2012/09/13
உடன்பாடுகளும் முரண்பாடுகள்
பெண் பற்றிய பார்வை
--------------------------------
மனித வாழ்வானது பாரிய விளையாட்டுத்திடல் போன்றது..பலர் நம் வாழ்வின் போக்குகளை ரசிக்க, விமர்சிக்க வந்து போவார்கள். வாழ்வின் சந்தோஷங்களையும், இம்சைகளையும், வேதனைகளையும் பகிரவும் , தோள் சாயவும் உறவுகளும் நட்புக்களும் நம்மை அரவணைத்துக் கிடப்பார்கள்..........!
இவ் அழகான வாழ்வின் மைல்கல் தான் தொழில்!
தொழில் புருஷலட்சணமென்பார்கள். ஆணோ பெண்ணோ தனக்கென ஓர் தொழிலைத் தேடி, தன் காலில் நிற்குமளவிற்கு சம்பாதிக்கும்போதே, தன்னம்பிக்கையுடன் கூடிய வாழ்வை அனுபவிக்கவும், பிறர் முகஞ்சுளிக்காமல் தத்தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் முடிகின்றது.
தொழில் என்பது தற்காலத்தில் பெண்களுக்கு வாழ்க்கைப் போராட்டமாகும். தன் தொழிலுலகத்தையும், குடும்பத்தையும் சமாந்திரமாக வழி நடத்திச் செல்லும்போதே, பிரச்சினைச்சுழிகளில் அகப்படாமல் தப்பிக்க முடியும். தன் கணவன், பிள்ளைகள் உள்ளிட்ட குடும்பத்தை கவனிக்கும் அதே நேரம், தொழில் கூடத்தின் கடமைகளையும் சரிவரச் செய்ய வேண்டியவளாக பெண்ணவள் உள்ளாள்.
வாழ்க்கைப்போராட்டம் உச்ச அளவில் தன் வாயைப் பிளந்து , நிம்மதியை உறிஞ்சிக்கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில், இருவர் சம்பாதிக்கும் குடும்ப வாழ்வே ஓரளவாவது தமது தேவைகளை நிறைவேற்றி நகர்ந்து கொள்ளக்கூடியதாகவிருக்கின்றது.
குடும்பத்தில் விட்டுக்கொடுப்பும், சகிப்புத்தன்மையும், பொறுமையும் பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கே அதிகமுண்டு
( விதிவிலக்கான பெண்களை இங்கு நான் கணக்கிலெடுக்கவில்லை. )
இவ்வாறான மன அழுத்தங்களுடன் வேலைத்தளத்திற்குச் செல்லும் பெண்கள் , அங்கு நிர்வாகத்துடனும், சக ஊழியர்களுடனும் முரண்படும் தன்மை இயல்பாகவே ஏற்படுகின்றது. சிறு விடயங்களுக்கெல்லாம் பகைமையை தனக்குள் பூசி, அவற்றை உருத்துலக்குபவர்களாகவும், விமர்சிப்பவர்களாகவும் இவர்கள் இருக்கின்றார்கள்.
ஆக, ஒரு பெண்ணின் போக்கானது, குடும்ப வாழ்வெனும் அத்திவாரத்திலிருந்தே எழுப்பப்படுகின்றது. நல்ல கணவனை தன் வாழ்க்கைத்துணையாகக் கொண்டவள் வாழ்வு பற்றிய சவால்களிலிருந்து வெற்றிபெறக்கூடிய மனவலிமையைப் பெறுகின்றாள்.....!
மாறாக, ஒவ்வொரு இரவின் நிசப்தத்திலும் கூட, அவளின் துடிக்குமிதய ஒலியின் ஆர்ப்பாட்டங்களில் கண்ணீர் ரகஸியமாய் கறைத்திட்டுக்களாய் படியும் சந்தர்ப்பங்களையும் சில கணவன்மார் கொடுப்பதுண்டு!
அக்கினிக்குள் தன்னைப் பொருத்தி, இம்சைக்குள் தன் மூச்சுக்காற்றை நனைத்து வாழ்வு மறுக்கப்படும் பல பெண்கள், இன்றும் ஆண்களின் அடிமைப் பொட்டகத்தால் இறுகக் கவசமிடப்பட்டே இருக்கின்றனர்.
