About Me

2012/09/01

என் பார்வையில் குறிஞ்சிப்பாட்டு


எண்ணும் எழுத்தும் கண்ணெணத் தகும். நம் வாழ்விற்கு  இவையிரண்டுமே அடித்தளமாகின்றன எனும் உண்மையை நாம் ஒருபோதும் புறக்கணிக்க முடியாது. ஏனெனில் எழுத்தறியாதவன் இவ்வுலக வாழ்வியலிலிருந்தும், பண்பிலிருந்தும் நெறி தவறுகின்றான். சங்க காலமாயினும் சரி, சங்கமருவிய காலமாயினும் சரி, தற்காலமாயினும் சரி தமிழுக்கென்று தனி அந்தஸ்து எப்போதுமுண்டு. அதனால்தான் அது அமுதத் தமிழாகின்றது. நமக்கும் இன்பத்தமிழாகின்றது.

எனது பள்ளிவாழ்வில்,  பதினொராம் வருட பள்ளிவாழ்வு வரைக்குமே தமிழ்ப்பாடம் என்னுடன் நடைபயின்றது. கம்பராமயணம், மகாபாரதமென அவ் இலக்கிய சொல்வீச்சில் மதிமயங்கி, வரிகள் தந்த காட்சிப்புலத்தை என் மனக்கண்ணில் நிறுத்தி, மானசீகமாக காட்சிகளை வரிகளால் விரித்து மகிழ்ந்த, வியந்த, பாக்கள் ஆக்கப்பட்ட அக்கருத்துச் செறிவில் இரண்டறக் கலந்த அந்தக்காலம் அழியாத பதிவுகளாய் இன்னும் நினைவிலிருக்கின்றது.

அதன்பிறகு உயர்தரக் கற்கைக்காக நான் விஞ்ஞானப் பாடத்தைத் தெரிவு செய்த போது, தமிழின் பல புராதன இலக்கிய பக்கங்களை ஆழமாக நுகரும் வாய்ப்பினையும் இழந்துவிட்டேன். எனினும் கிடைக்கும் ஓய்வுப் பொழுதுகளில் மெல்ல மெல்ல என் விழிகளுக்குள் தமிழ்ப்புலமை சுட்டும் இலக்கியங்களுடன் உறவாடியதால், இன்று என் உணர்வுகளுக்கும் கவிதை, கதை, கட்டுரை என ஓரளவு இலக்கிய வடிவம் கொடுக்க முடிகின்றது..

பிள்ளைப் பருவத்தில் அம்புலிமாமா கதைப்புத்தகத்தில் ஆசை கொண்ட  என் தமிழ்மொழிப்பற்று, பின்னர் பண்டைத் தமிழிலக்கியங்களை ஆராய ஆவல் கொண்டது. அவை சிந்தும் கருத்துச் செறிவின் ஆழத்தைக் கண்டு வியந்து நின்றது,

அவ்வாறு நான் வாசித்து, ரசித்த ஓர் கருத்துளியே இங்கே சிந்திக்கிடக்கின்றது என் எழுத்துக்களில் நசிந்து...............!

தமிழ்நடை பயிலும் இலக்கியங்களின் சுவை இன்னும் இனிமையானது. அவ்விலக்கியங்கள் நம்முள் சிதறும் அழகியல் என்றும் ரசிப்பைச் சிந்தி நிற்பது.  படித்தவர்கள் மட்டுமல்ல, இப் பாக்களின் பொருள் தெரிந்தால் படிக்காதவர்கள் கூட  மயங்கிக் கிடப்பா் என்பது திண்ணம்.

தமிழர் நிலத்திணைகள்!

பண்டைத் தமிழர் தமது இயற்கைச் சூழலுக்கு ஏற்ப வாழ்ந்த நிலங்களான முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்பன மக்களின் வாழ்வியல்புக்கேற்ப ஐந்து திணைகளாக வகுக்கப்பட்டன. இவையே தமிழர் நிலத் திணைகள் எனப்படுகின்றன.

காடும் காடு சார்ந்த நிலம் முல்லைத் திணையெனவும்,
மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சித் திணை எனவும்,
இவையிரண்டுக்குமிடைப்பட்ட நிலம் பாலை எனவும், 
(முல்லையும், குறிஞ்சியும் வளங்குன்றிய நிலை)
வயலும் வயல் சார்ந்த நிலம் மருதம் எனவும்,
கடலும் கடல் சார்ந்த இடம் நெய்தல் எனவும் அழைக்கப்பட்டது.

மக்கள் வாழ்வியலானது சமுகத்தில் பிரதிபலிக்கின்ற கண்ணாடியாகும். ஒவ்வொரு மக்களும் தம் வாழ்க்கைப் போக்கிற்கேற்ற கலை, கலாசார, பண்புகளைக் கொண்டிருக்கின்றனர். அவற்றை வெளிப்படுத்துவனவாக இலக்கியங்கள் மாறும் போது நாமும் அதன் ரம்மியமான சுவையில் இனங்கலந்து விடுகின்றோம்.

பாலை நிலத் தலைவர் விடலை எனவும், மக்கள் எயினர் என்றும் அழைக்கப்பட்டனர். இங்குள்ள மக்கள் விடலை, மறவர், காளை, மறத்தியர் எனக் கொள்ளப்பட்டனர். பாலை நிலத்தின் உரிபொருட்களாக அக ஒழுக்கம் பிரிதல் எனவும், புற ஒழுக்கம் வாகை எனவும் கொள்ளப்பட்டது.

நெய்தல் நிலத்தலைவர்கள் கொண்கன், சேர்ப்பன் , துறைவன் , புலம்பன் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டனர். மக்கள் சேர்ப்பன், நுழைச்சி, நுழையர், பரதவர், பரத்தியர் என அழைக்கப்பட்டனர். நெய்தல் நிலத்தின் உரிபொருட்களாக அக ஒழுக்கம் இரங்கல் எனவும், புற ஒழுக்கம் தும்பை எனவும் கொள்ளப்பட்டது.

மருத  நிலத்தலைவர்கள் மருதன், ஊரன் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டனர்.  மக்கள் மள்ளர், உழவர், உழத்தியர், கடையர், கடைசியர் என அழைக்கப்பட்டனர். மருத  நிலத்தின் உரிபொருட்களாக அக ஒழுக்கம் ஊடல்  எனவும், புற ஒழுக்கம் உழி​ைஞ எனவும் கொள்ளப்பட்டது. மருதம் பற்றிய தகவல்களைத் தரும் பிற்கால இலக்கியங்கள் பள்ளு நூல்கள் ஆகும்.

அக்கால தமிழ் இலக்கியங்களில் எடுத்தாளப்படும் விடயங்களின் பின்னணியாக இத்திணைகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. இங்கு இயற்றப்பட்டுள்ள பாக்களை பார்க்கும் போது அவற்றின் கருக்கள் இச் சூழ்நிலையின் பின்னணியை பிரதிபலிப்பாகக் கொண்டே எழுதப்பட்டுள்ளன.

கி்பி 4 ம் நூற்றாண்டில் புலவர் மாறன் பொறையனார் எழுதிய ஐந்திணை ஐம்பது எனும் நூலில் ஒவ்வொரு நிலத்தின் ஒழுக்கத்தை பிரதிபலிக்கும் பத்துப் பாடல்களுண்டு. இவ்வாறாக ஐந்து திணைக்கும் ஐம்பது பாடல்களுண்டு.

பாலை நில காதல் ஒழுக்கத்தினை மேவும் பா வொன்று ,
"சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென் ...................................................."
எனத் தொடர்கின்றது . இதன் பொருளானது ,

கலைமான், பிணைமான் எனும் இரு மான்கள் பாலை நிலத்து நீர்ச்சுனை ஒன்றின் முன்னே நிற்கின்றன. வரண்டு போன அச்சுனையில் இருக்கும் நீர் இரண்டுக்கும் போதுமானதாக இல்லை. தான் அருந்தாவிட்டால் பெண்மானும் அருந்தாது என்பது ஆண்மானுக்குத் தெரியும். எனவே பெண்மான் அருந்தட்டும் என தான் அருந்துவது போல பாசங்கு செய்கிறதாம் ஆண்மான்"
என புலவர் காதல் ஒழுக்கம் பற்றிக் கூறுகின்றார்.

