாஹ்!

இப்பெறுபேறுகள் எனக்குக் கிடைக்க  ஆசியளித்த எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு முதல் நன்றியைப் பகிர்ந்தவளாய், கற்றலுக்கு ஊக்கமளித்த குடும்பத்தார், வழிகாட்டல் தந்த ஆசான்கள் மற்றும் என்னுடன் கற்றலில் இணந்த வவுனியா கற்கை நிலைய ஆசிரிய நட்புள்ளங்களுக்கும் எனது நன்றிகள்  உரித்தாகட்டும்




2014/09/26

மனசின் வரிகள்


அந்தகாரத்தில் அந்தரங்கமாய்
கார்கொன்றல் பிழிந்த சில சொட்டுக்கள்............
மண்வாசனை நுகர்ந்ததில்
வெட்கப்பட்டு நனைகின்றது 
இருள்!
------------------------------------------------------------------------------------


மாற்றங்கள் வேண்டும் வாழ்வினில்......
அப்பொழுதுதான்....
உளச்சீற்றங்கள் தணிந்து நம்மை நாமேயாளும்
கொற்றனாய்.....
ஏற்றங் காணமுடியும்!

--------------------------------------------------------------------------------------------------

இரவுகள் சுய விசாரணை செய்கின்றன
என்னில்................
பகலிலே சூழ்நிலைகள் பொருத்திய முகமூடிகளை!
மென்மையின் ஸ்பரிசங்களில்
வீழ்ந்துகிடக்கத் துடிக்கும் மனம்........
இப்போதெல்லாம் .......
வன்மையின் வீச்சுக்குள் - தன்னைத்
தொலைத்துக் கொண்டிருக்கின்றது !


------------------------------------------------------------------------------

நா.......
.
சுதந்திரமாக அலைவதால்தான்...
வார்த்தைகள் கோபத்தின் அடிமையாகின்றன.
அடுத்தவர் மன முருக்கும் கோபத்தைத் தடுத்துக் கொள்ள நாம் போராடுவதுகூட , பிறர் நம்மீது வைத்திருக்கும் மதிப்பைக் காப்பாற்றும் ஓர் அடையாளம்தான்!
.
ஆனால் ..........
.
எத்தனை பேரால்தான் தமது அடையாளத்தைப் பேண முடிகின்றது..............














மொஹமட் ஸல்மான்



அஸ்ஸலாமு அலைக்கும்,


உலகளாவிய ரீதியலி்ல் காலத்திற்குக் காலம் மனிதர்களால் பல்வேறு சாதனைகள் புரியப்பட்டு அவை சாசனங்களில் பதியப்பட்டு வருகின்றன.

ஆனால் ..........

எவ்வித உலகாயுத நன்மைகள், பதவிகள் என்பவற்றை எதிர்பாராது , இறை திருப்தியை மாத்திரம் மனதிலிருத்தி புரியப்படுகின்ற அல்குர்ஆன் மனனமிடல் எனும் இந்த நினைவாற்றல் சாதனை ....உலக நிறைவு வரை நிகழ்த்தப்படும் ஆன்மீகச் சாதனையாகும்...இது பால், அந்தஸ்து, வயது வேறுபாடின்றி அவரவர் முயற்சிக்கேற்றபடி வெவ்வேறு கால இடைவௌியில் நிகழ்த்தப்படும் ஒன்றாகும்..

அல்குர்ஆன் மனனமிடலென்பதும் அல்லாஹ்வின் ஏற்பாடே...

ஏனெனில் அல்குர்ஆன் (87 :6) வசனம் பின்வருமாறு கூறுகின்றது..

"நாம் ஓதக் கற்பிப்போம். நீர் அதனை மறக்கமாட்டீர்' ஆக கற்றுக் கொடுக்கும் பொறுப்பையும் மனத்தில் இருத்தும் பொறுப்பையும் வல்ல நாயன் அல்லாஹ் சுபுஹானஹ வத ஆலா ஏற்றுக் கொண்டுள்ளான்.."

பொதுவாக அல்குர்ஆன் வசனங்கள் மிக இலகுவாக ஓதும் பொருட்டும் மனனமிடும் பொருட்டும் , எதுகை, மோனை, சொல்லாட்சி, ஓசை போன்ற பண்புகளையும் கொண்டுள்ளதாகக் காணப்படுகின்றன.

