2013/06/19
தந்தைக்கோர் கடிதம்
தந்தையே
உங்களுக்கான என் முதல் கவிதையிது!
நீங்கள்!
என் மன விடியலின்
மறக்கப்படாத சூரியன்!
என் இலக்கியப் பயணத்தின்
முன்னோடிச் சுவடு!
வெம்மையாய்
தென்றலாய்
குழந்தையாய்
உங்களுக்குள்
எத்தனை பண்பு முகங்கள்!
தந்தையே
உங்கள் பிடிவாதமும் இறுக்கமும்
முன் கோபங்களும்
என்னை அழ வைத்தாலும் கூட
நீங்கள் ஓவியராக
நடிகராக
எழுத்தாளராக
பாடகராக
பொறியியலாளராக
வைத்தியராக
அதிபராக
எல்லாம் தெரிந்தவராக
உங்கள் அறிவாற்றல் கண்டு
பிரமித்த பல கணங்கள் - இன்னும்
நெஞ்சின் பதிவுகளாகிக் கனக்கின்றன!
மழலைப் பருவத்தில்
உங்கள் தோளேற்றி பாட்டிசைத்து
தூங்கவைத்த அந்தக் கணங்கள்
இன்னும் ஏக்கத்தில் கசிகின்றன!
என் வாழ்க்கைச் சாலையில்
நீங்கள் பரப்பிச் சென்ற அனுபவங்கள்தான்
இன்று
இணையம் வரை - என்
முகவரியாகி நிற்கின்றது!
என் கையெழுத்து அழகாம்!
சூழவுள்ளோர் புகழுரைக்கையில்
தந்தையே
நானறிவேன்
என் எழுத்துக்களின் ஆதாரம் உங்கள்
நிறமூர்த்தங்கள்தானே!
நீங்கள்
வித்தியாசமான தந்தை
கண்டிப்பான தந்தை
இருந்தும்
உங்கள் நெகிழ்வுகளிலெல்லாம்
பனித்துளிகளாய் படர்ந்து கிடக்கின்றது பாசம்!
என் ஒவ்வொரு நகர்வையும்
கண்காணிக்கும் உங்கள் பார்வைகள்
என் வாழ்வைப் பாதுகாக்கும்
சட்டவேலிகள்!
கல்வி
உங்கள் வழிகாட்டலில் நான் பெற்ற வரம்!
தைரியம்
நீங்கள் எனக்கூட்டிய ஊட்டம்!
தன்னம்பிக்கை
உங்கள் அனுபவங்களால் கிடைத்த வெகுமதி!
வாப்பா!
அழகான மொழிதான் அன்பை உணர்கையில்!
தந்தை
சிந்தைக்கு பூட்டப்பட்ட பாதுகாப்புத்தான்!
பெண்ணடிமைத்தனத்தில் உருளாமல்
"ஜான்சி ராணியாய்" நான் வாழ
நீங்கள் காணும் கனவுகள்
இப்பொழுதுதான் மெல்ல விரிகின்றன
என் நிஜப்படுத்தலில்!
நாட்கள் உதிர்கின்றன
தேகமும் நோய்க்குள் கரைகின்றன
வாப்பா
உங்கள் ஆரோக்கியம் தளிர்த்திட
பிரார்த்திக்கின்றேன் வல்லோனிடம்!
போலியான இவ்வுலகில்
வேலியாய் பொய்மைகள்!
இருந்தும்
பெற்றவர்கள் உங்கள் உண்மையன்பில்
என்றும்
நெகிழ்ந்து கிடக்கும் பாச மகளாய் நான்!
- Jancy Caffoor-
19.06.2014
எல்லாம் முடிந்து போனது
நேற்றிரவுக் காற்றில்
உதிர்ந்து பறந்தன சருகாய் கனவுகள்!
உறங்கமறுத்த விழிகளோ
இறந்து கிடந்தன விரக்தியில்!
சில காலம் சிறகடித்த ஆசைகள்
சின்னா பின்னாமாகியதில்
கண்ணீர்க் கசிவுகள் முட்கம்பிகளாய்
கன்னங்களைச் சிதைத்தன!
