About Me

2012/08/29

அநுராதபுரத்தின் முதுசொம்


அநுராதபுரத்தில் சேவை செய்து, ஓய்வுபெற்ற அரச ஊழியர்களை கௌரவிக்கும் விழாவில் (25.08.2012) வெளியிடப்பட்ட  விழா மலரே " அநுராதபுரத்தின் முதுசொம்" ஆகும்.

"முதுசொம் " எனும் சொல்லின் அர்த்தம் எனக்குப் புரியாத நிலையில், இது தொடர்பாக மலராசிரியர் ஜவஹர்ஷா சேரிடமே வினவினேன். அதற்கவர் "பரம்பரைச் சொத்து" எனும் பொருள்படுவதாகக் கூறினார்.

"முதுசொம்" எனும் மிகப் பொருத்தமான மலர்த் தலைப்புடன் , அநுராதபுர நகர மக்களின் பரம்பரைச் சொத்துக்களான கலை, இலக்கிய, பண்பாடு, அரசியல் , சமூகம், ஆன்மிகம் தொடர்பான தகவல்களை முன்வைக்கின்ற, கடந்த கால நிகழ்வுகளின் பிரதிபலிப்பாக பரிணமிக்கின்ற இம் மலர் பல விடயங்களைத் தன்னத்தே பதித்துள்ளதென்பது வெள்ளிடைமலை! இம் மலரானது, அதன் செலவில் மட்டுமல்ல, அதன் உள்ளடக்கத்திலும் கனாதியானது. மிகப் பெறுமதியானது.

இது காலத்தால் அழிவுறாத ஆவணமாகையால், மலராசிரியர் கலாபூஷணம் அன்பு ஜவஹர்ஷா சேரின் அநுராதபுர நகரின் வரலாறு தொடர்பான ஒவ்வொரு நுணுக்கமான தேடலும்,  இம் மலரின் பதிவுகளின் ஒவ்வொரு வரிகளிலும் கலக்கப்பட்டு, வரலாற்றின் தெளிவான வெளிப்பாடாகி, எம்மை பிரமிக்க வைக்கின்றது.

சில அரிய புகைப்படங்களை தன்னகத்தே கொண்ட முகப்பட்டையே இங்கு நுழைவாயிலாகி,   எம்மையும் இம் மலரின் பயணப் பாதையில் சுவடுபதிக்க அழைத்துச் செல்கின்றது.

மலரை விரித்ததும் உள்ளே முதற்பக்கத்தில்  விழா ஒழுங்குக் குழுவினரின் புகைப்படமும், விழாக் குழுவினரின் விபரமும் அதனைத் தொடர்ந்து வாழ்த்துச் செய்திகளும் இடம்பெற்றுள்ளன.

பிரதம அதிதி வைத்தியக் கலாநிதி முஸ்தபா ரயிஸ் அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியில், " இப்பிரதேசத்தின் மகத்தான பணிகள் புரிந்த பலரை தற்போதைய, எதிர்கால சந்ததியினருக்கு அறிமுகம் செய்து வைக்கும் ஆவணமாகவும் முதுசொம் மிளிரும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

விழாக்குழுத் தலைவரான அல்ஹாஜ் எச். எஸ். ஏ.முத்தலிப் ஜேபி அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியில், "தாய்மொழியையும் தமது கலாசாரத்தையும் படித்துக் கொடுத்து, கல்விக்கு வித்திட்ட கல்விமான்களையும், ஆங்காங்கே மஸ்ஜித்துக்களையும் குர்ஆன் மத்ரஸாக்களையும் அரும்பாடுபட்டு அமைத்து, மார்க்கத்தை வளமுடன் நிகழச்செய்த சன்மார்க்க சீலர்களையும், சமூகத்தின் எழுச்சிக்கும் உயர்ச்சிக்கும் அயராது உழைத்த திணைக்கள, கூட்டுத்தாபன உத்தியோகத்தர்களையும் வாழ வாழ்த்தி கண்ணியப்படுத்துதல் கடனும் கடமையும் பொறுப்பாகும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

