About Me

2012/07/19

உயிர்.........




கருத்தரித்தல் என்பது கருக்கட்டலில் இருந்து பிறப்பு வரையிலான காலமாகும். இது 266 நாட்களாகும் ( 38 வாரங்கள்)

இறுதியான மாதவிடாய் காலத்திலிருந்து 280 நாட்கள்
(40 வாரங்கள்) கணிக்கப்படுகின்றன.



கர்ப்பம் தரித்தலுக்கான ஆரம்ப அறிகுறிகள்
------------------------------------------------------------
1. மாதவிடாய் தடைப்படல்
2. வாந்தி
3. முலைகள் பருமனடைதல்
4.சில வகை உணவுகளில் விருப்பு
5. அடிக்கடி சிறுநீர் கழித்தல்

கர்ப்பமடைந்திருப்பதை அறியும் பரிசோதனைகள்
-----------------------------------------------------------------------
1. முதலாவது மாதவிடாய் நின்ற காலத்திலிருந்து 10 வது 14 வது நாட்களில் செய்யப்படும் hCG பரிசோதனை....



பெண்களில் மலட்டுத் தன்மை ஏற்படக்காரணங்கள்
----------------------------------------------------------------------------
1. சூல்கொள்ளல் தடைப்படல்
2.பலோப்பியன் குழாய், கருப்பை, கருப்பைக் கழுத்து ஆகிய பகுதிகள் சேதம்     அடைந்திருத்தல்.
3..விந்தினுடைய பிறபொருளெதிரிகள் இருத்தல்.



ஆண்களில் மலட்டுத்தன்மை ஏற்படக்காரணங்கள்
-----------------------------------------------------------------------
1. தன்நிர்ப்பீடனம் ஏற்படல் (Autommunity)
2.சுக்கிலத்தில் குறைந்த எண்ணிக்கை விந்துகள் காணப்படல்
3.அதிகளவான அசாதாரண விந்துக்கள் காணப்படல்
4. விந்துக்களின் அசையும் திறன் குறைவு.
5. விந்துக்களின் வாழ்க்கைக் காலம் குறைவாகக் காணப்படுதல்



கருக்கட்டலின்போது பெண்ணின் பலோப்பியன் குழாயின் மேலந்தத்தில் காணப்படும் துணை முட்டைக்குழியம் மீது விந்து மோதும். அப்பொழுது விந்தின் தலைப்பகுதியும், நடுத்துண்டும் முட்டைக்கலத்தின் உட்பகுதியிற்கு ஊடுறுவும். இந்நிலையில் துணைமுட்டைக்குழியம் உயிர்ப்படைந்து ஒடுங்கற்பிரிவடைந்து விந்தின் கருவிலுள்ள குரோமோசோம்களுடன் இணைந்து கருக்கட்டலை நிகழ்த்தும்..

இக் கருக்கட்டப்பட்ட முட்டை நுகம் எனப்படும்..



                                                 முசுவுரு நிலை




இந்நுகம் 30-36 மணித்தியாலங்களில் பிளவடைந்து முசுவுரு (Morula) நிலையை அடையும்.

3 நாட்களுள் இம் முசுவுரு பலோப்பியன் கான் வழியாக கருப்பையை அடையும். அங்கு இக்கலங்கள் மீள ஒழுங்குபடுத்தப்பட்டு பந்து போன்ற நிலையை அடையும். இது அரும்பர் சிறைப்பை (Blastocyst) எனப்படும்.

இவ் அரும்பர் சிறைப்பை திரவத்தால் நிரப்பப்பட்டு அரும்பர்க்குழியை (blastocoel) உருவாக்கும்.

இவ்வாறு உருவாக்கப்பட்ட கலத்திணிவு முதிர்மூலவுருவாக மாற்றப்படும்.

போசணையரும்பர்களின் சடைமுளைகளால் 7-14 நாட்களுக்குள் அரும்பர் கருப்பை அகத்தோலுடன் உட்பதிக்கப்படும்.
 தாயிற்கும் சேயிற்குமிடையிலான போசணைப் பரிமாற்றத்திற்கான முன்னோடியாக இப்போசணையரும்பர் சடைமுளை யுதவுகின்றது. இவற்றிலேற்படும் மாற்றம் காரணமாகவே சூல்வித்தகம் உருவாக்கப்படுகின்றது. இது சூல்வித்தகத்தையும் மூலவுருவையும் இணைக்கின்ற கொப்பூள் நாண் ( Umbilical) ஆகும்.

                               பிறப்பின் பின்னர்  கொப்பூள் நாண் அறுக்கப்படல்




.


இவ்வாறு விருத்தியடையும் மனித முளைய விருத்தியை 3 மும்மாதப் பிரிவுகளாக நோக்கலாம்.
---------------------------------------------
முதலாம் மும்மாதம் (First trimester)
-----------------------------------------------
6-7 நாட்களில் கருக்கப்பட்ட முளையம் கருப்பையை வந்தடையும்.

4ம் வாரமளவில் அங்கங்கள் உருவாகும்.

கண்கள் விருத்தியடையும்

இதயம் உருவாகி இதயத்துடிப்பு ஆரம்பமாகும்.

3ம் மாத முடிவில் கண்கள்,மூக்கு, வெளிக்காது காணப்படும்

விரல்களில் நகங்கள் தோன்றும்.

குருதிக்குழாய்கள் உருவாகியிருக்கும். இதயத் துடிப்பை அறியலாம்

தலை பெரிதாகக் காணப்படும்.

நிறை 30 கிராம்


              8ம் வாரம்                                              
-




இரண்டாம் மும்மாதம் (4,5,6 மாதங்கள்)





நீளம் 25- 35 செ.மீ

நிறை 550 - 750 கிராம்

கண் மடல்கள் மயிர்களைக் கொண்டிருக்கும்

மனித முக இயல்பு

தலை ஓரளவு பெரிதாகவும் உடல் தோல் சுருங்கியும் இருக்கும்

தலையில் மயிர் முளைத்திருக்கும்

என்புகள் உருவாக்கப்பட்டிருக்கும்



மூன்றாம் மும்மாதம் (9 ம் மாத முடிவில்)
----------------------------------------------------------
நீளம் 50 செ.மீ

நிறை 3000 கிராம்

உடல் மயிர்கள் உதிரும்

விரல் நகம் நீண்டிருக்கும்

தலை சிறிதாகும்

விதைப்பையினுள் விதைகள் இறங்கியிருக்கும்

உடல் நன்கு விருத்தி







 பிறப்புச் செயற்பாடு (Birth Process )
  ---------------------------------------------
முதிர்மூலவுருவின் தலை கருப்பைக் கழுத்தை நோக்கித் திரும்பும்.

