About Me

2012/10/18

முட்தேசம்

















ஓசோன் படை

Image result for ஓசோன் படை

புவியைத் தாங்கி நிற்கும் தூண்கள் வளிமண்டலமாகும்.  ஒட்சிசன் அணுக்கள் மூன்று விசேட முறையில் ஒன்றிணையும் போது ஓசோன் படை உருவாகின்றது. இது படை மண்டலம்,  புவியின் மேற்பரப்பிலிருந்து 15 தொடக்கம் 40 கிலோ மீற்றர் தூரத்தில்  உள்ளது.

இவ் வோசோன் படையை 1920ம் ஆண்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். உலகிலுள்ள உயிர்கள் நிலைத்திருக்க இவ்வோசோன் படை அவசியமாகின்றது. சூரியனிலிருந்து வெளியேற்றப்படும் புற ஊதாக் கதிர்களை புவியுறிஞ்சாமல் தடுக்கும் கவசமாக இது தொழிற்படுவதால், மனித உயிர்களுக்கு பல தீங்குகள் ஏற்படாமல் தடுக்கப்படுகின்றன.

1974 ம் ஆண்டு  சேர்வூட் ரொலன்ட் மற்றும் மரியா மொலினா என்போர் மனித செயற்பாடுகள் காரணமாக ஓசோன் படை தேய்வடைவதாகக் கண்டறிந்தனர்.
உண்மையில் புவியின் வளிமண்டலத்தின் அதிகளவு இடத்தைப் பிடித்திருக்கும் இவ்வோசோன்  படைச் சிதைவினால்  புவிச்சூழலின் வளிமண்டலத்தில் மாற்றங்கள் பல நிகழ்கின்றன. கண் நோய்கள் மற்றும் சுவாசத் தொகுதி சார்பான பிரச்சினைகளும் தோல் புற்று நோயும் ஏற்படுகின்றன.

புற ஊதாக் கதிர் வீச்சினால் தாவர உற்பத்தி வீழ்ச்சியடைகின்றன. சமுத்திர உணவுவலைத் தொடக்கியான பிளாந்தன்கள் பாதிப்பினால் உணவுற்பத்தி குறைந்து மீன்கள் உற்பத்தியும் அழிவடைகின்றன.

ஓசோன் படைத்  தேய்வுக்கு, மனித உற்பத்தியாக வெளிவரும் ஓசோனைச் சிதைக்கும்  இரசாயனப் பொருட்களே  காரணமாகின்றன. இவ்விரசாயனங்கள் விவசாய, கைத்தொழில் நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்படுகின்றன. குறிப்பாக குளோரோ புளோரோ காபன், காபன்  தெட்ரா குளோரைட் , ஐதரோ குளோரோ புளோரா காபன் போன்றவை மேல் வளிமண்டலத்தினை அடைந்தவுடன்  சக்தி வாய்ந்த அணுக்களான குளோரின், புளோரின் போன்றவற்றை  பகுதி பகுதியாக வெளியிடுகின்றன. இவ்வணுக்கள் தாம் சேதப்படாமல் பிற பொருட்களைச் சேதப்படுத்தும். எனவே இவ்வாறான பொருட்கள் வெளியேற்றப்படாமல் தடுப்பதன் மூலம் ஒசோன் சிதைவைக் கட்டுப்படுத்தலாம்.

1980 ஆண்டுகளில் மிகையாகப் பயன்படுத்தப்பட்ட ஹலோனின் பாவனையின் அதிகரிப்பால், ஓசோன் படையில் துவாரமும் ஏற்படுத்தப்பட்டது.

இதனழிவுகளின்பால் கவனம் செலுத்தி ஓசோன் படையைப் பாதுகாப்பது நமது கடமையாகும். இதன் மூலம் உலகில் வாழும் சகல மக்களையும் காக்க முடியும்.

1985 ல்  ஓசோன் படைப் பாதுகாப்புக்காக வியன்னா மாநாடும், 1987 ல் ஓசோன் சிதைவைத் தடுக்கும் பொருட்கள் தொடர்பாக மோன்றியல் சாசனமும் வெளியிடப்பட்டது. இச்சாசனத்தில் கையெழுத்திட்ட நாடுகளின் எண்ணிக்கை 192 ஆகும். இதனடிப்படையில் இலங்கை உட்பட பல நாடுகள் CFC,ODS ,HCFC போன்ற பாவனையைக் கட்டுப்படுத்தின.

இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் ஓசோன் சிதைவை மட்டுமல்ல, புவி வெப்பமுறாது பாதுகாக்கவும் முடிகிறது..



- Jancy Caffoor-






2012/10/13

ஓ....மானிடா!