விழாக்குழு செயலாளர் எம்.ஏ.எம்.டில்ஷான் தனது வாழ்த்துச் செய்தியில்,

 "ஒவ்வொரு  பிரதேசங்களிலும் இதுபோன்ற கௌரவிப்புக்கள் நடைபெறுவதானது, கல்வி ரீதியாக நாம் எவ்வளவு பண்பட்டுள்ளவர்களென்பதையும்,  அரசாங்கத்திற்கு எந்தளவு எம் ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளோம் என்பதையும் விளக்குவதோடு எதிர்கால நம் சந்ததிகளுக்கும் சிறந்ததொரு எடுத்துக்காட்டுமாகவும் இருக்கும்"  

என்று குறிப்பிட்டுள்ளார்.

விழாக்குழு பொருளாளர் வடமத்திய மாகாண தமிழ்ப்பிரிவு கல்விப்பணிப்பாளர் ஜனாப்  ஈ. பீர்முஹமட்  Sir , அவர்கள் , தனது வாழ்த்துச் செய்தியில் "ஒரு இனத்தின் வளர்ச்சியையும், நாகரீகத்தையும் அறிந்து கொள்வதற்கு உதவியாய் அமைவது அவர்களின் வரலாற்றுப் பதிவாகும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொகுப்பாசிரியர் அன்பு ஜவஹர்ஷா சேர் அவர்கள் , தனது செய்தியில் " ஓய்வு பெற்றவர்களை கௌரவிக்கும் இந்த கௌரவிப்பு விழா மலருக்கு "அநுராதபுரத்தின் முதுசொம்" என்று தலைப்பிட்டமைக்குக் காரணம், இவர்களின் தகவல்களோடு கிடைக்கக்க;டியதாக சில ஆவணங்களையும், எதிர்கால வரலாற்றுத் தேவைகளுக்காக ஆவணமாக்கி உள்ளபடியால் இந்நூலின் உள்ளடக்கத்திற்காகவே இவ்வாறு தலைப்பிடப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேற்கூறப்பட்ட வாழ்த்துச் செய்திகளில் 'முதுசொம்' மலரின் முக்கியத்துவமும், இக்கௌரவிப்பு விழாவின் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளன.

வாழ்த்துரைகளைத் தொடர்ந்து , பல்வேறு திணைக்களங்களில் சேவையாற்றி ஓய்வுபெற்றுள்ள அல்லது மரணித்த எண்பத்தேழு அரச சேவையாளர்களின் பெயர்ப்பட்டியலொன்றும் , அவர்களின் புகைப்படங்களுடன் அவர்கள் பற்றிய சுருக்கமான அறிமுகமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

1992 ஆண்டு இங்கு நிகழ்த்தப்பட்ட தேசிய மீலாத்விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட  மீலாத் மலரில் பிரசுரமாகியிருந்த இரண்டு கட்டுரைகள், இம் மலரில் மீள ஞாபகப்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றுள் ஒன்று திறந்த பல்கலைக்கழக சிரேஷ்ட போதனாசிரியர் ஏ.பி.எம்.ஹூசைன் அவர்களின் "அநுராதபுரத்தில் முஸ்லிம்கள்" எனும் கட்டுரையாகும்.

கி.மு 6ம் நூற்றாண்டில் விஜயனின் வரலாற்றுடன் ஆரம்பமாகும் இலங்கை வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே , இலங்கையில் அராபியர், பாரசீகர், எகிப்தியர் எனும் முஸ்லிம்களின் வழித்தோன்றல்கள்  வாழ்ந்ததற்கான , வர்த்தக நோக்கத்திற்காக பயணத்ததிற்கான சான்றுகள் உள்ளன எனக் கூறி, அச்சான்றுகளையும் இவர் இக்கட்டுரையினூடாக முன்வைத்துள்ளார். முஸ்லிம்கள் அநுராதபுர நகரின் திசாவெவகம, பொன்னாரங்குளம், கும்பிச்சங் குளம், ஆமன்னரத்மல, நாச்சியாதுவ ஆகிய பிரதேசங்களில் தமது ஆரம்ப குடியிருப்புக்களை நிறுவினர் எனத் தொடரும் இவரது  கட்டுரை இன்னும் பல விடயங்களை முன்வைக்கின்றது.

