About Me

2012/07/28

ஞாபக அலைகள்

1990 ஒக்டோபர் 30
-------------------------
            ******************************************
                ஐின்னா வீதி - யாழ்ப்பாணத்திலுள்ள
                 எமது  வீட்டின் முன்புறம்*
            ******************************************

யாழ்ப்பாண முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட  கரிய நாள்...............

அத் துரோக நாளில் எலும்புக்கூடாய் மாற்றப்பட்ட எங்கள் வீட்டின் படங்களையே இப்பதிவில் இணைத்துள்ளேன்..

அந்த ஞாபகங்களின் பதிப்பிவை .....இவை இனத்துவேசத்தினை யார் மீதும் தூண்டக்கூடியவையல்ல...நான் அனுபவித்த வேதனைகளின் சங்கமம்.என் நட்பினருடன் பகிர்வதில் ஆத்ம திருப்தி. இவ்வாறான இனச்சுத்திகரிப்பு இனி ஒருபொழுதும் எந்த சிறுபான்மைக்கு எதிராகவும் கனவில் கூட நடக்கக்கூடாது எனும் பிரார்த்தனையுடனேயே இதனை எழுதுகின்றேன்...

யுத்தம் தன்னிரைக்குள் எம் பிரதேசத்தின் வனப்பையெல்லாம் உறிஞ்சிய நிலையில் எஞ்சியிருந்தவை வறுமைப்பட்ட வாழ்வும், அவல மனநிலையும், ஊனப்பட்ட உடல்களும் ,உருக்குலைந்த மனைகளும் தான்............


வெறுமையே தேசியமாய் மாற, மலினப்பட்ட மனசாட்சியின் கோரப்பிடிக்குள் சிக்குண்டு,  யுத்தங்களின் எச்சங்களாய் உதிர்ந்து கொண்டிருந்தோம்..

பீரங்கித் தாக்குதலும், ஆட்லறி ஷெல் வீச்சும், ஹெலிச்சூடும், பொம்பர் குண்டுவீச்சும் பழக்கப்பட்டவையாக எம்மோடு பதிவாகிக் கிடந்தன.

மின்விநியோகம் தடைப்பட்டும், வெகுசனத்தொடர்பூடகங்களின் செல்வாக்குமிழக்கப்பட்ட நிலையில் என் பொழுதுபோக்காக ,உதிர்ந்து விழும் சன்னங்களையும் பொம்பர் குண்டுவீச்சின் எச்சங்களையும் சேகரிப்பதனைக் கொண்டிருந்தேன்.மாணவர்ப்பருவத்திலிருந்த என்னிடம், திரட்டூக்கம் அதிகமாகவே இருந்ததால் என் கவனம் இச் சேகரிப்போடு ஒன்றிக்கிடந்தது.

 மக்களில் ஓரிரு குடும்பங்கள் மட்டுமே எஞ்சியிருக்க, ஏனையோர் தம் பாதுகாப்புக் கருதி இடம் பெயர்ந்த நிலையில் , யாழ்ப்பாணம் சோனகதெரு வெறிச்சோடிக்கிடந்தது..

அந்த ஓரிரு குடும்பங்களில் நாமும் அடக்கம்...பங்கரோ வேறெந்த பாதுகாப்போ இல்லாத சூழ்நிலையில், இறைவன் துணையுடன் தலைக்கு மேல் கூவும் ஷெல்களை எண்ணுவதில் உயிர் கரைந்தது..

ஒக்டோபர் 30 காலை 6.30 மணியளவில் எமக்கு அறிவிப்பு விடப்பட்டது. சகல முஸ்லிம் மக்களும் யாழ்ப்பாணம் ஐின்னா மைதானத்தில்  கூடும்படி................
ஒலிபரப்பு காற்றிலே அலைந்து எமக்குள் பீதியைக் கரைத்துக்கொண்டிருந்தது...எம்மிருப்பிடத்தை இழக்கப் போகின்றோம் என உள்ளம் எச்சரிக்கையுணர்வில் ஆட்பட்டு தவித்தது.


