About Me

2019/06/23

கொஞ்சம் பொறு



கொஞ்சம் பொறு......
உன்
சிரிப்பை பெயர்த்து
சலங்கையாக்கப் போகின்றேன்!

கொஞ்சம் பொறு.......
உன்
பார்வையைத் திண்மமாக்கி
பனிக்கட்டியாத்
தூவுகின்றேன்!

கொஞ்சம் பொறு.......
உன் குரலலையின்
அதிர்வை
காற்றினில் கோர்க்கின்றேன்
மெல்லிசையாய்!

கொஞ்சம் பொறு........
உன் நிறத்தைப்
பிரதியெடுத்து
நிலாவை முலாமிடப் போகின்றேன்!

கொஞ்சம் பொறு......
சிப்பிகள் சினக்கின்றன- தம்
முத்துக்கள்
உன் னுதட்டினில்
சிறை வைக்கப்பட்டிருப்பதாய்!

சொல்லி விட்டுப் போ...........
உன் சுவாசத்திலும்
பூவாசம் - நீ
பூவை என்பதாலா!

திருமணம்



வாழ்க்கைப் பாதைக்காக
தீர்மானிக்கப்பட்ட பயணம்!

கருவறைத் தரிப்புக்களுக்காய்
வழங்கப்பட்ட அனுமதி!

தனிமைச் சாளரம் தாழ்பாளிட
ஈர் மனந் திறக்கும் மங்களச் சாவி!

சரீரம் வருடி சாரீரம் தொடும்
இன்னிசை!

தாலியால் வேலியிடப்படும்
உறவுச்சாலை!

சம்பிரதாயங்களின் முகவுரையோடு
எழுதப்படும் காவியம்!

ரொக்கத்தின் கனத்தில்
இருவரிணையும் சங்கமம்!

வழித்தோன்றலின் வழிவிடலுக்காய்
வாழ்த்துத் தூவும் பூமாலை!

ஆயுள் மன்றத்தில் ஓர்முறையே
அரங்கேற்றப்படும் ஈர் மனக் கவிதை

கண்ணீரும் வெந்நீரும் பன்னீரும்
வழிந்தோடும் நீரோடை!

வாலிப வித்தைகளைக்
கட்டிப் போடும் கடிவாளம்!

கனவுச் சிறகறுத்து மனசை
நனவுக்குள் வீழ்த்தும் தேர்வுமையம்!

நான் நீயாகி........நீ நானாகும்
மனசின் மந்திரப் பிரகடனம்

இதோ



இருளின் ரகஸியத்தில் இப்போதெல்லாம்
வீழ்ந்து கிடக்கின்றது நம் பனிப்போர்!

நினைவுச் சாவி திறந்துன்னை.........
களவாய்  ரசிக்கையில்
கன்னம் வைக்கின்றாய் மெல்ல - என்
கன்னம் சிவக்க!

அரிதாரம் பூசப்படும்  கனவுகளுக்காய்
கர்ப்பம் தரிக்கும் நம் காதல்.......
இப்போதெல்லாம் - சில
பிடிவாதங்களின் ஆளுகைக்குள்
பிரவேசிக்கின்றது
ஊடலைத் தெறித்தபடி!

அடுத்தவருக்காய் என்னை நீ
விட்டுக் கொடுக்கப் போவதுமில்லை.........
என்னிடம்  தோற்கப் போவதுமில்லை!......

காத்திரு ...............
கணப்பொழுதில்
தாவி வருகின்றேனுன்னைத் தழுவி நிற்க!

தீனின் ஒளியாய்



இப்ராஹீம் நபியவர்கள் இறைஞ்சுதல்கள்
இறை சந்நிதானத்தில் வலு சேர்க்கவே.........
ரபியுல் அவ்வல் பிறை பனிரெண்டில்
தரணிக்குள் தடம் பதித்தா ரெம் பெருமானார்!