மேலும் அநுராதபுரத்தை ஆண்ட  பண்டுகாபய மன்னன் தொடக்கம் பல மன்னர்கள் அரேபியர்களுடன் கொண்டுள்ள வர்த்தக தொடர்புகள் பற்றியும் இக் கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளது. அக் கால கட்டத்தில் கச்சுத்தோட்டம், இசுறுமுனி, வெஸ்ஸகிரிய, ஒட்டுப்பள்ளம், திசாவெவகம, மிரிசுவெட்டி போன்ற இடங்கள் முஸ்லிம்களின் குடியிருப்புக்களாக விளங்கின. சிங்கள மன்னரின் கீழ் "விதானை"யாக சேவையாற்றிய "முத்து விதானை அசனார் " என்பவரின் வீட்டிலுள்ள இரு கற்றூணில் அவரது பெயர் முதலெழுத்துக்களைக் குறிக்கும்  "மு.அ" எனும் தமிழ் ஈர் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

அரசனின் முகாந்திரமாக அநுராதபுரத்தைச் சேர்ந்த "பிச்சைத் தம்பி" என்பவர் கடமையாற்றியுள்ளார். அரசரால் இவருக்கு வழங்கப்பட்டு வந்த சீருடை இடைவாள், அரண்மனைச்சின்னம் பொறிக்கப்பட்டுள்ள கௌரவ வாள் என்பன இன்னமும் இவரது பரம்பரையினரால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன எனும் செய்தியும் கட்டுரையாசிரியரால் முன்வைக்கப்பட்டுள்ளது. இச் சீருடை, வாள் என்பவற்றின் புகைப்படங்களும் இம் மலரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அன்று அநுராதபுரத்தில் வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் ஐந்து குடும்பப் பெயர்களுடன் வாழ்ந்து வந்ததாகவும், இவர்களை வரலாற்றாசிரியர்கள் "பஞ்சகூட்டத்தினர்" எனக் குறிப்பிடுவதாகவும் அவரது தகவல் மேலும் சுட்டிக்காட்டுகின்றது. 

இவ்வாறு அநுராதபுர மக்களின் இருப்பை, வாழ்வியலை கட்டுரையாசிரியர் பல கோணங்களினூடாக ஆதாரபூர்வமாக முன்வைத்துள்ளார்.

ஆன்மீகப் பணிக்காக இந்தியாவிலிருந்து வந்து அநுராதபுரத்தில் இறையடியெய்திய சிக்கந்தர் வொலியுள்ளாஹ் அவர்களின் ஒட்டுப்பள்ளித் தர்கா, நாச்சியாதுவ, நேகம, இக்கிரிகொல்லாவ போன்ற கிராமங்களின் புராதன தொடர்பும், மன்னர்களின் குளப்புனரமைப்புக்கள் காரணமாக வேறிடங்களுக்கு இடம்பெயர்க்கப்பட்ட முஸ்லிம்களின் குடிப்பெயர்ச்சி பற்றிய தகவல்களும்,  காதல் கொண்ட மன்னன் எனும் தலைப்பில் சிங்கள மன்னன் காதலுற்றதால் தன்னுயிரை நீத்த முஸ்லிம் மந்திரியின் மகளின் சோக வரலாறும் ஆசிரியரால்  ஆராயப்பட்டுள்ளது.