                         **************************************************
                              என் கல்விக்காக ஒதுக்கப்பட்ட அறை
                         ***************************************************

நாம் வீட்டிலிருக்க என் தந்தை மட்டும் கூட்டத்திற்குச் சென்றார். அரைமணித்தியாலம் கழிந்து போகாத நிலையில் முஸ்லிம் வீதிகளை மனித அவலங்கள் நிறைத்தன. கூக்குரலும், கண்ணீருமாய் துணி மூட்டைகளை மட்டுமே ஏந்தியவர்களாய் மக்கள் தம் பாரம்பரீய பூமியிலிருந்து வீசியெறியப்பட்டார்கள். நாமும் வெளியேற்றப்பட்டோம் . எம் வீடு, வாசல், சொத்து அனைத்தையும் அந்த ஒரு நொடியில் தாரை வார்த்தவர்களாய்  வெறுமையுடன் வெளியேற்றப்பட்டோம்

இந்திய இராவணுத்தினர் எம் தேசத்தைக் கைப்பற்றிய போதெல்லாம் இடம்பெயராத நாம் அன்று எம் சமூகத்தினருடன் ஒன்றாகக் கலந்து வேரறுக்கப்பட்டோம். எங்கள் கடைசிப் பயணச்சுவட்டின் கறை வீதியில் பதிந்து மறையத் தொடங்கியது.

போகும் வழி தெரியவில்லை.....
எதிர்காலம் பற்றிய நம்பிக்கையேதுமில்லை..
அலையோடு அடிபட்டுச் செல்லும் படகுகளாய் மக்கள் போகும் திசை நோக்கி எம் கால்களும் பயணித்தன.

மரண மிரட்டல்களும், துப்பாக்கிக் கரங்களும் எம்மை வழி நடத்திச் செல்ல எமது வீதியான ஐின்னாவீதிச் சந்தியிலுள்ள அவர்களின் சோதனைச் சாவடிக்குள்   நாங்கள் உடல் சோதனைக்காகத் தள்ளப்பட்டோம்.. துப்பாக்கியேந்திவர்களாய் எம் உடல்களை அழுத்தி சோதித்தனர். பெண்களிடமிருந்த தங்க நகைகளும் பணங்களும்  பறித்தெடுக்கப்பட்டன.....

இருப்பிடத்தை இழந்து வெளியேறும் இந்நிலையில் அவர்களின் எஞ்சிய வாழ்வின் நம்பிக்கையாகக் கொண்டு செல்லும் சிறு தொகைப்பணமும் ,நகைகளும் மீண்டும் பறிக்கப்படும் அந்தச் சிறுமைத்தனம் கண்டு  பல பெண்கள் கதறி மயங்கி விழுந்தனர்...

கூட்டத்தில் 1 பவுண் நகை கொண்டு செல்லலாம் என அறிவிப்புச் செய்து விட்டு கையில், காதில், கழுத்தில் இருப்பவற்றையெல்லாம் பிடுங்கிக்கொண்டிருந்தனர் அந்த சுதந்திரவாதிகள்...

 ஒரு சிறுபான்மையினருக்காக குரல் கொடுப்போர் தம்மையண்டியிருந்த வேறொரு சிறுபான்மையினரை வேரறுப்பதென்பது  எவ் வகையிலான நியாயம் எனும் வினா மட்டும் எனக்குள் தொக்கிக் கிடந்தது இரகஸியமாய் !




                            ******************************
                            *  எங்கள் வீட்டின் பின்புறம் *
                            ******************************
நான் சோதிக்கப்பட்ட போது என் கையிலிருந்த தங்க வளையல்களும், சல்வாருக்குள் மறைந்து கிடந்த தங்கச் சங்கிலியும் பென்ரனும்   இரக்கமின்றி கழற்றியெடுக்கப்பட்டது........மனமோ விறைத்த நிலையில் எதையோ இழந்த நிலை.

அந்த ஆயுதக்கரங்கள் முன்னிலையில் நாங்கள் வலுவற்றவர்கள்...எங்களால் அவர்கள் மீது சபிக்கத்தான் முடிந்தது...இறைவனிடம் எங்கள் மனக்கவலையை ஒப்படைத்தவர்களாய் நாங்கள் கைகாட்டிய பாதையில் பயணிக்கத் தொடங்கினோம்..

