About Me

2013/04/15

அழகான அவஸ்தை


காதலித்துப்பார்.........

பட்டாம் பூச்சிகளின் தேசமாய்
நம் ஹிருதயம் பிரகடனமாகும்!

வாழ்க்கைக்குள் கனவு மாறி......
கனவுக்குள் வாழ்க்கை விழ்ந்து போகும்!

நிலவின் மடி மீதில் நினைவுகள் கவிழ்ந்து நிசர்சனமாய் உலா வரும்
காதல் வாசம்!

நம்மை ரசித்து ரசித்தே கண்ணாடி தேயும்
விம்பமாய் காதல் நெஞ்சம்
இரசத்தில் ஒட்டிக் கிடக்கும்!

வானவில் இறங்கி தலை வருடும்
தென்றல் சுவாசமாகி
உடலோரம் வேலி போடும்!

நினைவுகளில் ஒரு முகமே சுழன்றடிக்கும்
முத்தங்களின் தீப்பொறிகள்
குளிராய் உருகி உணர்ச்சி தொடும்!

காதலித்துப்பார்.....
கானல் நீரெல்லாம் பனித்துளியாய் உருகும்
கானகம் கூட பூங்காவனமாய் மாறும்!

மார்ப்புத் தசைக்குள் மயக்கங்கள் நிறையும்
வியர்வைத் துளிகளில் நாணம் கரைந்து
பக்கம் வர தேகம் துடிக்கும்!

ஈருயிர்கள் ஓருயிராகி  ....
விரல் தொடும் ஸ்பரிசித்து.....
ஆருயிர் குரல்த்தொனியில் ஆவி துடித்தெழும்!

காதலித்துப்பார்....
கவனம் எல்லாம் திசைமாறும்
பசி கூட மறந்து போதும்

காதலித்துப்பார்...
காதல் அவஸ்தையல்லா.....
அழகான அன்பு!
ஒத்துக் கொள்ளுவாய்
ஓரவிழி பார்த்துக் கொண்டே!

காதலித்துப்பார்..........
தனிமை பறக்கும் - இதயங்களோ
இரம்மியத்தில் துடித்தெழும்!

காதலித்துப் பார்..........

உனக்குள் நானாய்
எனக்குள் நீயாய்
புதுவுலகில் கிறங்கிக் கிடக்க
காதலித்துப்பார்!

மீளாத் துயரில் பர்மா

மியாண்மார் ரோஹிங்கியா!

ஒவ்வொரு பகலையும் இரத்தக் கறைகளால்
பூசி மெழுகும்
அக்கிரமக்காரர்களின் வாசற்தலம்!

ஒரு கோடி முஸ்லிம்களின்
நாடித்துடிப்படக்க
பஞ்சபூதங்களை தம் பூதங்களாக்கும்
மதவாதிகளின் கொலைத் தளமிது!

ஹராங்களின் போஷிப்புக்களினால்
கோஷமிடும் மரணங்களால்
மியண்மார் எரிந்து கொண்டிருக்கின்றது
பௌத்த தீவிரவாதத்தால்!

இனவாதம் அனல் கக்கும் இப்
பௌத்த வேள்வியில்
நரகங்களின் ஆட்சி பீட ங்களாக
மேடையேற்றப்படுகின்றனர்  பிக்குகள்!

புத்தரின் அஹிம்சையில் கூட
சத்தமின்றி புழுக்களைக் கரைக்கும் இம்மாக்கள்
சரித்திரத்தில் பதிக்கின்றனரிங்கு
இன்னுமொரு பர்மாவை!

இனவெறியின் உச்சக் கட்டமாய்
அர்ச்சிக்கப்படும் கந்தகப் பூக்கள்
கருக்கி உதிர்க்கின்றன முஸ்லிம் உம்மாக்களை
மயானங்களில் புதைப்பதற்காய்!

மண்டையோடுகளும்
மரண ஓலங்களும்
பாளியின் வார்த்தைகளாய்
காவிகளால் மனனமிடப்படுகின்றன வெறியோடு!

கொல்லாமை பற்றி இடிமுழக்கங்களுக்குள்
மனித புதைகுழிகள்
மறைத்து வைக்கப்படுகின்றன
தினசரி வேதமோதும் ஹாமதுருக்களால்!