ஆய்வு முகாமையாளர் எம்.எம். அலிகானின் "மறை(று)க்கப்படும் வரலாறு எனும் கட்டுரையில்,  சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலத்தில் அரசின் நடவடிக்கையின் பயனாக, முஸ்லிம்களின் பூர்வீக குடியிருப்புக்கள் பற்றிய தகவல்கள் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன என்பதற்கான ஆதாரங்களை முன்வைப்பனவாக உள்ளன. இக் கட்டுரையை வாசிக்கும் போது பல வரலாற்று உண்மை விடயங்கள் நம்மை அழுத்துகின்றன. எனினும் அவர்களின் ஆட்சிப்பலத்தின் முன்னிலையில் சிறுபான்மையினரின் பல சரித்திர உண்மைகள்  சாதுரியமாக மறைக்கப்பட்டுவிட்டன.

"முஸ்லிம்கள் பூர்வீகக் குடிகளல்லர், பிரித்தானியர் காலத்தில் கொண்டு வரப்பட்டவர்கள்"  எனும் போலிப் பிரச்சாரத்தினூடாக , தாம் மட்டுமே இப் பிரதேசத்தின் பிரதான பூர்வீக உரித்தாளிகள் எனும் கருத்தை ஆட்சியாளர்கள் அவ்வவ்போது தம்மின மக்கள் மனங்களில் விதைக்க முற்படுகின்றனர் எனும் எண்ண உள்வாங்கல்  இக்கட்டுரையை வாசித்த பின்னர் எம் மனதில் நிழலாடுகின்றது.

அநுராதபுர நகரின் முஸ்லிம்களின் இருப்பு தொடர்பான பல விடயங்களை இக்கட்டுரையும் விரிவாக ஆராய்ந்து பல உண்மைகளைக் கோடிட்டுக் காட்டுகின்றது.

"அநுராதபுரம் முஸ்லிம்கள் பல்வேறு பதிவுகள் "எனும் தலைப்பில் மலராசிரியர் ஜவஹர்ஷா சேர் அவர்கள் இந்நகரத்தின் முஸ்லிம்களை அடையாளப்படுத்தும் பல்வேறு சிறப்புக்களையும், முஸ்லிம்களாற்றிய சேவைகளைப் பற்றியும் சமயம், கல்வி, அரசியல், கலை இலக்கியம், விளையாட்டு, முஸ்லிம் மாதர்கள், அஹதிய்யா பாடசாலை, பொது எனும் தலைப்பின் கீழ் ஆராய்கிறார். நிச்சயம் இவ்வாராய்வுக்கான அவரின் தேடல் மிக நீண்டிருக்க வேண்டும். வரலாற்றுத் தொகுப்புக்களை வெளிவிடும் போது மிகவும்  ஆதாரபூர்வமான தகவல்களைக் கவனமாகப் பதிவிட வேண்டியுள்ளது. இங்கும் தகவல்கள் அந்தத் தனித்துவத்தைப் பேணி நுட்பமான முறையில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளது. சமய, கலை , கலாசார, பொருளாதாரப் பின்னணிகளுடன் இச்சமுகத்தின் வரலாற்று ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

1870 ம் ஆண்டு திசாவெவ குளத்தின் மத்தியில் காணப்பட்ட பள்ளிவாசல் உள்ளிட்ட பௌத்த மத வணக்கஸ்தலம் அல்லாத மத வழிப்பாட்டுத் தளங்கள் அகற்றப்பட்டன எனும் செய்தியொன்றும் இப் பதிவில் காணப்படுகின்றது. இவற்றுடன் அநுராதபுர பள்ளிவாசல்கள் ஒட்டுப்பள்ளம் தர்கா உள்ளிட்ட தற்போதைய பள்ளிவாசல் நிர்மாணம் பற்றிய தகவல்களையும் , அவற்றுடன் தொடர்புடைய பின்னணித் தகவல்களையும், மத்ரஸா, தக்கியா, அரபுக் கல்லூரிகளுட்பட்ட மார்க்கக் கடமைகளை மேற்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட  ஈமானிய முயற்சிகளையும் ஆதாரபூர்வமாக இவர் முன்வைத்துள்ளார்.

