About Me

2014/11/19

அஸ்கா


பூவொன்று மலர்ந்ததுவோ எம் அகம்தனில் அழகாக....
குறும்புகளை கரும்பாக்கு மிந்த அரும்பின் குதுகலத்தில் .........
நேரங்கள் நகர்வது தெரிவதில்லை கடிகாரத்திற்கே!..
பாசம் காட்டும் மழலை மலர்ந்த நாளை (12.11.2014)...
எம் வாழ்த்துக்களின் செறிவில் தித்திக்கட்டுமே!
அல்லாஹ்வின் கிருபையால் அஸ்கா எல்லாச் செல்வமும் பெற்று வாழ நாமும் வாழ்த்துவோம்!

பேசும் மனம்



முகில்த் துளிகளின் நீரோட்டம்
மழையாய் குவிந்ததில்.......
பனிச்சாரல்கள் மெல்ல
கசிந்தன போர்வையாய்!
----------------------------------------------------------

பணம் கையில் இல்லாத போதுதான் வாழ்க்கையின் அருமை புரியும்.....
எனவே சேமிப்பின் அளவுதான் நமது நிம்மதியான வாழ்வுக்கு வழி விடுகின்றது....
எனவே......
சேமிப்போம்......
பணத்துடன் நல்ல மளிதர்களையும்!

---------------------------------------------------------

குடும்பம் என்பது குழப்பம் , குதுகலத்தின் சேர்க்கை.......
அதனைத் தீர்மானிக்கும் கருவி
நம் மனதை இயக்கும் வார்த்தைகளில் உள்ளது
--------------------------------------------------------------------------------

கற்பகதருவின் காற்றின் வாசம்
மனசோரம் சுவாசமாய் வீழ.......
எப்போதோ வற்றிப்போன  - எம்
காலடித் தடங்களின் வரட்சி...
மெல்ல கரைந்து போக - நானும்
பயணிக்கின்றேன் நானும் யாழ் நோக்கி!


--------------------------------------------------------------------------------------------


நாம் விரும்பியோ விரும்பாமலோ வாழ்க்கையில் மாற்றங்கள் நம்மைத் தேடி வருகின்றன. அவை பெரும்பாலும் சவால்களின் அறைகூவல்தான்! தைரியமாக அம்மாற்றங்களை நம் வசப்படுத்தும்போது தன்னம்பிக்கை மிக்க எதிர்காலம் நமக்குரியதாக மாறுகின்றது!

---------------------------------------------------------------------------------------------------
மனசோரம் வலி சுமக்கும்
ஒற்றைப் பறவை நான்.....
ஒளிந்து கொள்ள ஓரிடம்
அளிப்பாயோ 
உன் னிதயக் கூட்டில்
-------------------------------------------------------------------------------------------

நம் தகுதியை பிறருக் குணர்த்தும் உரைகல் .......
நாம் பேசும் உண்மை வார்த்தைகள்தான்!
-----------------------------------------------------------------------------------
என் குரல்நாண் அதிர்வில்
ரகஸியமாய் ஔிந்து கொள்ளும் உன்னை....
தினம் உச்சரிக்கின்றேன் என் பெயராய்!

வாழக் கற்றுக் கொடுத்த நீயே - என்
வாழ்க்கையாய்!
சிரம் தாழ்த்துகின்றேன் என் சிந்தை நெருடுமுன்
சுரமாம் அன்பிற்கே!

-----------------------------------------------------------------------

நாம் காணும் அடுத்தவர்களின் தவறுகள்கூட நமக்குப் பாடங்களே!
ஏனெனில்.........
நாம் நம் சுயத்தைத் திரும்பிப் பார்த்து ...
நம் தவறுகளை நாமே உணரும் சந்தர்ப்பம் அதன் மூலம் கிடைக்கின்றது!

-  Jancy Caffoor -

2014/11/03

நீயென்



தனிமை.........
இப்போதெல்லாம் நீயாய்!

வெறுமையின் விசாரிப்பில் விசனப்பட்ட
என் உயிர்க்கூட்டில்.....
உன் பாதச் சுவடுகள் ஆழமாய்!

