About Me

2020/08/03

வரம்

நீண்ட நேரமாய் ஒலித்துக் கொண்டிருக்கும் அலைபேசியை இயக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் உஷா. கைபேசி அதிர்வை விட அவளின் மனம் கூடுதலாக படபடத்துக் கொண்டிருந்தது. சுவரில் மாட்டப்பட்டிருந்த நாட்காட்டி இதழ்கள் காற்றிலே அசைந்தாடி அந்தத் திகதியை காட்சிப்படுத்தியபோது மனதுக்குள் ஏனோ அமைதியின்மையை உணர்ந்தாள். இத்தனை நாட்களாக தனக்குள்ளேயே ஒரு வட்டத்தைக் கீறி வெளியுலகத் தொடர்பின்றி வாழ்பவளுக்கு கைபேசி அழைப்பு விசனத்தைக் கொடுத்தது. நிலத்திலே ஊன்றிக்கிடந்த தனது வலது காலைப் பார்த்தவளுக்கு மனசுக்குள் நறுக்கென்று முள் குத்திய பிரமை.

இரண்டு வயதில் அந்த ஊரில் வேகமாகப் பரவிய இளம் பிள்ளை வாத நோய் அவள் வாழ்வையும் முடக்கியது. பண்ணாத வைத்தியமில்லை. மனம்தான் புண்ணானது. நோய்த் தாக்கம் கண்ட கால் வளர்ச்சியடையாத நிலையில் ஒரு காலை இழுத்து இழுத்து நடப்பதற்கும் பழகிக் கொண்டாள்.

காலம் யாருக்கும் காத்திருப்பதில்லை. பருவம் அவளுக்குள்ளும் பூச்சூடியது. இருபதைக் கடந்த பேரழகி  இன்று. ஆனாலும் அடுத்தவர் கண்களுக்குள் புலப்படாத கால் ஊனம் அவள் மனதுக்குள் வலியைப் பிறாண்டிக் கொண்டிருந்தது.

இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஏதோ ஒரு திறமை அவர்களை  அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறது. பொழுதுபோக்காக தைக்க ஆரம்பித்தவள் இன்று அதன் மூலமாக வருவாயும் ஈட்ட ஆரம்பித்துள்ளாள்.

மனம் ஒரு நிலையில்லாமல் தடுமாறியது.

அவன் ஜெகன்.....

அண்ணன் முகேஷின் நண்பன். அடிக்கடி வீட்டுக்கு வருவான்.
எதிர்பாராதவிதமாக தனிமையில் அவனும் அவளும் சந்திக்க நேரிட்ட அந்த நாளில்  வெளிப்படுத்தினான் தன் விருப்பத்தை.

'உஷா..........'

அவள் மௌனமாகவே நின்று கொண்டிருந்தாள்.

' ஏன்............உனக்குள்ளேயே உன்ன சிறைப்பிடிச்சு வச்சிருக்கிறே. வெளியே வா..... எனக்கு உன்ன ரொம்பப் பிடிச்சிருக்கு. நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்.

அவனின் காதலுக்குள் தாய்மை நிரம்பியிருந்தது. உணர்ந்தாள். ஆனாலும் உள்ளத்துத் துயர் அவள் மௌனத்தை அவிழ்க்க விடவில்லை. வீட்டுக்குள் மறைந்து கொண்டாள்.

அதன் பின்னரான முயற்சியாக ஜெகன் கைபேசியில் அவளைத் தொடர்பு கொள்ள முயன்றும் தோற்றுப் போனான். அவள் தனது பிடிவாதத்திலிருந்து இறங்குவதாக இல்லை. சிந்னையிலிருந்தவள் தாயாரின் குரல் கேட்டு சுயநினைவுக்குள் திரும்பினாள்.

'மக........... இங்க வாம்மா யாரு வந்திருக்கிறாங்னு பாரு'

அம்மாவின் குரல் கேட்டு வெளியே வந்தவள் அதிர்ந்து நின்றாள்.

அங்கே..................

ஜெகன் ......அவனது அம்மாவுடன் வந்திருந்தான். அவளுக்கு எல்லாம் புரிந்தது.  அம்மாவின்  நீளமான சந்தோச உரையாடலில் தாயாரின் சம்மதம் தொக்கி நிற்பதை உணர்ந்தாள்.

அவனோ இமைக்காமல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்;. அந்தப் பார்வையில் வழிந்த காதல் அன்பு பாசம் எல்லாமே ஒன்றிணைந்து அவனை அவளுக்குள் இமயமாய் உயர்த்தி வைத்தது.

அவன்.............

அவளுக்கான வரம்.........

முதன்முதலாக அவனது பார்வை அவளுக்குள் மகிழ்வைக் கிளற ஆரம்பித்தது. உதடுகள் அவளையுமறியாமல் நாணத்துடன் உரசி நின்றது. ஒரு புதிய வாழ்க்கை தன் கண் முன்னால் ஒளிர ஆரம்பிப்பதை உணர்ந்தாள் உஷா.

