About Me

2014/09/20

என்ன சத்தம் இந்த நேரம்



என்ன சத்தம் இந்த நேரம்...திரை விமர்சனம்
----------------------------------------------------------------------

நான் பார்த்து ரசித்த திரைப்படத்தில் இதுவுமொன்று!

அடடா....தலைப்பே ஒரு திரிலா இருக்கே..அப்போ படம் வித்தியாசமாகத்தான் இருக்குமோ?

மனசு எதையோ எதிர்பார்க்க...

கணனி காட்சிகளை உருட்டுகின்றது கண்ணுக்குள்!

4 ஒரே சூல் குழந்தைகள்...

கண்களை உருட்டி சிரிப்பூக்களை உதிர்க்கும் வாய் பேச முடியாத, காது கேட்காத குழந்தைக் கதாபாத்திரங்கள் அவை!

நம்மை திரும்பிப் பார்க்க வைக்கின்றனர்......

அதிதி, அக்ரிதி, அக்ஷிதி, ஆப்தி என்கிற  பேசும் திறன்கொண்ட  இந்த நான்கு பேரும் மாற்றுத்திறனாளிகளாக தங்களது நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஜெயம் ராஜா, மானு தம்பதிகளுக்கு காது கேட்காத , வாய்பேச முடியாத ஒரே பிரசவத்தில் பிறந்த இந்த 4 குழந்தைகள்..!

இக்குழந்தைகளின் எதிர்காலத்திற்காக பணத்தை உழைப்பதில் ஆர்வப்படும் கணவனை விவாகரத்து செய்து விட தீர்மானிக்கின்றார் மனைவி மானு..

 தனது காதலனை அன்றைய தினம் 3 மணிக்கு பெற்றோர் அறியாமல் களவாய் திருமணம் செய்ய தீர்மானித்திருக்கும்  மாளவிகா ரீச்சர் தலைமையில் மானு தனது 4 குழந்தைகளையும் அருகிலிருக்கும் உயிரியல் பூங்காவிற்கு கல்விச்சுற்றுலா அனுப்பி வைக்கின்றார் .

அங்கு பணிபுரியும் இமான் அண்ணாச்சி, நிதின் சத்யாவின் அலட்சியத்தால் மிகப்பெரிய மலைப்பாம்பு ஒன்று கூண்டிலிருந்து தப்பித்து வெளியே வந்துவிடுகிறது. அதனைக் கண்டதும் பதற்றத்துடன் எல்லோரும் பூங்காவை விட்டு வௌியே ஓடி வரும்போது அந்த நான்கு குழந்தைகளும் மலைப்பாம்பு ஊர்ந்து திரியும் பிரதேசத்தில் சிக்கி விடுகின்றனர்.

உயிரியல் பூங்காவிற்கு வௌியே காவல் துறையினருடன் பொது மக்கள் பெற்றோர்கள் மீடியாக்கள் எல்லோரும் பதற்றத்துடன் போராடிக் கொண்டிருக்க, ரீச்சர் மாளவிகாவோ, காவல்காரர் நிதின் சத்யாவுடன் சேர்ந்து உயிரியல் பூங்காவினுள் குழந்தைகளைத் தேட ஆரம்பித்து விடுகின்றார்..

அங்கே.......

குழிக்குள் வீழ்ந்த குட்டியை, மற்ற குட்டீஸ் காப்பாற்றி பூங்காவை விட்டு வௌியேற வழி தேடிக் கொண்டிருக்கும் நேரம்

 மலைப்பாம்போ வெறியுடன் ஊர்ந்து ஊர்ந்து இவர்களை விரட்டுகின்றது..

விஷயம் தெரிந்து ஜெயம் ராஜாவும் காவல் துறையினரின் அனுமதியுடன் தனது வாகனத்திலேயே உயிரியல் பூங்காவிற்குள் நுழைந்து தன் மகள்களை காப்பாற்றப் போராடுகின்றார்...

 அந்த இறுதிக்கட்டக்காட்சிகள் விறுவிறுப்பானவை..

இப்படத்தில் லேசான காதல், விறுவிறுப்பான மோதல், தந்தையின் அன்புக்கு ஏங்கும் குழந்தைகள், கொஞ்சம் சிரிக்க வைக்கும் காமடி என திரைப்படம் நகர்கின்றது...

குழந்தைகளின் பெற்றோர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா?
மாளவிகா தனது காதல் கணவனுடன் ஒன்று சேர்ந்தாரா..
பாம்பு இறந்ததா...
என்பதுதான் விறுவிறுப்பான மீதிக்கதை?

நான்கு குழந்தைகளும் மிகப்பெரிய ஒரு கிராபிக்ஸ் பாம்பும் இருப்பதால் இத்திரைப்படம் நம்மை விரும்பிப் பார்க்க வைக்கின்றது..