முதிர்மூலவுருவின் தலை அளவிற்கு கருப்பைக் கழுத்து விரியும்.

கருப்பை தசை சுருங்கும்

வலுவான சந்த அசைவுகளால் பிறப்புக்கானை நோக்கி (யோனிமடல்) முதிர்மூலவுரு தள்ளப்படும்.

10-45 நிமிடங்களின் பின்னர் சூல்வித்தகம் ) கொப்பூள்) நாண் வெளியேற்றப்படும்.

இதன் போது 350 கன சென்ரிமீற்றர் குருதி வெளியேற்றப்படுகின்றது.


                                        பிறப்பிற்கு அண்மித்த நிலை



                              குழந்தை பிறந்த பின்னர் கொப்பூள் நாண் அறுக்கப்படல்




உண்மையில் ஓர் தாயின் கருவறை சுமக்கும் கர்ப்பத்தின் மாற்றங்கள் வியப்பளிக்கக் கூடியவை. தான் சுமக்கும் கருவை நோய் நொடியண்டாது இப் புவிக்கு ஆரோக்கிய மனிதராக வழங்கத்துடிக்கும் அந்தத் தாய்மைக்கு நிகரேது

----------------------------------------------------------------
கருத்தரிப்பைத் தடுக்கும் சில முறைகளாவன
----------------------------------------------------------------
                                                           Contraceptive Pills




                                                              Various Color of Condoms

                                                        Couple Selecting Contraception


                                                                 Couple in Bed


                                                                 Family Planning


                               Young Teacher Standing in front of the blackboard...talking about it



                                                                       Minipill 
இது Progesterone ஐ கொண்டுள்ளது. இதனால் கருப்பைக்கழுத்தில் காணப்படும் சீதம் அதிகரித்து உட்பதித்தல் தடைப்படும்
Intrauterine devices (IUD)



         Intrauterine device (IUD)

இம் முறையில் கருப்பையில் சிறிய சாதனம் வைக்கப்பட்டு அதன் மூலம் ஏற்படும் கருப்பை மாற்றங்களால் உட்பதிதல் தடுக்கப்படுகின்றது

                                                         
                                                           Periodic abstinence
                              கருக்கட்டல் நடைபெறக்கூடிய காலத்தை தவிர்த்தல்


                                                                        Norplant  
இதுவோர் நவீன சத்திர சிகிச்சையாகும். இவ்வில்லைகள் ஆறு மேற்புயத்தின் தோலின் கீழாக சிறிய சத்திர சிகிச்சை மூலம் உட்பதிக்கப்படும்


                                                                     Tubectomy  
இது பலோப்பியன் குழாய் வெட்டப்பட்டு குழாயின் முனை இறுக்கி கட்டப்படும். இதனால் முட்டை கருப்பையை அடையாது.


Ms . Jancy Caffoor 

பெண்ணே....!



மனித வாழ்க்கையானது பிறப்பு, இறப்பு எனும் எல்லைப்படுத்தலுடன் மட்டுப்படுத்தப்படக்கூடியது. நாம் இப் புவியில் பிறந்துள்ளோம் என்பதை ஏற்றுக் கொள்பவர்களாக நாமிருப்பினும் நம் பிறப்பு பற்றிய ரகஸியங்களை விஞ்ஞானம் கற்பவர்களைத் தவிர இன்னும் பலர் அறியாமலே உள்ளார்கள்.

பெண் இனப்பெருக்கத் தொகுதி
-------------------------------------------------


பெண் இனப்பெருக்கத்தொகுதியில் பின்வரும் பகுதிகளுண்டு

1. சூலகங்கள்                                              2. சூலகக்கான்
3. கருப்பை                                                   4. யோனிமடல்

சூலகங்கள்
-------------------
வாதுமை வித்து வடிவில் 1 சோடி காணப்படும்.
சூலக இணையங்களால் கருப்பையுடன் இணைந்து காணப்படும்.
மேற்பட்டை, மையவிழையம் எனும் 2 பகுதிகளால் ஆனது.
மையவிழையத்தின் வெளிப்புறம் மூலவுயிர் மேலணிப் படை காணப்படுகின்றது.

இதில் பல்வேறு வகையான புடைப்புக்கள் காணப்படும்.
------------------------------------------------------------------------------

1. முதலான புடைப்பு                 2. துணையான புடைப்பு
3. கிராபியன் புடைப்பு                4. மஞ்சட் சடலம்
5. வெண்சடலம்


முதலாவது முதிர்ச்சியடையாத முதலான புடைப்பில் முதலான முட்டைக்குழியமும்,  அதனைச்சூழ ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள புடைப்புக்களும் காணப்படும்.

இவை FSHனால் தூண்டப்படும். திரவங்களால் நிரப்பப்பட்ட பல சிறுபுடகங்களை உருவாக்கி துணையான புடைப்புக்களை உருவாக்கும்.

திரவங்களால் நிரப்பப்பட்ட துணையான புடைப்புக்களில் முட்டை பதிக்கப்பட்டு  அவை கிராபின் புடைப்பு எனப்படும். இவை இரு மென்சவ்வுகளால் ஆக்கப்பட்டுள்ளது

முதலான முட்டைக்குழியம் ஒடுங்கற்பிரிவு-1 ஐ அடைந்து துணைமுட்டைக்குழியத்தையும் முதலாம் முனைவுடலையும்  உண்டாக்கும்.

இதன்போது நிகழும் சமனற்ற குழியவுருப்பிரிவு காரணமாக துணைமுட்டைக்குழியம் குழியவுருவைப் பெறும்.

கிராபியன் புடைப்பினுள் காணப்படும் துணைமுட்டைக்குழியத்தைச் சூழ ஆரைமூடிக்கலங்கள் காணப்படும்.


துணைமுட்டைக்குழியத்திற்கும், ஆரைமூடிக்கலத்திற்குமிடையில் ஜெலி போன்ற பதார்த்தம் காணப்படும்.

கிராபின் புடைப்புடைந்து துணைமுட்டைக்குழியத்தை வெளியேற்றும் போது மஞ்சட்சடலம் வெளியேறும்.

மஞ்சட் சடலம் சிதையும் போது நாரிழையங்களும், வெண்சடலமும் வெளியேறும்.

சூலகக்கான் (பலோப்பியன் குழாய்)
-------------------------------------------------
இதன் சேய்மையந்தம் புனலுருவாகவும் திறந்தும் காணப்படும். புனல் போன்ற பகுதியில் விரல் போன்ற அமைப்புக்கள் காணப்படும்.