தண்ணீர் கேட்டுத் துடித்த மூதாதையருக்கு தண்ணீர் கொடுக்க மறுக்கப்பட்டது.. இளைஞர்கள் தாக்கப்பட்டனர். வயதானவர்கள் கேலி வார்த்தைகளால் இம்சிக்கப்பட்டனர். ஒரே மொழியை தாய் மொழியாகக் கொண்டவர்களின் பண்பாட்டுச் சிதறல்களை அன்றுதான் நான் கண்முன் கண்டேன். சிலரின்   அலட்சியங்களால் அவர்களின் இலட்சியங்களின் கனம் குறைந்து கொண்டிருந்தது எம்மவர்கள் முன்னிலையில். 

எம்மை மனோகராத் தியேட்டரில் 2 நாட்கள் தங்க வைத்தனர். பசியும் நுளம்புக்கடியும் எங்கள் அன்றைய பொழுதைப் பேரம் பேச நண்பர்கள் இரக்கத்தில் கொண்டு வந்து தந்த பாண் துண்டுகள் சோர்வைக் கொஞ்சம் போக்க  தயாரானோம் அகதி வாழ்வுக்குள் நுழைய !

அன்று அந்த இருளான வாழ்க்கைக்குக் காரணம் நாங்கள் முஸ்லிம்களாய் பிறந்தமையே! தவறு சிலர் செய்திருக்கலாம். ஆனால் அதற்காக ஒரு சமூகத்தின் பாரம்பரீயத்தையே உயிரறுப்பது ஆகாத, தண்டனைக்குரிய, கண்டிக்கத்தக்க செயலே !

இரண்டு நாட்கள் கழித்து அவர்கள் வாகனங்களில் நாம் நிறைத்து  ஏற்றப்பட்டு கேரதீவு கடலருகே இறக்கப்பட்டோம். பலர் தம் உறவுகளைப் பிரிந்தார்கள். கேரதீவிலிருந்து "பரிசில்களில்" ஏற்றப்பட்டோம். சிலர் பழக்கமற்ற தன்மையால் கடலில் வீழ்ந்தார்கள். சிலரோ தாம் கொண்டு வந்த உடுப்பு பொட்டலங்களை கடலில் தவறுதலாக வீழ்த்தினார்கள். யாரை யார் ஆறுதல்படுத்துவது. 

                               *********************************
                               * எமது வீட்டு  அறையொன்று  *
                               *********************************

எங்கள் பயணம் அக்கரையை அடைந்த போது வாகானங்கள் பயணிக்க முடியாத காடுகள் தென்பட்டன. சேறும், சகதியும், முட்களும், கற்களும் எமைச் சூழ்ந்திருக்க ஈர் தினங்கள் கால்நடைகளாகப் பயணித்தோம். வயதானவர்களை அவர்கள் ஆண் மக்கள்கள் தோளில் சுமந்து சென்ற காட்சிகள் கண்ணுக்குள் இரும்பைக் காய்ச்சியூற்றின. கர்ப்பிணிகளும், சிறுவர்களும், ஊனமடைந்தவர்களும் பயணிக்கமுடியாத அந்த அந்தரிப்பு நிலை  பார்ப்பவர் நெஞ்சக்குழியில் கண்ணீரைத் தேக்கக்கூடியவை. 

இவ்வாறாகப் பயணித்த ஐந்து நாட் பயணத்தின் முடிவில் வவுனியா பூந்தோட்ட அகதிமுகாம் எம்மை அரவணைத்தது. கொடுமையான பசியின் இரைச்சலுக்குத் தீனியாக கிடைத்த பாணும் சோறும் பருப்பும் கரட் கறியும் எமக்கு வழங்கப்பட்ட அமிர்தங்கள் அன்றைய நிலையில் !

                        ***********************************
                        *    எங்கள் வீட்டின் நடுக்கூடம்     *
                        ***********************************

எம் வருகையறிந்த அநுராதபுரத்தில் வசித்து வந்த என் மாமா, சாச்சி குடும்பத்தினரின் ஆதரவுக்குள் நாம் ஒன்றிக்கொண்டோம். எம் உடமைகளைப் பறித்தெடுத்தவர்களால் எமது கல்வியறிவைச் சுரண்ட முடியவில்லை. எமது இன்றைய வாழ்க்கை அத்தியாயத்தின் தொடக்கவுரையைப் பதிவு செய்த பெருமை நாம் கற்ற கல்விக்கே சேரும் !