உண்மையில் பாலை நிலம் மிகவும் வரண்ட பூமி, இந்த இயற்கைச் சீற்றத்தின் கொடுமைக்கு ஈடுகொடுத்து, தமக்கிடையே விட்டுக்கொடுத்து தமது காதல் நினைவுகளை மேம்படுத்தி நெருக்கமாகின்றனர் இந்நில தலைவனும், தலைவியும்! உண்மைதான் விட்டுக்கொடுப்பும், புரிந்துணர்வுமில்லாத காதல் மனங்களால் நிராகரிக்கப்படுகின்றன.

இவ்வாறே நான் ரசித்த இன்னுமொரு பக்கம் குறிஞ்சிப்பாட்டாகி நிற்கின்றது. குறிஞ்சிக்குரிய பொருளை உணர்த்துவதால் குறிஞ்சிப்பாட்டு  எனப் பெயர்கொண்ட இப் பாடல்களை  கபிலர் எனும் புலவர் இயற்றியனார். இக்குறிஞ்சிப்பாட்டில் 99 வகையான பூக்களைப் பற்றிச் சொல்லப்படுகின்றது.

அவற்றுள் சில பூக்கள் படத்தில் காட்டப்பட்டுள்ளன.


வாழ்வின் அச்சாணி ஒழுக்கமாகும். அகவாழ்வின் ஒழுக்கம் மனதினைச் சார்ந்ததாகவும், புறவாழ்வின் ஒழுக்கம் நடைமுறை வாழ்வுடன் ஒட்டியதாகவும் காணப்படுகின்றன.


இக் குறிஞ்சி நில மக்களின் பிரதிநிதியான கபிலப் புலவரும் இம் மக்களின் அகவாழ்வு ஒழுக்கத்தினை கற்பு, வாழ்க்கை என இரு கூறுபடுத்தி, அவற்றினூடாகப் பாக்களை ஆள்கின்றார்.

நான் ரசித்த ஒரு  குறிஞ்சிப்பாடலைக் கருவாக்கி,  புலவர் எடுத்துக் கொண்ட அதன் கருத்துச் சிதையாமல் , காதல் நயம் ரசம் சொட்ட எனது  வரிகளில்  எழுதியுள்ளேன் கீழ்வரும் பதிவை!
அன்னாய் வாழி வேண்டு அன்னை ஒள்நுதல் ..........
எனத்  தொடரும் குறிஞ்சிப்பாட்டில் காதலொழுக்கம் ஆழமாகத் தொட்டுக்காட்டப்படுகின்றது

தலைவனும் தலைவியும் ஊழ்வினையால் எதிர்ப்பட்டு வாழும் நிலையில், தலைவன் தலைவியை இரவிலேயே சந்திக்க வருவான். பல பொழுதுகளில் அவர்களால் சந்திக்க முடியாமற் போகும். அத்துக்கத்தில் தலைவி மெலிந்து போய் நோய்வாய்ப்படுகின்றாள்.  அதனைக் கண்ட அவளது செவிலித்தாய் வருத்தமுற்று குறி சொல்பவரிடம் காரணம் கேட்டறிகின்றாள். தெய்வத்திடம் வழிபடுகிறாள். ஆனால் அவள் நோய் தீரவில்லை. மறுகணம் இத் துன்பத்திலிருந்து மீளும் பொருட்டு தலைவியோ, தன் தோழியிடம் தன் காதலை தாயிடம் கூறலாமா என உணர்த்த, தோழியும் அவளைப் புரிந்து கொண்டவளாய் அறத்தோடு வழி நின்று தலைவியின் காதல் விடயத்தை செவிலித் தாயிடம், அவள் கோபமுறாத வகையிலும், தலைவன் தலைவி எந்தக் குற்றமுமிழைக்காதவர்களாகவே இரவில் களவில் சந்திக்கின்றார்களெனவும், அவர்களுக்கிடையில் நடைபெற்ற சகல செயல்களும் நல்வினையின் பயனே எனவும் அச்செவிலித்தாய் உணருமளவிற்கு தோழி செய்தி கூறுகின்றாள் எனத் தொடர்கின்றது இக்குறிஞ்சிப்பாட்டு!

இப் பா  தோழியின் உணர்வுபூர்வமான சிந்தனையூட்டத்தின் மூலமே செவிலித் தாய்க்குரைக்கப்பட்டு உயிர்ப்படைகின்றன. காதலுக்கு துணை நிற்கும் தோழியே, அக் காதலின் திருமண சங்கமத்திற்கும் பாதை வகுக்கின்றாள்.

செவிலித் தாய்க்கு,  தன்  தலைவி எவ்வாறு தலைவனைச் சந்தித்தாள் என தோழி எடுத்துக் கூறும் வரிகள்,  நாம் நேரில் சந்தித்த யதார்த்தமொன்றை நமக்குணர்த்தும் பிரமையை அனுபவபூர்வமாக  அது தந்துநிற்கின்றது.

குறிஞ்சிப்பாட்டில் நான் ரசித்த சில கருத்துக்களை முன்வைக்கும் பாக்களின் முதல் வரிகள் இவை-(..35-  251ம் பாடல் வரை)
---------------------------------------------------
நெல்கொள் நெடுவெதிர்க்கு அணைந்த யானை....(035-039)....
கலி கெழு மரமிசைச் சேணோண் இழைத்த ...........(040-045)
விசும்பு ஆடுபறவை வீழ்பதிப் படர .............................(046-053)
அண்ணல் நெடுங்கோட்டு இழி தரு தெள்நீர் ...........(054-061)
------வள் இதழ் ஒண் செங் காந்தாள் , ஆம்பல்..........(061-098)
புள்ளார் இயத்த விலங்கு மலைச் சிலம்பின் ...........(099-106)
எண்ணெய் நீவிய சுரி வளர் .............................................(107-116)
பைங்கால் பித்திகத்து ஆய் இதழ் அலரி ....................(117- 127)
முனை பாழ் படுக்கும் துன்னருந் துப்பின்..................(128-134)
மாறு பொருது ஓட்டிய .....................................................  (135- 142)
அதன் எதிரே............................................................................(143-152)

உண்மையில் காதலென்பது ஓர் வசீகர உணர்வு. இவ்வுணர்வுக்குள் மதிமயங்கும் ஆன்மாக்கள், தம் புறவுலகை மறந்து சொர்க்கபுரியாக விளங்கும் காதலுலகினுள் அமிழ்ந்து விடுகின்றனர். நண்பர்கள், உறவினர், குடும்பம் சுற்றுப்புறம் யாவருமே அந்நியமாக, தாம் நேசம் கொண்டவரையே, தம் உலகாக வரித்து வாழ முற்படுகின்றனர். காதல் போற்றும் பல இலக்கியங்களிலும் இப் பண்பு சிதைக்கப்படுவதில்லை. கவிகளினூடாக புலவர்கள் இவற்றை அழகாக எடுத்தியம்புகின்றனர்.

குறிஞ்சிப்பாட்டின் பத்துப் பாடல்களுள் ஒரு பாடலைத் தெரிவு செய்தேன். அதில் ஒளிந்திருக்கும் காதலின் சிலிர்ப்பைக் கண்டு  நானும் உவத்து, ரசித்து அதனை உங்கள் பார்வைக்குள்ளும் எத்திவைக்கின்றேன் இதோ  .

