About Me

2012/07/29

அன்னையர் தினம்


மே 13
----------

தாயே ......

இவ்வுலக சகல ஜீவராசிகளின் உயிர்நாடிகளாகும். கருவறைச் சிறைப்படுத்தலில் குருதிப்பிண்டமாய் திரண்டிருக்கும் எம் உயிர்ப்படுத்தலைப் பேணி, உருவம் எமக்குள் நிலையூன்றும் வரை பேணி பாதுகாக்கும் ஒப்பற்ற உறவே தாய் !

அலையடித்து கடல் விலகாது என்பது போல, தாயின் சின்னச் சின்னக் கண்டிப்புக்களும், தண்டனைகளும் கூட எம்மீதான வழிப்படுத்தலுக்கே!

எம்மின்பத்தை தன் மகிழ்வாய் தனக்குள் நிரப்பி ,நாம் சிந்தும் கண்ணீரைத் தன் விழிகளுள் ஏந்தி , நம் மனச்சோகங்களை உணர்ந்து துடைக்கும் ஒப்பற்ற கரங்கள் அன்னைக்குரியது. 

எத்தனை நாட்கள்......
எத்தனை நொடிகள்........

தன் விழித்தூக்கத்தைக் கழற்றியெறிந்து விட்டு எம்மசைவுகளைக் காத்திடும் உன்னத உறவே அன்னை !

இத்தகைய உயரிய பண்புகளைக் கொண்ட அன்னைக்கு சர்வதேச ரீதியில் வைரக்கிரீடம் சூட்டும் நாளின்றாகும்..

"அன்னா ஜார்விஸ்" .........

அவர்தான் அன்னையர் தின உயிர்ப்புக்காகப் போராடிய கன்னித் தாய். .திருமணமாகாத அன்னையாய் சேவை செய்தவர். அன்னையரின் நலமேம்பாட்டுக்காய் தன்னையே வார்த்த அன்பு நெஞ்சமவர். அவரை மையப்படுத்தியே இவ் அன்னையர் தினம் கொண்டாடப்படுகின்றது.

"அன்னா ஜார்விஸ்" தாயின் ஒப்பற்ற பணியை, பாசத்தை, தியாகத்தை ஓர் நாளாவது கண்ணியப்படுத்த வெண்டுமென விரும்பி, அதனைச் செயற்படுத்த முனையும் போது  பல போராட்டங்களைச் சந்தித்தார்.  அந்தச் சவால்களை முறியடிக்க அன்னாவுக்கு ஆதரவாளர்கள் உறுதுணையாகவிருந்தனர். தமது எண்ணங்களை சமூகத்தினரிடையே உட்புகுத்தி அவர்களுக்கிடையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி அதனூடாக அன்னையர் தொடர்பான ஆதரவினைத்திரட்டி 1911 ஆம் ஆண்டு அமெரிக்காவின் பல மாகாணங்களிலும்  குறித்த நாளில் அன்னையர் தினம் கொண்டாடப்படக் காரணமாகவிருந்தார்.

1912 ஆம் ஆண்டில் "அன்னா ஜர்விஸ்" "மே மாதத்தில் 2 வது ஞாயிற்றுக்கிழமை", மற்றும் "அன்னையர் தினம்"  ஆகிய வாக்கியங்களைப்பதிவு செய்து அன்னையர் தின சர்வதேச அமைப்பை உருவாக்கினார். அதுமாத்திரமின்றி தன் தாயைப் பெருமைப்படுத்தி அன்னையர் தினம் கொண்டாடிய முதல் பெண்மணியாகவும் இவர் திகழ்கின்றார்.