இரண்டு தசாப்தம் கழிந்து விட்ட நிலையில் புதிய நேசங்கள், புதிய ஊர், புதிய வாழ்க்கை  என சுழலும் யதார்த்தங்களின் நிழலில் நாம் ஒதுங்கத் தொடங்கிவிட்டோம். 

                        ************************************
                         *   சமையலறையின் ஓர் பகுதி  *
                        ************************************

இருந்தபோதிலும் எம் பாரம்பரிய தேசத்தில் எமக்கான விடியல் எப்போது . என் பிறப்புத் தாயகத்தில் எனக்கேற்ப தாக்கத்தின் வலியைத்தான் பகிர்ந்தேன்.

அப்பாவிகளின் வாழ்வோடு விளையாடி, தமது அற்பத் தேவைகளுக்காகத் தவறிழைக்கும் மனிதர்களை நாம் தண்டிக்கத் தேவையில்லை. படைத்தவன் அவர்களுக்கான கூலியைக் கொடுப்பான். அதனை சரித்திரம் சுமக்கும்.  

 

வன்முறைகள் எமது முகமூடிகளல்ல. ஆனால் எம் சாபம், எம் குடியிருப்புக்களை அங்கறுத்து அகதிகளாக இத்தனை வருடங்களும் மனக்குறைகளுடன்  வாழ வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு என்றுமுண்டு..

இது தனி மனிதக் கதையல்ல.......திட்டமிட்டு அழிக்கப்பட்ட ஒரு சமுகத்தின் கதை. கண்ணீர்க்கதை.    அன்று நாம் சிறியவர்கள். அனுபவம் இல்லாதவர்கள். இன்றோ காலம் எம்மையும் பேச வைத்து விட்டது.! நிறைய பேசுவோம்.

தமிழ் எங்கள் தாய்மொழி. கறை படிந்த அந்த இறந்த காலம், நெஞ்சுக்குள்ளின்னும் வலிக்கத்தான் செய்கின்றது. நாங்கள் மரணிக்கும் வரை, அந்த வலியிருக்குமோ!

இவை தொடர்பாக கண்டெடுத்த யூரியூப் வீடியோ பதிவுகளையும் சற்று அழுத்திப் பாருங்கள்..

இது யாழ்ப்பாணத்திலுள்ள மஸ்ஜிதுகள் பற்றிய பார்வை......

மீண்டு வந்த நாட்கள்


கவிஞர்  வதிரி சி ரவீந்திரன் அவர்களின்  முதலாவது கவிதைத் தொகுதியான "மீண்டு வந்த நாட்கள்" கவிதைத் தொகுதி தொடர்பான எனது பார்வையிது..............!

என் முகநூலில் ஏற்கனவே இடப்பட்டிருந்த இக் கட்டுரையை இன்று இணைய வலைப்பூவில் பதிவு செய்கின்றேன் மகிழ்வுடன்............


இலக்கியவுலகில் தனக்கென  தனி முத்திரை பதித்தவர்களுள், புதியவர்களை ஆர்வத்துடன் வரவேற்பவர்கள் ஒரு சிலரே...! அவர்களுள் இவரும் ஒருவர்.!


"மீண்டு வந்த நாட்கள்"

தன் தாய் மண்ணின் காலடியில் வாஞ்சையோடு வீழ்ந்து கிடக்கத் துடிக்கும் துடிப்பே முகப்பட்டையாக முகங்காட்ட, 80  பக்கங்களுடன் கனமான கவிதைகளை ஏந்திக்கொண்டிருக்கும் காத்திரமான கவிதைத் தொகுதியான இதனை அவர் தன் பெற்றோருக்குச் சமர்ப்பணம் செய்கின்றார்.

தெனியான் அவர்கள் தன் அணிந்துரையில் குறிப்பிட்டவாறு இக் கவிதைத்தொகுதி ஈழத்துக் கவிதை இலக்கியத்தில் இவர் பெயர் பொதித்து , அவரைத் தொடர்ந்தெழுத ஊக்குவிக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

தலைப்பைக் கண்ணுற்றதும் அனைத்துக் கவிதைகளிலும் யுத்த வாடை வீசும் எனும் எண்ண வார்ப்புடனேயே இதழ்களைப் புரட்டத் தொடங்கினேன்...

