About Me

2012/07/22

ஒற்றை மழைத்துளி!



சாம விழிகளின் துயிலுக்குள் - என்
கனவுகள் அமிழ்ந்து கொண்டிருக்கும்!

முகவரியில்லாக் காற்றில் - என்
ஆன்மாவின் சிதறல்கள்
அலைந்து கொண்டிருக்கும் !

கவலை நுரைக்குள்
கரைந்து போன என் ஜீவன்
ஜீவிதத்தை தேடிக் கொண்டிருக்கும் !

நிதமும் என் சுவாசிப்பை
பொசுக்கும் வெம்மை
பெருமுச்சில் ஆவியாகத் துடிக்கும்!

வறுமை வலைக்குள் சுருண்ட
என் வாலிபம்
வெறுமையைத் தேடிக் கொண்டிருக்கும்!

சிரிக்க எனக்கும் ஆசைதான் 
யதார்த்தப் பயமுறுத்தல்களில்
புன்னகை வேர்கள்
மரணித்துக் கொண்டிருக்கும்!

ஓ 
இன்னும் பிரமிப்பு அகலவேயில்லை!
ப்ரிய நேசங்களின் சேமிப்பில்
இத்தனை துரோகங்களா!

இத்தனை வலிக்குள்ளும்
ஒற்றை மழைத்துளியாய் - நான்
தனிமைச் சிறைக்குள்
நனைகின்றேன் 
விதியை நொந்தபடி!

ஜன்ஸி கபூர் 

நினைவகம்


தொண்ணூறின் விடியலொன்றில்- எம்
தேசம் தொலைந்துதான் போனது!

கற்பாதைச் சுவடுகளை
முத்தமிடும் முட்பாதணிகள்
வலியோடு வழி கேட்க...........!

பனையோலைச் சரசரப்பும்
கறுத்தக் கொழும்பான் வாசனையும்
மூச்சுக்காற்றுக்குள் விறைப்பைத் தர!

கேரதீவு நீர்ப் பரப்பில்
சோகங்கள் தலைப்புச் செய்தியாய்.................
முகங் காட்டிய அப் பொழுதுகளால்
விழியோரம் நீர் தாரை வார்க்க!

பொம்பரின் சாகஸமும்
சீ பிளேனின் தந்திரமும்
தும்பியின் வட்டமடிப்பும்- எம்
நெஞ்சத் தசையின் உளுக்கெடுக்க!

ஓடித் திரிந்த தெருக்களெல்லாம்
ஒப்பாரியில் கிடந்து தவிக்க...........!

தேசம் தொலைத்துப் போனோம் !
எம் தாயகம் துறந்து வாடுகின்றோம்!

ரெண்டு மணி நேர
கெடு வைப்பில் - எம்
தாயகக் கனவுகளை கருவறுத்தாரன்று..........
இன்றோ...............
தரணியிலிடமின்றி
தரித்து நிற்கின்றோம் அகதியாய்!

வெள்ளைக் கடற்கரையில்
சோகி பொறுக்கி பதித்த தடம்
கல்வெட்டாய் நெஞ்சிலின்னும் கனக்க........

பல மைல் தொலைவு நோக்கி
பொல்லாத பயணம் தான் கண்டோம் !

எம் உயிரணுக்களிங்கே
வெம்மைக்குள் புழுங்கி மடிய.........
நிழல் தந்த மனைகளோ
சூரியக் குளியலில் அங்கே  மோகித்துக் கிடக்க

நேசம் துறந்து போனோம்.........
தேசம் தொலைத்துப் போனோம்!

சேறாகிப் போன வாழ்வில்
சோற்றுக்கும் வேரூன்ற............
அகதியாகிப் போனதில்
அவலம்தான் சேமிப்பாச்சு!

உடமையிழந்து
உறவும் தொலைத்து
வேறிடம் முளைத்ததில்
வெறுமையும் உடன்பிறப்பாயிற்று!

அமில ஆக்கிரமிப்புக்களின்
தேசமாய் எம்முணர்வுகள் படிய...............
ஈர் தசாப்தங்கள் முகம் மாறின.......
இன்னும் விடியல் எட்டா வெளியில்!



தன்னம்பிக்கை


என்  
நிழலில் விசிறப்படும்
நெருப்புத்துண்டங்களிலும்
சுவடு பதிப்பேன் சுதந்திரமாய்

என் 
சறுக்கலின் ஒவ்வொரு நகர்வும்
படிகளாய் மாறும் 
முன்னேற்ற முகடுகளில்
முத்திரை பதிக்க!

என் 
கண்ணாடி மனசுக்குள்
கல்லெறிவோர்
புல்லரித்துக் கிடப்பார் - என்
வெற்றி முகம் கண்டு!