உன் நச் சென்ற முத்தங்களின்
சொர்க்கத்தில்.....
இப்போதெல்லாம்...
உயிர் அலைமோதுகின்றது
சுகமாய்!

முதுகோரம் .....
வீழ்ந்துகிடக்கு மென் .....
கூநதலிழுத்து........
நீ
வம்பு பண்ணும்போதெல்லாம்....
கசியும் வலிகூட
ரகஸியமாய் நாண முதிர்த்து - உன்னுள்
புன்னகையை
விட்டுச் செல்லும்!

காதலும் மோதலுமாய்
நகரும் நம் அன்பின் தித்திப்பில்
ஊடல் மைல்கல்லா.....!
ரசிக்கின்றாய் தினமும்
என்னையும் வம்புக்கிழுத்து!

பனிமூட்டங்கள் பிழியும் கூதல்
நம் நாடியோரம் வீம்பு பண்ணுகையில்.....
எனை யுன் அருகிழுத்து
உருக்குகின்றாய் உணர்வுகளை!

நானோ...!
எனை மெய்மறந்து...
ஈரம் சொட்டும் காதலுடன்
காத்திருக்கின்றேன் விழியோர முனை
தரிசிக்க!

வா.....
வாழ்ந்துதான் பார்ப்போமே!
என்னுள் உன்னையும்
உன்னுள் என்னையும்
அன்பால் நிரப்பி!

2014/10/29

24 வருடங்கள்

எங்கள் அகதி வாழ்விற்கு வயது
24.......
.
இதய மின்னும் இற்றுப் போய்த்தான்
இருக்கின்றது....
இரண்டு மணி நேர இனச் சுத்திகரிப்பின்
வீரியத்தில்!
.
நவீனத்தின் பற்றுதலோடு
சுற்றிச் செல்லும் இப் பூமியின் எச்சமாய்
இன்னும்
இடிந்த கட்டிடங்களும்
உருக்குலைந்த மனிதங்களும்
அகதிச் சரிதத்தின்
முகப்புக்களாய் முகங்காட்டித்தான்
கிடக்கின்றன!
.
களமிறங்கும் அரசியல்கள்
கச்சிதமாய் வேட்டுக்களை ஏப்பமிட்டும்
இன்னும் திரும்பிப் பார்க்கவேயில்லை
இருண்ட எம் தாயத்தை!
.
யுத்தம் சப்பிய ஆன்மாக்கள்
நாமாய்...
விரட்டப்பட்டும் மிரட்டப்பட்டும்...
அவலத்தின் சந்ததியாய்- இவ்
அவனிக்கும் பாரமாய்
அந்ததரித்துக் கிடக்கின்றோம்!
.
நிவாரணங்கள் நிர்க்கதியானதில்...
தேய்ந்து போன தாயத் தெருக்கள்
எம் சுவடுகளின்றி
இன்னும்...
குற்றுயிராகத்தான் கிடக்கின்றன!
.
ஆகாயம் வெறித்துக் கிடக்க
அலை புரளும் கடலும்
வியர்த்துக் கிடக்க.........
பனையும் தென்னையும் உரசும்
யாழ்க் காற்றில்..............எம்
மூச்சும் கோர்த்துக் கிடக்கு
மந்தக் காலம் மட்டும்
ஏனோ.......
இன்னும் விடை தரா வினாவாக!
----------------------------------------------------------------------------------------

(30.10.2014 அன்று நாம் யாழ் மண்ணிலிருந்து விரட்டப்பட்டு 24 வருடங்கள் ..............
காலங்கள் ஓடலாம்- ஆனால் எம் ஞாபகச் சுவர்களின் அந்தக் கண்ணீர்த்துளிகள் நாம் மரணிக்கும் வரை ஈரம் உலர்த்தாது.........

உண்மையில்.............

வீடு தேடி அலையும்போதுதான் அகதி வாழ்வின் விரக்திச் சுமை மனதை வருத்தும் அரக்கனாக மாற்றுகின்றது.