அல்குர்ஆனின் பக்கங்களைப் புரட்டினால் அவற்றில் சரித்திரம், இயற்கை வினோதம், சட்டம், பொருளாதாரம், தர்மம், உரிமைகள், யுத்தம்  லொகீக வாழ்க்கை  உள்ளிட்ட  உடல், உள, தொழில் வாழ்க்கை தொடர்பான சகல விடயங்களும் ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்டுள்ளன.

சுருக்கமாகச் சொல்வதானால் அல்குர்ஆன் ஆன்மிக மற்றும் சிந்தனைப் புரட்சிக்கான ஏடு. இதனை ஓதுவோரும், மனனனமிடுவோரும் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இன்றைய நாட்களிலே.......

கடந்தவாரம் ...........

எமது பாடசாலையிலும்  அல்குர்ஆன் மனனமிட்டு ஹாபிஸாக ஓர் மாணவர் வௌியேறியுள்ளார்... அல்ஹம்துலில்லாஹ்!

அம்மாணவனுக்கும் நான் கடந்த சில வருடங்களாகப் பாடமெடுத்தவேளையில் அவர் வௌிப்படுத்தியிருந்த நடத்தைப் பண்புகளை லேசாக இன்று நினைவிலிருத்துகின்றேன்..........

அமைதி, அடக்கம், புன்னகை, ஆன்மீகம் போன்ற பல பண்புகள் அவரணியும் அடையாளங்கள்!

அம்மாணவர்!

பாடசாலை மாணவர்களிடையே நான் கண்ட ஒழுக்க முத்து........

ஆசிரியர்களை எப்போதும் கனம் பண்ணும் அந்தப் பண்பின் அறுவடையாளர்
ஜயந்தி மாவத்தை , அநுராதபுரத்தில் வசித்து வரும்.............
மொஹமட் சல்மான் எனும் மாணவனே! தரம் 9 B (2014)

ஆர்ப்பாட்டத்துடன் அலையுமிந்த மாணவப் பருவத்தில் எப்போதும் இவரிடம் அமைதி  அடக்கத்தையே  கண்டு ஆச்சரியப்பட்டுள்ளேன்..

அந்த ஆச்சரியம்.....இன்று பலரின் வாழ்த்தாக மாறியுள்ளது!

பெரியோரைக் கனம் பண்ணும் ஒழுக்கமுள்ள மாணவர், பிறர் பாராட்டும், நேசிக்கும் பண்பாட்டைப் பெறுகின்றார் எனும் கூற்றுக்கு இவரும் சான்றாகியுள்ளார்.

அல்குர்ஆனை மனனமிட்டு ஹாபிஸாகும் இந்த சிறந்த செயலுக்கு அல்லாஹ்வின் கிருபை, இம்மாணவர் முயற்சி, பொருத்தமான வீட்டுச்சூழல், ஆன்மீகச் சமுதாயத்திற்கு வழிகாட்டும் பெற்றோர் தூண்களாகின்றார்கள். இவர்களுடன் சிறந்த கற்றல் ஒழுக்கத்தை வழங்கும் மதரஸாக்களின் பங்களிப்பையும் மறுக்க முடியாது.

 ஏனெனில் ஒழுக்கமிகு சமூகக் கட்டமைப்பின் அடித்தளமிட இம்மதரஸாக்களும் பங்களிப்புச் செய்கின்றன!

அல்குர்ஆனை நன்கு மனனமிட்டு ஹாபிஸாக மாறியுள்ள மொஹமட் சல்மானிடம் இது தொடர்பாக நான் வினவியபோது, அம்மாணவரும் மனந் திறக்கின்றார் இவ்வாறு!

நான் அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலயத்தில் கற்றுக் கொண்டிருக்கும் போதே அல்குர்ஆனை முழுமையாக மனனமிட்டுள்ளேன். அல்ஹம்துலில்லாஹ்!

அல்குர்ஆனை மனனமிடுவது சற்று கடினமான விடயந்தான் என்றாலும்கூட, அல்லாஹ்வின் கிருபையினால் அது சாத்தியமாகியுள்ளது. இதற்காக நான் மூன்று வருடங்களை எடுத்துள்ளேன். நான் அநுராதபுரத்திலுள்ள ஈமானியா அரபுக்கல்லூரியிலேயே அல்குர்ஆனை மனனமாக்கியுள்ளேன். ஈமானியா அரபுக்கல்லூரியில் நான் இரண்டாவது ஹாபிஸ்...