இம் மண்ணில் கலை இலக்கியச் சுவடு பதித்தவர்களின் பெயர்களும், அவர்கள் பற்றிய சிறு ஞாபகக் குறிப்புக்களும் தடம் பதித்துள்ளமை சிறப்பானதொரு அம்சமாகும். ஏனெனில் இலக்கியம் என்பது மனித வாழ்வியலின், பண்பாட்டின் கண்ணாடியாகும். இதனடிப்படையில் இலக்கிய கர்த்தாக்களான முஹம்மதி மீரா லெப்பை ஆலிம் சாய்பு, ஆ.லெ. உமர்லெப்பை ஆலிம் சாய்பு , அன்பு ஜவஹர்ஷா, எப். ஆர் பரீட்ஹ், எப்.எப். சப்ரினா,  ஜன்ஸி கபூர்,  எம். வஸீம் அக்ரம், மர்ஹூம் எஸ்.எச். எம் .ஸஹீர் சட்டத்தரணி போன்ற பலரின் எழுத்துப்பணிகளும் அடையாளப்படுத்தப்பட்டு காட்டப்பட்டுள்ளன.

அநுராதபுரத்திலிருந்து வெளிவந்த, வரும் சஞ்சிகைகள் பற்றிய குறிப்புக்களும் காட்டப்பட்டுள்ளன. அவையாவன:-

  • சிக்கந்தர் மகத்துவக்கும்மி (1928 -முஹம்மதி மீரா லெப்பை ஆலிம் சாய்பு,)
  • விதி-அறிவு-விளக்கம் (1938-முஹம்மதி மீரா லெப்பை ஆலிம் சாய்பு,)
  • கைபுட்சிக மாலை (உமர்லெப்பை ஆலிம் சாய்பு - அநுராதபுரத்தில் ​வெளியீடு)
  • தமிழ்மணி கையெழுத்துச் சஞ்சிகை (எம்.எஸ்.ஹூசைன்)
  • இளைஞர் குரல் (இரு ஆசிரியர்களுள் ஒருவர் மர்ஹூம் அமீர் சுல்தான்)
  • மாணவர் குரல் ( அண்டன் ஞானராஜா)
  • தமிழ்ச்சுடர் (ஆசிரியர்களுள் ஒருவர் அன்பு ஜவஹர்ஷா சேர் )
  • புத்தொளி (ஆசிரியர்களுள் ஒருவர் அன்பு ஜவஹர்ஷா சேர் )
  • வீரத் தமிழன் ( மர்ஹூம் எஸ்.எச். எம் .ஸஹீர் )
  • தேன்துளி ( மர்ஹூம் எஸ்.எம். ஸாலிஹ்)
  • பிறையொளி பாடசாலைச் சஞ்சிகை (அன்பு ஜவஹர்ஷா சேர் )
  • பொறிகள் ( அன்பு ஜவஹர்ஷா சேர் )
  • காவிகளும் ஒட்டுண்ணிகளும் -அன்பு ஜவஹர்ஷா சேர் 
  • அன்னை (எப். ஆர் பரீட்ஹ்)
  • அல் மதீனா (எப். ஆர் பரீட்ஹ்)
  • தொலைச்சுடர் ( ஜன்ஸி கபூர் )
  • அநுராகம் (ஜன்ஸி கபூர் , எப். ஆர் பரீட்ஹ், ஏ.பி.எம். அன்சார் )
  • படிகள் (எம். வஸீம் அக்ரம் )
1853 ம் ஆண்டில் இங்கு  பாடசாலைகள் 3 மாத்திரமே இருந்ததென்ற செய்தியுடன்  இவரது கல்வி பற்றிய பார்வை தொடர்கின்றது.  முதன் முதலாக எஸ்.எஸ்.சி சித்தியடைந்த மாணவர் எம்.எஸ். ஹூசைன் என்றும்,  முதல் பல்கலைக்கழக நுழைவு அவரது புதல்வி நூர் நிஹார் என்றும் தகவல்கள் இங்கு சுட்டி நிற்கின்றன. மேலும் மொஹம்மதியன் கொலேஜ், முஸ்லிம் வாலிபர் சங்கம் உருவாக்கம், அநுராதபுர ஸாஹிரா மகா வித்தியாலயம் உருவாக்கம் என்பவற்றின் பின்னணி பற்றியும்  நுணுக்கமாக ஆராய்ந்துள்ளார்.

