About Me

2020/07/19

காத்திருப்பு


கருப்பாயி.................!

தோட்டத்துரையின் குரல் சற்று அதிகாரமாக ஒலித்தபோது உறிஞ்சிக் கொண்டிருந்த தேயிலைக் கோப்பையை கீழே வைத்தவளாக ஓடிச் சென்றாள் அருகே....

துரையின் பார்வையில் சூடு கொதித்துக் கொண்டிருந்தது. அவர் கோபிக்கும் அளவிற்கு தான் செய்த தப்பு என்ன.... அவனால் அனுமானிக்க முடியவில்லை.

'ஐயா..........'

அப்பாவித்தனமாய் அவரைப் பார்த்தாள்.

'இப்ப நேரம் என்ன......எத்தனை கூடை கொழுந்து பறிச்சே'

'ஓ.....இன்று கொஞ்ச நேரம் தாமதித்து வந்ததற்கான விசாரணதானா இது'

மனம் காரணத்தைக் கண்டறிந்தது. தாமதித்து வேலைக்கு வந்தால் அவளது நாட்கூலிதானே குறையும். இது அவளுக்கும் தெரிந்ததுதானே. ஆனாலும் வரமுடியாத சூழ்நிலை. கொதிக்கும் அனலோடு வந்திருக்கிறாள். அவளுக்கென்று இந்த உலகத்தில் இருப்பது எண்பது வயது அப்பத்தா மாத்திரம்தானே. அவள் பிறந்ததும் அம்மா இறந்து விட்டதாகச் சொன்னார்கள். குடிகார அப்பாவோ   இவளைக் கைவிட்டுவிட்டு யாரோ ஒருத்தியின் பின்னால் ஓடிவிட்டதாக ஊரார் பரிகசித்தார்கள்;. வறுமையுடன் அல்லல்பட்ட இந்த வாழ்வே வெறுத்துப் போய்விட்டது. இருந்தும் அவளை நம்பி வாழும் அப்பத்தாக்காக  வாழ்ந்தே ஆக வேண்டும். அழகை ரசிக்கும் இந்த உலகம் முகத்தில் தழும்புகளுடன் பிறந்த அவளை சற்று ஒதுக்கியே வைத்து விட்டது. தன்னை நிராகரிப்பவர்களின் பின்னால் சரணடைந்து ஓட அவளும் தயாரில்லை. இந்த சமூகத்தில் தன்னையும் நிலைநிறுத்தும் அவளின் போராட்டம் தொடர்ந்தே கொண்டே இருக்கிறது. காலையில் அப்பத்தாக்கு உடம்பு கொஞ்சம் முடியாமலிருந்தது. அவருக்கு கசாயம் வைத்துக் கொடுத்தாள். நாட்டுப்புற வைத்தியம் அவளுக்கு ரொம்பப் பிடிக்கும். அப்பத்தா முன்பு சொல்லிக் கொடுத்த கை வைத்தியங்களின் பலனாக தன்னை நாடி வருவோருக்கு ஏதோ தன்னாலான கை வைத்திய உதவிகளை செய்து கொடுப்பதில் திருப்தியை உணர்கிறாள் கருப்பாயி.

'விசாரணைக் கைதியாக குறுகி நிற்பவள் இந்தத் துரையிடம் தன்னை நியாயப்படுத்த விரும்பவில்லை. நியாயம் கிடைக்காத இடத்தில் வாதிட்டு என்ன பயன். சுகவீனமுற்றிருக்கும் அப்பத்தாவின் நினைவும் மனதை வருத்திக் கொண்டிருந்தது. லீவு கேட்டாலும் தரமாட்டாங்க. கஞ்சி குடிக்கிற காசில கொஞ்சத்தை வெட்டும்போது அந்த ஈர் உயிர்களும் பட்;டினியால் வாட வேண்டுமே. முழித்திருந்து விடிய விடிய அப்பத்தாவை கவனித்ததில் அவளது உடலும் சற்று அசௌகரிகப்பட்டது போன்ற பிரமை. நண்பகல் 12 மணிக்குள்ள அஞ்சு கூடையாவது கொழுந்து பறிக்கணும். மனதால் தன்னை தயார்படுத்தினாள்.