வண்ணப்பூச்சிகளின்
சின்னச் சிறகினில்.............
சிலுவையறையும் மானிடா!
செவி நுழைத்திடு- என்
ஆவேச வார்த்தை சில கேட்டிட!

உன்..........
சொப்பன ஒளியூட்டலுக்காய்.......
இன்னுமா
சீதன  நாவால்
பெண்மையை நக்கி........
சத்தியத்தின் இமைதனில்
சத்தமின்றி ஆணி அறைகின்றாய்!

வறுமைக் காதலால்
வனப்பைக் காவாக்கி.............
பள்ளியறை தொடாத இருண்ட
நிலவறைக்குள்.........
முதிர்கன்னியாய் மறைந்திருக்கும்
பல பெண் வாழ்வினில்- சீ
தனமே விதிக்குரலாய்
அரங்கேற்றப்படுகின்றதுன் இச்சையால்!

கன்னக் கதுப்பில்
கண்ணீர் கரைத்து........
விழிச்சிவப்பை இமைக்குள் மறைத்துப்
போராடும்
பெண் நிலாக்க ளென்றும்
சாம்பர் முகட்டுக்குள் பதுங்கும்
அமாவாசைகளோ உன்னால்!

வசந்தம் மறந்த தெருக்களாய்...........
வாலிபத்தை தனிமைக்குள்
ஏலமிட்டு....................வெறும்
ஏக்கத்தைச் செந்தணலில் குலைத்து
காத்திருக்கும் குமரிகள்- இன்னும்
கல்யாணச் சந்தையில் விலை போகாத
பண்டங்கள்!

நிறம் மாறும் வாழ்வினில்
பருவங்களைத் தொலைவில் நகர்த்தி............
ரணங்களால்
கனவுகளைக் காயமாக்க
காரணமாகும் அற்பர்களே!

உம் வாழ்க்கையை விலை பேசும்
தரித்திரர்களா நீங்கள்..........
சிந்தியுங்கள் ...........
உங்கள்  யதார்த்த நெருடலில்
எமக்கான  நிந்திப்புக்களை!

அன்பை மட்டுமே யாசிக்கும்
ஆடவனுண்டோ
இவ்வுலகினில்!
ஈரம் உதிர்க்கும் கண்ணீரை
உறிஞ்சியெடுக்கும் உத்தமனாய்..........
ஊர் போற்ற
எவனுண்டு - பெண்ணவள்
ஏக்கம் கலைத்து - அவள்
வாழ்வைப் பேணிட!

பெண்ணவள் ..........
விடியலின் குரலுக்காய்
விழிபார்த்து.......................
காத்திருக்கும் காத்திருப்புக்களை
காமுகர்கள் எச்சில்படுத்த முனைகையில் !

பணத்தின் மாயைக்குள் வீழ்ந்திருக்கும்
மானிடங்கள்.........
வெறும் விமர்சனங்களால்
மட்டுமே
அனுதாபங்களைத் துப்பிச்செல்லும்!

இன்னுமா மயக்கம்.....!

மானிடா..............
உன் சுரண்டல்களால் உருக்குலைந்த
பெண்ணவளுக்குள் வாழ்க்கை பூட்டு
அதுவே போதும் - உன்
ஆண்மையின் அடையாளமாய்!


2012/10/12

உனக்கான கவிதைகள்


நாட்காட்டி கிழிக்கப்படுகின்றது
நாடி நரம்புகளில்
மின்சாரம் பாய்ச்சுது உனக்கான
என் நினைவுகள்!

உதடுகளை நசித்து
வெளியேற்றப்பட்ட  என் வார்த்தைகள்.......
மொழிபெயர்க்கப்படுகின்றன
அழகானவுன் பெயராய்!

உன் சுயம் நானானதில் - என்
சுற்றுப்புறங்களெல்லா முன் தேடலில்
வீழ்ந்து முரண்படுகின்றன
உன் காதலின் ஆழம் புரியாமல்!

மனசைத் தட்டிப் பார்க்கின்றேன்.........
தரிப்புக்களாய் உன்
அந்தரிப்புக்கள் ................
ஏக்கத்தையும் பிணைந்தபடி!

இரவின் மௌன வாசிப்புக்களில்
எனை நீயுறிஞ்சி
கனவுகளால் மோகிப்பதால்
நிதமும்
கருத்தரிக்கின்றேன்
உன் கவிக்குழந்தைகளைப் பிரசவித்தே!

என்............
விரல் பற்றி
நீ பயணிக்கும் சாலையெங்கும்.........
காற்றின் துளைகளிலும்
காதலின் சுகமப்பிச் செல்கின்றது
நம்மை அணைத்தவாறு!