அதனைத் தொடர்ந்து 1914 அம் ஆண்டு மே 8 ஆம் திகதி அமெரிக்க அதிபர் "உட்ரோவ் வில்சன்"  கூட்டறிக்கையொன்றில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை அன்னையர் தினமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

இன்றைய அன்னையர் தினத்தில் வெறும் வாழ்த்துக்களும், அன்பளிப்புக்களும் குவிக்கப்படுவதை விட பாசத்துடன் தாயவளின் அன்புப்பிள்ளையாக வாழ்வதை உறுதிப்படுத்துங்கள். இதுவே அன்னைக்கு நாம் வழங்கும் அற்புதப் பரிசாகும். தாயின் காலடியில் கிடக்கும் அந்த சொர்க்கம் எமக்கும் உறுதிப்படுத்தப்படும்.

உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்



ஏப்ரல் 23
-------------
புத்தக வாசிப்பினை ஊக்குவித்தல், புதிய புத்தகங்கள் வெளியிடுதல், புத்தக பதிப்புரிமையை அதிகரித்தல் போன்ற கருப்பொருட்களுடன் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 23ந் திகதி இத் தினம் கொண்டாடப்படுகின்றது. ஐரோப்பியாவில் வாழ்ந்த சிறந்த இலக்கியவாதியும், நாடக மேதையுமான வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்ததும், இறந்ததும் இந்த நாளிலேயே என்பதால் இத் தெரிவு இடம்பெற்றது . 1995 ம் ஆண்டு முதல் யுனெஸ்கோ அறிவித்தலின் பிரகாரம்  இத்தினம் அனுஷ்டிக்கப்பட்டு இத்தினத்தில் இலக்கியவாதிகள் கௌரவிக்கப்படுகின்றனர். இத்தினத்தில் பரவலகாக புத்தகக் கண்காட்சி, புதிய நூல்வெளியீடு, இவை தொடர்பான கூட்டங்கள் நடத்தப்படல், நூலாசிரியர் கௌரவிப்பு போன்ற பலவும் நடைபெறுவது சிறப்பம்சமாகும்.

அனைவருக்கும் வாசிக்கும் உரிமை, மக்கள் வாழ்விடங்களில் நூலக உரிமை, உலகில் நாம் பெறக்கூடிய அனைத்து அறிவுச்செல்வங்களையும் தத்தம் தாய்மொழியில் பெறுதல், தத்தமது தாய்மொழியில் இலக்கியச் செல்வங்களைப் பாதுகாப்பதன் பொருட்டு ஆவணப்படுத்தல், புத்தகம்,வாசகர்,எழுத்தாளர்களுக்கிடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தல் உள்ளிட்ட 10 கட்டளைகளை நிறைவேற்றுவதன் மூலம் உலகளாவிய ரீதியில் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை விரிவுபடுத்தும் நோக்கில் இத்தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

"வாசிப்பானது மனிதனைப் பூரணப்படுத்துகின்றது" என்பதை நாமறிந்தும் கூட, இந்த இயந்திரமயமான வாழ்க்கைமுறையில் அந்த எண்ணம் நம்மிலிருந்து காணாமல் போய்விடுகின்றது. இளைய தலைமுறையினர் இ-புக், இ-ரீடர் தொலைக்காட்சி போன்ற நவீனத்தின்பால் தமது கவனத்தைச் செலுத்தி வருவதால் புத்தகங்களின் வாசிப்புப்பழக்கமும் அருகி வருகின்றது.

தேடலானது புதிய கருத்துக்களை நமக்குள் உட்செலுத்தும் மார்க்கமாகும். தேடலுக்கான பயிற்சி வாசிப்பு மூலம் கிடைக்கின்றது. மனிதர்களின் விழுமியம், பண்பாடு, கலாசாரம், வாழ்க்கைநெறிமுறைகள், பழக்கவழக்கங்கள் என்பவற்றை புத்தகங்கள் வாயிலாக  நாமறிந்து கொள்ளலாம்.

வாசிப்பின் முக்கியத்துவத்தை பாடசாலை மாணவர்களுக்குணர்த்தும் வகையில் பாடசாலைக் கலைத்திட்டத்திலும் ,நூலகப் பாடவேளைக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாடசாலை நூலகங்களும் அபிவிருத்தி செய்யப்படுகின்றன.