'என்ன பேசாம நிற்கிறே. போ அந்தப் பக்கம் நெறைய கொழுந்திருக்கு பிய்ச்சுட்டு வா'

துரை சுட்டிக் காட்டிய திசையில் விழிகள் குத்தி நின்றதும் லேசான படபடப்பை உணர்ந்தாள். அந்தப் பகுதியில் உள்ள மரங்களில் பெரிய பெரிய குளவிக் கூடுகள் இருப்பதை அவள் அறிவாள். துரைக்குப் பிடித்தவர்கள் அந்தப் பக்கம் செல்வதில்லை. யாராவது இப்படி மாட்டிக் கொண்டால் பலிவாங்குவதைப் போல் அந்தக் குளவிகளுக்கு இரையாக்குவதில் கொடூர இன்பம் போல்.

வேறு வழியின்றி வயிற்றுப் பசி தணிக்கும் அந்த நாட்கூலிக்காக துரை கூறிய பகுதியில் கொழுந்து பறிக்கச் சென்றாள். அங்கே ஓரிரு முகங்கள் தெரிந்ததும் மனம் சற்று ஆறுதலடைந்தது. மனதுக்குள் இறைவனை துதித்தவளாக கொழுந்து பறித்து முதுகில் சுமந்து கொண்டிருந்த கூடைக்குள் போடத் தொடங்கினாள். சிறிது நேரத்தில்,

'கிர்...கிர்...........'

தலைக்கு மேலே பறந்து கொண்டிருந்த குளவிக் கூட்டங்கள் அவளை மொய்க்கத் தொடங்கின. உயிருக்குள் தீ வார்த்த பிரமை.

'ஐயோ...........'

அவளின் சப்தம் கேட்டு அருகிலிருந்தோர் அவளை நெருங்க முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். ஆவர்களின் ஆரவாரச் சப்தம் கொஞ்சம் கொஞ்சமாக அவளது ஞாபகத்திலிருந்து குறைந்து போக ஆரம்பித்தது. கண்களும் மயக்கத்தில் சொருவ ஆரம்பித்தது. அந்த மயக்கநிலையிலும் அப்பத்தாவை நினைத்துபோலும் அவளது கன்னங்கள் கண்ணீரால் நனையத் தொடங்கின.
அங்கே... அவள் குறித்த நேரத்தில் வருவாளென்ற நம்பிக்கையில் அப்பத்தா காத்துக் கொண்டிருக்கிறார்.

ஜன்ஸி கபூர் - 19.07.2020
யாழ்ப்பாணம்




2020/07/18

நிலா முற்றம் கவி அரங்கம் -224

நிலா முற்றம் கவி அரங்கம் -224

தமிழ் வணக்கம்

என் உணர்வோடிசைந்து உணர்வுகளில் கலந்து அமிர்தமாய்ச் சுவைக்கும் அழகுத் தமிழுக்கு என் முதல் வணக்கம்

தலைமை வணக்கம்
கவியரங்கம் நிறுவனர் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த அன்பு வணக்கங்கள். நடுநிலை தவறாத கவியரங்கத் தலைமைக்கும் என் இதயபூர்வ நன்றிகளை மகிழ்வுடன்; முன்வைக்கிறேன்.
அவை வணக்கம்
கவியரங்கில் வாதிட களம் நிற்கும் அவையோருக்கும் என் அன்பு வணக்கங்கள்;

தலைப்பு
மனதிற்கு இனிமை தருவது

துணைத் தலைப்பு
இயற்கையே

விழி இன்பம் அழகிய மொழி
விலகிடும் துன்பங்கள் இயற்கை வனப்பிலே
விண் தொடும் மேகக் கூட்டங்கள்
விருப்புடன் நனைத்திடும் நல் மழையாய்
விளைந்திடும் கனிகளும் நறுஞ் சுவையே

பழகிடும் தோழமையாய் இயற்கையும் மாறுகையில்
பாசத்தோடு தொட்டுச் செல்லும் தென்றலும்
பறந்தோடும் சோம்பலும் உற்சாகம் நமதாகும்
பசுஞ்சோலைகள் குடைகளாகி வனப்புக் காட்டுகையில்
பசியும் விட்டகன்றே மகிழ்வும் சுவையாகும்
பறவைகளின் சிறகடிப்பும் பார்க்கையில் பரவசமே