தலைவியின் அன்பான காதலையும் , ஆழமான உணர்வோட்டத்தையும், நாமும் ரசிக்கலாம். ரசிப்போமா! இங்கு புலவர் சொன்ன தன்கூற்று  நடையை ,,என் மொழி வழக்கில் பிறர் கூற்றாக்கி மாற்றி, புலவரின் கவிக் கரு சிதையாமல் என் மொழிநடை யில் உங்களை அழைத்துச் செல்கின்றேன் இந் நாயகியை தரிசிக்க

மென்மையான தலைப் பகுதியைக் கொண்ட வளைந்த பெரிய கதிர்களைக் கொண்ட தினையை, திண்பதற்காக வரும் கிளி போன்ற பறவைகளை விரட்டும் காவலில் ஈடுபடுவதற்காக, ஆரவாரமிக்க மரத்தின் மேல் பரண் ஒன்றையமைத்து, அதிலமர்ந்து எந்த கருவியில் எப்படி இசைத்தால் பறவைகள் விரண்டோடுமோ, அவ்வாறு அதற்குரிய சில இசைக்கருவிகளான தழல், தட்டை, குளிறு , கவண் போன்ற இசைக்கருவிகளால் இசையெழுப்பிக் கொண்டிருந்தாள் தலைவி . அது  வெப்பமான உச்சிப் பொழுது. அவளெழுப்பிய ஒலி கேட்டு கிளிகள் மிரண்டோடின. அந் நண்பகல் நேரம் வெப்பப் பொழுது திடீரென மாற்றம் பெற, இடி, மின்னலுடன் கூடிய  மழை மலையின் மீது பெய்தது. தலைவியும் அவள் தோழியும் நனைந்தனர். ஆனால் அந்நனைவு அவர்களுள் மகிழ்வைப் பிரட்டிக் கொடுத்தது.

மலையுச்சியிலிருந்து பளிங்கினைச் சொரிவதைப் போல் வீழும் வெள்ளருவியில் அவர்கள் மனமகிழ்ந்து ஆடிப்பாடினார்கள். அவளோ கூந்தல் கவர்ந்தெடுத்த நீரினைப் பிழிந்து ஈரம் உலர்த்தி மீண்டும் மீண்டும்.  நீரிலே விளையடியதால் அவள் கண் உள்ளிடமெல்லாம் சிவந்தது

மழை நின்ற பொழுதில், அந்த அடர்ந்த காட்டின் பல பகுதிகளிலும் மனமகிழ்ச்சியோடு உலாவித் திரிந்து, ஆசையோடு பல மலர்களைப் பறித்து , மழை பெய்ததால் கழுவிச் சுத்தம் செய்யப்பட்ட அகன்ற மலைப் பாறையின் மீது அனைத்துப் பூக்களையும் குவித்து வைத்தாள். குறுக்கிட்டுக் கிடந்த பக்க மலையெங்கும் பறவைகளின் ஒலி நிறைந்திருந்தது. அவ்விடத்தே, கூர்மையான ஓசையோடு தெளிந்த சொற்களை இடையிடையே கூறி கிளிகளை விரட்டத் தலைவி தவறவில்லை.

சேகரித்த மலரிதழ்களை ஒன்றாகக் கோர்த்து, தான் அணிந்திருந்த தழையாடைக்கு ஏற்றவாறு சரி செய்து கட்டிக் கொண்டாள். பல்வேறு நிற மலர்களால் மாலை கட்டி, மென்மையான கொண்டையில் அழகாகச் சூட்டி அலங்கரித்தவளாய், தன் தோழியுடன் அசோக மரத்தின் குளிர்ச்சியான நிழலில் அமர்ந்தபோது...................!

அவனைக் கண்டாள். அவன் எண்ணெய் தடவி சுருண்டு வளர்ந்திருந்த தனது தலைமயிரில், மணம் வீசும் அகில், சந்தனம் போன்றவற்றை பூசி மணக்கப்பெற்றவனாகவும், தலைமயிரின் ஈரத்தை தன் விரல்களால் நீவியும், கரிய அகிலையிட்டு உண்டாக்கிய புகையினாலும்  உலர்த்துபவனாகவும் இருந்தான். அத்துடன் மலையிலுள்ள பல்வேறு வண்ணங்களாலும் குணங்களாலும் ஆன மலர்களைக் கொண்டு, தயாரிக்கப்பட்ட குளிர்ச்சியான மணம் வீசும் மலர்மாலையையும் அணிந்திருந்தான். அவற்றுடன் அவனைக் கண்டவர் அச்சப்படும்படியாகவும் வெண்தாழை மடலான மாலையினையும் அழகாக தலையில் சூடியிருந்தான்.

அவன் காதில் செருகியிருந்த அசோகத் தளிர், அவனின் திரண்ட தோளில் அசைந்து கொண்டிருந்தது.  அவன் அழகிய மார்பில் அணிகலன்களும், மாலைகளும் தொங்கிக் கொண்டிருந்தன. சிவந்த இரேகைகள் உடைய உள்ளங்கைகளுக்கேற்ற இறுகி பருத்த முன்கையில், வில்லை ஏந்தியிருந்தான். அம்புகளை அசைவில்லாதவாறு கோலமிடப்பட்டிருந்த துணிப்பையில் பிணைத்திருந்தான்.

அப்போது பகைவர்களின் இடங்களைப் பாழ் செய்யும், நெருங்குதற்கரிய வலிமையும் மிகுந்த சினமும், கூரிய வாள் போன்ற பற்களையும், கூர்மையான நகங்களையும் கொண்ட நாய்கள் தலைவியின் இருப்பிடத்தை நோக்கி வந்தன. அவற்றைக் கண்டு நடுங்கிய அவர்கள், அச்சத்துடன்  இருந்த இடத்திலிருந்து எழுந்து யாதும் செய்ய முடியாத நிலையில் மனம் வருந்தினார்கள்.

அப்போது அவன் அவர்களின் தடுமாற்றத்தைக் கண்டு அருகில் சென்று, அவர்கள் அச்சம் தீரும் வகையில் மென்மையாகப் பேசி, அவள் அழகினையும் கூந்தல், கண்கள் உள்ளிட்ட உடலழகையும் புகழ்ந்தான்.

"என்னிடமிருந்து தப்பிச்சென்ற விலங்கொன்று இவ்வழியால் போனதோ "

எனத் தலைவியின் விழிகளைப் பருகியவாறு வினவினான்.

அவளோ, இயற்கை ஆக்கிரமித்த நாணத்தினால்  பதிலேதும் சொல்லாமல் மௌனித்துக் கிடந்தாள். அவள் மௌனம் அவனை வருத்தியது. மனம் வருந்தியவாறு

"என்னிடம் பேசுவது குற்றமோ "

என்றான். பின்னர் வலிந்த மரக்கிளையொன்றை உடைத்து  அந்நாய்களை தேடியடக்கிய பின்னர், அவர்களுடன் பேசும் ஆர்வத்தில் மீண்டும் அவளை நெருங்கி, பேசும் வார்த்தைகளுக்காக ஆவலோடு எதிர்பார்த்திருந்தான். ஆனால் அவள் உதடுகள் அசையவேயில்லை. அவனுள் ஏமாற்றம் வழிந்தது.

மௌனமாக  நிமிடங்கள் கரைந்து கொண்டிருந்தன,

தினைத்தாள்களால் நாட்டப்பட்டிருந்த குடிசையொன்றில் காவலிருந்த கானவன் ஒருவன், தன் எழிலான மான் போல மிரளும் தன் மனைவியின் பார்வையினால் ஈர்க்கப்பட்டவனாய்,  அவள் மீதுள்ள காதலால் தன் தொழில் மறந்து அவளுடன் கூடினான், காதலில் மலர்ந்த  குலைவு அவன் காவலை மறக்கடித்தது . அப்போது எதிர்பாராதவிதமாக அவர்களின் தினைப்புனத்தில் புகுந்த யானை எல்லாத் தானியங்களையும் உட்கொண்டது. தினை ஓரளவு எஞ்சிய நிலையிலிருக்கும் போதே, மோகித்திருந்த அந்தக் கானவன் சிந்தை தெளிந்து, ஒலி எழுப்பி யானையை விரட்டினான்.

