கஞ்சத்தனமேது இன்பங்களை நிதம் சுவைப்பதற்கே
வெஞ்சினம் அறியா பிஞ்சு வயதும்
கொஞ்சி மகிழ்ந்தன கரங்களில்; பொம்மைகளை
சோலை யிலாடும் மலர்களாய் நானும்
காலைக் காற்றில் சிறகுகள் வீசி
இலைகளில் ஒளிந்து மறையும் வண்ணப்பூச்சிகளை
அலைக்கழித்தே பிடித்த வீரமிப்போ வெட்கத்தில்
கற்றிடும் பாடங்கள் இடைநடுவே களவாய்
சொற்களைக் கோர்த்தே புனைந்திட்ட கவிகள்
கற்கண்டு நட்பினர் விழிகளில் மொழியாய்
தொற்றிய சிரிப்பும் வதையாகி இனிக்கும்
கடலோசை குவிந்து குழையும் மணலில்
தடம் பதித்தும் அழித்தும் விளையாடும்
உடலும் நனையும் ஈரமாய் குறும்பும்
உணர்வில்; கலந்த நொடிகள் மறந்திடுமோ
ஜன்ஸி கபூர்