"நீயா பேசியது"
பாடலிப்போ
எனக்கும் பிடிக்கும்
உனக்குப் பிடித்த என் மௌனம்
இனியென் பாஷையாகிப் போனதில்
ஊமையாகி நிற்கின்றேன்
உன்னைத் தொலைத்தவளாய்!
உன் தேவதை நானென்றிருந்தேன்
நம் இடைவெளிகள் மறந்து
தவறுகள் உணர்த்தப்பட்டதில்
பறக்கின்றன துன்ப விட்டில்கள்
என்னைச் சுற்றி!
- Jancy Caffoor-
19.06.2014
அழகு
நேற்றைய அனுபவங்களை , நாளைய எதிர்பார்ப்புகளுக்காக உழைக்கும் உழைப்பே இன்றைய வாழ்க்கை
தம் மழலையுலகில் எனை வீழ்த்தி
புன்னகைச் சிதறல்களால் மனதையீர்த்து நிற்கும்
குட்டிச் செல்லங்கள்.........
அஸ்கா + சஹரிஸ் பாப்பாக்கள்!
---------------------------------------------------------------------------------------------
சின்னச் சின்ன சம்பவங்கள்தான் பெரிய சரித்திரங்களாக மாற்றப்படுகின்றன. நாளைய சரித்திரம் நம்மைத் தூற்றாதிருக்க, நமது சம்பவங்கள் நல்லவையாகவே இருக்கட்டும்
இன்று நாம் தவற விடும் சந்தர்ப்பங்களுக்காக, நமக்குக் கிடைக்கும் மிகப் பெரிய அன்பளிப்புத்தான் "நாளை" எனும் நாள்!
--------------------------------------------------------------------------------------------------
வாழ்க்கையை ஒருபோதும் மன அழுத்தங்களுக்கு இரையாக்காதீர்கள். ஏனெனில் அதிலிருந்து நம்மால் இலகுவில் வெளியேற முடியாது. இயல்பாய் இருப்போம். இதமாய் பழகுவோம்..
----------------------------------------------------------------------------------------------------
யாரோ நம் வாழ்வைப் பின்தொடர்பவர்களாக வரலாம். எனவே நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு நகர்வும், எப்பொழுதும் அடுத்தவர் விரும்பக் கூடிய ஒன்றாகவே இருக்கட்டும்!
----------------------------------------------------------------------------------------------------
நாம் நாடிப் போகும் நட்புக்களை விட, நம்மைத் தேடி வரும் நட்புக்களில்தான் உண்மையான அன்பும், அக்கறையும் அதிகமாக இருக்கும். இந்நட்புக்களே நம் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வரும்.
என்னையும் உன்னையும் சுற்றும் பூமியாய்!
கண்ணெதிரே இதழ் விரிக்கும் சின்னப் பூமகள் !
-----------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------
பிரச்சினைகள்தான் வாழ்க்கை!
புரிந்து கொண்டோர் - தம் வாழ்வை
தாமே காத்துக் கொள்கின்றனர்!
----------------------------------------------------------------------------------------
- Ms. Jancy Caffoor -
உனக்காய் நீ
உன் பாதையில் நானில்லை
புரிந்தும் காத்திருக்கின்றாய்
என் தடமோரம் பாசத்துடன்!
வலிக்கின்றது
தினம் என்னைத் தேடும்
உன் பாசத்தின் செறிவும்
என்னைப் பற்றிய நம்பிக்கைகளும்!
அன்றென்னை தொலைத்துவிட்டு
இன்றல்லா தேடுகின்றாய்
சந்து பொந்துகளில்!
மழையில் நனைந்தவாறே- எனக்கு
குடை பிடிக்க நினைக்கும் உன்னிடம்
கேட்கின்றேன் - நீ
நல்லவனா வில்லனா!
முட்களை முகமாக்கி நிற்கும் உன்னிடம்
சத்தமில்லா ஓசையாய் விம்மலொன்று
வெடித்தெழுகின்றது இப்பொழுதெல்லாம்!
அழுகின்றாயா
எனக்காக அழுகின்றாயா
ரணங்களை மட்டும் உனக்காக்கும் எனக்காக
தினம் அழுகின்றாயா!
புய லுனக்குள்ளும்
பூத்திருக்கும் பூவுக்குள்
மறைந்திருக்கும் மகரந்தங்களாய்
என் நினைவுகளை மட்டும் விட்டுச் செல்கின்றேன்
உன்னிடம்!