இயற்கையும் அரணாகும் புவியும் அழகாகும்
இரசனையான அனுபவங்களும் கூடிவரும் பாடங்களாய்
இலக்குகள் கற்றிடவே இங்கும் பயிற்சிகளுண்டே
இதயமும் லயித்தாடும் நீரூற்றின் குளிர்மையிலே
இன்னுயிரும் பண்பாடும் குயிலோசை ஒலிக்கையிலே
இரவின் கண்களிலே விருந்தாகும் விண்மீன்கள்

அலைகள் துடிக்கையிலே கலிகள் கரைந்தோடும்
அணைத்திடும் தென்றலுமே ஆருயிர் வருடிவிடும்
அல்லியும் முகங்காட்ட ஆனந்தம் வழிந்தோடும்
அற்புதக் காட்சிகளில் அனலும் குளிராகும்
அன்பின் உணர்வோங்க ரசிப்பும் சுகமாகும்
அகிலத்தின் இயக்கத்திலே அமைதியும் அருகாகும்

ராகங்கள் இசைபாட உந்துதல் இயற்கையே
ராத்திரி வான்நிலவும் ரசிப்பின் சொப்பனமே
ராஜாங்கப் பூமியிலே ரசனைகள் ஏராளம்
ரகஸியங்கள் அறிந்திடவே தேடல்களும் சுவையாகும்

காதலும் வசப்படும் இயற்கையின் இதயத்திலே
கருத்துக்கள் மலர்ந்திடுமே கற்பனையும் ஊற்றெடுக்கும்
கருணை பூமியிலே பதிக்கும் தடங்களெல்லாம்
கல்வெட்டாய் பதிவாகும் நினைவின் ஏட்டினிலே

வனப்பின் ஆட்சியினில் வாழ்க்கையும் வென்றிடுமே
வாழ்நாளும் போதாதே வசந்தத்தை ரசித்திடவே
இறைவனின் அற்புதமே கண் ரசிக்கும் காட்சிகளே
இயற்கையோடு வாழ்கையில் மனமே இனிதாகும்

நன்றி நவிலல்
வாய்ப்பளித்த குழுமத் தலைமைக்கும் கவியரங்கத் தலைமைக்கும் பங்கோடிணைந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். வணக்கம்

ஜன்ஸி கபூர் - 18.07.2020
யாழ்ப்பாணம்





பரத நாட்டியம்

முகவழி பாவங்களும்/
கைவழி முத்திரைகளும்/
சலங்கை ஒலியினில் ஜதியாக/
அழகிய நடனமும் விருந்தாகும்/
 

நயன விழிகள் அசைகையில்/
நவரசங்கள் கண்டேன்/
இசையுடன் ஜதியும் இசைகையில்/         
சிற்பமாய் நின்றேன்/

ஜன்ஸி கபூர் 


வான் சிறப்பு


குறள் 11

வானின்றி உலகம் வழங்கி வருதலால்/
தானமிர்தம் என்றுணரற் பாற்று/
 

வான்மழையும் தடையின்றித் தொடர்ந்து பொழிவதால் 
வையகமும் நிலைத்தே வாழ்கிறது அழிவின்றி
அகிலத்தில் வாழும் உயிர்களின் நிலவுகையை
அமிழ்தமாகி காத்து நிற்கிறதே இம்மழையும்
 
குறள் 12

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை


மழை பருகி தளிர்க்கும் பயிர்களால்
மண்ணுலகமும் சிறந்தே உயிர்களும் வாழும்
தண்ணீராய் மாறி தாகமும் உடைக்கும்
உன்னத மழை உயிர்களைக்; காக்கும்

 
குறள் 13

விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உண்ணின்று உடற்றும் பசி

வான்மழையின் பொழிகை தடைபட்டுப் போனால்
கண்ணீராகும் கடலைச் சுற்றிய உலகும்
புண்ணாகி வருத்தும் கொடும் பசியால்
மண்ணுலகில் வாழும் உயிர்களும் இறக்கும்

ஜன்ஸி கபூர்