குர்ஆன் ஓதுவதிலும், கல்வி கற்பதிலும் நான் அதிக நாட்டம் கொண்டுள்ளேன். எனது தந்தையும் ஒரு ஹாபிஸ்..எனது சகோதரியும் மாவனல்லை ஆஇஷா ஸித்தீக்கா எனும் அரபுக் கல்லூரியில் கல்வி கற்கின்றார்.

எனது இலட்சியம் குர்ஆனை மறக்காமலும் பிழையின்றியும் என்றும் நினைவில் வைத்துக் கொள்வதாகும். அவ்வாறே கல்வியிலும் நாட்டம் செலுத்தி மௌலவி ஆசிரியராக எதிர்காலத்தில் வரவேண்டும் என்பதாகும்...

எனது இலட்சியம் நிறைவேற அல்லாஹ் த ஆலா துணைபுரிவானாக!
நீங்களும் துஆ செய்யுங்கள்......

என  தனது புன்னகை மாறா முகத்துடன் மன எண்ணங்களைப் பதிவாக்குகின்ற ஸல்மானுக்காக நாமும் இறைவனிடம் பிரார்த்திப்போம்!


2014/09/24

நிலா மோனா



இராக்களில்
கண்களில் கவிழ்ந்து கிடக்கின்றன
உன் கனவுகள் !

பகலிலோ
மூடிய விழிகளைத் திறக்கின்றேன்
நினைவுகளில் உன் முகம்!

காதல் அன்பான அவஸ்தை!
-------------------------------------------------------------------------------

வாழ்க்கையை உன் னன்பில் கற்றுக் கொண்டேன்
வாழ்ந்துவிட்டுப் போகின்றேன்
நிழலாய் தொடரும் உன் ஞாபகங்களுடன்!
------------------------------------------------------------------------------

ஒவ்வொரு முறையும் உன்னை என்னிடம் விட்டுச் செல்கின்றாய்
முத்தங்களாய்!
------------------------------------------------------------------------------

இந்த உலகத்தில் ரொம்ப பாக்கியசாலி உண்மையான அன்பு கிடைத்தவர்கள்தான். அந்த அன்பை உணரும் இதயத்தின் துடிப்பொலிகள் மகிழ்ச்சியின் அலைவரிசை! ஏனெனில் அந்த அன்பை வார்த்தைகள் அளவிடாது!

என்னவனே!

நீ எனக்குக் கிடைத்த இனிய வரம்டா!
------------------------------------------------------------------------------

வெட்கப்பட்டுக் கிடக்கின்றேன் - நீயென்
பக்கம் வந்து நின்றதால்
பட்டுக் கன்னங்கள் சிவந்தும் நின்றேன் - நீ
தொட்டுச் சென்ற நினைவுகளைச் சிந்தி!
-------------------------------------------------------------------------------

காதல்
உனக்கான என் பரிசு!
இந்த உலகின் ஒவ்வொரு மூலைகளிலும் ஒலிக்கும் காதலின் உச்சரிப்புக்களும், காதலுக்கான பிரார்த்தனைகளும் நம் அன்புக்கான அடையாளங்கள்!
-------------------------------------------------------------------------------

பெருமழை கைக்குட்டை தாங்குமோ
பனிக்குளிரை மெழுகனல் தடுக்குமோ
உன் மௌன முணர்த்தும் பிரிவுத் துயரில்
என் வலி யாறுமோ
அன்பே சொல்!
------------------------------------------------------------------------------

இட்ட மணலையும் தாண்டி தலை நீட்டும் செடிபோல்
கட்டிளங் காளையுன் பார்வையென்னில் படர்கையில்....
நாணம் அவிழ்ந்து விழி விரிக்கின்றேனடா - உன்
அன்பி லென்றும் கரைந்திருக்க!
-------------------------------------------------------------------------------

காலம்தான் மனக்காயத்தின் மருந்து!
சில துன்பம் சீக்கிரம் கரைந்து விடும்
சில துன்பம் நம்மை அரித்து விடும்
------------------------------------------------------------------------------

துன்பம் நெஞ்சைக் கரைக்கும்போதெல்லாம்
கைக்குட்டையாய் நீ!
வலி தீர்க்கும் உன் அன்பால் - என்
வாழ்வின் கற்கள்கூட பூக்களாய் மாறும் அதிசயம் பார்!
------------------------------------------------------------------------------

உன் பார்வை ஒன்றே போதுமே
என் கண்ணீர் ஒற்றிக் கொள்ள!
------------------------------------------------------------------------------

நீ பேசாத பொழுதுகளில்
வானம் கரைந்தோடுகின்றது
எனக்காக!