விரட்டப்பட்ட யானை சினங்கொண்டு, அவளிருப்பிடத்திற்குள் நுழைந்தது. எதிர்பாரதவிதமாக அவளை  நோக்கி , மதங் கொண்ட யானையாக வருவதைக் கண்ட அவள், அச்சமுற்று தன் நாணங் கலைத்து, தனது பதிலுக்காக காத்திருக்கும் அவனருகே போய் நின்றாள். அவன் தன்னைப் பாதுகாப்பான் எனும் நம்பிக்கை அவளுக்குள் வலிமை பெற்றது.

அவன் முகத்தை அச்சம் பிசைய விழிகளால் துலாவினாள். விழிகள் நான்கும் ஓர் நொடியில் சந்தித்து மீண்டன. அச் சிலிர்ப்பின் உத்வேகத்தில். அவனும்  தன்னுள் சிறைப்படுத்தியிருந்த வில்லையெடுத்து, அதில் அம்பைச் செருகி யானையின் நெற்றியில் குறிபார்த்து தன் அம்பைச் செலுத்தினான். தாக்கப்பட்ட யானையின் நெற்றி சிதைந்து முகத்திலிருந்து  குருதி வழியும் நிலையில் அது புறமுதுகிட்டோடியது. அவள் பெருமூச்செறிந்து நன்றியுடன் அவனைப் பார்த்தாள். அவள் பார்வையை விழுங்கிய அவனும் புன்னகையை மெல்ல அவளுள் பரப்பினான். நாணத்தால் அவள் முகம் கவிழ்ந்தது. இருதயத்தில் ஓர்மூலையில் அவன் நினைவுகள் கௌவிக் கொண்டன. தன் பார்வையைத் தாழ்த்தி மறைவாக அவனை ரசித்தாள்.  ஆனாலும் அவள் கரங்கள் இன்னும் அவள் தோழியின் கரத்துடன் பிணைத்துக் கொண்டிருந்தன. உடல் இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தது.

"அழகிய கூந்தலையுடையவளே! அஞ்சாதே, உன் அச்சம் போக்க இனி நானிருக்கின்றேன் "
எனக் கூறியவாறு, அவளை அவன், அவள் தோழியின் பிடியிலிருந்து தளர்த்தி, தலைவியின் நெற்றியில் வடிந்த வியர்வைத்துளிகளை தன் கரத்திலேந்தி மெதுவாக அவளை அணைத்துக் கொண்டான் அவள் நாணத்தையும் பொருட்படுத்தாதவனாய்!
அவள் நாணிப் புன்னகைத்தவறே அவனிடமிருந்து விடுபட நெளிந்தாள்.

அச்சமும், நாணமும் அவளை ஆட்கொள்ள, அவனின் பிடியிலிருந்து நழுவ முயற்சித்தும். அவனோ அவளை விடுவதாக இல்லை. அவள் மார்பு, தன் மார்புடன் பொருந்த , இறுக்கியணைத்தான். உஷ்ணம் மூச்சுக்காற்றிலடங்கி, இடமாறத் தொடங்கின. கூடவே காதலும் வெட்கத்துடன் சிரித்துக் கொண்டது அவர்களுக்குள்!.

அவன் மலைநாட்டுத் தலைவன், இயற்கையை வசீகரித்து வாழ்பவன், செல்வச் செழிப்பினன், பண்பானவன், அவள் மனமறிந்து, தன் காதலைப் பற்றி எடுத்துக்காட்டி, அவள் விரும்பும் விதத்தில் அறம் சிதையாத இல்லறம் பற்றிப் பேசினான். அவளும் மகிழ்வோடு தன் துணையாக அவனை வரித்துக் கொண்டாள். மனங்கள் பேசத் தொடங்க வானமும், பூமியும் மலர்கள் துவி வாழ்த்தின. அவளைப் புரிந்தவளாய் தோழி விலகிச் செல்ல, அவள் அவனின் அன்புக்குள் கட்டுண்டாள்.

மிதமான மகிழ்வில் தலைவன் பருகிய அருவி நீரில் கூட கள் கலந்து அவனை போதைப்படுத்தியது. மகிழ்வின் உச்சத்தில் இறக்கை கட்டி பறந்தனர் அச்சோடியினர். அவள் அவனுடன் தன் இராப் பொழுதைக் கழித்தாள்.

ஒருமித்த மனங்களின் அன்றைய அந்தச் சந்திப்பே, இறுக்கமான இதமான காதலாக முகிழ்த்தது.  கூடலில் கழித்த அவள் பொழுதுகள் விடிந்தன. அவன் பிரியப் போகும் தருணத்தை எண்ணி வருந்தினாள். அவனோ ஊர், சுற்றமறிய விரைவில் அவளை மணந்து , தன்னிருப்பிடம் அழைத்துச் செல்வதாக உறுதியளித்து அவளது இருப்பிடத்தில் அவளை நிறுத்தியவனாக அவளைப் பிரிந்து சென்றான்.

அவள் கண்ணீரில் நனைந்து நின்றாள். ஒரு நாள் பொழுதில் ஏற்பட்ட வலிமையான அன்பு அவள் மனநிலையின் இயல்பைக் குலைத்த போது வாடி நின்றாள்.

நாட்கள் விரைந்தன. அவர்களின் சந்திப்பும் இரவில் களவாக ரகஸியமாகத் தொடர்ந்தது. யாருமறியாது களவில் அவளை இவன் சந்திப்பது ஒழுக்கமற்ற செயல் என தலைவி நினைந்து விலக முற்பட்டாலும் கூட, அவனைச் சந்திக்காமல் அவளால் இருக்கமுடியவில்லை. சில பொழுதுகளில் அவன் சந்திக்காமல் செல்லும் இரவுகளில் இவள் சிந்தும் கண்ணீர் மார்பை மட்டுமல்ல, இரவின் நிழலினையும் ஈரப்படுத்தியது. அவளழகை அழிக்கும் இந்தத் துன்பம் அவளுக்குச் சொந்தமாகிப் போனது.

அவன் அவள் உயிர்! நல்ல குலத்தில் பிறந்தவன். அன்பு சிந்தும் காதலில் வெறும் காமம் மட்டும் கலப்பவனல்லன். அவன் ஒருபோதும் ஏமாற்றமாட்டான். தன் பரிவாரங்களுடன் அவளை தனக்குள் உரிமையாக்க நிச்சயம் வருவான். அவள் மனதிலிருந்து அவன் சிந்தும் காதல்த்துளிகள் நிஜமானவை !

ஆனால் அவளின் இந்தக் கண்ணீருக்குக் காரணம் அவனது பிரிவுத்துயராக இருந்தாலும் கூட, அவன் அவளைச் சந்திக்க  வரும் காட்டுப்பாதையில் வாசம் செய்யும் சிங்கம், கரடி, புலி போன்ற கொடிய மிருகங்களால் இவனுக்கேதும் இடர் ஏற்பட்டிருக்குமோ, அதனால்தான் அவன் சந்திக்க வரவில்லையோ எனும் துக்கத்தில் இடைக்கிடையே கரைந்து கொண்டிருக்கின்றாள் இக்கன்னி!

காதல் அழகானது.......அழிவில்லாதது........!


-Jancy Caffoor -










2012/08/31

கடலோரம்.........


---------------------------------------------
ஒரே கற்பனைக் கரு...
வெவ்வேறு சொற் வருடல்.....

மூன்று  கவிதைகளாயிங்கு!
---------------------------------------------

எங்கோ புரண்டு கொண்டிருக்கின்றது
அலைகள்...................
மணற் முத்துக்களையும் கோர்த்தபடி!

குவிந்து கிடக்கும் வானில்
"ஒட்டரை"ப் படையாய் .............
கொட்டமடிக்கின்றன முகிற் படைகள்!

