About Me

2020/09/16

புல்லல் ஓம்பு என்றது உடையாரே

 இலக்கியப்பிருந்தாவனம்

புல்லல் ஓம்பு என்றது உடையாரே

--------------------------------------------------------

காதலில் இசைந்த தலைவனும் தலைவியும்

களவில் கனிந்தனர் விழிகளோ இன்பத்தில்

கண்டனரே பெற்றோரும் சினத்திலே பொங்கினர்

கலங்கியதே நெஞ்சங்களும் ஈரமும் அனலில்


வெந்த மனதில் விரக்தி பிழம்புகள்

வெடித்த பொழுதினில் உடைந்தாள் தலைவியும்

இடிந்த இதயமும் இறக்கியதே வார்த்தைகளை

இரசித்த காதலுக்குள் இரணங்களின் சேர்க்கையே


சந்தித்த தலைவனை நிந்தித்தாளோ தலைவியும்

சிந்தையை நிறைத்தவள் சிதறினாள் வார்த்தைகளை

அந்நியமானாள் அடுத்தவர் தலையீட்டின் உச்சத்தினால்

அவலத்தின் சுவைக்குள் விழிநீரும் விழுந்திடவே


விட்டுவிடு என்றவளை தொட்டணைக்கத் துடித்தானே

விலகிடும் காதலோ இது என்றானே

உருகும் காமமும் காதலில் நனைந்திட

உணர்வும் உறவாடத் துடித்ததே தவிப்புடன்


மறுப்புரைத்தான் மனதுக்குள் நிறைந்திருந்த தலைவிக்கு

மனம் கவர்ந்தவளே மறுக்கிறேன் பிரிவிற்கே

உந்தன் இருண்ட கூந்தலுக்குள் அலைகின்ற

எந்தன் இரசிப்பினை உடைக்காதே கண்ணே


என் முன்னே பேசிடாதே என்றுரைத்தாரே

அன்றி தழுவிட மறுத்துரைத்தாரோ பெண்ணே

இன்பத்தின் சுவைதனை மென்றிட வேண்டும்

உன் பற்களை மெல்லக் கடித்தே

என்னவளே மெல்லத் தழுவிக்கொள் என்றானே


தலைவனின் கூற்றினை செவிகளும் தாங்கிட

தலைவியின் சிந்தையும் மொழிந்தது உணர்வினை

தனக்குள்ளே எண்ணினாள் தவிப்பினில் உறைந்திட்டாள்

அவன் உரைப்பில் மெய் இருப்பின்

அக அன்பினால் வாழ்க்கைக்குள் இணைவேன்


அன்றில் பொய்யுரைப்பின் கருகுமே மாலையும்

அலைந்திடும் நெஞ்சமும் ஏக்க வெம்மையில்

அழுதிடும் விழிகளை ஆற்றாத தோள்களும்

ஆற்றாத் துயரில் வாடிடுமே என்றும்


அதுவும் அழகுதானே எனும் நெஞ்சின்

அவதியின் அதிர்வினை உணர்ந்த தலைவனும

அகம் மகிழ்ந்தானே தலைவியின் இசைவையெண்ணி 


விலையுயர்ந்த காதலின் மெய்யன்பை மெல்ல

தலைவியே தலைவனும் உம்மைத் தழுவாவிடில்  

தவழ்ந்திடும் நெஞ்சத்து மாலையும் கருகுமே

தனலாய் கொதித்திடும் ஏக்கத்தின் தாக்கத்தில்

தவிக்கின்ற உன் விழிகளின் சோர்வும்

தோள்களின் வாட்டமும் அழகைப் பறித்தாலும்


உனக்கு அதுவும் அழகே என்றாளே

நெஞ்ச அதிர்வினைத் தனக்குள் பகிர்கையில்

தன்னுடன் இசைகிறாள் என்றெண்ணி மகிழ்ந்தானே

தலைவனும் காதல் அன்பினைச் சுவைத்தவனாக

ஜன்ஸி கபூர் - 06.09.2020




படரும் பந்தம்

படரும் பந்தம் பாசத்தில் கலந்தே/

பாட்டி பேத்தியாய் உறவுக்குள் இணைகிறதே/

பாருக்கும் சுமையல்ல அன்பின் தித்திப்பு/ 

பரவசத்தில் ஆளுமே நெஞ்சத்து நினைவுகள்/


சுருக்கத் தேகத்துக்குள்ளும் சுகமான தலைமுறை/

விருப்போடு அணைக்கையில் விலகுதே இடருமே/

தனிமை நெருப்பினை அணைத்திடும் இனிமையும்/

தழுவுதே உணர்வுக்குள் அழகிய உறவுகளாக/


ஜன்ஸி கபூர் - 16.09.2020






வல்வில் ஓரி

 


