2013/05/21
மறைந்து கொள்
உன் குரலென்னைத் தொடுகின்ற
பொழுதெல்லாம்
என் விடியல்களுக்குள்ளும் இசை பிறக்கின்றது
கேட்டுப்பார்!
சந்தனம் பூசி பந்தியிலமரும் தென்றல் கூட
வந்தனம் செய்கின்றது நம் மன்பிற்கே!
கேட்டுப்பார்!
அன்பின் மஞ்சத்தில் அழகான பட்டாம்பூச்சியாய்
நம் மனங்கள்
சிறகடிக்கின்றது தினமும்!
வா!
உதடுகளைத் தாளிட்டு காத்திருக்கும் நாணத்திடம்
மெல்லக் கேட்போம் அனுமதி
ஒரு நிமிடம் திரையிட்டு மறைந்து கொள் என்று!
- Jancy Caffoor-
21.05.2013
பொய்த்துப் போன வாழ்க்கை
வாழ்க்கையில் மிகக் கொடுமையான விடயம் வறுமை. சென்ற வாரம் அண்மையூரில் (வவுனியா) நடைபெற்ற விடயமொன்று இன்னும் எனக்குள் உழல்கின்றது.........
அவள்.......
இளந்தாய்......
மூன்று பிள்ளைகளின் தாய்......
இளமையில் ஏற்படும் வறுமை கொடுமையென்பதற்கு மேலாக அவள் வாழ்க்கையும் அந்த வறுமையால் சிதைந்தது. சுயநலக்கார கணவன், வெறும் சுகநலன்களுக்காக அவளைக் கைவிட்டு வேறு பெண் பின்னால் போய் குடும்பம் நடத்த அவளும் அவளது குழந்தைகளும் தனிமைப்படுத்தப்பட்டனர். பத்துப் பாத்திரம் தேய்த்தும் உழைக்க முடியாத சூழ்நிலையில் அவள். காரணம் மூன்று பிள்ளைகளும் பச்சிளம் பாலகர்கள்...........
பலரிடம் கையேந்தி வாழும் இந்த வாழ்க்கை வெறுத்துப் போக அவள் எடுத்த முடிவு..........
தற்கொலை!
தன் வீட்டு ஆழ் கிணற்றில் ஒவ்வொரு குழந்தையாக வீசினாள் அந்த இதயமற்ற பெண். பச்சிளங் குழந்தைகள் மூவரும் துடிதுடித்து இறந்ததை அந்தத் தாயவள் எப்படித்தான் சகித்தாளோ.......
இனி தனது நேரம்..............
தானும் கிணற்றினுள் பாய்ந்தாள்.. ஆனால் உயிர் பறிபோகும் கடைசி நிமிடத்தில் உயிர் வாழ ஆசைப்பட்டு அருகில் தொங்கிக் கொண்டிருந்த கயிற்றைப் பிடித்து காயங்களுடன் அப்பெண் உயிர் தப்பினாள்............
கணவன் மனைவிக்கிடையிலான கோபத்தின் உச்சநிலையில் பறிபோனது 3 பிஞ்சுக் குழந்தைகள்தான்!
அந்தப் பெண் இப்போது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாள். மனநிலை பாதிக்கப்பட்டவள் எனும் முத்திரையுடன்!
3 கொலைகளை செய்து விட்டு அப்பெண்ணால் உயிர் வாழ முடியுமா என்ன...............?
அவள் உலகம் இனி சிறைக்கம்பிகள்தான் என அறியாமலே வாழ்ந்து கொண்டிருக்கும் அப் பெண்ணின் அவசரமும் , கோபமும் எல்லோருக்கும் ஒரு பாடம்!
2013/05/20
தடையில்லையினி
யாரறுத்தார் நம் சிறகுகளை
உயிரறுந்து கிடக்கின்றது - நம்
பட்டம்பூச்சி!
இரவின் வெம்மையில்
உஷ்ணம் சொறிந்த உன் வெண்ணிலா கூட
சாம்பராகிக் கிடக்கின்றதென் மெத்தையில்!
உனக்கான என் கவிதைகள் கூட
இப்பொழுதெல்லாம்
கல்லறைக்குள் தனித்து முணுமுணுக்கின்றது!
நேற்று
கற்றுத் தந்தேன் காதலை
இன்று நீயோ
இன்னொருத்தியின் உணர்வாய்!