கதிர் பரப்பி வீழ்ந்து கிடக்கும்
சூரிய பிம்பம்...............
சூட்சுமமாய் சூடேற்றுது கடலை!

வளைக்குள் சிறையிருக்கும்
கரையோர நண்டின் கோலம்
வரையத் துடிக்குது என் காலில் மெல்ல!

வெட்டியாய் ஊர்சுற்றும்
வெட்கங் கெட்ட காற்றும் - பல மேனி
தொட்டு  சில்மிஷம் பண்ணத் துடிக்குது!

காலை வருடும் கடற்சாதளைகள்
நுரை நீரில் எட்டிப்பார்க்கையில்
கூதல் சுண்டியிழுக்குது நரம்புகளை!

விடிகாலை கரைதேடும் - பாய்
மரக்கலங்கள் நாடுகின்ற என்னருகே
கரமசைத்தே மகிழ்வாய்!



எங்கோ புரண்டு கொண்டிருக்கின்றன
அலைகள்...........
மணற் பாயில் சுருண்டபடி!

வில்லொடிக்கும் வானில்
அம்புகளாய் மேகக் கூட்டங்கள்!

காற்றுவேலிக்குள் சிறைப்படும்
இயற்கையென் காதலாகி கசியும்!

மணற்கரையில் குடியிருக்கும்
வாண்டுகளாய் சிறு நண்டுகள்!

உப்பு நீரில் விழுந்தெழுகின்ற
வெப்புச் சூரியன் குளிக்கின்றதோ இதமாய்!

வானுக்குள் நூல் கட்டி ...........
நானிட்ட தூதாய் கொக்குப் பட்டமொன்று!

நுரைநீரில் எட்டிப் பார்க்கும் சாதளைகள்
திரையிட்டுக் கிடக்கும் கால்களை!

பாய் விரித்தே கரையொதுங்கும் வள்ளங்கள்
ஹாய் சொல்லி மீன் நிரப்பும் பையில்!




எங்கோ புரண்டு கொண்டிருக்கின்றது
அலைகள்...........
மணற் முத்துக்களையும் அணைத்தபடி!

வில்லாய் ஒடிந்து கிடக்கும் வானில்
வெள்ளை மேகப் படையெடுக்க !
விரட்டியடிக்கும் வில்லனாய்......
பரபரப்பாகுது காலைத் தென்றல்  !

கரையோரம் நடைபயின்றே - வளைக்குள்
சிறையிருக்கும் நண்டுக் கூட்டம்......
சீண்டுதே என் கால் பிராண்டி
"அண்டவோ" என் அருகாமைக்காய்!

உப்பு நீரில் விழுந்தெழுகின்ற
வெப்புச் சூரியன் கதிர் கண்டே......
அப்பப்பா மீன்கள் நழுவ இடம்தேடி
தப்பிக்க ஓடுதே  அம்மம்மம்மா!

வானேறும் கொக்குப்பட்டம் ..........
பாரெட்டிப் பார்க்கையிலே- என்
கரந்தொடுத்த நூற் கற்றையும்
பறந்தேறத் துடிக்குது மெல்ல!

காலை முகரும் "சாதளைகள்"
நுரை நீரில் முகம் பார்க்க................குளிரில்
விறைத்த என் மேனி கொஞ்சம்
முறைத்து முணுமுணுக்குது மெலிதாய்!

விடிகாலை கரையொதுங்கும் - பாய்
விரித்தே காற்றிலாடும் வண்ண.....................
மரக் கலங்கள் எனைப் பார்த்தே
கரமசைத்து மணற்றரை வருடுகின்றது!


ஜன்ஸி கபூர் 




2012/08/29

செல்லங்கள்

எங்கள் வீட்டுச்செல்லங்கள்...கதீஜா + அஸ்கா
-------------------------------------------------------------------
என் சகோதரிகளின் மக்கள் , எனது அறையில் இக் குட்டீஸ் விளையாடிக் கொண்டிருக்கும்  போது நானெடுத்த க்ளீக் (24.08.2012)










அநுராதபுரத்தின் முதுசொம்


அநுராதபுரத்தில் சேவை செய்து, ஓய்வுபெற்ற அரச ஊழியர்களை கௌரவிக்கும் விழாவில் (25.08.2012) வெளியிடப்பட்ட  விழா மலரே " அநுராதபுரத்தின் முதுசொம்" ஆகும்.

"முதுசொம் " எனும் சொல்லின் அர்த்தம் எனக்குப் புரியாத நிலையில், இது தொடர்பாக மலராசிரியர் ஜவஹர்ஷா சேரிடமே வினவினேன். அதற்கவர் "பரம்பரைச் சொத்து" எனும் பொருள்படுவதாகக் கூறினார்.

"முதுசொம்" எனும் மிகப் பொருத்தமான மலர்த் தலைப்புடன் , அநுராதபுர நகர மக்களின் பரம்பரைச் சொத்துக்களான கலை, இலக்கிய, பண்பாடு, அரசியல் , சமூகம், ஆன்மிகம் தொடர்பான தகவல்களை முன்வைக்கின்ற, கடந்த கால நிகழ்வுகளின் பிரதிபலிப்பாக பரிணமிக்கின்ற இம் மலர் பல விடயங்களைத் தன்னத்தே பதித்துள்ளதென்பது வெள்ளிடைமலை! இம் மலரானது, அதன் செலவில் மட்டுமல்ல, அதன் உள்ளடக்கத்திலும் கனாதியானது. மிகப் பெறுமதியானது.

இது காலத்தால் அழிவுறாத ஆவணமாகையால், மலராசிரியர் கலாபூஷணம் அன்பு ஜவஹர்ஷா சேரின் அநுராதபுர நகரின் வரலாறு தொடர்பான ஒவ்வொரு நுணுக்கமான தேடலும்,  இம் மலரின் பதிவுகளின் ஒவ்வொரு வரிகளிலும் கலக்கப்பட்டு, வரலாற்றின் தெளிவான வெளிப்பாடாகி, எம்மை பிரமிக்க வைக்கின்றது.

சில அரிய புகைப்படங்களை தன்னகத்தே கொண்ட முகப்பட்டையே இங்கு நுழைவாயிலாகி,   எம்மையும் இம் மலரின் பயணப் பாதையில் சுவடுபதிக்க அழைத்துச் செல்கின்றது.

மலரை விரித்ததும் உள்ளே முதற்பக்கத்தில்  விழா ஒழுங்குக் குழுவினரின் புகைப்படமும், விழாக் குழுவினரின் விபரமும் அதனைத் தொடர்ந்து வாழ்த்துச் செய்திகளும் இடம்பெற்றுள்ளன.

பிரதம அதிதி வைத்தியக் கலாநிதி முஸ்தபா ரயிஸ் அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியில், " இப்பிரதேசத்தின் மகத்தான பணிகள் புரிந்த பலரை தற்போதைய, எதிர்கால சந்ததியினருக்கு அறிமுகம் செய்து வைக்கும் ஆவணமாகவும் முதுசொம் மிளிரும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

விழாக்குழுத் தலைவரான அல்ஹாஜ் எச். எஸ். ஏ.முத்தலிப் ஜேபி அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியில், "தாய்மொழியையும் தமது கலாசாரத்தையும் படித்துக் கொடுத்து, கல்விக்கு வித்திட்ட கல்விமான்களையும், ஆங்காங்கே மஸ்ஜித்துக்களையும் குர்ஆன் மத்ரஸாக்களையும் அரும்பாடுபட்டு அமைத்து, மார்க்கத்தை வளமுடன் நிகழச்செய்த சன்மார்க்க சீலர்களையும், சமூகத்தின் எழுச்சிக்கும் உயர்ச்சிக்கும் அயராது உழைத்த திணைக்கள, கூட்டுத்தாபன உத்தியோகத்தர்களையும் வாழ வாழ்த்தி கண்ணியப்படுத்துதல் கடனும் கடமையும் பொறுப்பாகும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

விழாக்குழு செயலாளர் எம்.ஏ.எம்.டில்ஷான் தனது வாழ்த்துச் செய்தியில்,

 "ஒவ்வொரு  பிரதேசங்களிலும் இதுபோன்ற கௌரவிப்புக்கள் நடைபெறுவதானது, கல்வி ரீதியாக நாம் எவ்வளவு பண்பட்டுள்ளவர்களென்பதையும்,  அரசாங்கத்திற்கு எந்தளவு எம் ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளோம் என்பதையும் விளக்குவதோடு எதிர்கால நம் சந்ததிகளுக்கும் சிறந்ததொரு எடுத்துக்காட்டுமாகவும் இருக்கும்"  

என்று குறிப்பிட்டுள்ளார்.