 ‘என்ன சத்தம் இந்த நேரம்’ –

இது பாம்போட சத்தமா
இல்லை குட்டீஸ்களின் குறும்பு சத்தமா
அல்லது தற்கொலை செய்ய முயற்சித்து அடி வாங்கும் நிதின் சத்யாவின் அலறல் சத்தமா....
மாளவிகா ரீச்சரோட காதல் டூயட் சத்தமா..
பெற்றோரின் சண்டைச் சத்தமா....

நடிகர் : ஜெயம் ராஜா
நடிகை : மானு
இயக்குனர் : குரு ரமேஷ்
இசை : நாகா
ஓளிப்பதிவு : சஞ்சய் லோகநாத்

படம் பார்த்திட்டு நீங்களே முடிவு பண்ணுங்கள்..

- ஜன்ஸி-


அப்சரஸ்



அப்சரஸ் - திரைவிமர்சனம்
---------------------------------------

ஓவியர் ரவிவர்மன்!

வாழ்க்கை வரலாற்றை ஆவலுடன் பார்ப்பதற்காக அப்சரஸூக்குள் நுழைந்தேன்..

ஓவியராய் பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன்...

அமைதியான பொருத்தமான தோற்றம்.

காதல் வசப்படும்போதும், ஓவியம் வரைதலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தும்போதும் உணர்ச்சி ரேகைகளின் குத்தகை அவர் அங்க அசைவுகளில்!

பிரபல ஓவியர் ரவிவர்மனின் வாழ்க்கை வரலாற்றின் ஒரு பகுதிதான் அப்சரஸின் கதை. ரவிவர்மன் அழகின் நயங்களை யதார்த்தமாக வரையக்கூடிய மிகச் சிறந்த ஓவியர்.

உண்மையில் ஓவியமானது உள்ளத்துணர்வுகளை உருவங்களாக்கி பரவசம் கொள்ளச் செய்யக்கூடியது.அந்தவகையில். ரவிவர்மனின் ஓவியக்கலையின் ஈர்ப்பானது பல பெண்களின் மனதை ஊடுருவிச் செல்லக்கூடியது. இதனால் ஓவியம் வரைவதற்காக வரும் மாடல் பெண்களை, தன் வசீகரத்துள் வீழ்த்தி அவர்களை ஓவியங்களாக்குவதில்  அவர் கைதேர்ந்தவர்.

அவ்வாறு வரும் மாடலழகிகளுள் ஒருத்திதான் நித்யாமேனன். அவர் வரைந்த ஓவியங்களை பார்த்த நித்யாமேனன் அவர்மேல் ஈர்ப்பு கொண்டு அவருடனேயே மானசீகமாக வாழத்தொடங்குகிறார். அவ்வாழ்க்கையின் பிரதிபலிப்புத்தான் ரவிவர்மன் மீதான காதல்..

காதல்........

உணர்வுகளின் சங்கமம். ஈர்மனங்களின் உற்சாகக்கூவல். அன்பின் அலையடிப்பை இருதயத்துடிப்புக்களில் சுமக்கும் அற்புத அலைவு.

ஆனால் ....

ஓவியருக்கோ நித்யாமேனனின் அன்பு பொருட்டாகத் தெரியவில்லை. அழகை ரசித்தார். அவரது கரங்களும் தூரிகைகளும் அவளின் மென்னுடலை ஸ்பரித்துச் சென்றதே தவிர , அவளின் அன்பை ஸ்பரித்துச் செல்லவில்லை. தன்னைக் கணவனாகமனதிலிருத்தி வாழும் அவளை, அவனோ  தனது தேவைகளுக்கு மாத்திரமே பயன்படுத்தும் பாண்டமாகவே கருதினான்.

விளைவு....

வேதனை உணர்ச்சிக் கொந்தளிப்புக்களின் பிராவகம் அலையடிக்க ...
அவளோ சோகத்தில் இறந்து விடுகின்றாள்.

பின்னர் .....

ரவிவர்மன்,  கார்த்திகாவை தற்செயலாக பார்க்கிறார். அவளின் அழகின் ஈர்ப்பில் மயங்கி,  கற்பனையால் தனது தூரிகையை உயிர்ப்பாக்கி பல ஓவியங்களை வரைகின்றார். தான் வரைந்த ஓவியங்களை கார்த்திகாவுக்கு காட்டும்போது, தனது மேனியை நிர்வாணப்படுத்தும் ஓவியத்தை அவள் கண்டதும் கோபத்தில் கொதித்துப் போகின்றாள்..

அவளின் கொதிப்பை ஓவியரோ பல புராணக்கதைகளைக்கூறி சமாதானப்படுத்த  ஈற்றில் இருவருக்கிடையிலும் மெல்லிய காதல் நூலிலழையோடுகின்றது.