மறு அந்தம் கருப்பையை ஊடுறுவிக் கருப்பைக் குழியில் திறக்கும்,

தொழில்
--------------
1. துணைமுட்டைக்குழியத்தைக் கொண்டு செல்லும்.
2. கருக்கட்டல் நிகழும்
3. முட்டைக்குழியத்தை கருப்பையை நோக்கிக் கொண்டு செல்லும்.

                                    பலோப்பியன் குழாயில் முட்டை செல்லுதல்



கருப்பை
-------------
அமைவிடம் -
இடுப்புக்குழியில் சிறுநீர்ப்பையிற்கும்,  பெருங்குடலிற்குமிடையிலுண்டு
பேரி வடிவம். முன்பின்னாகத் தட்டையாக்கப்பட்டுள்ளது.





















கருப்பையானது 3 பகுதிகளைக் கொண்டுள்ளது.  அவையாவன



1. கருப்பை அடிக்குழி
2, உடல்
3. கழுத்து

கருப்பையானது 3 படைகளாலானது
--------------------------------------------------
1 . கருப்பை அகத்தோல்













2. கருப்பை தசைப்படை













3. கருப்பைச் சுற்று











தொழில்கள்
-----------------
1. முளையம் உட்பதித்தல்


2, முதிர் மூலவுரு  தங்கியிருப்பதற்கு இடமளித்தல்


3. பிறப்பின் போது தசைச்சுருக்கத்தை ஏற்படுத்தல்



யோனிமடல்
------------------

தசை செறிவான இப்பகுதியே உள், வெளிப்பகுதியை இணைக்கும்.

துளைக்கண்மையில் சீதச் சுரப்பிகள் காணப்படும்.


 யோனிமடலின் தொழில்கள்
----------------------------------------

1. பிள்ளைப்பிறப்பிற்கான பாதை

2. சுக்கிலத்தைச் செல்ல விடும் பாதை





பெண் இனப்பெருக்கத்தொகுதியின் தொழில்கள்
-------------------------------------------------------------------
1. சூல் உருவாக்கம்



2. விந்து வாங்குதல்


3.முளையம், முதிர்மூலவுரு பாதுகாப்பு


4. குழந்தைக்கு போசணையும் பாதுகாப்பும்


5. குழந்தை வளர்வதற்கான சூழல்


6. துணைப்பாலியல்பு விருத்தி

- Ms.A.C.Jancy-



அறிவோம் எம்மை


கல்விசார் ஞாபகமூட்டல்
--------------------------------------
இப் பதிவை வாசிப்பதற்கு முன் உங்களுடன் நான் சில நிமிடங்கள் பேச வேண்டும் :



2012.07.21 ந் திகதி என் கல்விமாணிப் பரீட்சை- இரண்டாம் வருடத்திற்கான உயிரியல் வினாப்பத்திரத்தை எதிர்நோக்கிய நிலையில் நான் கற்ற விடயங்களை பரீட்சைக்கு ஆயத்தமாகும் பொருட்டான ஞாபகப்படுத்தலுக்காகவும், விஞ்ஞானப் பாடவிதானத்தில் இவ்விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதால் மாணவர்கள் தகவல்களைப் பெற்றுக் கொள்ளவுமே இவ்விடயங்களைச் மிகச்சுருக்கமாக என் வலையப்பூவில் பதிவிட்டுள்ளேனே தவிர வேறெந்த தவறான நோக்கமுமல்ல என்பதைத் தெரிவிக்கின்றேன்...........!

கற்பித்தலின் போது இவ் விடயங்கள் விரிவுரை மூலம் மாணவர்களுக்கு விளக்கமாக கற்பிக்க முடியாத சங்கடம் எனக்கு ஏற்படுவதுண்டு. எனவே அவர்களுக்கு இவ்விடயங்கள் பரீட்சைக்கான வழிகாட்டலாய் அமையும்.

மனித வாழ்க்கையானது பிறப்பு, இறப்பு எனும் எல்லைப்படுத்தலுடன் மட்டுப்படுத்தப்படக்கூடியது. நாம் இப்புவியில் பிறந்துள்ளோம் என்பதை ஏற்றுக்கொள்பவர்களாக நாமிருப்பினும் நம் பிறப்பு பற்றிய ரகஸியங்களை விஞ்ஞானம் கற்பவர்களைத் தவிர இன்னும் பலர் அறியாமலே உள்ளோம். 

ஓரினமானது தனது பாரம்பரீயங்களை தனது எச்சங்களை புதிய இனங்களுக்குப் பரப்பி, புதிய இனங்களை உருவாக்கும் செயற்பாடு இனப்பெருக்கம் எனப்படுகிறது. மனித இனப் பெருக்கமானது அகக்கருக்கட்டலாகவும், இலிங்கமுறை இனப்பெருக்கமாகவும் அமைந்துள்ளது. அதாவது ஆண், பெண் எனும் இலிங்கங்களின் இணைதலால் புதிய உயிரினம் பெண்ணில் பராமரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது இப்புவி வாழ்க்கைக்காக!



------------------------------------------
ஆண் இனப்பெருக்கத் தொகுதி
------------------------------------------
இது பின்வரும் பகுதிகளைக் கொண்டுள்ளது.

1. விதை
2. விதைமேற்றிணிவு
3. அப்பாற் செலுத்தி
4  வீசற்கான்
5. சிறுநீர் வழி



ஆண் இனப்பெருக்கத் தொகுதியானது  விந்துற்பத்தி, பெண் இனப்பெருக்கத்தொகுதியில் விந்து செலுத்துகை, ஓமோன் உற்பத்தி, சுக்கிலப்பாயம் உருவாக்கல், துணைப்பாலியல் உற்பத்தி போன்ற தொழில்களை மேற்கொள்கின்றன.

விந்துற்பத்தியின் வினைத்திறனை அதிகரிப்பதற்காக விதையானது விதைப்பையினுள் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1 - 2 பாகை வெப்பநிலை பேணல் உடலுக்கு வெளியே மேற்கொள்ளப்படுகின்றது.

விதையின் அமைப்பு பின்வருமாறு -
-------------------------------------------------
இது 800 வரையிலான சிறு சோணைகளைக் கொண்டுள்ளது, ஒவ்வொரு சோணையும் 1- 4 வரையிலான சுக்கிலச் சிறுகுழாய்களைக் கொண்டுள்ளது. சுக்கிலச் சிறுகுழாயின் வெளிப்புறமாக மூலவுயிர் மேலணிக் கலங்களும், Sertoli கலங்களும் காணப்படுகின்றன. மூலவுயிர் மேலணிக் கலங்களில் பின்வரும் கலங்கள் காணப்படுகின்றன.