தற்போது எமக்குக் கிடைக்கும் ஒய்வுநேரம் குறைவாகவே உள்ளது. இந்நேரத்தை நாம் பயன்படுத்த வேண்டும். நம் சிந்தனையை ஆரோக்கியப்படுத்தும் நல்ல நூல்களைத் தேடி வாசிக்க வேண்டும். நிறைய வாசிக்கும் போது சொற்பிழைகள் ஏற்படாது, அத்துடன் மொழிவளம் ,ஆளுமை, சிறந்த தொடர்பாடலும் நமக்குள் ஏற்படும்.

இலங்கையில் எழுத்தறிவு வீதம் 95% ஆக இருப்பதனால் இங்கு வாசிக்கும் திறனும் அதிகமாகவே காணப்படுகின்றது. புத்தகங்களை வாசிக்கும் போது பிறர் வாழ்வில் நுழையும் வீண் நுழைச்சலுக்கும் நேரம் கிடைப்பதில்லை. அதுமாத்திரமின்றி நம் மன அழுத்தமும் குறைக்கப்படுகின்றது. வாழ்க்கையிலெழும் சவால்களை தைரியமாக எதிர்கொள்ளும் மனப்பக்குவமும் ஏற்படுகின்றது.

நாம் தினமும் வீணாக்கும் பணத்தின் சிறுபகுதியிலாவது புத்தகங்களை வாங்குவதன் மூலம் நாமும் வாசித்து, பிறரையும் வாசிக்கத்தூண்டலாம். பாடசாலைகளிலும் வாசிப்புத் தொடர்பான பல்வேறு போட்டிகளை நடத்தி மாணவர்களை ஊக்கப்படுத்தலாம்.

தாய்மொழியிலான தரமான பதிப்புக்களும், அவற்றை உடனடியாக சந்தைப்படுத்தலும் இன்றைய காலத்தின் கட்டாயத் தேவையாகும். எமது அறிவை வளர்த்தும், பிறருடன் பகிர்ந்தும் பூரணத்துவம் பெறுவோமாக!

"நிறைய வாசிப்போம்- நம்
வாழ்வின் குறை போக்குவோம்!




சர்வதேச தொலைத்தொடர்பு தினம்


மே 17
---------
விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சி காரணமாக வியக்கத்தக்க முறையில் தொலைத் தொடர்பு சாதனத்துறையின்று வளர்ச்சியடைந்துள்ளது. உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் தொலைத்தொடர்புத் துறையும் ஒன்றாகும்.

ஆரம்ப காலத்தில் சைகை, பின்னர் புறா விடு தூது, முரசறைதல் போன்ற பல்வேறு முறைகளால் வெளிப்படுத்தப்பட்ட இத்தொடர்பாடல் கடிதம், தந்தி, மின்னஞ்சல் மூலமாகவும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

நவீன தொடர்பாடல் முறையானது 1450 களில் ஜோகன்ஸ் கட்டன்பர்க் என்பவர் அச்சு இயந்திரத்தை கண்டுபிடித்த நிகழ்வுடன் ஆரம்பித்தது. பத்திரிகை வாயிலாக ஆரம்பிக்கப்பட்ட தொடர்பாடலை "கிரஹம்பெல்" தொலைபேசி அலைவரிசைக்குள் நகர்த்தினார். தந்தி முறையை மேம்படுத்த கிரஹம்பெல் மேற்கொண்ட முயற்சி தொலைபேசி  பயன்பாட்டுக்கு வித்திட்டது . தோமஸ் வாட்சன் தொலைபேசியை வடிவமைக்க ,கிரகம்பெல் மின்சாரம் மூலம் ஒலியைக் கடத்துவது தொடர்பான யோசனையை முன்வைத்தார். 1875 ஆம் ஆண்டு ஒரே சமயத்தில் 2 சமிக்ஞ தந்தி வயர் மூலம் தகவல் பரிமாற்றத்திற்கு அரசின் அனுமதி கிடைத்ததுடன் 1876 மார்ச் 6 ஆம் திகதி கிரகம்பெல் ஒலியை தந்தி வயர் மூலம் பரிமாறச் செய்து காட்டினார்.