என் வாழ்க்கைப் பிரமிட்டுக்களின்
ஒவ்வொரு அணுக்களும்....................
அணு அணுவாயுன்னைச் சேமித்தே
ரசிப்பில்
உறைந்து கிடக்கின்றது
உன்னுடன் வாழ்ந்தபடி!

நினைவுகளில்
மிருதுவாய் யென்னைத் தழுவி..............
ஸ்பரிசங்களால்............
செல்களை புல்லரிக்கும் நீ!

செல்களிலுன் குரலை
நிரப்புகையில்.........
பல நிமிடங்கள் மறந்து
காற்றலைகளுடன் மோதல் செய்கின்றேன்
நம் சமுத்திரங்களின்
எல்லைச்சுவரை கரைக்கும்படி!

உனக்கான என் கவிதைகளை
கவர்ந்தெடுத்து வா!
தாஜ்மஹாலின் படிவுகளாய்
நாமும் வீழ்ந்து கிடக்கலாம்
காலத்தின் மடிகளில்!






2012/10/11

இமைக்க மறுத்த விழிகள்


சூரிய தீப்பந்தமொன்று
மெதுவாய் அணைந்த பிரமை
எனக்குள்!

வெட்ட வெளிகளின் பசுமையில்......
ஒட்டிக்கொண்டது வெம்மையின்
பிசுபிசுப்பொன்று!

என் பேனாக்கள்
பயணித்த வரம்போரங்களெல்லாம்.........
முள்வேலியாய்
ஈரம்சொட்டுதுங்கள் மௌன யாகம் !                          

வண்ணச்சிட்டுக்களுக்காய்
பா விசைத்து ...........
களிப்பால் பறக்க வைத்த வுங்கள்
சிறகுகளில்  யாரிட்டது மரணச்சிலுவை !

எழுத்தணியில்
அழுத்தமாய் முற்போக்கு நுழைத்து.........
இலக்கிய வேள்விக்குள்
இரசனையோடு யதார்த்தம் நுழைத்த
நீங்களின்று..............
இரகஸியமாய் சுவாசமறுத்தே
மீளாத்துயிலுக்குள் நிரம்பிக் கொண்டீர்கள்!

வெள்ளிச்சிறகடித்த வுங்கள்
வெண்புறாவோ..............
இன்று
சுதந்திரமாய் தேசம் தொடுகையில்.........
தொலைதூரத்தி லும் வுரு துறந்து
ஏதுமறியாத குழந்தையாய் நீங்கள்!

தினகரன்
புதுப்புனலில் தடம் நெய்து - எனை
புதுவுலகில்   நிலைநாட்டிய
உங்கள் ........
பேனாக்களின் ஈரலிப்பினை
உலர்த்தியது யாரோ!

எனை வார்த்த வுங்கள்
இலக்கியச்சாளரம்
சாய்ந்துதான் போனாலும் - என்
விழிச்சாரளத்தின்
விம்ப வெளியெங்கும்..........
உலா வருகின்றதே - உங்கள்
ஆசிபெற்றவென்
இலக்கிய நீரோடையின்று !

உதிர்ந்து விட்ட பல வருடங்கள்
இன்னும் நேற்றுப் போல்...................
நெஞ்சிலாணி யறைந்தே செல்கின்றது
உங்கள் ஞாபகங்களை
இலக்கியங்களாய்ப் பரப்பி!

உங்கள்.........
மரணத் தூரிகையின் வடு
இன்னும் என்னுள்
உலராத மேடுகளாய் வலிப்புடன்
விட்டுச் செல்கின்றது வெடிப்புக்களை!

மீள வரமாட்டீர்கள்!
புரிகிறது - இருந்துமென்
பதிவுகளின் ஸ்பரிசிப்பெல்லாம்.........
குருதாட்சணையாய்
உங்கள் ஞாபகத்தில் தொக்கி நிற்கும்
நல்ல மாணவராய்!

- Ms.A.C.Jancy -


(காலம் சென்ற எழுத்தாளர்  ஸம்ஸ் சேர்..............அவர்கள்!

முன்னர் தினகரன் பத்திரிகையில் (சனிக்கிழமையில் )பிரசுரிக்கப்பட்ட  புதுப்புனல் இலக்கிய சோலையில் என்னையும் உட்பதித்தவர்....அன்று துணிச்சலாக அவர் ஏற்றுக்கொண்ட என் கதைகளும், கவிதைகளும் தான் இன்று எனக்குள் ஓர் அடையாளத்தைப்பதித்து சர்வதேசத்தில் என்னையும் உலாவ , எழுத வைக்கின்றது!)