கல்பில் தீனேந்தி அண்ணல் நபி வழி நடக்கும்
முஹ்மீன்களின் தியானச் சுவடுகளில்
ரத்தக் கறை நிரப்பும் காட்டேறிகளாய்
பௌத்தமோதும் காவிகள்!

மனிதங்களில் புனிதம் தொலைக்கும்
பௌத்தம்
அராஜகத்தின் ஆயுதங்களாய் தம்மை
தடம்பதித்துக் கொண்டிருக்கின்றதிங்கே!

காவிகளின் கல்லடியில் ரத்தம் சிதைக்கும்
மியாண்மர்
பாவிகளின் சொப்பன  சிம்மாசனத்திற்காய்
கரைத்துக் கொண்டிருக்கின்றது உயிர்களை!


- Jancy Caffoor-
     15.04.2013


2013/04/14

பாடகர் பி.பி.சிறினிவாஸ்



பழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் அவருக்கு எமது அஞ்சலி
----------------------------------------------------------------
 திரையுலகின் ஓரங்கமே திரையிசைப் பாடல்கள். அந்த வகையில் காலத்தில் அழியாத பாடல்கள் பலவற்றையும், அவற்றை உயிர்ப்பித்தோரையும் தென்னிந்திய திரையுலகு தந்து கொண்டுதான் இருக்கிறது. வயது வேறுபாடின்றி இன்று நாம் ரசிக்கின்ற பல பழைய பாடல்கள் இருக்கின்றன. சில நவீன இசையமைப்பில் துள்ளல் வடிவம் கூட பெற்றுள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. அந்த வகையில் நான் ரசித்த பாடல்களுள் "நிலவே என்னிடம் நெருங்காதே" ஒன்றாகும். ஜெமினி கணேசன் பாடுவதைப் போன்ற பிரமிப்பினை ஏற்படுத்தியவர், தமிழ் சினிமாவில் பழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் என்றால் மறுக்கவா போகின்றீர்கள். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 12 இந்திய மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

 கடந்த சில நாட்களாக உடல்நலம் மோசமான நிலையில் இருந்து வந்த நிலையில் இன்று (14.4.2013) அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது. இறக்கும் போது அவருக்கு வயது 82.

காலமான பி.பி.ஸ்ரீநிவாஸ் 1934-ம் ஆண்டு செப்டம்பர் 22ம் நாள் ஆந்திராவில் காக்கிநாடா மாவட்டத்தில் பிறந்தார். தமிழ்த் திரை இசை உலகில் டி.எம்.சௌந்தரராஜன் புகழின் உச்சியில் இருந்த காலத்தில் ஸ்ரீநிவாஸ் அவருக்கு அடுத்த இடத்தில் விளங்கினார். வெண்கலக் குரலில் பாடிவந்தோர் காலகட்டத்தில், மென்மையான குரலால் இனிமையைக் கூட்டி பாடுவதில் ஒரு புதிய பாணியை கொண்டுவந்தவர் பி.பி.ஸ்ரீநிவாஸ்.

'காலங்களில் அவள் வசந்தம்', ‘மயக்கமா கலக்கமா’, ‘நிலவே என்னிடம் நெருங்காதே’ என காலத்தால் அழியா பாடல்களை பாடிய அற்புதமான பாடகர். தமிழ்ப் படங்களில் ஜெமினி கணேசன், கன்னடத்தில் ராஜ்குமார் ஆகியோரின் அனைத்துப் படங்களிலும் இவர்தான் பின்னணி பாடியுள்ளார்.

பி.பி.ஸ்ரீநிவாஸ் மறைவிற்கு நாமும் எம் அஞ்சலியைச் செலுத்துவோமாக!

ஒரு கலைஞனின் உடல் அழியலாம், ஆனால் விட்டுச் சென்ற கலைகள் என்றும் வாழ்ந்து கொண்டுதான்  இருக்கும்.


-Jancy Caffoor-








ஒளித் தூரிகை


நீ சொன்னால்..........
பொய்களும் மெய் போலாகும்
நீ என்னவனென்பதால்!
========================== 


அங்கே.............
குடைக்குள் கோடை கழிக்கும்
காளானாய் நீ!

இங்கே.........
மாரிக்குள் ஒப்பாரி வைக்கும்
கிணற்றுத் தவளையாய் நான்!