இந்நிலையில் .....

அப்பாவி பெண்களை மயக்கி நிர்வாணப் படம் வரைந்து விற்பனை செய்வதாகவும், வேசி பெண்களின் மாடல்களைப் பயன்படுத்தி கடவுள்களின் உருவங்களை வரைந்து விற்பனை செய்வதாகவும் அவர்மீது போலீஸில் புகார் செய்யப்படுகிறது.

கூறப்பட்ட புகாரில் இருந்து சந்தோஷ் சிவன் தப்பித்தாரா?
காதலி கார்த்திகாவை கைப்பிடித்தாரா என்பதுதான் க்ளைமாக்ஸ்.

ஓவியருக்குரிய அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பை சந்தோஷ் சிவனுக்கு வௌிப்படுத்த, மறுபுறமோ கார்த்திகாவின் கவர்ச்சி அதிரடி!

எனினும் ஓவியத்திற்கு போஸ் கொடுக்கும்போது கார்த்திகா தரும் முகபாவனைகள் ரசிக்கும்படி உள்ளது.

இது ரவிவர்மனின் கதைதான்  எனும் எதிர்பார்ப்பில் விழிகள் திரைப்படத்தை மேயும்போதுதான் நாம் ஏமாற்றப்படுவதை உணர்கின்றோம்...

ஏனெனில் .....

கதையை விட கவர்ச்சியின் பின்னனியில்தான் கதை நகர்கின்றது என்பதை இயக்குனர் லெனின் ராஜேந்திரன்மறைமுகமாகச் சொன்னாலும்கூட,
மது அம்பாட்டின் ஒளிப்பதிவுக்கு ஒரு சபாஷ்!

அப்சரஸ்...

ஓவியப் பெண்களின் மேனியழகை ஆண்கள் மனதில்  கொளுத்தும் வெடி !
ஆண்களை அசர வைக்கும் கவர்ச்சி அதிரடி!

- ஜன்ஸி-

தூறல் - 2

கூடு விட்டு தாண்டி வந்தேன்
உன் நெஞ்சவீடும் எனக்கில்லையே
குழந்தையாய் நானிருந்தால்
குற்றம் நீயும் காண்பாயோ!
---------------------------------------------------------- 

உதயத்தில் ஓர் அஸ்தமனமாம்..
உன்னால்
உருக்குலைந்த என் னுணர்வுகள்
இன்று
நடைபயில்கின்றன மயானம் தேடி!
----------------------------------------------------------- 
முற்றுப்புள்ளிகள் வெறும் நிறுத்தமல்ல
அடுத்த தொடரை ஆரம்பிப்பதற்கான அழைப்பு!
---------------------------------------------------------- 

சிலரது ஏமாற்றம் தரும் தடுமாற்றம்கூட
நல்லதோர் வாழ்வுக்கான மாற்றமாகலாம்!
-------------------------------------------------------- 

ஒருவர் நம்மீது கொள்ளும் மரியாதை யினளவை
நாம் பேசும் வார்த்தைகள்தான் தீர்மானிக்கின்றன!


- Jancy Caffoor-




வலி



மனதை திறந்த புத்தகமாகத்தான் வைத்திருந்தேன். அதனாற்றான் காற்றின் சீண்டல்களாய் நம் வார்த்தைகள் உரசிச் சென்றதில் உரிமை கோருகின்றன சண்டைகள்!

சண்டைகள் சாக்கடைகள்தான்!
இருந்தும்.........
திரும்பிப் பார்க்க வைக்கின்றன அன்பை!
-----------------------------------------------------------------------------------------

வார்த்தைகளின் போதுதான்
மௌனத்தின் மதிப்பு தெரிகின்றது!

மௌனத்தின் போதுதான்
வார்த்தைகளின் அருமை புரிகின்றது!!

ஆகவே.....
சந்தர்ப்பங்களும்  சூழ்நிலைகளும்தான்  நம்மை பேச வைக்கின்றன!
-------------------------------------------------------------------------------------------
மௌனம்
தனிமையின் மொழி!
தனிமையோ
வலிகளின் வழி!
--------------------------------------------------------------------------------------------

மொழியும் ஒலியும்
மௌனம் கொள்ளும் நேரம்...
தனிமை எனக்குள்
இனிமையின்றி!
-------------------------------------------------------------------------------------------

பிரச்சினைகளைப் புரிந்து விட்டுக் கொடுத்து வாழும் வாழ்க்கையில் வலி இருந்தாலும்கூட, அடுத்தவர் சந்தோஷம் உணர்தலும் ஒர் இன்பமே!
--------------------------------------------------------------------------------

அவமானங்கள் தரும் வலிகூட கடும் உழைப்பால் முன்னேற்றத்திற்கான வழியாகலாம்!


- Jancy Caffoor -