கம்பியில்லாத் தந்தியறிமுகத்தைத் தொடர்ந்து வானொலி, தொலைக்காட்சி, தொலைபேசி கையடக்க தொலைபேசி, 3G கைபேசி), டெலக்ஸ், மின்நகல், மின்னஞ்சல், இணையம் , செய்மதித் தொடர்புகள் என்பன நவீன தொலைத் தொடர்பு சேவைக்குள் உள்வாங்கப்பட்டன.

தொழினுட்ப வளர்ச்சிக்குள் இலத்திரனியல் நுட்பங்களைப் புகுத்தி தொலைபேசியை இலத்திரனியலுக்குள் வசப்படுத்தியவர்கள் ஜப்பானியராவார். இன்று மக்களிடையே செல்லிடத் தொலைபேசிப் பாவனை ஏறுமுகம் காட்டி நிற்கின்றது.

அதுமாத்திரமின்றி தொழினுட்பத் தொலைத்தொடர்பு வளர்ச்சியினால் ஏற்பட்ட அதி நவீன சாதனையாக இணையம் கருதப்படுகின்றது. நாமுட்புகுத்தும் தரவுகளை எமக்குத் தகவலாகச் சேமித்து மீளத் தரக்கூடிய கணனிப்பாவனை இணையச் சேவையில் தொடர்புபட்டுள்ளதால் வலைப்பின்னல்கள் மூலம் பல நாட்டு மக்கள் தமக்கிடையே தகவல் பரிமாற்றங்களை இலகுவாகவும், வினைத்திறனுடனும் , நட்புடனும் பேணி வருகின்றனர்.

ஆரம்பகாலத்தில் இந்த இணையச்சேவை ஆங்கில மொழியிலான வல்லரசின் இராணுவத் தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டது.  எனினும் பின்னர் உலகமயமாக்கலின் பன்முகப்படுத்தலின் கீழ் தொலைத் தொடர்பு சாதனமாக மாற்றம் கண்டது. இன்று மின்னியல் தபால், மின்னியல் சஞ்சிகை, மின்னியல் வெளீயீடு, ரெல்நெட், தொடர் கலந்துரையாடல், உலகின் பரந்த வலை என்பன மூலம் நவீன தொடர்பாடல் துறை எமக்குச் சேவையளித்து வருகின்றது.

தொடர்பாடல், தகவல் பரிமாறல் எனும் இருவகையினாலான இணைய தகவற்றுறையின்  சேவை மக்களின் அன்றாட வாழ்விற்கு முதுகெலும்பாய்த் திகழ்கின்றது.

அதேபோல் நவீன தொலைத் தொடர்பில் செய்மதிகளும் நேரடிப்பங்களிப்பைச் செய்கின்றன. மேற்குல நாடுகளே இதனை வினைத்திறனுடன் அதிகளவில் பயன்படுத்துகின்றன. இந்நாடுகளில் வாகனங்களில் "நெவிகேடர்" பொருத்தப்பட்டுள்ளன. இவை பாதை வழிகாட்டியாகும். நாம் செல்ல வேண்டிய இடத்தின் முகவரியை நிரப்பினால் செய்மதியின் துணையுடன் குரல் சமிக்ஞயாக எமக்கது பாதையை வழிகாட்டிச் செல்லும்.

எமது அன்றாட வாழ்வோடு பிணைந்துள்ள இத் தொடர்பாடல்கள் மூலம் மக்களின் கலை, வர்த்தகம், பொழுதுபோக்கு மேம்படுத்தப்படுகின்றது. அதுமாத்திரமுன்றி அனர்த்தவேளைகளில் எமதுயிர்களைப் பாதுகாக்கவும் இது உதவுகின்றது.

தொலைத்தொடர்பானது  தொழினுட்பத்தின் வளர்ச்சியோடு போஷிக்கப்பட்டு  வருவதால் ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு தோள் கொடுக்கும் ஒப்பற்ற சாதனமாகவும் விளங்குகின்றது.