நீ வாழ வேண்டும்
உனக்காய்
உனக்குள் நீயாய்!
- Jancy Caffoor-
19.06.2013
நீரோடை
எப்பொழுது அன்பு மனதினை நிரப்ப ஆரம்பிக்கின்றதோ, அன்றிலிருந்து சந்தோஷங்களும் நம்மைப் பின்தொடரும் நிழல்களாய் மாறி விடுகின்றன.....
----------------------------------------------------------------------------------------------------------
அன்பும் ஓர் போதைதான்...........
அதனாற்றான் அன்பு கொண்டோரை விட்டுப் பிரிய மறுக்கும் மனசு, ஆழ் அன்பில் மோகித்துக் கிடக்கின்றது!
--------------------------------------------------------------------------------------------------------
காதலானது.......
வயது, அழகு, பணம் , அந்தஸ்து நோக்கியே தேடி ஓடும் .......
ஆனால்
உண்மை நட்பும் , உறவுகளும் தூய அன்பை மாத்திரமே நாடியே வரும்!
அதனால்தான் உள்ளத்தில் ஒன்றை வைத்து வேறொன்றைப் புறம் பேசும் காதலை விட, நட்பே என்றும் சிறந்தது. அழகானது, ...........
---------------------------------------------------------------------------------------------------
பெறுமதி குறைந்த நாணயங்கள்தான் சத்தமெழுப்பும்
பெறுமதி மிக்க ரூபா நோட்டுக்களோ மௌனித்துக் கிடக்கும்!
வார்த்தைகளை சுருக்குவது ஒழுக்கப் பண்பின் வெளிப்பாடு..
----------------------------------------------------------------------------------------------------
யதார்த்தம்
அருகிலிருக்கும் போது புன்னகைக்கும் உதடுகளை விட
பிரிவினில் கலங்கி நிற்கும் கண்கள் தான் அன்பை அதிகம் சொல்லி நிற்கும்!
------------------------------------------------------------------------------------------------------
நேற்றைய தவறுகள் இன்றைய பலகீனம்.....
இன்றைய பலகீனத்திற்காக நாளைய பலத்தை இழப்பது அறியாமை!
------------------------------------------------------------------------------------------------------
யாரை அதிகமாக நேசிக்கின்றோமோ, அவர்களின் மௌனமே, நம் சந்தோஷத்திற்கும் விரைவில் நாள் குறித்து விடுகின்றது!
-------------------------------------------------------------------------------------------------------
வலித்தது - உன்
வார்த்தையல்ல!
நீ எனக்குள் விட்டுச் சென்ற
உன் மௌனம்!
--------------------------------------------------------------------------------------------------------
விளக்கொளி தேடி சிறகறுக்கும் விட்டிலாய்....
உன் விதி வழி நசிந்து
இறக்கின்றேன் நானும்.....
அணுஅணுவாய்!
--------------------------------------------------------------------------------------------------------
காதலின் கற்பு வாழ்க்கையிலில்லை
வார்த்தைகளில்!
ஏனெனில் வார்த்தைகள் மகிழ்வைக் கரைத்து
காதல் வாழ்க்கையைச் சிதைக்கக்கூடியவை!
--------------------------------------------------------------------------------------------------------
நம்மைக் கடந்து போன நினைவுகளை
நாம் எப்பொழுது மறக்கின்றோமோ....
அன்றே.............
மனிதரெனும் அந்தஸ்தும் நம்மை விட்டுப் போய்விடும்!
--------------------------------------------------------------------------------------------------------
கடிக்கின்ற நுளம்புகளை
அடிக்கின்றேன்................
துடித்தே இறக்கின்றன அவை- நாமும்
படிக்கின்ற பாடம் " தீயோர் வாழார்"
- Ms. Jancy Caffoor -
வலித்தது - உன்
வார்த்தையல்ல!
நீ எனக்குள் விட்டுச் சென்ற
உன் மௌனம்!
--------------------------------------------------------------------------------------------------------
உன் விதி வழி நசிந்து
இறக்கின்றேன் நானும்.....
அணுஅணுவாய்!
--------------------------------------------------------------------------------------------------------
காதலின் கற்பு வாழ்க்கையிலில்லை
வார்த்தைகளில்!