 1. விந்துப் பிறப்பாக்கும் கலங்கள்

            
 2. முதலான விந்துக்குழியங்கள்


 3. துணை விந்துக்குழியங்கள்    

                  
 4. விந்தாகு கலங்கள்



Sertoli கலங்களானது இவை பயணிப்பதற்குரிய பாதையையும், போசணையையும் வழங்குகின்றன.



சுக்கிலச்சிறுகுழாயின் இடைவெளிகளிற் காணப்படுகின்ற Laydig கலமானது தெஸ்தெஸ்திரோஜின் எனும் ஓமோனைச் சுரக்கின்றது.



விதைமேற்றிணிவு
---------------------------
இதன் தொழில்களானவை:-

1. தற்காலிகமாக விந்துற்பத்தி
2. விந்தின் அசைவைக்கும், விருத்திக்கும் உதவுதல்
3.சுக்கிலப்பாயத்தின் ஓர் பகுதியைச் சுரத்தல்

அப்பாற் செலுத்தி
------------------------
ஒவ்வொரு விதைமேற்றிணிவுடன் தொடர்புபட்டதாக 2 காணப்படும். இதன் முனைவில் விரிமுனையொன்றும் காணப்படுகின்றது. இது வீசற்கானில் திறக்கின்றன. அவ்வாறே சுக்கிலச்சிறுகுழாயின் கானும் வீசற்கானில் திறக்கின்றன. இவ் வீசற்கான் சிறுநீர்வழியிற்கு கொண்டு செல்லப்படுகின்றன.

வீசற்கான்
--------------
2 வீசற்கானும், சுக்கிலப்புடகக் கானும் முன்னிற்கும் சுரப்பியினூடாகச் சென்று ஆண்குறியையும் அதனூடாக சிறுநீர்வழியையும் அடைகின்றன.

ஆண்குறி
----------------
இது தசை செறிவானது.

இதன் தொழில்களாவன
----------------------------------
1. சிறுநீர் வெளியேற்றம்
2. யோனியினுள் விந்துக்களை விசிறுதல்.


ஆண் இனப்பெருக்கத் தொகுதியுடன் தொடர்பான சுரப்பிகளாவன!
----------------------------------------------------------------------------------------------
1. சுக்கிலப்புடகம்       2. முன்னிற்கும் சுரப்பி      3. கூபரின் சுரப்பி

சுக்கிலப்புடகம்
---------------------


இது 1 சோடி காணப்படுகின்றது. அப்பாற்செலுத்தியுடன் இணைந்து காணப்படும். சுக்கிலப்பாயத்தின் பெரும்பகுதியை இதுவே சுரக்கின்றன.

இதன் தொழில்களாவன
-------------------------------------
1. யோனிமடலில் காணப்படும் அமிலத் தன்மையை நடுநிலைப்படுத்தல்.
2. மசகிடல்
3.விந்திற்கான சக்திமுதல்கள்
4. விந்து அசைதல்

முன்னிற்கும் சுரப்பி
-----------------------------


இது சிறுநீர்வழியைச் சூழ, சிறுநீர்ப்பைக்கு நேர் கீழே காணப்படுகின்றது, சுக்கிலப்பாயத்தின் 20 % இதனால் சுரக்கப்படுகின்றது. பால் போன்ற நிறம் இதன் மூலமே பெறப்படுகின்றது.

தொழில்கள்
------------------
1. யோனிமடலின் அமிலத்தன்மையை நடுநிலைப்படுத்தல்
2. விந்துக்களின் அசைவிற்கான ஊடகத்தை வழங்குதல்
3. மசகிடல்
4. சிறுநீர் வழியில் காணப்படும் அமிலத்தன்மையை நீக்குதல்

கூபரின் சுரப்பி
---------------------

பட்டாணியுருவான ஒரு சோடிச் சுரப்பியாகும். இது முன்னிற்கும் சுரப்பிக்கு கீழாகவும், சிறுநீரகத்தின் பக்கத்திற்கொன்றாகவும் காணப்படுகின்றன.

தொழில்கள்
--------------------
1. மசகிடல்
2. சிறுநீர்வழியில் காணப்படக்கூடிய அமிலத்தன்மையை நடுநிலையாக்கல்

சுக்கிலம் என்பது
-----------------------

விந்துக்களையும் துணைச்சுரப்பிகளின் சுரப்பிகளையும் உள்ளடக்கிய பாய்பொருளாகும். ஒரு தடவை இவை வீசப்படும் போது 2-5 மி.லீ சுக்கிலம் வீசப்படும். 1 லீற்றர் சுக்கிலத்தில் 20 மில்லியன் வரையிலான விந்துகள் காணப்படுகின்றன.

விந்தாக்கம்
----------------


இது சுக்கிலச் சிறுகுழாயில் நடைபெறும். இங்கு விந்துப்பிறப்புக்கலங்கள் (2n) இழையுருப்பிரிவடைந்து 2 கலங்களைக் கொடுக்கும். அவற்றுள் ஒன்று விந்துப்பிறப்பாக்கும் கலமாக மாற, மற்றையது முதல் விந்துக்குழியமாகக் காணப்படும்.

முதல் விந்துக்குழியம் ஒடுங்கற்பிரிவடைந்து - 1 துணை விந்துக்குழியத்தைத் தோற்றுவிக்கும்.

துணைவிந்துக்குழியம் ஒடுங்கற்பிரிவு-2 ஐ அடைந்து விந்தாகு கலங்கள் 4 இனைத் தோற்றுவிக்கும்.

ஒவ்வொரு விந்தாகு கலங்களும் 4 விந்துக்களை உருவாக்கும்.

விந்துக்களும், விந்தாகு கலங்களும் குழியவுருவை பெருமளவு இழந்திருக்கும்.

இவ் விந்துக்கள் சுக்கிலச்சிறுகுழாயின் உள்ளடக்கத்தை அடையும். ஆனால் மேற்பரப்பையடையும் போதே அவை இயக்கத்தன்மையை அடைகின்றது.

விந்துப்பிறப்பாக்கத்திற்கு எடுக்கும் காலம் 72 மணித்தியாலயங்கள்.

விந்தாக்கத்தில் ஓமோன்களின் பங்களிப்புக்கள்
-------------------------------------------------------------------
  • பரிவகக்கீழினால் GnRH ஓமோன் சுரக்கப்படும்.
  • இது முற்பக்க கபச்சுரப்பியினால் FSH, LH ஓமோன்கள் சுரப்பதைத் தூண்டுகின்றன.
  • FSH ஆனது Sertoli ஓமோனைத் தூண்டும். இது விந்துப்பிறப்பாக்கத்தைத் தூண்டும்.