அத்துடன் அநுராதபுரம் முஸ்லிம் சமுகத்திற்கு சேவையாற்றிய அல்ஹாஜ் யூ. அபூசாலி , அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலயத்திற்கு கட்டிடம் வழங்கல் மூலம் அளப்பரிய சேவையாற்றிய மர்ஹூம் அல்ஹாஜ் மொஹிதீன் தம்பி அமீர் சுல்தான் ( பாடசாலை விடுதி ), அல்ஹாஜ் அனஸ்தீன் (சிறுவர் நூலகம்) என்பவர்கள் நினைவூட்டப்பட்டதுடன், சீ.பி முகம்மது அவர்களின் ஞாபகார்த்தமாகக் கட்டப்பட்ட கட்டடம், பழைய மாணவர்களினால் உருவாக்கப்பட்ட ஆசிரியர் விடுதி , சிற்றுண்டிச்சாலை, மஸ்ஜிதுஸ் ஸாஹிரா பள்ளிவாசல் , பாடசாலை முன் முகப்பு என்பவற்றின் உருவாக்கப் பின்னணியில் உழைத்த பெருந்தகைகள் பற்றியும் இங்கு கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

விவேகானந்த தமிழ் மகா வித்தியாலயம், அநுராதபுரம் முஸ்லிம் கல்வி, கலாசார அபிவிருத்தி அமைப்பு , அநுராதபுரம் முஸ்லிம் கல்வி அமைப்பு ,அல் இஸ்லாஹ் பாலர் பாடசாலை, பிரிசம் (சமூக அபிவிருத்தி அமைப்பு) , அநுராதபுரம் சுதந்திர இயக்கம் (AIM) உள்ளிட்ட இம் மண்ணில் உருவாக்கப்பட்டு, இம் மக்களுக்கு சேவையாற்றிய, சேவையாற்றும் பல்வேறு அரசியல் , சமூக நிலையங்களும், சமூகப் பணியாளர்களும் பெயர் குறிப்பிடப்பட்டு  நினைவூட்டப்பட்டுள்ளனர்.

இம் மண்ணின் முதல் வைத்தியர் ரீ.எம். அஸ்மி , முதல் நிர்வாக சேவை உத்தியோகத்தர் ஓ.எல். அஷ்ரப் என்போரும் வரிகளில் அமர்ந்து கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

அரசியல் இல்லாமல் எந்தச் சமூகமுமில்லை என்ற முன்னுரையுடன், இவரின் அரசியல் பார்வை தொடர்கின்றது. காதர் சாய்பு செய்யது அஹமட், எல்.ஏ. மஜீத் (ஜே.பி) , அப்துல் ரவூப் (ஜேபி) , சட்டத்தரணி எஸ். நடராஜா, திரு ஆர். வி. கந்தசாமி, அப்துல் வாஹித் அப்துல் சலாம் , மொஹமட் அன்சார் (ஜே.பி) , ஏ.சி ராவுத்தர் நெயினா முஹமட் போன்றோரும், அவர்கள் சமுகத்திற்கு ஆற்றிய சேவைகளும் இக் கட்டுரை வாயிலாக நினைவுபடுத்தப்பட்டுள்ளன.

எழுத்துத் துறையில் மட்டுமல்ல நாடகம், ஊடகம் போன்ற துறைகளிலும் அநுராதபுரத்தை பிறப்பிடமாகக் கொண்டவர்கள் பங்களிப்புச் செய்துள்ளனர். அவர்களுள் நாடகத் துறையில் மர்ஹூம் அமீர் சுல்தான் அவர்களும் , ஊடகவியலாளராக அன்பு ஜவஹர்ஷா சேர் அவர்களும் ITN தொலைக்காட்சி அறிவிப்பாளராகவும், நாடகக் கலைஞராகவும் செயற்பட்ட உவைஷ் ஷெரீப் அவர்களும் சிரச ஊடகவியலாளருமான எம்.எம். றிஸ்வி அவர்களும் மர்ஹூம் ரிஸ்மி மஹ்ரூப் அவர்களும் ஊடகவியலாளர் ஆர். எம். தாரீக் அவர்களும் முதன்மைப்படுத்தப்படுபவர்களாவார்கள்.