ஆனால் பல கருப்பொருட்களும் அவற்றினை அடையாளப்படுத்தும் தலைப்புக்களுமாக கவிதைகள் சிதறிக் கிடக்கின்றன. இப் பரிமாண விசாலிப்பு கவிதைத் தொகுதியின் சிறப்பாகி எம் மனதையும் நிறைத்து நிற்கின்றது........

ஏழ்மை, சாதியொழிப்பு, பொய்மை, உறவுகள், ஏக்கங்கள் , எதிர்பார்ப்புக்கள், யுத்தம் என நீளும் உணர்ச்சிச் சிதறல்கள் அழகான தமிழ்க் கட்டுக்குள் அடுக்கப்பட்டு, யாவரும் புரிந்து கொள்ளும் விதமாக பகிரப்பட்டுள்ளன. அவ்வவ்போது வார்த்தைகளில் யாழ் மண்ணின் வாசமும் கலந்து வருவது கூட சிறப்பே!

தினபதி, யாதும், வீரகேசரி, மல்லிகை, தினக்குரல்,ஞானம்,ஐீவநதி, நீங்களும் எழுதலாம், பொறிகள், தினகரன், அக்னி என்பவற்றில் வெளிவந்த இவரது கவிதைகள் "மீண்டு வந்த நாட்கள்" கவித்தொகுப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அவரது முப்பத்தெட்டு வருட புதுக்கவியாக்கத்தின் ஆளுமைச் செழுமையை பறைசாற்றும் விதமாக முப்பத்தொன்பது கவிதைகளும், பத்தொன்பது துளிக்கவிதைகளும், ஐந்து மெல்லிசைப்பாடல்களும் இக் கவித்தொகுப்பில் உட்பதிக்கப்பட்டு நம்முள் அழகாய், அர்த்தத்தோடு சிரிக்கின்றன...


யுத்தமானது நிமிடங்களை யுகங்களாக மாற்றக்கூடியது. ஒவ்வொருவரினதும் வாழ்வியல் அனுபவங்களை , கவிஞர்களும் தம் பேனா முனைக்குள் ஏந்தும் போது முரண்பாடு காணாத கருத்தியல்கள் ஒத்துப்போய் இலக்கியத்தில் உயிர்ப்புத்தன்மையை தக்க வைக்கின்றது.


தேசம் தொலைத்து நேசம் துறந்து செல்லும் ஆயிரமாயிரம் இதயங்களைச் சுமந்தவாறே மனப்புகையைக் கக்கிச் செல்லும் "அந்த ரயில் போகிறது" எனும் தொடக்க கவிதையே என் நெஞ்சை நிறைத்து நிற்கின்றது..

ஒவ்வொருவரும் தன் பிறப்பிடம் விரட்டப்படும் போது அவிழ்க்கப்படாத சோகங்களும், நிறைவேற்றப்பட முடியாத எதிர்பார்ப்புக்களும் ஆட்கொள்ள ஆரம்பிக்கின்றன..அவ்வாறான மனத்திரைக்குள் மௌனித்துக் கிடக்கும் ஊமைக்காயங்களை "மனத்திரைக்குள்" உணர்த்துகின்றது..

சேரியின் சகதி வாழ்வை "பாதை" யும், "முற்றத்து மல்லிகை" யின் அழகில் கிறங்கிக் கிடக்கும் உவமைச் செழுமையும், அடிமைத்தனத்தை அறுத்தெறியும் முனைப்புடன் களமிறங்கிய நயினாரை "புதிய கதை பிறக்கிறது" கவிதையிலும் , "போலிகளை இங்கு தேடுது பார்" கவிதையில் வேஷமிடும் மனிதர்களின் முகமூடிகளையும் கவிஞர் நமக்கு அழகாகத் தொட்டுக் காட்டுகின்றார்.

ஒவ்வொரு ஜீவனின் உற்பத்தியில் தாய்மைப் பற்றோடு மடி தரும் பூமியே பிறப்பிடமாகும். ஷெல்லடி உறிஞ்சிய ஊர் வனப்பையும், சிதைவையும் "சாவு வந்ததே "கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றது."எலும்புக்கூடாய் செத்துக்கிடக்கும் சந்தை" எனும் வரிகள் முழுச் சிதைவின் மொத்தவுருவாய் நம்முன் வீழ்ந்து கிடக்கின்றது..

