About Me

2012/07/11

பெருமிதம்


ஒவ்வொரு பொழுதுகளும் அழகாகத்தான் விடிகின்றன. குருவிகளின் இசைச் சுரங்களின் இனிமையில் மனம் வீழ்ந்திடத்தான் துடிக்கின்றது.இருந்தும் அந்தக் கொடுப்பனையில்லாத பாவி மகளாய் இந்தப் புவிப் பரப்புக்குள் வீழ்ந்து கிடக்கின்றேனே!.

பாசம் தர உறவிருந்தும் சிறகறுந்த சின்னச் சிட்டாய் சோக முற்றத்தில் விளையாடிடும் கண்ணீர் வாழ்வின் மொத்த உருவமாய் நான்!

" அப்பா"

எனக்குள் ஓர் உருவமும் உயிரும் கொடுக்கக் காரணமாய் இருந்தவர். எல்லாப் பிள்ளைகளைப் போல் எனக்கும் ஓர் அன்பான அப்பா இருக்கிறார். மனசு சொல்லத் துடித்த கணங்கள் பற்பல. ஆனால் ஏனோ வார்த்தைகள் சிறைப்பட்டு வெளியேற மறுக்கின்றது.

நான் வாழ்க்கையைக் கற்றுக் கொண்டதே அவரிடமிருந்துதான்..எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அவர் தந்த அனுபவங்களே என்னைச் செதுக்கியிருக்கின்றன. என் வயதை விட அனுபவச் செறிவின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதனாலோ என்னவோ நானும் சராசரி பெண்ணாய் இல்லாமல் இன்னும் இன்னும் வாழ்வின் தன்மையைப் படிக்க பல தேடலுக்குள் உள்ளிறங்கித் தேடுகின்றேன்..

அப்பா........!

இப்புவியில் உங்கள் பிள்ளையாய் நான் பிறந்ததால் என் வயதையொத்த பெண்கள் தொலைத்த எல்லாவற்றையும் என்னுள் நிரப்பி அதிசய பெண்ணாய் அடுத்தவர் என்மீது வீசும் புதிர்ப் பார்வையையும் சுமந்தபடி விதி வழியே போகின்றேன்.....

வாழ்வின் அழகிய பருவம் மழலைப் பருவம்....அம்மா அடிக்கடி சொல்வார்....தாங்கள் திருமணமாகி பல வருடங்கள் தவமிருந்து பெற்ற பிள்ளையாம் நான்... என்னுள் தந்தையின் முகச் சாயல் அதிகமாய் இருப்பதால்  அப்பாக்கு என் மீது கொள்ளைப் பிரியமாம்........பல நாட்கள் என்னைத் தோளிலிட்டு பாட்டுப் படித்து நீங்கள் தூங்க வைத்ததும் சின்னச் சின்ன ஞாபகங்களாக இன்னும் நெஞ்சக் குழியில் இறங்கிக் கிடக்கின்றன..

நான் சின்னவளாய் உங்கள் நெஞ்சை உதைத்த போது கோபங் கொள்ளாமல் ரசித்த சராசரித் தந்தையாகவும் இருந்ததை எண்ணி என்னுயிர்க் கணுக்கள் ஒரு கணம் மகிழ்வோடு தம்மை மறந்து உணர்ச்சிவசப்படுகின்றன....

அப்பா

உங்களை நான் நல்ல பாடசாலை அதிபராக, கலைஞனாக, எழுத்தாளனாக , சிறந்த ஓவியனாக கண்டு ரசித்துள்ளேன். ஒரு மருத்துவனாக, தொழினுட்பவியலாளனாக, பொறியியலாளராக, நல்ல ஆலோசகராகவும் கண்டு பெருமிதப்பட்டுள்ளேன். யாருக்கிந்த கொடுப்பனை கிடைக்கும். நீங்கள் பல் துறை வேந்தர். 

கல்வி கற்றவர்கள் கூட உங்கள் ஆங்கிலப்புலமை கண்டு மெச்சாத நாள் உங்கள் வாழ்க்கையில் குறைவென்று தான் சொல்லுவேன். உங்கள் அந்தத் திறமைகள் தான் பாரம்பரீய வழியாக என்னையும் ஆட்கொண்டு நானும் ஏதோ கல்வித் துறைக்குள் என்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளேன். நன்றி தந்தையே !

 
 
ஜன்ஸி கபூர் 
  



No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!