ஜன்ஸி கபூர்
 




 

அன்பே .......எழிலே

அன்பே என்னுயிரே
அமுதூட்டும் விழியாளே/ 
ஆரத்தழுவினேன் உனையே
ஆனந்தம் வழிந்தோட/
இளமைச் சிற்பமே 
இன்பவூற்றின் செங்கரும்பே/
ஈகையாய் எனக்களித்தாய்
உனைத்தானே எழிலே/

ஜன்ஸி கபூர் - 03.08.2020



தடம் மா(ற்)றும் எதிர்காலம்



நவீனத்தின் உருமாற்றம் மதியதை மயக்க/
நாகரிக மோகமும் வாலிபத்தை வீழ்த்தும்/
நாடித்துடிப்போடு கைபேசி அலைவின் சுதந்திரமும்/
நாளைய சந்ததியின் உறவுகளை உடைத்தெறியும்/

இயந்திரச் சுழற்சியாய் இசைந்திடும் வாழ்வில்/
இதயங்களும் தானறியாது அன்பின் அருமைதனை/
இடரறுக்கும் வலிமையின்றி மரணத்துள் வீழும்/
இளையோரின் தன்னம்பிக்கையும் சுருங்கும் தானாய்/

உழைக்கும் கரங்களும் கரைக்கும் பணத்தை/
உறுஞ்சுமே நாவும் போதை மதுவை/
உன்னதப் பணியாற்றும் பண்பாடும் கலாசாரமும்/
உடைகையில் எதிர்காலமும் தடம் மா(ற்)றுமே/

ஜன்ஸி கபூர் - 28.07.2020




2020/08/01

அன்புக்குப் பஞ்சமில்லை

 

'என்னப்பா....செய்யுது.......காய்ச்சல் காயுதே.......இந்த இரவுல ஆசுபத்திரிக்கு எப்படி போறது......எனக்கென்டா ஒன்னுமே புரியல'

கண்கலங்கிய சாரதாவை ஆறுதல்படுத்தினார் மணி.

'இங்க........பார் புள்ள எனக்கு ஒன்னுமில்ல லேசான காய்ச்சல்தான். நாளைக்குப் பார்க்கலாம்'

என்றவரை மீண்டும் இடைமறித்தாள் மனைவி சாரதா. 

'சொன்னா கேப்பியளோ.........ஒங்களுக்கென்ன மழயில நனைஞ்சிட்டு சும்மா இருமிட்டு இருப்பீங்க. என்ர மனுசு படுற வேதனை ஒங்களுக்குத் தெரியுமா' 

தான் அணிந்திருந்த சேலைத் தலைப்பால் தனது மூக்கை உறிஞ்சித் துடைத்தாள் அவள்.

'புரியுது சாரு........ஒனக்கு நான்........எனக்கு நீயுன்னு வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த அன்ப ஆண்டவன் உடைப்பான்னு நெனைக்கிறியா. பேசாம தூங்கும்மா...நாளைக்குப் பார்க்கலாம்'

என்றவரை கவலையுடன் பார்த்தாள் மனைவி. 

'சரி இந்த மாத்திரைகளையாவது குடிச்சிட்டுப் படுங்கோ என்னப்பா' 

என்றவாறு மனைவி கொடுத்த மாத்திரைகளை வாங்கி விழுங்கினார் மணி.

மணி சாரதா தம்பதியினருக்கு குழந்தைகள் பிறக்கவில்லை. யாரிடம்  குறையிருக்கிறது என்பதை அவர்கள் தேடிப் பார்க்கவுமில்லை. மணி ஓய்வு பெற்ற அரச ஊழியர். அந்த ஊரில் நடைபெறும் எல்லா   விடயங்களிலும் அவரைக் காணலாம். 'மாஸ்டர் சுகமோ' என காண்பவர்களெல்லாம் கேட்டு விட்டே செல்வார்கள். அவரின் மனைவி சாரதா அவருக்கு முறைப்பெண் என்பதால் அன்புப் பொருத்தத்தை தவிர வேறெந்த பொருத்தத்தையும் குடும்பத்தார் பாராமலே  திருமணத்தில் இணைத்து வைத்தார்கள்.
  
'என்னங்க....இப்ப எப்படி இருக்குது'

இருளையும் துளைத்துக் கொண்டு வந்த அவளின் குரல் அவரை மெதுவாக உசுப்பியது. அவளைப் போல அவரும் தூங்காமல் தன்னைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தார்.

'இப்ப பரவாயில்ல தூங்கு புள்ள'

அவரின் வார்த்தைகளில் நம்பிக்கையில்லாதவளாக அவரின் உடலைத் தொட்டுப் பார்த்தாள். மனசு லேசான உணர்வு. நிம்மதியாக உறங்கப் போனாள்.

இந்த உலகத்தில் சிறு துன்பம் வந்தாலே நெடுந் துயர் கொண்டு வருந்துகின்ற அன்புள்ளங்களை சம்பாதிப்பதே மிகப் பெரும் சேமிப்பு. அந்த இனிய தம்பதிகளின் அன்புக்குத்தான் பஞ்சமேது....ஆனந்த உலகம் அவர்களுக்காக விரிந்து கொண்டிருக்கிறது அழகாக.

ஜன்ஸி கபூர்