உன் மாற்றம்
எனக்குள் ஏமாற்றம்!
உயிர் வதைக்கும் தடுமாற்றம்!
விடை பெறுகின்றேன்
மடையுடைக்கும் கண்ணீர்த்துளிகளுடன் !
தடையில்லையினி உனக்கு நான்!
அன்பும் பொய்த்தது
ஆசைக் கனவுகள் உடைந்தும் போனது!
இன்னலை என் ஜன்னல் கன்னம் வைக்க
இன்னொருத்தியின் வாசமாய் நீ!
- Jancy Caffoor-
20.05.2013
தாயே
தாயே..........!
உங்களுக்கு சூரியன் கீழிறங்கி
குடை பிடிக்கும்!
சந்திரன் சத்தமிட்டு வாழ்த்துமுங்களை
உங்கள் வார்த்தையில் ஒட்டிக் கிடக்கும்
தன் குளிர்மையை ஏந்திக் கிடப்பதற்காய்!
மலர்கள் சரம் தொடுத்து
கரமசைக்கும் உங்களைக் கண்டு!
தம் மேனி மென்மையை
தாயே!
தலை சாய்கின்றேன் நாணலாய்
என்றும் உங்கள் அன்புக்கு!
- Jancy Caffoor-
20.05.2013
2013/05/15
வர்ணம்
உன் அன்பு எப்பொழுதும் என் மனசோரம்.....
அதுவோ எந்நாளும் எனக்குக் கிடைத்த வரம்!
------------------------------------------------------------
நம்மை அறிபவன் நல்ல நண்பன்.....
நம்மை வழி நடத்துபவன் சிறந்த நண்பன்!
-------------------------------------------------------
நம்மைச் சூழவுள்ளோரின் குணத்தை மாற்ற முடியாது. ஏனெனில் ஒருவர் குணத்தை அவரது பிறப்பும், சூழ்நிலையுமே தீர்மானிக்கின்றது. ஆனால் நம்மைச் சுற்றியுள்ளோரில் நல்ல நண்பர்களை மாத்திரம் நாம் தேர்ந்தெடுக்க முடியும். தெரிவு என்பது நம் மனதைச் சார்ந்தது.
----------------------------------------------------------
புன்னகை ஒன்றே போதும்.......
அன்பை அழகாக வெளிப்படுத்தி விடும்!
அன்பினை ஆழ்வோர் எந்நாளும் சிருஷ்டித்துக் கொள்கின்றனர் அழகான உதயத்தை தம் வாழ்வில்!
----------------------------------------------------------------- வீழ்த்தப்படும்போது தோற்றுத்தான் போகின்றேன்...
மீள எழும்பும்போது ............
வலியுடன் வெற்றிக்கான வழியும் என் பாதையாய்!
--------------------------------------------------------
அக்கினிக்குள் வெந்து போகலாம் உடல்
அவனி விட்டு கருகிடுமோ உணர்வுகள்!
சாம்பர் மேட்டில் விதைக்கப்படும் உயிர்கள்
சரித்திரத்தின் கதையாகி சாகாவரம் பெற்றவை!
--------------------------------------------------
கொட்டிக் கிடக்கும் பனித்துளிக்குள்
பத்திரமாய் நீ!
உலராத உன் நினைவுகள் - எனக்கென்றும்
ஈரலிப்பே!
------------------------------------------------------
விண் பிளந்து மண் தொடும் வேர்கள்
-----------------------------------------------------------
சில மௌனங்கள்
மூச்சுக்காற்றை சுருக்கிடும் கயிறுகள்!
புரிதலும் பிரிதலும்
அன்பின் யாசகங்கள் ஆனதில்.........
கண்ணீருறிஞ்சும் கைக்குட்டையாய் நீ
-------------------------------------------------------
நம் விழிகள் நான்கும் சந்திக்கையில்
உதடுகள் உச்சரிக்கும் கவிதை "முத்தம்"
சத்தங்கள் சந்தமாகும் போது
மனங்களில் மகிழ்வூறி.........
இசையொன்று ஓசையெழுப்பும் அன்பை
ஆழ் நினைவுக்குள் நகர்த்தி!
- Ms. Jancy Caffoor -
Subscribe to:
Posts (Atom)