பிறப்பு, இறப்பு எனும் இரு எல்லைக்குள் உருண்டு மருளும் இந்த வாழ்வினை, பெண்ணால் அறுத்தெறிய முடியாது. ஏனெனில் கண்ணாமூச்சிகளாய் குவிந்தெழும் பல உறவுகளின் இறுக்கத்தழுவலிருந்து விடுபட முடியாத கடுமையான போக்கு பெண்ணில் காணப்படுகின்றது. எனவே இவ்வுலகிலிருந்து அவள் வாழ்வை மரணம் கொத்தும் வரை வாழத்தான் வேண்டும்.
இத்தகைய மன இறுக்கத்தில் தொழிலுக்குச் செல்லும் பெண்கள், பிறருடனான முரண்பாட்டையே அதிகம் வெளிப்படுத்துகின்றனர் இதுவே நிதர்சனம்.......நான் என்னுடன் தொழிலாற்றும் சிலரை இதற்காக ஒப்பிடமுடியும். அவர்களிடம் (சில பகுதித்தலைவர்கள்) சில தொழில்சார் படிவங்களை ஒப்படைத்தால், அவற்றை வாங்கிக் கொண்டு சில நாட்களில் தரவில்லையென்று பிடிவாதத்துடன் மறுப்பார்கள்.எம்மை வம்பில் மாட்ட தெரிந்துகொண்டுதான் இத் தவறுகளைச் செய்கின்றனரா...........அல்லது தமது ஞாபக மறதியை நியாயப்படுத்தச் செய்கின்றனரா............புரியவில்லை. இத்தகைய முரண்பாட்டில் ஆர்வமுடையவர்களை நட்புப்பாதையிலிருந்து சற்று விலக்கி வைக்கும் போது சில, பல பிரச்சினைகளைத் தவிர்க்கலாமென்பது என் திண்ணம்.
2012/09/12
கடற்பூக்கள்
கனவுகள் மெல்லச் சரிய
காற்றின் கூவல்களில் தேகம் சிலிர்த்திடும்
நேரம்.................
அண்டப் பறவையின் நட்சத்திரச் சிறகுகள்
ஒளியுமிழ்ந்து கொண்டிருந்தன!
இருற்றிரையை மெல்லன விலக்கி
மருண்டு நின்றாள் நிலாப் பெண்!
சுருண்டு கிடந்த கடலலைகள்
மிரண்டோடின
கரைப்பரப்பின் மணற்றிணிவில் தம்மை
மறைத்துக் கிடக்க!
படகுகள்................!
பறந்தன நீரலைகளில் - தம் பாய்ச்
சிறகினை மெல்லன விரித்தும்......
தெறிக்கும் அலைகளில் சற்றிடறியும்!
வெருண்டோடும் மீன்கூட்டம்
கரை வலையில் சட்டென தடக்கி வீழவே...........
உரமேறிய மெம் கரங்களின் வலிப்பில்
அறுந்து வீழ்ந்தன சுவாசப்பூக்கள்
மரப் படகின் வெளிதனை
நிரப்பியவாறே!
விறைப்பான துடுப்பின் மோதல்
கரையொதுங்கும் அலையைத் தடுக்க..........
சிறகு விரித்த பறவைகள்
மறுகரைக்கு மனுப் போட்டே
இருப்பிடமாற்றுகின்றன பீதியில்!
படகின் விசை கண்டு
வெடவெடத்த விண்பூக்கள்
கடல் விம்பங்களாய் தெறித்துக் கிடக்க.........
பயணிக்கின்றோம்
கனக்கும் வலைகள் காலை மிதிக்க
பணமாகும் மீன்களுடன்!
நிமிடங்கள் நிசப்தமாய் கரைய
அமிழ்ந்த விரவும் உறக்கமவிழ்க்க..........
விடியல் ஸ்பரிசத்தில்
படகினிதயமும் உஷ்ணமுறுஞ்ச.........
விடிவெள்ளிப் பாஷையில்
கடற்றிசை வழிகாட்டி விரிந்தது!
நீண்ட அலைப் பாயில்
உருண்டு பிரண்டுழைக்குமிந்த
வயிற்றுப் பிழைப்பிற்காய் ............
உயிரறுந்து கிடக்கும் மீன்களே - எம்
செல்வங்களாய் வாழ்க்கைப் பையை நிரப்ப........
அல்லலுடன் மறுகரையிலிருக்கும்- எம்
நல்லுறவுகளின் பிரார்த்தனைப் பலத்தில்
தள்ளாடி கரை திரும்புகின்றனவே
வள்ளங்களும் வனப்புடனே !
ஜன்ஸி கபூர்
2012/09/10
Subscribe to:
Posts (Atom)