Sertoli ஆனது அதிகளவு விந்துற்பத்தியை தடுப்பதற்காக Inhibin ஓமோனைச் சுரக்கும்.

LH ஓமோனானது Leydig கலங்களைத் தூண்டி Testosterone இனைச் சுரக்கச் செய்யும். இது விந்துப்பிறப்புக்கலங்களை வளர்ச்சி பெறச் செய்வதுடன், விந்தின் உற்பத்தியையும் அதிகரிக்கச் செய்யும்.


தெஸ்திரோஜன் ஓமோனின் கட்டமைப்பு
---------------------------------------------------------
விந்தின் அமைப்பு
-------------------------


  • தனிக்கலம்,  நுண்ணிய அமைப்பு
  • தலை,  நடுத்துண்டு, வால் ஆகிய மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது
  • தலையானது வட்டவடிவமானதாகவும், தடடையானதாகவும் காணப்படும்.
  • தலையில் கரு (தந்தை வழி இயல்பைக் கடத்த), உச்சிமூர்த்தம் (விந்து முட்டையை ஊடுறுவ உதவுதல் ) காணப்படும்.
  • தலைக்கும் நடுத்துண்டுக்குமிடையில் கழுத்துக் காணப்படும். இதில் 1 சோடி புன்மையத்திகள் உண்டு.
  • புன்மையத்தியிலிருந்து எழும் அச்சிழை வால் பகுதி வரை நீண்டு சவுக்குமுளை போன்று அசைவிற்கு உதவும்.
  • வீசலின் பின்னர் விந்தின் ஆயுட்காலம் 48 மணி தொடக்கம் 72 மணி வரை.
  • விந்தாக்கம் ஆண்களின் பிறப்பிலிருந்து ஆயுள் வரை நடைபெறும்.
- Ms.A.C.Jancy -


2012/07/18

கற்றலில் வீழ்ந்தே !


"ஓதுவீராக"

எம் பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முதன்முறையாக அருளப்பட்டதன் வாயிலாக எம் வாழ்வுக்குள் வழிகாட்டப்பட்ட புனித திருமறை வசனமிது.

"வல்லோனும் மாண்புடையோனுமாகிய அல்லாஹ் கூறுகின்றான் :
என் இறைவா, கல்வி ஞானத்தை எனக்கு அதிகமாக்குவாயாக! என்று (நபியே) நீர் பிரார்த்திப்பீராக (20:114)

இதுவும் கல்வியை இயம்பும் திருமறை வசனமே!

"கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க வதற்குத் தக"

திருக்குறளின் கல்வி பற்றிய அதிகாரத்தில் (391வது குறள்) திருவள்ளுவர் அழகாக கல்வியின் சிறப்பையுணர்த்தி நிற்கின்றார் மேலே காட்டப்பட்டவாறு!

"இளமையிற் கல்வி சிலையிலெழுத்து"

இது அழகிய அனுபவப் பழமொழி !

இவ்வாறாக மனிதனுக்குள் மானுடப்பண்பைப் போதிக்கும் சகல மதங்களும் கல்வியை முக்கியத்துவப்படுத்துகின்றன. இந்து மக்கள் கல்விக்குரிய கடவுளாக சரஸ்வதியை வழிபடுகின்றனர்.


இவ்வாறான சிறப்புப்பெற்ற கல்வியானது மனிதருள் நடத்தை மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியது. பாடசாலை, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் நாம் பெற்றுக் கொள்ளும் கல்வியறிவை விட வாழ்க்கையனுபவங்களால் பெற்றுக் கொள்ளும் அறிவு தரும் திறனே விசாலித்து பயன் தரக்கூடியது.

அன்று ஆசிரியர்கள்  எம்முள் அறிவைத் திணித்து மனநிறைவு கண்டார்கள். ஆனாலின்று நாங்கள் (இன்றைய ஆசிரியர்கள்) அந்த வழிப்படுத்தலை மேற்கொள்ளக் கூடாதவராய் தடைப்பட்டு நிற்கின்றோம்.  

கற்பித்தல் என்பது போதித்தலல்ல வழிப்படுத்தல் எனும் தத்துவத்தை நவீனத்துவத்துடன் சுருங்கிக் காணப்படும் உலகம் எமக்கு போதித்து நிற்பதால் கற்பித்தல் வழங்கலும் அதற்கேற்ப மாற்றம் கண்டுள்ளது.

பொதுவாக ஒருநாட்டின் கல்வியமைப்பில் சமூக, பொருளாதார, அரசியல் துறைகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. அரசியல் மாற்றங்களால் கல்வி வழங்கும் நடைமுறைகள் அடிக்கடி புனரமைக்கப்படுவது தவிர்க்க முடியாத தொன்றாகக் காணப்படுகின்றது. காலத்துக்கு காலம் உலகமயமாக்கலின் விளைவும் கல்வியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதால் இவ்வாறான மாற்றங்களை உள்வாங்குவது அத்தியாவசியமாகவே உள்ளது. இலங்கையைப் பொறுத்தவரை கல்வி வழங்கல் ஐக்கிய இராச்சியத்தின் சுவட்டிலேயே பதிக்கப்படுகின்றது.

இன்றைய கல்வி வழங்கலானது எம் நாட்டில் தேர்ச்சிமுறைக்கல்வி முறையாக வழங்கப்படுகின்றது. இதன் எதிர்பார்ப்பானது ஒரு பிள்ளை பாடசாலைக் காலத்தில் தான் பெறும் கல்வியறிவு, அனுபவத்தை தனது வாழ்க்கை காலம் முழுவதும் பிரயோகிக்க வேண்டுமென்பதே!

எம் நாட்டைப் பொறுத்தவரை கல்வியறிவைப் பெற்றுள்ளோர் தொகை 98% ஆகக் காணப்படுவது ஓர் ஆரோக்கிய சமூகத்திற்கான தொடக்கவுரையாகக் கருதலாம்.

அந்த தொடக்கவுரை பற்றிய திருப்தியான மனநிலையுடன் ,என் பாடசாலை தந்த அனுபவங்களுடன் பயணித்தவாறு என் தொழில் சார் பார்வையை செலுத்துகின்றேனிப்போது . .......

அதன் வெட்டுமுகப்பார்வையில் ஆசிரியர்கள் பொதுவாக எதிர்நோக்கும் சவால்களே பதிவாகின்றன.