ஏனெனில் வார்த்தைகள் மகிழ்வைக் கரைத்து
காதல் வாழ்க்கையைச் சிதைக்கக்கூடியவை!
--------------------------------------------------------------------------------------------------------
நம்மைக் கடந்து போன நினைவுகளை
நாம் எப்பொழுது மறக்கின்றோமோ....
அன்றே.............
மனிதரெனும் அந்தஸ்தும் நம்மை விட்டுப் போய்விடும்!
--------------------------------------------------------------------------------------------------------
கடிக்கின்ற நுளம்புகளை
அடிக்கின்றேன்................
துடித்தே இறக்கின்றன அவை- நாமும்
படிக்கின்ற பாடம் " தீயோர் வாழார்"
- Ms. Jancy Caffoor -
2013/05/22
மரணத்திலாவது
அன்பு தேடியலைந்தேன்
பாசம் தொலைத்த வெற்றுடல்களில்
சுயநலங்கள் சால்வை போர்த்திக்கிடந்தன!
நானும் விடுவதாயில்லை

அன்பு கிடைக்காமலா போகும்!
நடந்தேன் தொலைநோக்கி நடந்தேன்
தூரத்தே சிறு சமிக்ஞை
கரங்கள் அசைந்து அழைத்தன என்னை!
அன்பு கிடைத்ததென்ற போதையில்
கற்களும் முற்களும் கால்களைப் பதம் பார்க்க
புதுப் பிறவியெடுத்தோடுகின்றேன் அங்கே!
அங்கே..................
புகைந்து கொண்டிருக்கின்றன மனித உடல்கள்!
மயானத்தின் சமாதிகளுக்கிடையே ஆத்மாக்கள்
அழைத்துக் கொண்டிருந்தன என்னை!
மெல்ல புன்னகைத்தேன்
தேடியலைந்த அன்பு கிடைத்த மமதையில்!
மெல்ல மெல்ல கண்கள் சொருகுகின்றன
அட
நானும் மரணிக்கின்றேனா!
என்னைச் சூழ்ந்திருப்போர் கதறும் ஓசை
காற்றினில் இழைந்து கரைய!
அட அன்பு கிடைத்துவிட்டது
மரணத்திலாவது!!
- Jancy Caffoor-
22.05.2013
அவன்
இன்று விஞ்ஞானப் பாடம் கற்பிப்பதற்காக வகுப்பினுள் நுழைகின்றேன். வழமைபோல் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் மாணவர் கூட்டங்கள் என் தலையைக் கண்டால்தான் சற்று அடங்கிக்கிடப்பார்கள்........
அவன்...................
வகுப்பில் குழப்படியான மாணவன்...
ஆனால் ..........
ஏனோ என்னிடம் அடங்கி நிற்பான். நான் வகுப்பிற்குள் போகும்வரை வாசலில் காத்து நிற்பான். அல்லது என்னைத் தேடி நானிருக்கும் இடத்திற்கே வந்துவிடுவான்...
இன்றும் மூலகங்கள் பற்றியும் சோடியம் பற்றியும் கற்பித்துக் கொண்டிருந்தேன். எல்லோரின் கவனமும் பாடத்தில் ஒட்டிக் கிடக்க, அவன் மட்டும் அழுது கொண்டிருந்தான். நானோ பாடத்தை கற்பித்து முடிக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பில், அவனைக் கவனிக்காமலே மற்றவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தேன். அவன் மேசையில் தலைசாய்த்திருந்தான்....
பாடம் நிறைவுற்று மணி அடித்தபோது, நானும் வகுப்பை விட்டு வெளியேறி சிறிது தூரம் நடக்க ஆரம்பித்தேன்............
"மிஸ்....மிஸ்"
யாரோ ஓடியவாறு வருவதை உணர்ந்து திரும்பினேன். அழுது கொண்டிருந்த மாணவன்தான் நின்று கொண்டிருந்தான்.
"போறீங்களா மிஸ்"...அவன் கேட்டபோது என் நடையும் நின்றது.
"ம்ம்........." நான்
"ஏன்டா அழுதே. விடாமல் தொடர்ந்து கேட்டேன்!......
அவனோ சில நிமிடம் மௌனித்த பிறகு மெதுவாகப் பேசத் தொடங்கினான்....