விழாக்குழு பொருளாளர் வடமத்திய மாகாண தமிழ்ப்பிரிவு கல்விப்பணிப்பாளர் ஜனாப்  ஈ. பீர்முஹமட்  Sir , அவர்கள் , தனது வாழ்த்துச் செய்தியில் "ஒரு இனத்தின் வளர்ச்சியையும், நாகரீகத்தையும் அறிந்து கொள்வதற்கு உதவியாய் அமைவது அவர்களின் வரலாற்றுப் பதிவாகும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொகுப்பாசிரியர் அன்பு ஜவஹர்ஷா சேர் அவர்கள் , தனது செய்தியில் " ஓய்வு பெற்றவர்களை கௌரவிக்கும் இந்த கௌரவிப்பு விழா மலருக்கு "அநுராதபுரத்தின் முதுசொம்" என்று தலைப்பிட்டமைக்குக் காரணம், இவர்களின் தகவல்களோடு கிடைக்கக்க;டியதாக சில ஆவணங்களையும், எதிர்கால வரலாற்றுத் தேவைகளுக்காக ஆவணமாக்கி உள்ளபடியால் இந்நூலின் உள்ளடக்கத்திற்காகவே இவ்வாறு தலைப்பிடப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேற்கூறப்பட்ட வாழ்த்துச் செய்திகளில் 'முதுசொம்' மலரின் முக்கியத்துவமும், இக்கௌரவிப்பு விழாவின் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளன.

வாழ்த்துரைகளைத் தொடர்ந்து , பல்வேறு திணைக்களங்களில் சேவையாற்றி ஓய்வுபெற்றுள்ள அல்லது மரணித்த எண்பத்தேழு அரச சேவையாளர்களின் பெயர்ப்பட்டியலொன்றும் , அவர்களின் புகைப்படங்களுடன் அவர்கள் பற்றிய சுருக்கமான அறிமுகமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

1992 ஆண்டு இங்கு நிகழ்த்தப்பட்ட தேசிய மீலாத்விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட  மீலாத் மலரில் பிரசுரமாகியிருந்த இரண்டு கட்டுரைகள், இம் மலரில் மீள ஞாபகப்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றுள் ஒன்று திறந்த பல்கலைக்கழக சிரேஷ்ட போதனாசிரியர் ஏ.பி.எம்.ஹூசைன் அவர்களின் "அநுராதபுரத்தில் முஸ்லிம்கள்" எனும் கட்டுரையாகும்.

கி.மு 6ம் நூற்றாண்டில் விஜயனின் வரலாற்றுடன் ஆரம்பமாகும் இலங்கை வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே , இலங்கையில் அராபியர், பாரசீகர், எகிப்தியர் எனும் முஸ்லிம்களின் வழித்தோன்றல்கள்  வாழ்ந்ததற்கான , வர்த்தக நோக்கத்திற்காக பயணத்ததிற்கான சான்றுகள் உள்ளன எனக் கூறி, அச்சான்றுகளையும் இவர் இக்கட்டுரையினூடாக முன்வைத்துள்ளார். முஸ்லிம்கள் அநுராதபுர நகரின் திசாவெவகம, பொன்னாரங்குளம், கும்பிச்சங் குளம், ஆமன்னரத்மல, நாச்சியாதுவ ஆகிய பிரதேசங்களில் தமது ஆரம்ப குடியிருப்புக்களை நிறுவினர் எனத் தொடரும் இவரது  கட்டுரை இன்னும் பல விடயங்களை முன்வைக்கின்றது.

மேலும் அநுராதபுரத்தை ஆண்ட  பண்டுகாபய மன்னன் தொடக்கம் பல மன்னர்கள் அரேபியர்களுடன் கொண்டுள்ள வர்த்தக தொடர்புகள் பற்றியும் இக் கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளது. அக் கால கட்டத்தில் கச்சுத்தோட்டம், இசுறுமுனி, வெஸ்ஸகிரிய, ஒட்டுப்பள்ளம், திசாவெவகம, மிரிசுவெட்டி போன்ற இடங்கள் முஸ்லிம்களின் குடியிருப்புக்களாக விளங்கின. சிங்கள மன்னரின் கீழ் "விதானை"யாக சேவையாற்றிய "முத்து விதானை அசனார் " என்பவரின் வீட்டிலுள்ள இரு கற்றூணில் அவரது பெயர் முதலெழுத்துக்களைக் குறிக்கும்  "மு.அ" எனும் தமிழ் ஈர் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

அரசனின் முகாந்திரமாக அநுராதபுரத்தைச் சேர்ந்த "பிச்சைத் தம்பி" என்பவர் கடமையாற்றியுள்ளார். அரசரால் இவருக்கு வழங்கப்பட்டு வந்த சீருடை இடைவாள், அரண்மனைச்சின்னம் பொறிக்கப்பட்டுள்ள கௌரவ வாள் என்பன இன்னமும் இவரது பரம்பரையினரால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன எனும் செய்தியும் கட்டுரையாசிரியரால் முன்வைக்கப்பட்டுள்ளது. இச் சீருடை, வாள் என்பவற்றின் புகைப்படங்களும் இம் மலரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அன்று அநுராதபுரத்தில் வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் ஐந்து குடும்பப் பெயர்களுடன் வாழ்ந்து வந்ததாகவும், இவர்களை வரலாற்றாசிரியர்கள் "பஞ்சகூட்டத்தினர்" எனக் குறிப்பிடுவதாகவும் அவரது தகவல் மேலும் சுட்டிக்காட்டுகின்றது. 

இவ்வாறு அநுராதபுர மக்களின் இருப்பை, வாழ்வியலை கட்டுரையாசிரியர் பல கோணங்களினூடாக ஆதாரபூர்வமாக முன்வைத்துள்ளார்.

ஆன்மீகப் பணிக்காக இந்தியாவிலிருந்து வந்து அநுராதபுரத்தில் இறையடியெய்திய சிக்கந்தர் வொலியுள்ளாஹ் அவர்களின் ஒட்டுப்பள்ளித் தர்கா, நாச்சியாதுவ, நேகம, இக்கிரிகொல்லாவ போன்ற கிராமங்களின் புராதன தொடர்பும், மன்னர்களின் குளப்புனரமைப்புக்கள் காரணமாக வேறிடங்களுக்கு இடம்பெயர்க்கப்பட்ட முஸ்லிம்களின் குடிப்பெயர்ச்சி பற்றிய தகவல்களும்,  காதல் கொண்ட மன்னன் எனும் தலைப்பில் சிங்கள மன்னன் காதலுற்றதால் தன்னுயிரை நீத்த முஸ்லிம் மந்திரியின் மகளின் சோக வரலாறும் ஆசிரியரால்  ஆராயப்பட்டுள்ளது.