கல்விக்கான நோக்கங்கள், வழங்கல் பற்றிய முன்னாயத்தங்கள் யாவும் மிகச்சிறப்பாகவே அரசால் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால் சிக்கல் ஏற்படுவது அதனை வழிப்படுத்தும் போதே

மாணவர்கள் விரிந்த சூழல் அனுபவங்கள், தேடல், எதிர்பார்ப்புக்கள் என்பவற்றுடன் பாடசாலை வருகின்றார்கள். இவர்களுக்கேற்ற ஆற்றலை வழங்காத போது அவர்கள் கல்வி மீது அசிரத்தையும், கற்பிப்போன் மீது விருப்பமின்மையையும் வெளிப்படுத்தி கற்றலின் இலக்கிலிருந்து விலகிப் போகின்றனர். இவ்வாறான மனநிலையில் மாணவர்களை அணுகுவதென்பது ஆசிரியர்களுக்கான சவாலாகும்.

"எழுத்தறிவித்தவன் இறைவனாவான்"

எனப் புனிதப் படுத்தப்பட்ட ஆசான் கேலிப்படுத்தப்படும் மலினம் ஒருசிலரின் நடவடிக்கைகளால் கல்வித்துறையில் பொதுவாகவே காணப்படுகின்றது....

அன்று நாங்கள் கற்கும் போது எமக்கும் ஆசிரியருக்குமிடையில் நீண்ட இடைவெளி காணப்பட்டது. ஆனால் இன்றோ அந்த இடைவெளியை நாங்கள் இயன்றளவு சுருக்கி விட்டோம். மாணவர்கள் தோழமையுடன் எம்மை நெருங்கி தமக்குத் தேவையான அறிவை , திறனை அள்ளிக் கொள்ள நாங்கள் பாதையமைத்து கொடுத்துள்ளோம்!

ஒழுக்கத்திலிருந்து இடறும் ஓரிரு சந்தர்ப்பங்களைத் தவிர பிரம்பு மறந்து போகக் கூடிய இந் நாளில் அன்பைக் குலைத்தே நாம் கல்வியூட்ட முயற்சிப்பதால் பல மாணவர்களின் சிந்தையைத் தொட்டு எம்மாலும் கல்வியை வழங்க முடிகின்றமை பெரும் பாக்கியமே!

இன்று எம்மைப் பொறுத்தவரையில் கற்பித்தலில் நாம் எதிர்நோக்கும் முக்கியமான பிரச்சினைகளுள் ஒன்று பெரும்பாலான மாணவர்களின் சுயகற்றல் ஆர்வம் பூச்சியநிலையைத் தொட்டு நிற்பதே! கற்பிக்கும் விடயங்கள் அவர்கள் உள்வாங்கும் போது மாத்திரமே ஞாபகநிலையைத் தொட்டு நிற்கின்றது. மறுநாள் அவை பற்றிய வினாக்களை எழுப்பும் போது அப்பாவிகளாய் "திருதிரு" வென முழிப்பதைத் தவிர அவர்களால் வேறொன்றும் செய்ய முடிவதில்லை. இந்த இயலாமைக்குக் காரணம் அவர்களின் சுயகற்றல் இன்மையும், போதிய பயிற்சியின்மையுமாகும் !

தமது கனவுகளை பிள்ளைகள் மீது சுமத்தி விட்டு அவர்களின் நகர்வுகளுக்கான பாதையை செப்பனிட்டு கொடுக்க காத்திருக்கும் பெற்றோரின் எதிர்பார்ப்பை நசுக்கும் இந்த இளஞ்சமுதாயம் தோல்விகளின் விளிம்பிலிருந்து தம் வரலாற்றையெழுத முயற்சிப்பது வேதனையே!

இன்றைய கல்விச் சூழலில் நாங்கள் எதிர்நோக்கும் இன்னுமொரு பிரச்சினை "தனியார் கல்வி நிறுவனங்கள்" ஆகும்....பாடசாலையில் ஏனோ தானோ வென்று கற்பிக்கும் பலர் இந்த தனியார் நிறுவனக் கல்வியில் மிகக் கரிசனத்துடன் செயல்வீரர்களாகத் தம்மை இனங்காட்ட முனைவதை நான் அனுபவரீதியாக உணர்ந்துள்ளேன்..மாணவர்களின் தனியாள் வேறுபாடுகளை கண்டறிந்து அவர்களுக்கேற்ற கல்வியூட்டலை ரியூஷன் ஆசிரியர்கள் வழங்கினால் அது சேவையாக எமக்கும் பயன் தரும்..ஆனால் இந்த நிறுவனங்களில் கடைப் பொருட்களைப் போல் மாணவர்கள் நிரப்பப்பட்டு தலையாட்டும் கிளிப்பிள்ளைகளாக தம்மை உருமாற்றுகின்றனர். நன்கு கற்கும் பிள்ளைக்கு தனியார் நிறுவன வழிகாட்டல் பேருதவியாக இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இந் நிறுவனங்களில் தம் பெரும் பொழுதுகளைக் கழித்து விட்டு வெறும் பூச்சியமாக வகுப்பறைக்குள் நுழையும் மாணவர்கள் வகுப்பில் கற்கும் பாடத்தையும் கவனிக்காது தவணைப்பரீட்சைகளில் புள்ளிகளைக் "கோட்டை விடுபவர்களாக மாறுவதை நினைத்தால் கவலை நெஞ்சையடைக்கின்றது.


மேலும் இந்த மாணவர்கள் வகுப்பில் ஆசிரியர் வருகை தராத சந்தர்ப்பங்களில் தாம் ஏற்கனவே கற்ற பாடங்களை மீட்டல் செய்யும் பண்பும் மிகக் குறைவாகவேயுள்ளது. அந்நேரங்களில் தாமாகவே அதி "சுதந்திரத்தை " கைப்பற்றிக் கொண்டு பெரும் சப்தத்துடன் வகுப்பறையைச் சந்தையாக மாற்றிக் கொண்டு பிற வகுப்பு மாணவர்களின் கற்றலையும் குழப்பும் வன்முறையாளர்களாக தம்முள் பதவி சூடிக் கொண்டு ஆசிரியர்களிடம் தண்டனை பெறும் நிலையும் இன்றைய கால கட்டத்தில் அதிகமாகவே காணப்படுகின்றது..