கடையெழு வள்ளல்களுள் மாவீரன் ஓரி

கவர்ந்திட்டான் நல்லாட்சியால் கொல்லிமலை நாட்டினை

கருணையும் அன்பும் மனதின் மொழிகளாம்

களம் ஆண்டான் காண்போர் புகழவே


கொல்லிமலைக் கொற்றவனாம் உவந்தளிக்கும் வள்ளலாம்

இல்லாதவர் இதயங்களை ஆண்ட நல்லோனாம்

வல்வில் ஓரியானார் வில்லின் வாண்மையால்

வில் வீரெனப் புகழ்ந்தாரே வன்பரணரும்


வரலாறும் புகழ்ந்திடும் மன்னனின் பொற்காலத்தை

வாழ்த்துவர் புலவரும் போற்றிடும் புலமைக்கே

வறுமைத் தணலுக்குள் வீழ்ந்திடும் மனங்களை

வாரியணைத்திடும் வள்ளன்மையே புகழ்ந்திடுமே வையகமும்


ஓரியின் கொடைத்திறன் மொழிந்திடும் புறநானூறும்

ஓடையின் இதத்தில் குளிர்ந்திடுவார் சூழ்ந்தோரும்

அரசன் ஆளுகையில் நாடுகள் பதினெட்டும்

வளத்தில் செழித்தன வானும் வணங்கியதே


பரி மொழி அறிந்திட்ட வீரனிவன்

பரிவோடு செலுத்திடுவான் குதிரைகளின் மீதேறி

பற்றும் பாசமும் கொண்ட குணத்துள்;

பற்றியதே வில்வித்தை நுட்பங்களும் திறனோடு


ஒப்புமை இல்லாதவன் பொருளுக்குள் பெயரும்

ஒத்திசைந்தான் வீர தீர ஈரத்தில்

ஓர் நாளில் வண்பரணரும் கண்டாரே

ஓரியின் வேட்டுவத் திறனின் ஆளுகையை


வில்லினை வளைத்தே எய்த அம்பும்

விண்ணில் பறந்து வேழம் வீழ்த்தி

விரைந்து நுழைந்தது புலியின் வாயிலுக்குள்ளும்;

வித்தை யிதுவோ கலைமானும் காட்டுப்பன்றியும்


உடும்பும் விண்ணேறியதே வில்லாளன் வலிமையில்

ஓர் இலக்கிற்கு எறிந்திடும் அம்பும்

துளைத்திடுமே பல பொருளையும் வீரத்தினால்

துதித்திடுவார் வண்பரணரும் வல்வில்லின் பெருமையை


இசைவாணர்கள் இசைத்தனர் ஓரியின் புகழினை

இசையால் மயங்கியே மன்னனும் மகிழ்ந்தானே

இதயமோ பெருமிதத்தில் இரசனையும் மனதினில்

வாரி வழங்கினான் அன்புடன் தானமதை 


கொடையாளி ஓரியின்மீது படையெடுத்தனரே அழுக்காற்றால்

கொடும் குணம் கொண்ட காரியும்

கொற்றவன் சேரனும் கொன்றொழிக்கும் தீவிரத்தில்

நட்டனரே ஓரியின் உயிரை மண்ணுக்குள்


போர் வல்லமை கொண்ட காரியின்

போராற்றல் படையினரும் வென்றனரே ஓரியை

போர்க்களத்தில் வீழ்ந்தாலும் மன்னன் ஓரி

போற்றப்படுகின்றான் மக்கள் மனங்களை வென்றவனாகி


அபார ஞானத்தில் பாண்டவர்  நகுலனும்

அயர்வில்லாத விஜயனுக்கும் இணையாகிப்  போற்றப்பட

அகிலத்தின் பார்வையும் அண்ணார்ந்தே பார்த்திடுமே

அதிசய வீரனானே ஆதன் ஓரியை


ஜன்ஸி கபூர் - 16.09.2020









2020/09/13

கிராமத்துச் சாரல்

 இயற்கையின் பசுமைக்குள் உயிர்க்கின்றதே கிராமமும்

இதயங்களின் சங்கமத்தில் உறவாடுகின்றதே பண்பாடும்

இன்பத்தின் கலவைக்குள் விழிக்கின்ற விடியலுக்குள்

இலயிக்கின்ற அமைதியும் சிறகடிக்குமே உணர்வினில் 


முற்றங்களில் வரைகின்ற கோலங்களின் ஈர்ப்பினில்

சுற்றிடுமே தென்றலும் வசீகரத்தில் நனைந்தே

சுற்றத்தின் அன்பினில் சுகமாகும் வாழ்வுக்குள்

ஏற்றமும் கண்டிடுவார் எளிமையின் முகவரிக்குள்


வயலின் புன்சிரிப்பில் குலுங்கிடுமே மணிகள்

அயராத உழைப்பினிலே இசைந்திடுமே மனமும்

பயன் மரங்களெல்லாம் அழகின் செழுமையினில்

படர்கின்றதே கலப்படமில்லாத எழில் வாழ்வும்


கிராமத்துச் சாரலின் இயற்கை அழகினை

இரசிக்கின்ற விழிகளுக்குள் கோடி இன்பமே

வீசுகின்ற தென்றலில் சாய்கின்ற பயிர்களெல்லாம்

இசைக்கின்ற நாதமும் செவிக்குள் நல்லிசையே


ஜன்ஸி கபூர்