"போன வருஷம், இதே நாள் என் தம்பி செத்திட்டான் மிஸ், அவன நெனைச்சேன்...அதுதான்"
மீண்டும் அவனுக்குள் கண்ணீர் கருக்கட்ட ஆரம்பித்தபோது, எனக்குள்ளும் மனசு லேசாய் கலங்கத் தொடங்கியது! அவன் பாசத்தை எப்படி சமாதானப்படுத்துவது.......
இழப்புக்கள் வரும்போதுதான் அதன் அருமை புரியும்!
ஏனெனில்
"ஞாபகங்கள்......மறதிக்குள் ஒருபோதும் வீழ்வதில்லை"
நிழல்கள்
கனவில் லயித்திருக்கும் பல்லாயிரம் நிமிடங்களை விட ,
யதார்த்தத்தில் உறைந்திருக்கும் ஒரு சில நிமிடங்களே நம்மை உணர வைக்கும் தருணங்கள்!
--------------------------------------------------------------------------------------
ஆயிரம் விண்மீன்களை உன் கண்களில் கண்டேன்
நீ குறும்புகளால் எனைச் சிறைப்படுத்திய போது!
ஆயிரம் வாற்று மின்னும் உற்பத்தியானது
நீ கரும்பாகி என் வசமான போது!
--------------------------------------------------------------------------------------
நேசித்தல் மட்டுமல்ல நட்பு - நம்
வாழ்நாள் முழுவதும்
அவ் அன்பைப் பாதுகாக்கும் அறமே
அதன் சிறப்பு!
--------------------------------------------------------------------------------------
ஓய்வென்பது மன அழுத்தங்களைக்
குறைக்கும் அரு மருந்து!
இயற்கையில் இதயம் நனைத்து ஓய்வெடுங்கள்
அயர்ச்சியுறும் மனதில் பசுமை படரும்!
- Ms. Jancy Caffoor -
உன்னை நினைந்து
உன்னை நினைக்கும்போது
எனக்குள் கவலை வருகின்றது!
உன் மனதை வாட்டிச் செல்லும்
என்னைக் கடிந்து!
ஆயிரம் பூத்தூவி காத்திருக்கும்
நட்சத்திரங்கள் மொய்த்திருக்கும் வேளையில்......
வெட்கம் தூவி மேனி நனையும்
உன் நேசத்தின் பூரிப்புக்குள் நம் ஞாபகமாய் விழும்போது
மனசேனோ ...........
மாலையில் சுருங்கும் மலராய்
வீழ்ந்துதான் போகின்றது குற்றுயிராய்!
துக்கம் மூச்சோரம் இளைப்பாறி
துவட்டிச் செல்கின்றது என் நினைவுகளை ஆழமாய்!
2013/05/21
எனக்குள் தாயாகி
உன்னை இழக்கும் போதுதான் வலிக்கின்றது
கண்கள் சாட்சியாய் உன் முன்னால்!
சட்டத்திற்கு தெரிவதில்லை மனசு - உன்
இஷ்டத்திற்கு வீசிச் செல்லும் பட்டாசாய்
சுடும் வார்த்தைகள்!
வேதங்கள் சொல்லும் சத்தியங்கள்
உனக்குள்ளும் உண்டு ஆழமாய்!
எரி புழுக்களாய் மேனியூர்ந்து
பறந்து திரியும் அழகான வண்ணத்துப் பூச்சியாய்
உன் காதல்!
தினமும் அமிலமூற்றும் உன் பார்வையும்
காதலும்
வலிக்கின்றது வாழ்க்கையைப் பிசைந்து!
எனக்குள் பூ போர்த்துமுன் மனசும்
அன்பும்
வம்பு பண்ணுமுன் காதலும்!
கிள்ளிச் செல்கின்றதென்னை
கள்ளமாய் ரசிக்கும் உன் கைகளால்
ஸ்பரித்தவாறு!
எனக்குள் தாயாகி
என்னைக் காக்கும் அன்பே
உன் குண்டுக் கன்னத்தில் சிரிப்பை நசித்து
பாசச் சாறூற்று எனக்குள்!