முஹர்ரம்


ஒவ்வொரு மனிதரைச் சூழவும் அவர் அண்டி நிற்கும் சமூக, சமய, கலாசார உணர்வுகள் அவர்களது அடையாளங்களாக நிற்கின்றன. அந்த வகையில் முஸ்லிம் மக்கள் முஹர்ரம் எனும் தமது புத்தாண்டில் காலடி எடுத்து வைக்கவுள்ளனர்.

ஹிஜ்ரி வருடம் 1436 ன் புதுப் பிரவேசத்தில் பிரவேசிக்கப் போகும் நிலையில் நாம்!

நாட்கள் எவ்வளவு வேகத்தில் பறந்து கொண்டிருக்கின்றன. நாமோ ஆமை வேகத்தில் நமது செயல்களுடன் பயணிக்கின்றோம்.

இருந்தும் இதோ நமது புதுவருடத்தின் நிழலில் அண்மித்தவர்களாக நாமிப்போது!

அல்லாஹ் கூறுகிறான் :

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும். அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை. இது தான் நேரான மார்க்கமாகும். ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள். இணைவைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
(அல்குர்ஆன் 9:36)

முஹர்ரம் மாதத்தின் முதலாம் நாள் முஹர்ரம் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இப்பண்டிகை கர்பாலா போரில் முகம்மது நபியின் பேரனான ஹுசைன் இப்னு அலி கொல்லப்பட்டதை சீஆக்களால் நினைவுகூரப்படுகிறது.

10 வது தினத்தில் நோற்கப்படும் ஆசுரா நோன்பானது ,
தான் கடவுள் என்று கூறிய அரசன் ஃபிர்அவ்ன் மற்றும் படைகளை கடலில் மூழ்கடித்து மூஸா (அலை) அவர்களை காப்பாற்றியதற்காக, அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதற்காக நோற்கப்படுவதாகும்.

வரலாற்றில் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாள்) நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்தபோது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். 
"இது என்ன நாள்?" என்று கேட்டார்கள். யூதர்கள் ”இது நல்ல நாள், இஸ்ரவேலர்களை அவர்களின் எதிரிகளிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய நாள்; இதற்காக மூஸா(அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள்” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ”உங்களை விட மூஸாவுக்கு அதிக உரிமை படைத்தவன் நான்” என்று கூறிவிட்டுத் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையும் இட்டார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரி 2004.

ஆஷூரா நாள் நோன்பின் சிறப்பை நோக்கினால் -

”ஆஷூரா எனும் இந்த நாளையும் (ரமளான் எனும்) இந்த மாதத்தையும் தவிர, வேறெதையும் ஏனையவற்றைவிடச் சிறப்பித்துத் தேர்ந்தெடுத்து நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை!”
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி) நூல் : புகாரி 2006

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆஷூரா நாள் நோன்பு முந்தைய ஒரு வருட தவறுகளுக்கு பரிகாரமாகும் என்று நான் அல்லாஹ்விடம் நம்பிக்கை வைக்கின்றேன்.
நூல் : முஸ்லிம் 1976

இஸ்லாமிய நாட்காட்டி ஒரு சந்திர நாட்காட்டியானதால் முஹர்ரம் தொடர்பான கணக்கெடுப்பு பின்வருமாறு கணக்கெடுக்கப்படுகின்றது.
(இன்ஷா அல்லாஹ்)
முஹர்ரம் ஆரம்பம் 25 அக்டோபர் 2014 ----.........இறுதி 22 நவம்பர் 2014

எனவே முஹர்ரம் ..............!

எனும் போர் செய்யத் தடை செய்யப்பட்டுள்ள இப்புனித மாதத்தில் சகல முஸ்லிம்களின் வாழ்க்கையிலும் நேர்வழி ஏற்பட்டு அதனூடாக சாந்தி, சுபீட்சம், அமைதி, சகோதரத்துவம், ஒற்றுமை ஏற்பட எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபை புரிவானாக!

                                                                                                                               
- Jancy Caffoor-