இன்று தகவல் தொழினுட்பம் அதி வேகமாக நம் வாழ்வை பிணைத்துக் கொண்டிருக்கின்றது. இதனால் பிற கலாசார தாக்கங்களும் பண்பாடுகளும் இம் மாணவர்களின் மொழி, வாழ்க்கை நடைமுறைகளை மாற்றியமைத்துக் கொண்டிருக்கின்றன. பாடசாலைகளில் களவாக கைபேசி பாவிப்பதும், இணையங்களினூடாக பெற்றுக் கொள்ளும் பாலியல் சார் விடயங்களை நண்பர்களினூடாக பரிமாறிக் கொள்வதும், அதன் தூண்டுதலால் அப் பாதை வழியில் தாம் இயங்க முயற்சிப்பதும் இன்று மாணவர்களை நெறிபிறழ வைத்துள்ளது..

மாணவர்கள் பெரிதும் விரும்பும் விடயங்கள் பாலியல் சார் விடயங்கள். இவற்றினை நண்பர்கள் வாயிலாகப் பெற்றுக் கொள்ளும் போது வழி தவறிவிடப்படுகின்றனர். இதனால் பாலியல்சார் விடயங்கள் பாடத்திட்டத்தில் உட்புகுத்தப்பட்டு விஞ்ஞான ஆசிரியர்களாகிய எமக்கு பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது....இருந்த போதிலும் வளர்ந்த ஆண் மாணவர்களுக்கு பெண் ஆசிரியர்களாகிய எம்மால் பாலியல் விடயங்களைப் போதிப்பது சற்று சங்கடம் தருவதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆனாலும் மறைமுகமாக சில வழிப்படுத்தல்களை வழங்கிக் கொண்டுதான் இருக்கின்றோம். இதுவும் எமக்கு சவாலே!

"சென்ற வருடம் தரம் 11 கற்கும் மாணவனிடமிருந்து "போன் ஷிப்" ஒன்று கைப்பற்றப்பட்டது. அதனை கைபேசியிலிட்டு பரீட்சித்த போது அதில் நிறைந்திருந்தவை "நீலப் படங்களே". அம் மாணவன் இன்னுமொரு மாணவனிடம் அதனைப் பார்வையிடக் கொடுக்கும் போதே பிடிபட்டான். விசாரணை தொடர்ந்த போது, அவன் சொன்ன பதில் தனது தந்தையார் அதனை அடிக்கடி பார்ப்பதாகவும், அதனாலேயே அதனை தான் தந்தையின் கைபேசியிலிருந்து களவாகக் கழற்றி பாடசாலைக்குக் கொண்டு வந்ததாகவும் வாக்களித்தான். அவனைச் சீர்படுத்த வேண்டிய தாயாரோ வெளிநாட்டில் மாடாய் உழைக்க, தந்தையோ பொறுப்பற்றுத் திரிய .........

வழிப்படுத்த வேண்டிய பிள்ளையோ சீர்கெட்டவனாய் சமூகத்துள் நுழைய முயற்சிக்கின்றான்.

யாரைத் தண்டிப்பது பெற்றோரையா......பிள்ளையையா !

ஆசிரியர்கள் வெறும் அறிவு போதிப்பவர்களலல்ல.....

ஆலோசகர்களாகவும் வகிபாகம் காட்ட வேண்டிய நிலையிலுள்ளார்கள்.

ஏனெனில் மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் வெளிப்படுத்த விரும்பாத பல பிரச்சினைகளை எம்முடன் பரிமாறி தீர்வைத் தேடி நாடி துடித்து நிற்கின்றனர்..இவர்களை வழிப்படுத்துவது எம் கடமை. சேவை. இக் கடமையைப் புறக்கணிக்கும் ஆசிரியர்கள் மாணவர்களால் அந்நியப்படுத்தப்படுகின்றார்கள் இது வரலாறு.

இன்று பாடசாலைகளில் நாங்கள் எதிர்நோக்கும் இன்னுமொரு பிரச்சினையே மாணவ- மாணவியர்களுக்கிடையிலான காதல் தொடர்பு...........கட்டிளமைப் பருவத்தினரிடையே "இலிங்க ஓமோன்" செயற்பாட்டினால் ஏற்படக்கூடிய இயல்பான நிகழ்வொன்றே இந்தக் காதல். விஞ்ஞானம் போதித்து நிற்கும் உண்மையிது! எதிர்ப்பாலியல் கவர்ச்சி இயல்பாகவே மனித சமூகத்தை ஊடுறுவிக் காணப்படும் வேர். இதனை வலுக்கட்டாயமாக அறுத்தெடுக்கும் போதே சமூகம் அங்கீகரிக்காத பல தவறுகள் மேடையேற்றப்படுகின்றன.


ஆனால் இந்த உண்மையை மறுதலிக்கும் சில ஆசிரியர்கள் இவர்களை கையும் மெய்யுமாகப் பிடித்து "கூச்சல்" போட்டு அம்பலப்படுத்தும் போது இம் மாணவர்களின் சிறு தவறுகள் வழிப்படுத்தலின்றி பெரிதாக்கப்பட்டு பறைசாட்டப்படுகின்றது. இதனால் இவர்கள் எதிர்காலம் மட்டுமல்ல தவறான பாதைக்குள் தம்மை வீம்போடு நுழைத்துக் கொள்ளத் தூண்டப்படுகின்றார். தற்கொலைகளும், தவறான வாழ்க்கைத் தெரிவுகளும் இதன் விளைவுகளாக இன்றும் சமுகத்தை எட்டிப்பார்க்கின்றன..

பள்ளிக் காதலும் காலைப் பனியும் நிலையற்றது. ஒருவருடைய ஏதோவொரு கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு அவருடன் விசேட தொடர்புகளை பேணும் போது இயற்கையாகவே அன்பு உருவாகும். அந்த அன்பே பிறர் பார்வையில் "காதலாக" பெயர் சூடிக் கொள்கின்றது. ஆனாலிந்த அன்பு பாடசாலைப்பருவத்தில் பெரும்பாலும் வெறும் இளமைக் கவர்ச்சியாகவே தன்னை இனங்காட்ட முனைகின்றது, தம் உணர்வுகளை கடிதங்களினூடாகப் பரிமாறிய இந்த இளசுகள் பிறரின் தவறான பார்வை, வழிப்படுத்தலின்மையால் முத்தம் வரை தம்மையிழந்து நிற்கின்றனர். பள்ளிப்பருவத்தில் முத்தம் தந்த ஈர்ப்பால் மொத்தமாக தம்மையிழந்து வாழ்வை பறிகொடுத்த பலர் இன்றும் இந்த சமுகத்தின் "விமர்சனச் சகதிக்குள்" வீழ்ந்து துடித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆசான்களைக் கனம் பண்ணாமை, பாடசாலைச் சொத்துக்களை சேதப்படுத்தல் போன்ற வன்முறையாளர்களையும் பாடசாலைகள் தான் உருவாக்குின்றன என்பதும் வேதனையான வெட்கப்பட வேண்டிய உண்மையாகும்.