பிரபஞ்ச இருள் வெளிக் கீற்றுக்களில்
பிரவேசித்த வைரமாய் எம் பெருமானார். ...........
நல்லறங்கள்  பல விட்டுச் சென்றார்- பல
உள்ளங்கள் இஸ்லாத்தைத் தொழவும் செய்தார்!

விண்ணகர் மலக்கொளிகள் வாழ்த்தி நிற்க
மண்ணக அறியாமை கறையகற்றி.........
தீன் வழிச் சுவட்டோரம் நடைபயின்றே
வாழ்ந்தும் காட்டினா ரெம் பெருமானார்!

அன்னை ஆமினா உதிரம் நனைந்தே
இன்முகம் காட்டும் நனி பூவானார் ............
தந்தை அப்துல் முத்தலிப் லயிப்பில் தான்
தரணிக்குள் தரித்தும் நின்றா ரெம் பெருமானார்!

அருந்தவப் புதல்வரா யன்னையவர்
கருவறை தங்கிய வெம் கோமகன்......
பெருந்தவப் பேறாய் பேருலகில் தீனைப் பரப்பி
பொக்கிஷமாய் திருமறையையும் தந்தே நின்றார் ........

அரபிச் சுவரோர அறியாமைப் படிவுகள்
குற்றங்களாய் மனித மனங்களில் நீட்சி பெற்றே...............
இன்னல்களாய்  தீப்பற்றி எரிகையில்..........
அன லுறிஞ்சும்  புனிதமுமானார்
அஹமதெனும் எம் பெருமானார்!

பாலையூற்றுக்களின் பாவக் கறைகள் நீங்கி
சோலைவெளிகளாய் இப்பிரபஞ்சம் நிரம்பிட...........
பிரவேசித்தா ரெம் பெருமானார்
பிரகாசித்தார் அரபுத் தேசம் சிறப்புப் பெற!

சமுதாயப் பேரேடுகளில் சாந்தி வரையும் 
சரித்திரமுமானார் பலர் தரித்திரங்களும் நீக்கி.......
சன்மார்க்க போதனைகளில் எம் சிந்தைகளை  நிறைத்திட
விட்டும் சென்றார் வழிமுறைகளாம் .....
அல்-ஹதீஸையும் ஸூன்னாவையும்!

விண்ணகம் இறக்கித் தந்த தீன்நெறியால்
இன்னல் களையும் வழியும் தந்தார்!
மண்ணக சேமிப்போரங்களெல்லாம்..........
எண்ணற்ற அருளையும் சேர்க்கச் செய்தார் -எம்
அண்ணல் நபியவர்கள்!

வானின் பௌர்ணமி எழிலொளியாய்
வையகத்தில் வந்திறங்கினார் எம் பெருமானார்!
நன்மையின் விளைவகம் நாமாக...........
தீனை உணர்விலும் தந்து நின்றார்!

கஷ்டங்கள் பல கண்டனுபவித்தும்
இஷ்டத்துடன் இறை தொழுதே நின்று........
இஸ்லாமெனும்  தூணில் உலகைப் பொருத்தி
பெருமையும் கண்டார் எம் பெருமானார்!

சாப வினைகள்  நீக்கத்தான்
சத்திய நெறிகள் போதிக்கத்தான்........
வந்துதித்தார் நித்திய வுலகின் அச்சாணியாய் - எம்
முகம்மது நபி (ஸல்) அவர்கள் !

வறுமை விரட்டும் மருந்துமானார்.........
சிறுமை களையும் அன்புமானார்..........
மறுமை வாழ்வுக்கும் வழியும் தந்தார்.........
இறுதித் தூதுவர் அவருமானார்!

மீலாத் தினமின்று பல மாண்புகளும்
மீட்சிகளும் இறையருளும் நாம் பெற்றிடவே .........
பெருமளவில் ஸலாம் சொல்வோம்- முகம்மத்
பெருமானார் திருமொழி நவின்றே!