About Me

2020/07/23

குச்சுவீட்டுத் திண்ணையோரம்


குச்சுவீட்டுத் திண்ணையோரம் ஆசை/
மச்சானும் காத்திருக்கேன் நெடு நேரம்/
அச்சமேனே அஞ்சு நிமிசம் பேசிடலாம்/
பச்சப் புள்ளையே புரிஞ்சுக்கடி மனசத்தான்/

வளைஞ்சோடும் நதியோரம் நீ நடக்கையிலே/
வளையல் சத்தம் கலகலக்குதடி காதோரம்/
வைரமே உருக்கிறியே என் மனசத்தான்/
வைகைக் காற்றே கிள்ளாதே நினைவைத்தான்/

மை தீட்டும் விழியாலே மயக்குறே/
தை மாசம் வாறேன்டி வீட்டோரம்/
கை வீசி நடக்கையில மனசள்ளுறியே/
வையடி சீக்கிரம் கல்யாணத் தேதியத்தான்/

மொய்க்கிறே வண்டாட்டும் மனதைக் கிள்ளித்தான்/
பொய்யாக சினந்துகிட்டே சிவக்கிறே அழகாக/
சாய்ந்தாடும் மலரே உன்னிதழ் அமுதாக/
காய்ந்த பூமியின் தேவதை நீதானடி/

ஆலமர விழுதிலே ஊஞ்சலும் ஆடுவோமா/
ஆசை நெலவும் ரசித்திடப் பாடுவோமா/
ஆனந்தத் தித்திப்பிலே உசிரும் இசைந்தாட/
ஆருயிரே காத்திருக்கிறேன் உனக்காக/

ஜன்ஸி கபூர்
 





மெய்க்காதல்


அந்தாதி கவிதை
-----------------------
பனித்துளிகள் படர்கின்றனவே உன்னை நினைக்கையில்/
நினைக்கையில் வீழ்கின்றாய் கனவெல்லாம் சுகம்தானே/
சுகம்தானே கண்ணே உயிரும் தேடுகிறதே/
தேடுகிறதே நிழலும் உன் பாதையினை/
பாதையினை வகுத்தே வாழ்ந்திடுவோம் நலமாய்/
நலமாய் வாழ்ந்திடவே துடித்திடுமே மனதும்/
மனதும் தவித்திடுமே நீயென்னைப் பிரிந்தாலே/
பிரிந்தாலும் சேர்ந்திடுமே நம் மெய்க்காதல்/

ஜன்ஸி கபூர் - 24.07.2020
யாழ்ப்பாணம்


மகிழ்வின் விலை

 

உழைப்பின் மூச்சினில்  ஊதிப் பருத்திடும்
ஏழை வியர்வையும் காற்றினில் கலந்திடும்
தழைத்திடும் வாழ்வும் செழித்தே மலர்ந்திட
அழைப்பார் விலை கொடுத்திட ஊதும்பைக்கே

பிஞ்சு மனங்களின் கொஞ்சும் விரல்கள்
கெஞ்சி வருடும் காற்றுப்பை மேனிதனை
அஞ்சிடாமல் அசைந்திடும் தென்றல் சுகத்தினில் 
நெஞ்சமும் நிறையுதே வானவில் வர்ணங்களில் 

விழிகளின் சுகத்தினிலே அழுகின்றதே இயற்கையும்
பழியாகுமோ சூழலும் இறப்பர் மாசினால்
அழிகின்றதே பண்பாடும் காற்றுப்பை கலாசாரத்தினால்  
செழிக்கட்டுமினித் தரணியும் பசுமை யலங்காரங்களால்

ஜன்ஸி கபூர்   

2020/07/21

புத்தம்புதுக் காலையிலே நித்தம் காத்திருக்கேன் அத்தமகளே உனக்காக பூத்திருக்கேன்

 
புத்தம்புதுக் காலையிலே நித்தம் காத்திருக்கேன்/
அத்தமகளே உனக்காக பித்தாகப் பூத்திருக்கேன்/
சித்தமெல்லாம் உருகுதடி உந்தன் அழகாலே/
உத்தமியே உசுருக்குள்ளே உன்னைத்தானே பூட்டினீயே/

கடலோரக் காற்றி லுந்தன் வாசமெல்லாம்/
கவிதையாக வீழுதடி நனையுதே மனசும்தான்/
கனவோரம் உயிர்க்குதடி நினைவெல்லாம் சுகமாய்/
கட்டியிழுத்தாய் காலமெல்லாம் கூடி வாழ/

நாணம் சிந்தும் நளின விழியினிலே/
நானும் சிறைபட்டேனே நிழலாய்த் தொடர/
நாவுதிர்க்கும் அமிர்தமே சுவைக்கத் துடித்தேனே/
நாளுமே உனக்காக ஏங்கித் தவித்தேனடி/

நடக்கு முன்னழகிலே அன்னமும் தோற்குதடி/
குடமேந்தும் வளைவினிலே துடிக்குதடி வயசும்தான் / 
விடமும் அமிர்தம்தானே நீ தொட்டதனாலே/
அடம்பிடிக்காதே  நாள்குறி நாம வாழத்தான்டி/

ஜன்ஸி கபூர்