இயந்திரமயமான இவ்வுலக வாழ்வில் போராட பல மணித்தியாலயங்களைச் செலவிட வேண்டிய நிலையில் , ஆசிரியர்கள் தம் போராட் வாழ்விலிருந்து விலகி மிக அர்ப்பணிப்புடன் ஒவ்வொரு மாணவர் மீதும் தனிப்பட்ட கரிசனத்துடன் செயற்படும் போதே கல்வியின் நோக்கம் நிறைவேற்றப்பட முடியும்...

சிறந்த கல்விப் பாதையொன்றைச் செதுக்க ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை நிர்வாகம், அதிகாரிகள், சமூகம், அரசு ஆகிய மானுட வளங்கள் ஓரணியில் திரள வேண்டும். ஓர் புள்ளியில் அவர்கள் சிந்தனை மையப்படுத்தப்பட வேண்டும்..

ஆசிரியர்த் தொழில் ஓர் தொழிலல்ல சேவை........கால் இலட்சத்தை தொட்டு நிற்கும் எமது ஊதியத்தை ஒவ்வொரு மாதமும் 20 ம் திகதி பெற்றுக் கொள்ளும் போது அந்தக் காசோலை எம் மனசாட்சியைத் தொட்டுப்பார்க்க வேண்டும்..மக்களால் சேகரிக்கப்பட்ட வரிப்பணத்திலிருந்து அரசு தரும் இந்தச் சம்பளப் பணத்திற்காக சமூகம் எதிர்பார்க்கும் நற் பிரஜைகளை நாம் திருப்பி அவர்களுக்கு வழங்குகின்றோமா எனும் கேள்வியே ஆசிரியர் மனங்களைத் தட்டியெழுப்பும் வினாவாகும்..........!

நாங்கள் ஓர் தொழில் பார்க்கும் தகைமைக்குப் பொருத்தமாக கற்றவர்கள்.  பயிற்சி பெற்றவர்கள். ஆனால் எங்கள் கற்றல் பயணம் குறுகியதல்ல.. முடிவுறக்கூடாது..முடிவிலியாக தொடர வேண்டும். ஏனெனில் இவ்வுலகின் புதுப்பிக்கப்படும் ஒவ்வொரு அறிவையும் மாணவர்களுக்கு ஆற்றலாக வழங்க வேண்டிய கடப்பாடு எமக்குண்டு........

அதற்கேற்ப எங்களை நாங்கள் புதுப்பிக்க வேண்டும்.


என்னைப் பொறுத்தவரை என் ஆசிரியர்த் தொழிலில் நான் மானசீகமாக அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு, என்னை நம்பி என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும்  மாணவ சமுதாயத்திற்குரிய வழிகாட்டலை என் விஞ்ஞானப் பாடத்தினூடாக வழங்கிக் கொண்டிருப்பது மறுக்க முடியாத உண்மையே!  என் பொறுப்புணர்ச்சி காரணமாக என்னுடன் கடமையாற்றுபவர்கள் சிலர் வெளிப்படுத்தும் தடைகளைக் கூடத் தகர்த்தெறிந்து எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளோடு தடையின்றி என் பயணத்தைத் தொடர்கின்றேன். அவற்றின் வெற்றி வாசம் மேலும் என்னை உற்சாகப்படுத்துகின்றது.......

நான் ஆசிரியப் பயிற்சி பெறும் காலத்தில் என் பயிற்சிப் பாடங்கள் சகலவற்றிலும் பெற்ற அதி திறமை A சித்திகள், என் மொழி வள மேம்பாட்டுக்காக மஹரகம கல்வி நிறுவனம் நடத்திய ALIC பாடநெறி சிங்கள, ஆங்கிலப் பரீட்சைகளில் பெற்ற A திறமைச்சித்திகள், கல்விமாணிப் பட்டப் பயிற்சி நெறி தெரிவுப் பரீட்சையில் வவுனியா நிலையம் சார்பில் பெற்ற முதலிடம் , வடமத்திய மாகாணத்தின் தமிழ்மூல சிறந்த ஆசிரியையாக 2005ம் ஆண்டு நான் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டமை போன்ற என் ஒவ்வொரு வெற்றியும்  புதுப்பிக்கப்பட்டவாறே என்னை இன்னும் இன்னும் ஊக்குவிக்கின்றது. என்னை நன்கறிந்த நட்புக்கள், பெற்றோர், சகோதரிகள், உறவுகள் என விரியும் என்னைச் சூழவுள்ளோரின் அன்பும் ஆதரவும் இந்த வெற்றியின் ரகஸியங்களில் படிந்து கிடக்கும் வைரத்துளிகள்.

ஊக்கமளிக்காத பாடசாலை நிர்வாகம் கூட என் உந்து சக்தியை மிகைப்படுத்தி சாதனைகளின் முகடுகளை தொடச் செய்கின்றது.பழைய அதிபரின் முகாமைத்துவப் பணிகளை சிறப்பாக நிறைவேற்றியமைக்காக மறைமுகப் பழிவாங்கலைத் தூவி நிற்கும் நிர்வாகத்தின் அலட்சியம் கூட என் நகர்வைத் தடுக்கவில்லை..என் திறமையை சிதைக்கவில்லை. இன்று நான் என்னையே பட்டை தீட்ட இவர்கள் எல்லோரும் தம்மையுமறியாமல் காரணமாகி விட்டார்கள். அண்மையில் வெளியிடப்பட்ட இலங்கை கல்வி நிர்வாகப் பரீட்சையில் 183 புள்ளிகள் பெற்று எனது பாடசாலையில் மட்டுமல்ல எனது பிரதேசத்திலும் நான் தலை நிமிர்ந்து நிற்க "இந்த ஒடுக்கலும் " ஓர் காரணமே!

என் மீது வீசப்படும் கற்களைக் கூட மாலையாக்கும் பொறுமையும், இறைநம்பிக்கையும், தன்னம்பிக்கையும், முயற்சியும் என்னிடம் அதிகமாகவேயுள்ளது. அந்த தைரியமூட்டலில் நான் பயணிக்கும் பாதையெல்லாம் என் சோகங்களையும் மறைத்து வசந்தத்தின் அரவணைப்புடன் என்னையும் அழைத்துச் செல்லட்டும்.




- Ms. Jancy Caffoor -