About Me

2013/03/08

யாரோ எவரோ



ஓர் பொழுதின் முகநூலில்
ரோஜா வாசம்
நுகர்ந்தேன் சட்டென
புன்னகைகள் நகர்ந்தன!

முகமறியா நட்பென்றெ
பட்டியலிட நானும்
விட்டெறிந்தான் முகவரியை
அன்போடு இறுக்கிப் பிடித்து!

முறுக்கு மீசையும்
முறுவலிக்கும் கண்களும்
பாரதியின் உருக் கொண்டான்
சிகரந் தந்தான் கலையிலகில்!

இலக்கணங்களின் தலைக்கணங்கள்
இலக்காகி வீழ்ந்தன- அவன்
வாள் வீச்சு பேச்சினிலே

சொற்களில் இலக்கியம் நயந்து
கற்கண்டாய் ரசித்துக் கிடப்பான் காதலை!
தன் குண்டுக் கன்னத்தில் சிரிப்பை நனைத்து
சீண்டலில் வம்பெடுப்பான் வீம்பாய்!

விடியலில் வலை விரித்து
சூரியனை எட்டியும் பிடிப்பான்!
நிலவொளியில் களவாய் காதல் நெய்து
இலஞ்சமாய் தூதனுப்புவான் இயற்கையை!

அவன் திமிர் கண்டு - என்
உயிர் மிரண்டோடும் !
வாஞ்சையோடு கட்டியிழுத்து
கனவிலும் கவி கொட்டும் காரியக் காரனிவன்!

இவன் யாரோ..............எவரோ!

- Jancy Caffoor-
    08.03.2013



இயற்கை மகள்

உன் நட்சத்திர விழிகள்
மொழி பேசின காதலை!

நிலவுன் முகங் கண்டு
மெல்ல விழி திறந்தது!

வானவில் புருவங்கள்
என் சப்தமறிந்து சிலிர்த்தது!

கார்மேகக் கூந்தல்
காற்றில் கலைந்து வரவேற்றது ஆர்வமாய்!

உன் பிறையுதட்டில் - என்
பெயர்கள் ஒட்டிக் கொண்டன அழகாய்!

உன் மேக மேனி சிலிர்த்து
என் வெம்மை தேடி!

இருந்தும் 

அருகில் வந்ததும் சிலிர்க்கின்றாய்
வெட்கத்தை உறிஞ்சியபடி!

- Jancy Caffoor-
    08.03.2013



வாழ்க்கை வாழ்வதற்கே



ஒற்றைப் பயணத்தில்
சிறகடிக்கும் காற்றாய் நான்!

வெற்றிடத்தில் சுழன்றடிக்காத
காற்றாய் அவன்

பற்றைக்குள் வீழ்ந்து கிடக்கும்
முட்செடியாய் பிள்ளைகள்!

முரண்பாடுகளின் அரவணைப்பில்
எம் வாழ்க்கை!

இருந்தும்

வாழ்க்கை வாழ்வதற்கே!


      - Jancy Caffoor-

  08.03.2013

அழகான வாழ்க்கை



செவ்விதழ் அதரம் நுகர்ந்து
செம்பிறை நுதல் மத்தியில் - உன்
செந்நிற திருமாங்கல்யம் சூட்டி
திரையிட்டாய் என்னை உன்னுள்
இறைசாட்சியுடன்!

என்னிரவிலும் உலாவும்
பகலவன் நீயாயினன் - மன
அகிலத்தின் உயிருமாயினன்!

கணையாழி யிலுனைப் பூட்டி
இணையாகினாய் பல நாழி!
உன் துணை நானென இறைவன் படைக்கையில்
அனலிட்ட மெழுகாய் அவஸ்தையுமேனோ!

சகதியில் சயனிக்கும் ஆம்பலும்
மறக்குமோ ஆதவக் காதலை....
பாவை சிதைந்தேனுன் வார்த்தையில்
தகுமோ செந் தணல் நீ வார்ப்பது!

இடையுடைந்தது உயிரும் மெலிந்தது
உன் மௌனச் சமரில் ஆவியும் தொலைந்தது!
கருவளையும் எழிலுடைத்தது
பருவமும் குற்றுயிராய் வீழ்ந்து தவித்தது!

நம் பனிப்போரின் அறைகூவல்
ஓயவில்லையின்னும்
நானோ உன் சொப்பனத்தின் கதவருகே
காத்திருக்கின்றேன்-நீயோ
செவிடாக வேடம் தரிக்கின்றாய்
அற்புதமாய்!

காதல்
வார்த்தையல்ல வாழ்க்கை!
உணர்ந்து கொள்
அழகான வாழ்க்கை நம் கையில்!

Jancy Caffoor