அவ்வவ்போது மனதுக்குள் ஒத்திகை பார்க்கப்படும் உள்ளத்தாசைகளை நிறைவு செய்ய காத்திருக்கும் எதிர்பார்ப்பு  "வள்ளம் வர வேண்டும் " எனும் கவிதையிலும், "முளையிலே கிள்ளல்" மூலம் நாளைய வரலாறு நசுக்கப்பட்ட துயரத்தையும் கவிஞர் நம் முன்னால் யதார்த்தம் சிதையாமல் நிலைநிறுத்துகின்றார்.

"இயல்பு நிலை", "கையடக்க தொலைபேசி", "உள்ளக்குமுறல்" , "புரியாமையும் புரியும்", "நயந்துரை", எனது ஆல்பம்" இக்கவிதைகள் ஒவ்வொன்றும் புலப்படுத்தும் உணர்வுகள் மனதை இறுக்கிக் கௌவிப்பிடித்து, கவிஞரின் சொல்லாடல், வரி வார்ப்பின் அழகு என்பவற்றை நமக்குள் உணர்த்தி நிற்கின்றது.

புலப்பெயர்வென்பது மறுக்கமுடியாத தேவையாகி விட்ட இன்றைய காலப் பொழுதில், ஒவ்வொருவரினதும் அந்தரிப்புக்களை "புலம் பெயர்ந்தவனின் கடிதம்" வாசித்துச் சொல்கின்றது..

இவ்வாறு இங்கு பதிவாகியுள்ள ஒவ்வொரு கவிதைகளும்  கவிஞரின் கவித்துவ செழுமையைப் பறை சாட்டிக் கொண்டிருக்கின்றதென்றால் மிகையில்லை.

மெல்லிசைப்பாடல்களின் வரிகளோ சங்கீத சந்தத்துடன் இசையேதுமின்றி நம் செவிக்குள் இனிய பாடலை நுழைத்துத் தரும் பிரமிப்போடு நம்முள் கரைந்து கிடக்கின்றன.

இக் கவிதைத் தொகுப்பின் ஈற்றுப்பக்கங்களில் "வதிரி ரவி நேச நினைவுகள்" எனும் தலைப்பில் அவரின் கலையுலகோடு சங்கமித்திருந்த கலாபூஷணம் அன்பு ஜவஹர்ஷா அவர்கள் நாற்பது வருட கால இலக்கிய சில நினைவுகளை மீட்டுகின்றார்....வதிரி சேர் அவர்கள் கவிஞராக, எழுத்தாளராக மட்டுமல்ல நல்ல நடிகராக, விளையாட்டு வீரராக, நகைச்சுவையாளராக  வகித்த வகிபாகங்களையும் நாமறியச் செய்கின்றார்.........

விவாக பதிவாளராக தொழிலாற்றும் அவரின் மறுபுறத்தில் கலைகளின் விளைநிலம் பெரிஞ்செல்வாகி அவர் பெயர், புகழை நாற்றிசையிலும் பரப்பிக்கொண்டிருக்கின்றது.

வதிரி சேரின் எண்ண வார்ப்புக்கள் எக்காலமும் பொருந்திக் கிடப்பதே அவரது இந்தக் கவித்துவத்தின் வெற்றியாக நான் கருதுகின்றேன்.

"மீண்டு வந்த நாட்கள்" ........!
நாம் மெச்சுகின்ற நாட்கள் !!

அவரது முதல் தொகுப்பே நம் மனதில் மானசிக நிறைவைத் தந்து நிற்கின்றது வாசிப்பின் இறுதியில்..!

இன்னும் அவர் பல தொகுதிகள் வெளியிட வாழ்த்துகின்றேன்....

அவரின் கையெழுத்துடன் கூடிய (06.08.2011) அவரது கவித்தொகுப்பை எனக்கும் அனுப்பி வைத்தமைக்கு எனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்...................