ஆய்வு முகாமையாளர் எம்.எம். அலிகானின் "மறை(று)க்கப்படும் வரலாறு எனும் கட்டுரையில்,  சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலத்தில் அரசின் நடவடிக்கையின் பயனாக, முஸ்லிம்களின் பூர்வீக குடியிருப்புக்கள் பற்றிய தகவல்கள் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன என்பதற்கான ஆதாரங்களை முன்வைப்பனவாக உள்ளன. இக் கட்டுரையை வாசிக்கும் போது பல வரலாற்று உண்மை விடயங்கள் நம்மை அழுத்துகின்றன. எனினும் அவர்களின் ஆட்சிப்பலத்தின் முன்னிலையில் சிறுபான்மையினரின் பல சரித்திர உண்மைகள்  சாதுரியமாக மறைக்கப்பட்டுவிட்டன.

"முஸ்லிம்கள் பூர்வீகக் குடிகளல்லர், பிரித்தானியர் காலத்தில் கொண்டு வரப்பட்டவர்கள்"  எனும் போலிப் பிரச்சாரத்தினூடாக , தாம் மட்டுமே இப் பிரதேசத்தின் பிரதான பூர்வீக உரித்தாளிகள் எனும் கருத்தை ஆட்சியாளர்கள் அவ்வவ்போது தம்மின மக்கள் மனங்களில் விதைக்க முற்படுகின்றனர் எனும் எண்ண உள்வாங்கல்  இக்கட்டுரையை வாசித்த பின்னர் எம் மனதில் நிழலாடுகின்றது.

அநுராதபுர நகரின் முஸ்லிம்களின் இருப்பு தொடர்பான பல விடயங்களை இக்கட்டுரையும் விரிவாக ஆராய்ந்து பல உண்மைகளைக் கோடிட்டுக் காட்டுகின்றது.

"அநுராதபுரம் முஸ்லிம்கள் பல்வேறு பதிவுகள் "எனும் தலைப்பில் மலராசிரியர் ஜவஹர்ஷா சேர் அவர்கள் இந்நகரத்தின் முஸ்லிம்களை அடையாளப்படுத்தும் பல்வேறு சிறப்புக்களையும், முஸ்லிம்களாற்றிய சேவைகளைப் பற்றியும் சமயம், கல்வி, அரசியல், கலை இலக்கியம், விளையாட்டு, முஸ்லிம் மாதர்கள், அஹதிய்யா பாடசாலை, பொது எனும் தலைப்பின் கீழ் ஆராய்கிறார். நிச்சயம் இவ்வாராய்வுக்கான அவரின் தேடல் மிக நீண்டிருக்க வேண்டும். வரலாற்றுத் தொகுப்புக்களை வெளிவிடும் போது மிகவும்  ஆதாரபூர்வமான தகவல்களைக் கவனமாகப் பதிவிட வேண்டியுள்ளது. இங்கும் தகவல்கள் அந்தத் தனித்துவத்தைப் பேணி நுட்பமான முறையில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளது. சமய, கலை , கலாசார, பொருளாதாரப் பின்னணிகளுடன் இச்சமுகத்தின் வரலாற்று ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

1870 ம் ஆண்டு திசாவெவ குளத்தின் மத்தியில் காணப்பட்ட பள்ளிவாசல் உள்ளிட்ட பௌத்த மத வணக்கஸ்தலம் அல்லாத மத வழிப்பாட்டுத் தளங்கள் அகற்றப்பட்டன எனும் செய்தியொன்றும் இப் பதிவில் காணப்படுகின்றது. இவற்றுடன் அநுராதபுர பள்ளிவாசல்கள் ஒட்டுப்பள்ளம் தர்கா உள்ளிட்ட தற்போதைய பள்ளிவாசல் நிர்மாணம் பற்றிய தகவல்களையும் , அவற்றுடன் தொடர்புடைய பின்னணித் தகவல்களையும், மத்ரஸா, தக்கியா, அரபுக் கல்லூரிகளுட்பட்ட மார்க்கக் கடமைகளை மேற்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட  ஈமானிய முயற்சிகளையும் ஆதாரபூர்வமாக இவர் முன்வைத்துள்ளார்.

இம் மண்ணில் கலை இலக்கியச் சுவடு பதித்தவர்களின் பெயர்களும், அவர்கள் பற்றிய சிறு ஞாபகக் குறிப்புக்களும் தடம் பதித்துள்ளமை சிறப்பானதொரு அம்சமாகும். ஏனெனில் இலக்கியம் என்பது மனித வாழ்வியலின், பண்பாட்டின் கண்ணாடியாகும். இதனடிப்படையில் இலக்கிய கர்த்தாக்களான முஹம்மதி மீரா லெப்பை ஆலிம் சாய்பு, ஆ.லெ. உமர்லெப்பை ஆலிம் சாய்பு , அன்பு ஜவஹர்ஷா, எப். ஆர் பரீட்ஹ், எப்.எப். சப்ரினா,  ஜன்ஸி கபூர்,  எம். வஸீம் அக்ரம், மர்ஹூம் எஸ்.எச். எம் .ஸஹீர் சட்டத்தரணி போன்ற பலரின் எழுத்துப்பணிகளும் அடையாளப்படுத்தப்பட்டு காட்டப்பட்டுள்ளன.

அநுராதபுரத்திலிருந்து வெளிவந்த, வரும் சஞ்சிகைகள் பற்றிய குறிப்புக்களும் காட்டப்பட்டுள்ளன. அவையாவன:-

  • சிக்கந்தர் மகத்துவக்கும்மி (1928 -முஹம்மதி மீரா லெப்பை ஆலிம் சாய்பு,)
  • விதி-அறிவு-விளக்கம் (1938-முஹம்மதி மீரா லெப்பை ஆலிம் சாய்பு,)
  • கைபுட்சிக மாலை (உமர்லெப்பை ஆலிம் சாய்பு - அநுராதபுரத்தில் ​வெளியீடு)
  • தமிழ்மணி கையெழுத்துச் சஞ்சிகை (எம்.எஸ்.ஹூசைன்)
  • இளைஞர் குரல் (இரு ஆசிரியர்களுள் ஒருவர் மர்ஹூம் அமீர் சுல்தான்)
  • மாணவர் குரல் ( அண்டன் ஞானராஜா)
  • தமிழ்ச்சுடர் (ஆசிரியர்களுள் ஒருவர் அன்பு ஜவஹர்ஷா சேர் )
  • புத்தொளி (ஆசிரியர்களுள் ஒருவர் அன்பு ஜவஹர்ஷா சேர் )
  • வீரத் தமிழன் ( மர்ஹூம் எஸ்.எச். எம் .ஸஹீர் )
  • தேன்துளி ( மர்ஹூம் எஸ்.எம். ஸாலிஹ்)
  • பிறையொளி பாடசாலைச் சஞ்சிகை (அன்பு ஜவஹர்ஷா சேர் )
  • பொறிகள் ( அன்பு ஜவஹர்ஷா சேர் )
  • காவிகளும் ஒட்டுண்ணிகளும் -அன்பு ஜவஹர்ஷா சேர் 
  • அன்னை (எப். ஆர் பரீட்ஹ்)
  • அல் மதீனா (எப். ஆர் பரீட்ஹ்)
  • தொலைச்சுடர் ( ஜன்ஸி கபூர் )
  • அநுராகம் (ஜன்ஸி கபூர் , எப். ஆர் பரீட்ஹ், ஏ.பி.எம். அன்சார் )
  • படிகள் (எம். வஸீம் அக்ரம் )
1853 ம் ஆண்டில் இங்கு  பாடசாலைகள் 3 மாத்திரமே இருந்ததென்ற செய்தியுடன்  இவரது கல்வி பற்றிய பார்வை தொடர்கின்றது.  முதன் முதலாக எஸ்.எஸ்.சி சித்தியடைந்த மாணவர் எம்.எஸ். ஹூசைன் என்றும்,  முதல் பல்கலைக்கழக நுழைவு அவரது புதல்வி நூர் நிஹார் என்றும் தகவல்கள் இங்கு சுட்டி நிற்கின்றன. மேலும் மொஹம்மதியன் கொலேஜ், முஸ்லிம் வாலிபர் சங்கம் உருவாக்கம், அநுராதபுர ஸாஹிரா மகா வித்தியாலயம் உருவாக்கம் என்பவற்றின் பின்னணி பற்றியும்  நுணுக்கமாக ஆராய்ந்துள்ளார்.