- Jancy Caffoor-
21.05.2013
மறைந்து கொள்
உன் குரலென்னைத் தொடுகின்ற
பொழுதெல்லாம்
என் விடியல்களுக்குள்ளும் இசை பிறக்கின்றது
கேட்டுப்பார்!
சந்தனம் பூசி பந்தியிலமரும் தென்றல் கூட
வந்தனம் செய்கின்றது நம் மன்பிற்கே!
கேட்டுப்பார்!
அன்பின் மஞ்சத்தில் அழகான பட்டாம்பூச்சியாய்
நம் மனங்கள்
சிறகடிக்கின்றது தினமும்!
வா!
உதடுகளைத் தாளிட்டு காத்திருக்கும் நாணத்திடம்
மெல்லக் கேட்போம் அனுமதி
ஒரு நிமிடம் திரையிட்டு மறைந்து கொள் என்று!
- Jancy Caffoor-
21.05.2013
பொய்த்துப் போன வாழ்க்கை
வாழ்க்கையில் மிகக் கொடுமையான விடயம் வறுமை. சென்ற வாரம் அண்மையூரில் (வவுனியா) நடைபெற்ற விடயமொன்று இன்னும் எனக்குள் உழல்கின்றது.........
அவள்.......
இளந்தாய்......
மூன்று பிள்ளைகளின் தாய்......
இளமையில் ஏற்படும் வறுமை கொடுமையென்பதற்கு மேலாக அவள் வாழ்க்கையும் அந்த வறுமையால் சிதைந்தது. சுயநலக்கார கணவன், வெறும் சுகநலன்களுக்காக அவளைக் கைவிட்டு வேறு பெண் பின்னால் போய் குடும்பம் நடத்த அவளும் அவளது குழந்தைகளும் தனிமைப்படுத்தப்பட்டனர். பத்துப் பாத்திரம் தேய்த்தும் உழைக்க முடியாத சூழ்நிலையில் அவள். காரணம் மூன்று பிள்ளைகளும் பச்சிளம் பாலகர்கள்...........
பலரிடம் கையேந்தி வாழும் இந்த வாழ்க்கை வெறுத்துப் போக அவள் எடுத்த முடிவு..........
தற்கொலை!
தன் வீட்டு ஆழ் கிணற்றில் ஒவ்வொரு குழந்தையாக வீசினாள் அந்த இதயமற்ற பெண். பச்சிளங் குழந்தைகள் மூவரும் துடிதுடித்து இறந்ததை அந்தத் தாயவள் எப்படித்தான் சகித்தாளோ.......
இனி தனது நேரம்..............
தானும் கிணற்றினுள் பாய்ந்தாள்.. ஆனால் உயிர் பறிபோகும் கடைசி நிமிடத்தில் உயிர் வாழ ஆசைப்பட்டு அருகில் தொங்கிக் கொண்டிருந்த கயிற்றைப் பிடித்து காயங்களுடன் அப்பெண் உயிர் தப்பினாள்............
கணவன் மனைவிக்கிடையிலான கோபத்தின் உச்சநிலையில் பறிபோனது 3 பிஞ்சுக் குழந்தைகள்தான்!
அந்தப் பெண் இப்போது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாள். மனநிலை பாதிக்கப்பட்டவள் எனும் முத்திரையுடன்!
3 கொலைகளை செய்து விட்டு அப்பெண்ணால் உயிர் வாழ முடியுமா என்ன...............?
அவள் உலகம் இனி சிறைக்கம்பிகள்தான் என அறியாமலே வாழ்ந்து கொண்டிருக்கும் அப் பெண்ணின் அவசரமும் , கோபமும் எல்லோருக்கும் ஒரு பாடம்!
2013/05/20
தடையில்லையினி
யாரறுத்தார் நம் சிறகுகளை
உயிரறுந்து கிடக்கின்றது - நம்
பட்டம்பூச்சி!
இரவின் வெம்மையில்
உஷ்ணம் சொறிந்த உன் வெண்ணிலா கூட
சாம்பராகிக் கிடக்கின்றதென் மெத்தையில்!
உனக்கான என் கவிதைகள் கூட
இப்பொழுதெல்லாம்
கல்லறைக்குள் தனித்து முணுமுணுக்கின்றது!
நேற்று
கற்றுத் தந்தேன் காதலை
இன்று நீயோ
இன்னொருத்தியின் உணர்வாய்!