- Jancy Caffoor -




தவிக்கும் மனசு



"இந்த அநியாயத்த கேட்க ஆருமில்லையா"

காற்றோடும் உரசும்  தாயின் அலறலும், வார்த்தைகளில் "இடி" யை இணைத்துக் கொண்ட தந்தையின் வீரமும் நெஞ்சத்தினை பிறாண்டவே கண்களை இறுக்க மூடுகின்றேன். நான் இவ்வுலகத்தில் கண்ட மிக மோசமான மிருகம் அவர்தான். என் சின்ன வயதில் முகிழ்த்த கனவையெல்லாம் அறுத்தெறிந்த வீரர். என் பெற்றோர் இருவரும் குணங்களால் முரண்படும் ஈர் துருவம். ஒருவர் கூறுவதை மற்றவர் குறை, குற்றம் காணும் மானசீக நோயாளிகள். இவர்கள் அடிக்கடி தேவையில்லாத விடயத்திற்கெல்லாம் சண்டை பிடிக்கும் போது நானோ மன சறுந்தவளாய் மௌனித்து என் அறைக் கதவைத் தாழித்து விக்கலோடு கரைந்து விடுவேன். இது என் அன்றாட நிகழ்வு 

இன்றும் சண்டைதான் பிடிக்கின்றார்கள். மௌனித்துக் கிடப்பதைத் தவிர வேறெதும் தெரியவில்லை.

தந்தையின் பாசத்துக்காய் ஏங்கிய போராட்டங்களெல்லாம் நாளடைவில் அவர் மீதான வெறுப்பாய், விரக்தியாய் மாறிக் கிடப்பதைக் கூட அறியாதவராய் அவர் ...............

எனக்கும் அப்பாவுக்குமிடையிலான இடைவெளி நீள நீள குடும்பத்திலிருந்து மெது மெதுவாக விலகிக் கொள்ளும் பிரமை.......

"சந்தோஷம் எப்படி இருக்கும்"

உணர்வுபூர்வமாக விடை தெரியாத வினாவுக்குள் என் மனம் சிக்குண்டு பல நாட்கள். சந்தோஷங்களை வெளிப்படுத்தி வாழ்ந்து கொண்டிருக்கும் மற்றக் குடும்பத்தினரைக் காணும் போதெல்லாம் நெஞ்சவெளியின் பசுமையை பொறாமை மயானமாக்கிக் கொண்டிருந்தது..

தலை நரம்புகள் விண்ணென வலிக்க, மனசின் வலி கண்ணீராய் கரைந்து கன்னம் நனைத்துக் கொண்டிருந்தது.

எத்தனை நாட்கள் தான் இந்த நரக வேதனை.............

நினைவு தெரிந்த காலமுதல் இந்தத் தாய் படும் அவஸ்தையும், கண்ணீரும், புலம்பலும் முடிவுறாத தொடர்கதைகள்.................

என் வாலிப வோரங்களில் வந்த காதல்களில் சுருளாமல் தப்பித்துக் கொண்ட வீரத்தனம் இந்த வில்லங்கத்திற்காகத்தானா...........

கண்களை மூடுகின்றேன்...............மீண்டும் கோரங்களின் அரங்கேற்றம் மனக் கண்ணில் !

"தாயின் தலைமுடிச் சிதறலை  தந்தையின் கரங்கள் மூர்க்கத்தனமாகப் பற்றிப் பிடித்து சுவரில் மோதி சிதறிய ரத்தத்துளிகளால் அவர் விரல்களே சிவக்க"

"ஐயோ.......விடுங்கப்பா..........அம்மா பாவம் "

தடுக்க முயன்ற என்னிடம் அவர் ஆத்திரம் திரும்ப, அன்று நானும் உடல் புண்ணாகி காயங்களுடன் அம்மாவுக்கருகில் குற்றுயிராகிக் கிடந்தேன்.....

கதறல் பூச்சியமான நிலையில் இப்பொழுது நாங்களும் ஊமையாகி மரத்துப் போனோம்...

ஒவ்வொரு அழிவிலும் தான் புது விடியல் உருவாக வேண்டும்..அந்த விடியலின் குளிர்ச்சி தந்தையின் மரணத்திலா?

ஆனால் அதற்கிடையில் என் இளமை மனசு கரைந்து விடும். இருந்தும் நானும் முடிவு தெரிந்த பயணத்திற்காக பக்குவப்பட வேண்டியதாயிற்று!

