About Me

2019/06/23

கனவு தேவதையே




நட்சத்திர கீறல்கள்
வீழ்ந்தன புன்னகையாய்!

புல் நுனி கழுவும்  பனியோ
தள்ளாடி வீழ்ந்தன  கன்னவோரம்!

வியர்வையின் ஈர வீரியம் கண்டு
அயர்ந்தன மேனி யிதழ்கள் துவண்டு!

வானவில்லின் சாயம் கரைந்து
வழிந்தது இடை நெருக்கும் மெல்லாடையாய்  !

நறுமணம் பூசும் தென்றல் கெஞ்சும்
சுவாசம் கொஞ்சிப் பேச!

இமையோரம் வெட்கிக் குனியும்
விழியின் சிறகடிப்பின் மோகம் கண்டு!

விரல் வருடும் ரேகை கழன்று
வரிகள் வரையும் உனை நினைந்து!

காதல் தேவதை யுனக்காய் என் தேசம்
காத்திருக்கும் ஏக்கங்கள் பல சூடி!

உன்னால்



நட்சத்திரம் விழித்திருக்கும்
பால்வெளியில்............
விழிகளைத் தாக்கும்
ஒளி வருடலாய் நீ!

பனி படர்ந்த போர்வையில்
முத்தென............
முத்துமிட்டுச் செல்லும் வியர்வைத்துளிகளாய்
உன் நினைவுகள்!

இப்பொழுதெல்லாம்
அடிக்கடி
உன் ஞாபக வரிகளை
வாசிக்கும் போது ..............
காயமாகின்றன என் விழிகள்!

என் விரல்களைப் பார்......
உனக்கு கடிதங்கள் எழுதி எழுதியே
ரேகைகள்
காணாமற் போயின!

உன் நினைவுப் பேரலையில்
வீழ்ந்து தவிக்கையில்
சுவாசம் கரைக்கின்றேன் - என்
வாசத்தை விற்றவளாய்!

கொல்லாதே- எனை
அணுவணுவாய் கொல்லாதே!
எஞ்சிய காலத்திலாவது
கொஞ்சம் வாழ வரம் கொடு!......

உன்னை இப்பொழுதெல்லாம்
யாசிக்கின்றேன் ..........
அனுமதிப்பாயா...........
அவசரமாய் உன் ஞாபகங்களை
பெயர்த்தெடுக்க!

கொஞ்சம் பொறு



கொஞ்சம் பொறு......
உன்
சிரிப்பை பெயர்த்து
சலங்கையாக்கப் போகின்றேன்!

கொஞ்சம் பொறு.......
உன்
பார்வையைத் திண்மமாக்கி
பனிக்கட்டியாத்
தூவுகின்றேன்!

கொஞ்சம் பொறு.......
உன் குரலலையின்
அதிர்வை
காற்றினில் கோர்க்கின்றேன்
மெல்லிசையாய்!

கொஞ்சம் பொறு........
உன் நிறத்தைப்
பிரதியெடுத்து
நிலாவை முலாமிடப் போகின்றேன்!

கொஞ்சம் பொறு......
சிப்பிகள் சினக்கின்றன- தம்
முத்துக்கள்
உன் னுதட்டினில்
சிறை வைக்கப்பட்டிருப்பதாய்!

சொல்லி விட்டுப் போ...........
உன் சுவாசத்திலும்
பூவாசம் - நீ
பூவை என்பதாலா!

திருமணம்



வாழ்க்கைப் பாதைக்காக
தீர்மானிக்கப்பட்ட பயணம்!

கருவறைத் தரிப்புக்களுக்காய்
வழங்கப்பட்ட அனுமதி!

தனிமைச் சாளரம் தாழ்பாளிட
ஈர் மனந் திறக்கும் மங்களச் சாவி!

சரீரம் வருடி சாரீரம் தொடும்
இன்னிசை!

தாலியால் வேலியிடப்படும்
உறவுச்சாலை!

சம்பிரதாயங்களின் முகவுரையோடு
எழுதப்படும் காவியம்!

ரொக்கத்தின் கனத்தில்
இருவரிணையும் சங்கமம்!

வழித்தோன்றலின் வழிவிடலுக்காய்
வாழ்த்துத் தூவும் பூமாலை!

ஆயுள் மன்றத்தில் ஓர்முறையே
அரங்கேற்றப்படும் ஈர் மனக் கவிதை

கண்ணீரும் வெந்நீரும் பன்னீரும்
வழிந்தோடும் நீரோடை!

வாலிப வித்தைகளைக்
கட்டிப் போடும் கடிவாளம்!

கனவுச் சிறகறுத்து மனசை
நனவுக்குள் வீழ்த்தும் தேர்வுமையம்!

நான் நீயாகி........நீ நானாகும்
மனசின் மந்திரப் பிரகடனம்