உன் மாற்றம்
எனக்குள் ஏமாற்றம்!
உயிர் வதைக்கும் தடுமாற்றம்!
விடை பெறுகின்றேன்
மடையுடைக்கும் கண்ணீர்த்துளிகளுடன் !
தடையில்லையினி உனக்கு நான்!
அன்பும் பொய்த்தது
ஆசைக் கனவுகள் உடைந்தும் போனது!
இன்னலை என் ஜன்னல் கன்னம் வைக்க
இன்னொருத்தியின் வாசமாய் நீ!
- Jancy Caffoor-
20.05.2013
தாயே
தாயே..........!
உங்களுக்கு சூரியன் கீழிறங்கி
குடை பிடிக்கும்!
சந்திரன் சத்தமிட்டு வாழ்த்துமுங்களை
உங்கள் வார்த்தையில் ஒட்டிக் கிடக்கும்
தன் குளிர்மையை ஏந்திக் கிடப்பதற்காய்!
மலர்கள் சரம் தொடுத்து
கரமசைக்கும் உங்களைக் கண்டு!
தம் மேனி மென்மையை
தாயே!
தலை சாய்கின்றேன் நாணலாய்
என்றும் உங்கள் அன்புக்கு!
- Jancy Caffoor-
20.05.2013
2013/05/15
வர்ணம்
உன் அன்பு எப்பொழுதும் என் மனசோரம்.....
அதுவோ எந்நாளும் எனக்குக் கிடைத்த வரம்!
------------------------------------------------------------
நம்மை அறிபவன் நல்ல நண்பன்.....
நம்மை வழி நடத்துபவன் சிறந்த நண்பன்!
-------------------------------------------------------
நம்மைச் சூழவுள்ளோரின் குணத்தை மாற்ற முடியாது. ஏனெனில் ஒருவர் குணத்தை அவரது பிறப்பும், சூழ்நிலையுமே தீர்மானிக்கின்றது. ஆனால் நம்மைச் சுற்றியுள்ளோரில் நல்ல நண்பர்களை மாத்திரம் நாம் தேர்ந்தெடுக்க முடியும். தெரிவு என்பது நம் மனதைச் சார்ந்தது.
----------------------------------------------------------
புன்னகை ஒன்றே போதும்.......
அன்பை அழகாக வெளிப்படுத்தி விடும்!
அன்பினை ஆழ்வோர் எந்நாளும் சிருஷ்டித்துக் கொள்கின்றனர் அழகான உதயத்தை தம் வாழ்வில்!
----------------------------------------------------------------- வீழ்த்தப்படும்போது தோற்றுத்தான் போகின்றேன்...
மீள எழும்பும்போது ............
வலியுடன் வெற்றிக்கான வழியும் என் பாதையாய்!
--------------------------------------------------------
அக்கினிக்குள் வெந்து போகலாம் உடல்
அவனி விட்டு கருகிடுமோ உணர்வுகள்!
சாம்பர் மேட்டில் விதைக்கப்படும் உயிர்கள்
சரித்திரத்தின் கதையாகி சாகாவரம் பெற்றவை!
--------------------------------------------------
கொட்டிக் கிடக்கும் பனித்துளிக்குள்
பத்திரமாய் நீ!
உலராத உன் நினைவுகள் - எனக்கென்றும்
ஈரலிப்பே!
------------------------------------------------------
விண் பிளந்து மண் தொடும் வேர்கள்
-----------------------------------------------------------
சில மௌனங்கள்
மூச்சுக்காற்றை சுருக்கிடும் கயிறுகள்!
புரிதலும் பிரிதலும்
அன்பின் யாசகங்கள் ஆனதில்.........
கண்ணீருறிஞ்சும் கைக்குட்டையாய் நீ
-------------------------------------------------------
நம் விழிகள் நான்கும் சந்திக்கையில்
உதடுகள் உச்சரிக்கும் கவிதை "முத்தம்"
சத்தங்கள் சந்தமாகும் போது
மனங்களில் மகிழ்வூறி.........
இசையொன்று ஓசையெழுப்பும் அன்பை
ஆழ் நினைவுக்குள் நகர்த்தி!
- Ms. Jancy Caffoor -
Subscribe to:
Posts (Atom)