தான் விடுகின்ற தவறுகளுக்கெல்லாம் எம்மீது காரணம் தேடும் இந்தத் தந்தை என் பாவப்பட்ட வாழ்வின் சேமிப்பு............!

மனம் அடிக்கடி புலம்பத் தொடங்கியது. எனக்கு யாரையும் பிடிக்கவில்லை. தனிமையைத் தவிர !

தந்தையின் முழக்கமும், அதனைத் தொடர்ந்து தன் புலம்பலை என்னிடம் கொட்டித் தீர்க்கும் தாயும் என் வாழ்வின் போக்கினை மாற்றி, மனசை வெறுமைப்படுத்தி விட்டனர். பிடிப்பற்ற வாழ்க்கை. மரணம் அண்டும் வரை வாழத்தான் வேண்டும்.........

பெற்றவர்களை உதற முடியவில்லை. என்னையிந்த மாயத்திலிருந்து மீட்கவும் யாருக்கும் துணிவுமில்லை. இறை பிரார்த்தனை மட்டுமே ஆறுதலாய் தோழமையோடு ஒட்டிக் கொள்ள அந்நியப்பட்டுப் போனேன் நிம்மதியான வாழ்விலிருந்து........

"உம்மா"

தந்தையின் கொடுமையால் கதறிக் கொண்டிருந்த தாயின் பார்வை என்மீது விழுந்தது..

"முடியலம்மா...................ரொம்ப தலைவலிக்குது.....நெஞ்சு கூட நோகுற மாதிரி இருக்கு "

வார்த்தைகளை நான் சிரமப்பட்டு கோர்த்த போது, தாய் நடுங்கிப் போய் தன் சோகத்திலிருந்து கழன்று வெளியே வந்தார்.

"ஏன்டீ................என்னை நீயும் கொடுமைப்படுத்துற.......வாடீ டாக்டர்கிட்ட போகலாம்"

தாய்  வற்புறுத்தி அன்றைய தினமே என்னை டாக்டரிடம் சேர்க்க, வைத்திய பரிசோதனை முடிவு என் வாழ்வின் விதிக்கு முன்னுரையாய் அமைந்தது......

"டாக்டர் .......என் புள்ளக்கு.........................."

தாய் தன் வார்த்தைகளை முடிக்காமல் விம்மினார்....அவருக்குள்ள ஒரே ஆறுதல் நான்தானே!

அழுது விடுவேனென்று அடம்பிடிக்கும் குரலில் தாய் கேட்கும் போது டாக்டர் மெதுவாக சொல்லுவது எனக்கும் புரிகிறது................

"ஓ........ப்ளட் கான்சரா..............ரொம்ப நோய் தீவிரமாகிட்டுதோ.........இன்னும் கொஞ்ச நாள்ல போய்ச் சேர்ந்திடுவேனோ "

டாக்டர் சொல்லச் சொல்ல உம்மா அழும் சத்தம் கேட்கிறது.

உம்மா அழுகின்றார்.......நானோ சிரிக்கின்றேன்.........

"இனி வாப்பாட  கொடுமை இல்ல.....உம்மாட கதறலும் புலம்பலும் நெஞ்சுக்குள்ள இறங்கப் போவதில்லை...........சமூகத்தோட விமர்சனங்களும் நெருங்கப் போவதில்லை "

எனக்கென்று நாளை யாருமே இல்லாத  இந்த வாழ்வில் என் தாயின் கண்ணோட போய்ச் சேர்ந்தா ஒரு சொட்டுக் கண்ணீராவது என் இத்தனை நாள் வாழ்வுக்காக கிடைக்கும்.

விழிகளை மீள இறுக்கிப் பொத்துகின்றேன்.............சூடான கண்ணீர் என் கன்ன வரம்பிலிருந்து மெதுவாக கசிகிறது..........

இது ஆனந்தக் கண்ணீரல்ல......அவலக்கண்ணீர்.............

என் இழப்பால் தாய்க்கேற்படும் அவலத்தை நினைந்து திர்ந்த வலிக்கண்ணீர்...

கண்களைத் திறக்க மனமின்றி. மீண்டும் மூடிக் கொள்கின்றேன் விரக்தியாய்!

கதீஜா முராத்

என் சகோதரி மகள்
---------------------------
இடம் - கட்டார் தோஹா