என் 
முயற்சி வேர்களின்
மூச்சுக் காற்றில் விசம் தடவுவோர்
மூச்சிறைத்து கிடப்பாரென்
வளர்ச்சி கண்டு!

தன்னம்பிக்கை 
பல தடைகளைத் தகர்த்தெறிய
வெற்றியின் அறைகூவலுக்குள்
சங்கமித்துக் கிடப்பேன்
என்னாளும்!

ஜன்ஸி கபூர் 









2012/07/20

வந்ததே ரமழான் !


நிலாக் கீற்றின் உதய தரிசனத்தில்
வான விழிகள் கிறங்கிக் கிடக்க.-எம்
"கல்பின்" கறை கழுவிடத்தான்
மாண்போடு வந்ததே புனித 'ரமழான்!

"திக்ர்" செய்தே  இறையோ னிறைஞ்சி
"இறையில்லம் தனை நோக்கி சிரந்தாழ்த்தி
திருமறையின் நேசிப்பிலெம்
வாழ்வைப் பொருத்தி - நிதம்
இறையோ னன்பில் வீழ்ந்து கிடக்க
வந்ததே ரமழான்
தந்ததே மாண்பு பல!

விடியல் தொடாத இருள் கூடலில்
மடி தரும் "ஸஹரில்" அமர்ந்தே
உதடு குவிந்து "நிய்யத்" மொழிந்து
உவகையோடு நோன்பு பிடித்திடவே
வந்ததே ரமழான்
தந்ததே மனத் தூய்மையை!

"ஈமானால்" நிரப்பப்பட்ட எண்ணங்கள்
"இபாதத்" தாய் எட்டிப் பார்க்க
இச்சையறுக்கப்பட்ட  வுடலும்- மன
தூய்மையோ டொன்றித்துக் கிடக்க
வந்ததே ரமழான்
தந்ததே நன்மை பல!

இடர்படுவோரின் துயரறிந்து
ஈகை பல செய்திடவே
"ஸஹாத்" பரிமாறலின் சேவகர்களாய்- எம்
மனசும் கரங்களும் உருமாற்றிக் கிடக்க
வந்ததே ரமழானும்
தந்ததே ஈடேற்றமும்!

அகிலத்தின் தரிப்பிடத்தில் 
ஈமானிய விருட்சங்களாய் எமை வேரூன்ற
உறவுகளும் நேசங்களு மெமக்களித்த
அல்லாஹ்வூக்கே நன்றி பகிர்ந்திட
வந்ததே இனிய ரமழான்
தந்ததே நல்லமல்களை!

மனசோரம் பாவம் விரட்டி
மாண்பான நன்மை பல கோர்த்தே
மாநபி வழியொற்றி தடமும் பதித்து- எம்
மனவெளியின் சந்தனத் தோப்புக்களில்
மானசீகமாய் நாம் வீழ்ந்து கிடக்கவே
வந்ததே புனித நோன்பும்
தந்ததே இனிய வசந்தமும்!

நரகத்தின் நாடி யறுத்தே
விரசங்களின் பாவமெரித்தே
சொர்க்க வாசலை நாம் நுழையவே
மார்க்க மெம் இஸ்லாத்தின்
புனித கடமையாய்
முகங்காட்டும் ரமழானே
வந்ததே ..............வாசத்தோடு!

"லைலதுல் கதிர்" ஒளியினிலே
எழிலாகும் ரமழான் இரவினிலே
வசந்தமே எம் காலடி நிழலாய்
வாசத்தோடு கதை பலபேசிச் செல்ல
வந்ததே இனிய ரமழான்
தந்ததே பல அருள்மொழிதனை!

ஆகாயம் அண்ணார்ந்து பிரமித்திருக்க.
பாதாளம் பரவசத்தில் வீழ்ந்து கிடக்க
சாகரங்கள் சரித்திரம் வாசித்துச் சொல்ல
புன்னகை உதிர்வோடு புளாங்கிதம் தரவே
வந்ததே புனித ரமழான்
தந்ததே பல மாண்புகளையெம்முள்!

இறையோனின் அருள் மாதத்தில்
நோன்பாளியாய் நாமும் அமல் செய்ய
கைகட்டி நிற்கின்றன எம் பொழுதுகள்
நாளைய விடியலுக்காய்!

(கல்பு = மனம் ) (ஸஹர் = நோன்பிருப்பதற்காக ஆயத்தமாகும் சூரியன் உதயம் காட்டாத நடு சாமப்பொழுது) (ஈமான் = நம்பிக்கை) (ஸஹாத் = வறியவர்களுக்கு கொடுக்கும் கொடை) (லைலதுல் கதிர் = 27 ம் நோன்பின் புனித இரவு) இவை என் சகோதர மத நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க பதிவிட்ட சில சொற்களின் விளக்கம்)




-Jancy Caffoor -