About Me

2013/03/08

அழகான வாழ்க்கை



செவ்விதழ் அதரம் நுகர்ந்து
செம்பிறை நுதல் மத்தியில் - உன்
செந்நிற திருமாங்கல்யம் சூட்டி
திரையிட்டாய் என்னை உன்னுள்
இறைசாட்சியுடன்!

என்னிரவிலும் உலாவும்
பகலவன் நீயாயினன் - மன
அகிலத்தின் உயிருமாயினன்!

கணையாழி யிலுனைப் பூட்டி
இணையாகினாய் பல நாழி!
உன் துணை நானென இறைவன் படைக்கையில்
அனலிட்ட மெழுகாய் அவஸ்தையுமேனோ!

சகதியில் சயனிக்கும் ஆம்பலும்
மறக்குமோ ஆதவக் காதலை....
பாவை சிதைந்தேனுன் வார்த்தையில்
தகுமோ செந் தணல் நீ வார்ப்பது!

இடையுடைந்தது உயிரும் மெலிந்தது
உன் மௌனச் சமரில் ஆவியும் தொலைந்தது!
கருவளையும் எழிலுடைத்தது
பருவமும் குற்றுயிராய் வீழ்ந்து தவித்தது!

நம் பனிப்போரின் அறைகூவல்
ஓயவில்லையின்னும்
நானோ உன் சொப்பனத்தின் கதவருகே
காத்திருக்கின்றேன்-நீயோ
செவிடாக வேடம் தரிக்கின்றாய்
அற்புதமாய்!

காதல்
வார்த்தையல்ல வாழ்க்கை!
உணர்ந்து கொள்
அழகான வாழ்க்கை நம் கையில்!

Jancy Caffoor

 




உயிர்ப் பூ

இவள் ..............

மெல்லிய சிறகு சுமக்கும்
மலரிதழ்!

தன் குறும்புகளால்
காற்றையும் பூட்டி வைக்கும்
சாகஸக்காரி!

இவள் மொழி வார்ப்பில்
மழலை இலக்கியம்
அழகான சரிதமாகின்றது!

கடல் பூக்கள்
நுரையைச் சிந்தியே
சரந் தொடுக்கின்றன புன்னகைகளை!

மெல்ல விழி சுருக்கி
கண்சிமிட்டும் அவள் பார்வையில்
விண்மொட்டுக்கள்
கண்ணயர்கின்றன மெய் மறந்து!

சிற்பமொன்று வெப்பமுறிஞ்சி
சொற்களை அள்ளி வீசி
கவி புனைந்து பண் பாடும்
இவளருகினில் மெல்ல வந்தால்

இவள் சாலையில்
விட்டுச் செல்லும் நிழல்களெல்லாம்
குடையாய் முளைத்து நடை பயிலும்
நம் புவி காக்கும் படைகளாய்!

முப்பத்தாறு மாதங்கள் முகிழ்த்த
முழு நிலவுக்காரி யிவள்
முழு நிலவையும் தன்னுள் ஏந்தும்
மயில் கொண்டைக்காரி!

இத்தனைக்கு மிவள்
அற்புதக் குழந்தையல்ல
அன்பால்
இயற்கையை நேசிக்கும் அன்புக் குழந்தை!

   - Jancy Caffoor-
         08.03.2013



உன்னில் தொலைந்த நான்

பனிச் சலசலப்பில்
பாதையோரம் உதிர்கின்றன - உன்
நினைவுச் சருகுகள்!

என் அகவெளிப் பட்சிகள்
கொட்டிச் செல்கின்றன - உன்
இராச்சியத்தின் தூதோலைகளை!

நீ நடந்து வந்த திக்கெல்லாம்
நீவி நிற்கும் முட்களெல்லாம்
வாந்தியெடுக்கின்றன - உன்னுள்
குந்திக் கொண்டிருக்கும் கோபங்களை!

நினைக்கவேயில்லை - உன்
கனவு வேர்களை
வெட்டிச் சாய்க்கும் கோடாரி நானென!

உன் ரசிப்புக்களால் சிலிர்த்த கவிதைகள்
இன்று
எங்கோ வெறிக்கின்றன
மங்களத்தை தொலைத்தபடி!


   - Jancy Caffoor-
         08.03.2013

எங்கிருக்கின்றாய்........



எங்கிருக்கின்றாய்

எகிறிக் குதிக்கும் காற்றிடம்
செல்லமாய் முணங்கினேன்!
பதுங்கிக் கொள்கின்றது - என்
மூச்சோரம்!

எங்கிருக்கின்றாய்

வெட்கமின்றி சொற்களிடம்
கேட்கின்றேன்
சுட்டிக் காட்டுகின்றன - என்
வார்த்தைகளை உடைத்துப் பாரென்று!

எங்கிருக்கின்றாய்

மனசிடம் மன்றாடிக் கேட்கின்றேன்
மெல்ல வருடுகின்றதென்னை
உன்னுள் திறந்து பாரென்று!

எங்கிருக்கின்றாய்

என்னுள்தானா
நான் நீயாகும் போது
நமக்குளேது பிரிவு!


   - Jancy Caffoor-
         08.03.2013