இவர்களைப் போலவே சமூகத்திற்கு பங்களிப்புச் செய்யப்பட்டுள்ள முஸ்லிம் மாதர்களும், விளையாட்டுத் துறையினரும் இம் மலரின் தடத்தில் பெயர் பொறிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் மார்க்க அறிவை சிறார்களுக்கு வழங்கும் அஹதிய்யாப் பாடசாலையின் சேவையும், அவற்றின் பின்புலத்திற்கான காரணங்களின் ஆராய்வும் இக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறான நீண்ட தேடல்களின் பின்னணியில் பெறப்பட்ட தகவல்களை "அநுராதபுரம் முஸ்லிம்கள் பல்வேறு பதிவுகள்" எனும் பதிவினூடாக அன்பு ஜவஹர்ஷா சேர் அழகாகவும் சிறப்பாகவும் பதிவித்து, நமக்கொரு சிறந்த வரலாற்று ஆவணத்தை தந்திருக்கின்றார். தர முயற்சித்திருக்கின்றார்.

இப் பதிவுகள் நீங்கலாக சில தகவல்களும் புகைப்படங்களும் பின்னிணைப்புச் செய்யப்பட்டுள்ளன. 1950ம் ஆண்டு வரை அநுராதபுர புனித வளனார் கல்லூரி, அநுராதபுரம் விவேகானந்தா தமிழ் கல்லூரி, ஸாஹிரா மகா வித்தியாலயத்தில் கற்றவர்கள் பெயர் விபரங்களும், அக்காலங்களைச் சுட்டும் சில பிறப்பத்தாட்சி பத்திரங்களின் பிரதிகளும், அநுராதபுரத்தில் முஸ்லிம் குடியிருப்புக்களைக் காட்டும் இட அமைவு வரைபும், சில மலர்களின் முகப்பட்டைகளும் உள்ளிட்ட பல நிகழ்வுகளின் அரிய ஆவணப் பதிவுகளின் நிழல்படங்களும் புகைப்படங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

அநுராதபுர முஸ்லிம்களின் வரலாற்றை சிறப்பாகத் தொகுத்துத் தரும் சிறப்பான பதிவே  இவ் "அநுராதபுரத்தின் முதுசொம்"  என்றால் மிகையில்லை. எனினும் ஓரிரு இடங்களில் அச்சுப் பிசாசின் எழுத்துப் பிழைகளும் அவதானிக்கப்பட்டாலும் கூட, அவை தவிர்க்கமுடியாதவை. குறைகளல்ல..இந் நல்ல முயற்சியை பலகீனப்படுத்தும் எந்தக் குறைபாடுகளையும் நான் அவதானிக்கவில்லை. சிறப்பும், நிறைவுமே என் கண்முன்னில் விமர்சனமாகி வீழ்கின்றன.

தனி மனித வாழ்வில் பிறப்பிடம், இருப்பிடம் எனும் இருதாங்கல் மிக முக்கியமானதாகும். அந்த வகையில் நான் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டாலும் கூட, இரு தசாப்தங்களுக்கு மேலாக எம்மையும் இருப்பிடமாகித் தாங்கி நிற்கும் இவ் அநுராதபுர பூமியினதும், முஸ்லிம் மக்களினதும் சிறப்புக்களை நானும் மிக நேசத்துடனும், அக்கறையுடனும் உள்வாங்கியவளாக எனது மலர் பற்றிய பார்வையை நிறைவு செய்கின்றேன்.

அல்ஹம்துலில்லாஹ்!

Jancy Caffoor









                                                                                                                   

2 comments:

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!