1865 ல் உருவான சர்வதேச தொலைத் தொடர்பு சங்கத்தின் குரலாக (International Telecommunication Union)  உலக தொலைத் தொடர்பு தினம் ஒவ்வொரு வருடமும் மே மாதம் 17ம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது.

இதன் வளர்ச்சியினால் மறுபக்கம் நாடுகளை வேவு பார்த்தல், கலாச்சார சீரழிவு, முரண்பாடுகளும் பகைமைகளும் தோன்றுதல் போன்ற பிரதிகூலங்களும் காணப்படுகின்றன.

எவ்வாறாயினும் இன்றைய நவீன வாழ்வில் இத் தொலைத்தொடர்புச் சேவையின் பங்களிப்பு இன்றியமையாததொன்றாகும்.

உலக ஊடக சுதந்திர தினம்



மே - 3
--------  ஒருவர் தன்  மன எண்ணங்கள், செயல்களை அவ்வாறே வெளிப்படுத்தும் தன்மையை "சுதந்திரம் " என்கின்றோம்..இச்சுதந்திரப் போக்கு தடைசெய்யப்படும் சந்தர்ப்பங்களில் போராட்டங்கள் வெடிக்கின்றன. அவை குடும்பம், மதம், சமூகம், நாடு, இனம், மொழி என விரிவுபடுத்தப்படுகின்றது.

இச்சுதந்திர தன்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஊடகமாக "மனித உரிமைகள் சாசனம்" விளங்குகிறது. மனித உரிமை சாசனம் 19 ல் பேச்சுரிமை வலியுறுத்தப்படுகின்றது. 

இந்த வகையில் சுதந்திரமான ஒருவர்        தடையின்றி தனது கருத்தை தெரிவிக்கும் உரிமையுள்ளவர் என்பதை உலகெங்கும் பறைசாற்றும் விதமாக "உலக ஊடக தினம்" அனுஷ்டிக்கப்படுகின்றது.

மனித மேம்பாட்டிற்கு மிகவும் அவசியமானதே தொடர்பாடல். ஆரம்ப காலத்தில் "தீமூட்டல்" மூலம் தமது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்ட மனிதர், பின்னர் சீனர்கள் காகிதங்களைக் கண்டுபிடித்ததன் விளைவாக கடிதம், தந்தி, பத்திரிகை மூலம் எண்ணங்களை வெளிப்படுத்தத் தொடங்கினர்.
இன்றைய நவீன காலமோ இணையம், மின்னஞ்சலாக மாற்றப்பட்டுள்ளது.

பல்வேறு கோணங்களிலிருந்தும் தகவல்களைத் திரட்டி அவற்றுக்கு உருவம் கொடுப்பவர்களே பத்திரிகையாளர்கள். ஆனாலின்று பத்திரிகைச் சுதந்திரமும் கட்டுப்படுத்தப்பட்டு, சிறைப்படுத்தப்பட்ட நிலையிலேயே உலக ஊடக தினம் முன்வைக்கப்படுகின்றது..

எத்தகைய நெருக்கடியிலும் மக்களுக்கு நடுநிலையான செய்திகளை பத்திரிகைகளினூடாக வழங்க வேண்டியது பத்திரிகையாளர்களின் கருத்தாகும். ஒரு நாட்டின் தலைவிதியை மாற்றியமைக்கக்கூடிய வல்லமை இப் பத்திரிகைக்குண்டு.

நவீன தொடர்பாடலின் வளர்ச்சியும், பன்முகப்படுத்தலும் , ஆக்கிரமிப்பும் இன்றைய கால பத்திரிகைத்துறைக்குச் சவாலாக அமைந்தாலும் கூட, அதற்கீடுகொடுத்து செயற்படும் பத்திரிகைத்தறை சார்பானவர்களின் முன்னெடுப்புக்களால் பத்திரிகைத்துறை காலாவதியாகிவிடவில்லை. ஆரோக்கியமான செய்தி தாங்கலுடன் எம் கரங்களைத் தழுவியே நிற்கின்றது.