அத்துடன் அநுராதபுரம் முஸ்லிம் சமுகத்திற்கு சேவையாற்றிய அல்ஹாஜ் யூ. அபூசாலி , அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலயத்திற்கு கட்டிடம் வழங்கல் மூலம் அளப்பரிய சேவையாற்றிய மர்ஹூம் அல்ஹாஜ் மொஹிதீன் தம்பி அமீர் சுல்தான் ( பாடசாலை விடுதி ), அல்ஹாஜ் அனஸ்தீன் (சிறுவர் நூலகம்) என்பவர்கள் நினைவூட்டப்பட்டதுடன், சீ.பி முகம்மது அவர்களின் ஞாபகார்த்தமாகக் கட்டப்பட்ட கட்டடம், பழைய மாணவர்களினால் உருவாக்கப்பட்ட ஆசிரியர் விடுதி , சிற்றுண்டிச்சாலை, மஸ்ஜிதுஸ் ஸாஹிரா பள்ளிவாசல் , பாடசாலை முன் முகப்பு என்பவற்றின் உருவாக்கப் பின்னணியில் உழைத்த பெருந்தகைகள் பற்றியும் இங்கு கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

விவேகானந்த தமிழ் மகா வித்தியாலயம், அநுராதபுரம் முஸ்லிம் கல்வி, கலாசார அபிவிருத்தி அமைப்பு , அநுராதபுரம் முஸ்லிம் கல்வி அமைப்பு ,அல் இஸ்லாஹ் பாலர் பாடசாலை, பிரிசம் (சமூக அபிவிருத்தி அமைப்பு) , அநுராதபுரம் சுதந்திர இயக்கம் (AIM) உள்ளிட்ட இம் மண்ணில் உருவாக்கப்பட்டு, இம் மக்களுக்கு சேவையாற்றிய, சேவையாற்றும் பல்வேறு அரசியல் , சமூக நிலையங்களும், சமூகப் பணியாளர்களும் பெயர் குறிப்பிடப்பட்டு  நினைவூட்டப்பட்டுள்ளனர்.

இம் மண்ணின் முதல் வைத்தியர் ரீ.எம். அஸ்மி , முதல் நிர்வாக சேவை உத்தியோகத்தர் ஓ.எல். அஷ்ரப் என்போரும் வரிகளில் அமர்ந்து கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

அரசியல் இல்லாமல் எந்தச் சமூகமுமில்லை என்ற முன்னுரையுடன், இவரின் அரசியல் பார்வை தொடர்கின்றது. காதர் சாய்பு செய்யது அஹமட், எல்.ஏ. மஜீத் (ஜே.பி) , அப்துல் ரவூப் (ஜேபி) , சட்டத்தரணி எஸ். நடராஜா, திரு ஆர். வி. கந்தசாமி, அப்துல் வாஹித் அப்துல் சலாம் , மொஹமட் அன்சார் (ஜே.பி) , ஏ.சி ராவுத்தர் நெயினா முஹமட் போன்றோரும், அவர்கள் சமுகத்திற்கு ஆற்றிய சேவைகளும் இக் கட்டுரை வாயிலாக நினைவுபடுத்தப்பட்டுள்ளன.

எழுத்துத் துறையில் மட்டுமல்ல நாடகம், ஊடகம் போன்ற துறைகளிலும் அநுராதபுரத்தை பிறப்பிடமாகக் கொண்டவர்கள் பங்களிப்புச் செய்துள்ளனர். அவர்களுள் நாடகத் துறையில் மர்ஹூம் அமீர் சுல்தான் அவர்களும் , ஊடகவியலாளராக அன்பு ஜவஹர்ஷா சேர் அவர்களும் ITN தொலைக்காட்சி அறிவிப்பாளராகவும், நாடகக் கலைஞராகவும் செயற்பட்ட உவைஷ் ஷெரீப் அவர்களும் சிரச ஊடகவியலாளருமான எம்.எம். றிஸ்வி அவர்களும் மர்ஹூம் ரிஸ்மி மஹ்ரூப் அவர்களும் ஊடகவியலாளர் ஆர். எம். தாரீக் அவர்களும் முதன்மைப்படுத்தப்படுபவர்களாவார்கள்.

இவர்களைப் போலவே சமூகத்திற்கு பங்களிப்புச் செய்யப்பட்டுள்ள முஸ்லிம் மாதர்களும், விளையாட்டுத் துறையினரும் இம் மலரின் தடத்தில் பெயர் பொறிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் மார்க்க அறிவை சிறார்களுக்கு வழங்கும் அஹதிய்யாப் பாடசாலையின் சேவையும், அவற்றின் பின்புலத்திற்கான காரணங்களின் ஆராய்வும் இக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறான நீண்ட தேடல்களின் பின்னணியில் பெறப்பட்ட தகவல்களை "அநுராதபுரம் முஸ்லிம்கள் பல்வேறு பதிவுகள்" எனும் பதிவினூடாக அன்பு ஜவஹர்ஷா சேர் அழகாகவும் சிறப்பாகவும் பதிவித்து, நமக்கொரு சிறந்த வரலாற்று ஆவணத்தை தந்திருக்கின்றார். தர முயற்சித்திருக்கின்றார்.

இப் பதிவுகள் நீங்கலாக சில தகவல்களும் புகைப்படங்களும் பின்னிணைப்புச் செய்யப்பட்டுள்ளன. 1950ம் ஆண்டு வரை அநுராதபுர புனித வளனார் கல்லூரி, அநுராதபுரம் விவேகானந்தா தமிழ் கல்லூரி, ஸாஹிரா மகா வித்தியாலயத்தில் கற்றவர்கள் பெயர் விபரங்களும், அக்காலங்களைச் சுட்டும் சில பிறப்பத்தாட்சி பத்திரங்களின் பிரதிகளும், அநுராதபுரத்தில் முஸ்லிம் குடியிருப்புக்களைக் காட்டும் இட அமைவு வரைபும், சில மலர்களின் முகப்பட்டைகளும் உள்ளிட்ட பல நிகழ்வுகளின் அரிய ஆவணப் பதிவுகளின் நிழல்படங்களும் புகைப்படங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

அநுராதபுர முஸ்லிம்களின் வரலாற்றை சிறப்பாகத் தொகுத்துத் தரும் சிறப்பான பதிவே  இவ் "அநுராதபுரத்தின் முதுசொம்"  என்றால் மிகையில்லை. எனினும் ஓரிரு இடங்களில் அச்சுப் பிசாசின் எழுத்துப் பிழைகளும் அவதானிக்கப்பட்டாலும் கூட, அவை தவிர்க்கமுடியாதவை. குறைகளல்ல..இந் நல்ல முயற்சியை பலகீனப்படுத்தும் எந்தக் குறைபாடுகளையும் நான் அவதானிக்கவில்லை. சிறப்பும், நிறைவுமே என் கண்முன்னில் விமர்சனமாகி வீழ்கின்றன.

தனி மனித வாழ்வில் பிறப்பிடம், இருப்பிடம் எனும் இருதாங்கல் மிக முக்கியமானதாகும். அந்த வகையில் நான் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டாலும் கூட, இரு தசாப்தங்களுக்கு மேலாக எம்மையும் இருப்பிடமாகித் தாங்கி நிற்கும் இவ் அநுராதபுர பூமியினதும், முஸ்லிம் மக்களினதும் சிறப்புக்களை நானும் மிக நேசத்துடனும், அக்கறையுடனும் உள்வாங்கியவளாக எனது மலர் பற்றிய பார்வையை நிறைவு செய்கின்றேன்.

அல்ஹம்துலில்லாஹ்!

Jancy Caffoor