நீ அருகிலிருக்கும்போது
அந்த வானமே குடையாகின்றது
-----------------------------------------------------------------------------

நீ சூடும் முத்தப்பூக்களை நுகர்வதற்காய்...
ஒவ்வொரு இரவுகளிலும்
உன் னருகில் நான்...
கனவாக!
------------------------------------------------------------------------------

களவாய் கனவில் வந்து
கன்னம் கடிக்கும் கள்வனடா நீ!

அழகாய் சிரித்து
ஆழமாய் உள்ளமிறங்கும் அன்பனடா நீ!

நீ
என் செல்லமடா
-------------------------------------------------------------------------------

உன் உதடுகள்  மௌனம் பிழிந்தால்
என் பார்வைகள்
என்றுமினி தனிமைக்குள் மொய்க்கும்
யாருமின்றி!
-------------------------------------------------------------------------------

எனை மறந்து போனாய்
மனதில் வலி வார்த்து

உயிரறுந்து போகின்றேன்
உனைப் பிரிந்ததில

இருந்தும்
உனக்காய் பிரார்த்திக்கின்றேன்

நிம்மதி தேடும் உன் மனதிற்குள்
இறைவன் அமைதி தருவானாக!
------------------------------------------------------------------------------

உன் முத்தச் சத்தத்தில்தான் - என்
ஒவ்வொரு விடியலும்
சோம்பல் முறித்துக் கொள்கின்றது
என் அன்பே!
------------------------------------------------------------------------------

காதல்!

ஓர் அழகான உணர்வுதான் மறுக்கவில்லை. ஆனால் அந்தக் காதலின் ஒவ்வொரு உணர்வும் அன்பால் எழுதப்படும்போது எழுகின்ற ஏக்கம், தவிப்பு, கூடல், ஊடல், ஆசைகள் எனப் பல மெதுவாக மனதில் ஊர்ந்து அதை அருட்டுமே! அப்போது எழுகின்ற வலி கலந்த சுகம். அதனை வர்ணிக்க வார்த்தைகளேது!
----------------------------------------------------------------------------------

என் கருவிழியில் படரும் விம்பமாய் நீயானதில்
என் நடைபாதையெங்கும் உன் பாதச் சுவடுகள்தானடா!
-----------------------------------------------------------------------------------

உன்னை தினமும் மனப்பாடம் செய்ததில்
என்னையே மறந்துவிட்டேன்
--------------------------------------------------------------------------------------

நாம் தினம் சண்டையிடுவோம்
அப்பொழுதுதான்...........
உன் முத்தங்களும் கொஞ்சல்களும்
அதிகமாக கிடைக்கும் !
---------------------------------------------------------------------------------------

தினம் சண்டையிட்டுக் கொண்டுதானி ருக்கின்றோம்
இருந்தும்.....
உன்னை நானும்
என்னை நீயும்
யாருக்கும் விட்டுக் கொடுப்பதாயில்லை!
என்னவனே...
இதுதான் காதலின் குணமோ!
----------------------------------------------------------------------------------------

காதல்......!

நம்மை ஸ்பரித்துச் செல்லும்போதெல்லாம்

கூடலும்
ஊடலும்

நம் விதி நெய்யும்
ஆயுள் ரேகையாய்!

என்னவனே
அன்பை உன்னிடம்தானே  கற்றுக் கொண்டேன்.!

காற்றும் நுழையா நம் நெருக்கத்தின்
சாட்சியாய் என்றும் நம் நினைவுகள்!
------------------------------------------------------------------------------------
நாம் மௌனிக்கும்போதெல்லாம்
உரத்துப் பேசி விடுகின்றது நம் முத்தம்!

நாம் சண்டையிடும் போதெல்லாம்
நம்மை அமைதிப்படுத்தி விடுகின்றது நம் முத்தம்!