நம் உணர்வுகள்
மையப் புள்ளியில் சந்திக்க...........
பார்த்தாயா...............
நம் தேசங்கள் நம்மை
வெவ்வேறு துருவங்களாய் மாற்றுகின்றன!

============================ 



"நம்மட சூரியன் பயணிக்கிற பாதையில 12 ராசி இருக்கு, அதில முதலாவது ராசியாக மேடமும் ,  12வது ராசியாக மீனமும் இருக்கு. சூரியன் மீன ராசியில இருந்து மேட ராசிக்கு பயணிக்கிற அந்த நிகழ்வத்தான் புதுவருஷமென்று சொல்லுறம்"



நான் என் வகுப்பு மாணவர்களுக்கு புதுவருடப்பிறப்பினை விஞ்ஞான ரீதியில் விளக்கிக் கொண்டிருக்க, தம் அயல் மக்களின் பண்பாட்டு நிகழ்வுகளை ஞாபகப்படுத்தியவாறு மாணவர்கள் திருப்தியுடன் தலையாட்டுகின்றனர்...

இதுல உங்களுக்கு ஏதாவது புரியுதா..

புரியலைன்னா பரவாயில்லை..............

நாளை சித்திர வருடப்பிறப்பைக் கொண்டாடும் என் நேசங்களுக்கு முன்கூட்டிய புதுவருட வாழ்த்துக்கள்
====================================== 

நமது வார்த்தைகள் எப்பொழுது பிறர் முன்னிலையில் பெறுமதி இழக்கின்றதோ, அத் தருணமே. மௌனம் நம் பெறுமதியைக் காக்கும் கேடயமாக மாறி விடுகின்றது!

================================ 



என் கனவுக்கூடுகளில் உன்னை நிரப்பி
போகின்றேன் என் தேசம் தோறும்!
வா.........
வசந்தத்தின் இருக்கைகள் கூட
நாமாகட்டும் !

மயிலிறாகால் வருடும் என்
ரஞ்சிதப் பொழுதுகளெல்லாம் - உன்
அன்பின் விடியலில் மட்டும்
முகம் பார்த்துக் கொள்ளட்டும்!

வா............................
நம்................
தேசத்தில் நாம் மட்டுமே
ஆளுபவர்களாய்!
============================== 



அன்பின் துளிகள் சிந்தும் ஒவ்வொரு இடங்களிலும்
அன்னையே......................
நீயே உன் முகங்காட்டுகின்றாய்!
================================= 


மழை வருது மழை வருது குடை கொண்டு வா.......
இப்படித்தான் இப்ப எங்க ஊரும் பாடிக் கொண்டிருக்கின்றது...மழை வந்தால் நல்லதுதான். ஆனால் இன்னொரு பிரச்சினை இருக்கே!

அது மின்னல்..........

நேற்று ராத்திரி அக்கம் பக்கம் கேட்ட மத்தாப்புக்கள விட, இந்த மின்னலும், இடியும் அட்டகாசமாக கொட்ட ஆரம்பிச்ச நேரம்,


(எங்கேயோ பக்கத்தில விழுந்திருக்கணும்..டியூப் லைட்ட யாரோ உடைக்கிற மாதிரி சத்தமும், வெளிச்சமும்)


எனக்கு வந்த நினைவுதான் இந்தப் பதிவு.....

அருகே கந்தக வாசம் அதாவது தீக்குச்சி எரிக்கிற போது வருகிற வாசம் வந்தால் கொஞ்சம் உஷாரா இருங்க.....ஏனென்றால் எங்கேயோ இடி விழப்போகுதுன்னு அர்த்தம்!

சிலர் கோபத்தில தலைல இடி விழட்டும் என்று சொல்வீங்கதானே..........இனி அப்படி சொல்லாதீங்க!
ஏனென்றால் எதிரி கூட கருகிச் சாக வேண்டாமே!
================================== 



உடன்பாடுகளும், முரண்பாடுகளும் நம் மன எண்ணங்களிலிருந்தே வேர் விடுகின்றன. வேற்றுமையிலும் ஒற்றுமை காணப் பழகி விட்டால் நிம்மதியின் நிதர்சனத்தில்  நம் வாழ்வும் இளைப்பாறும்!

- Ms. Jancy Caffoor -