முத்தங்களின் தித்திப்புக்கூட
காதலுக்குச் சுவைதானோ என் அன்பே!
--------------------------------------------------------------------------------------

உன்னை நானும்
என்னை நீயும்
மனதில் சுமந்து
மகிழ்ச்சியாய் மணிக்கணக்காய் பேசுகின்றோம்!

என்ன பேசுகின்றோம்
எதுவுமே புரியவில்லை

இருந்தும்

பேச்சை நிறுத்தும்போதல்லவா - என்
சுவாச மூச்சு திணறுகின்றது!
-------------------------------------------------------------------------------------
உன்னை மறந்துவிட்டு உறங்குவதாய்
திட்டுகின்றாய் இப்போதெல்லாம்

அட

என்னவனே

கனவுகளில் உன் கரம்பற்றி உலாவ வல்லவோ
இவ்வுறக்கம்!
------------------------------------------------------------------------------------
வான்குடை கவிழ்த்து தேன்துளி சிந்தும்
தருணம்
சாரலாய் மெல்லத்தழுவியென்
ஈரமுறிஞ்சும் வண்டாய் உன்னிதழ்கள்!
-----------------------------------------------------------------------------------

மௌனமுடைத்து
நீ
பேசும்போதெல்லாம்
ஆசைகள் வெட்கம் துறந்து
அரவணைத்துக் கொள்கின்றன
உன்னைச் சுற்றியே!
---------------------------------------------------------------------------------
அகிலத்தின் உயிர்ப்போட்டத்திற்கு இயக்கமாக இருக்கும் உன்னதமான உறவே காதல்..

இது  மனிதர்களுக்கிடையே ஏற்படும் பாலியல் ஈர்ப்பு, அன்பு, அக்கறை கலந்த ஒர் உணர்வு, தாம் நேசிக்கின்றவர், தன்னை நேசிக்கின்றவர் எனும் வட்டத்தின் சுழற்சியின் அச்சாணி. தன் நினைவுகளுள் புரண்டு உயிரோடிணைந்து உயிரை வருடும் தன் நேசிப்பின் நெருடலோடு ஆயுள் முழுதும் சேர்ந்து வாழ வேண்டுமென்ற ஆசை. இந்த அன்பு போராட்டத்தின் முதற்படியாகத் தொடங்கினாலும் இறுதியின் உச்சக்கட்டம் ரம்மியமான நினைவுகளின் சுகம்.
காதல் வெற்றி பெறலாம், தோற்றுப் போகலாம். ஆனால் அதன் நினைவுகள் மரணம்கூட பிரிக்க முடியாதது!
-------------------------------------------------------------------------------------
நீ எனும் ஒற்றைச் சொல். என்
வாழ்வின் முடிவுப்புள்ளி!
-------------------------------------------------------------------------------------
என்னிதயத்தை நினைந்து பெருமைப்படுகின்றேன்.
ஏனெனில்
கண்ணீர் கசியும் துன்பம், ஏமாற்றம், சோதனை எல்லாம் என்னை வருத்தும் போதெல்லாம் துடிப்பது இதயம்தானே!
-------------------------------------------------------------------------------------------
தனிமை இனிமையானதுதான் ஆனால் அதைவிட இனிமையானது - தினமும்
அன்பானவர்களால் சூழ்ந்திருப்பது!
------------------------------------------------------------------------------------------------
அன்பை வருடித் தந்தாய்.
உன்னில் உணர்ந்தேன் தாய்மையையும் தூய்மையையும்!
-----------------------------------------------------------------------------------------------
நிசப்தத்தின் இம்சையில் - நீ
விட்டுச் செல்லும் மௌனமே
இனி யென் கவிதையாய்!
----------------------------------------------------------------
மேகங்கள் தீண்டா நிலாப்பெண் நானடா
இருந்தும்
உன்
விரல்கள் தீண்டும் கவிதையாய்
பிறப்பெடுக்கின்றேன்  உன் ஞாபகத்துள் நசிந்தபடி!
----------------------------------------------------------------------------
தோல்வி என்பது அனுபவங்கள் பெற்றுத் தரும் களமேடை

எனவே 

தோல்வியற்ற வாழ்வு கிடைக்கும்போது நாம் நம் அனுபவங்களை இழந்து விடுகின்றோம்......

-  Jancy Caffoor -