About Me

2012/06/14

அன்றும் இன்றும் !


அன்றோ 
உன் நடையோசைச் சிணுங்கலில்
கவனித்தாயா - என்
இதயமோ சுளுக்குக் கண்டது!
இன்றோ 
நீயென் இதயம் கிழித்து
உயிர் விரட்டுகின்றாய்
என்னிலிருந்து 

அன்றோ 
கடற்கரை மணல் கண்ட
நம் காதலை
அலை நுரைகள் தழுவிய போது
தடம் தேடி கண்ணீரானாய்!
இன்றோ 
கண்ணீரில் என் கனாக் கழுவும்
வில்லனாய்
புன்னகைக்கின்றாய்
அட்டகாசமாய்!

அன்றோ 
என் நினைப்பில் நீ
எகிறிக் குதிக்கும் போதெல்ாம்
களைக்காத காதல்!
இன்றோ 
இளைப்பாற மடி தேடுது
யார் கண் பட்டு!

அன்றோ 
என் நினைவகத்தில்
ஆட்சியேற்றினாயுன் அன்பை!
இன்றோ 
விஷமூட்டி கருவறுக்கின்றாய் - என்
உணர்வுகளை!

அன்றோ 
நேசத்துடன் கல்வெட்டானாய்
என்னுள் !
இன்றோ 
உன் கல்மனச் சர்வதிகாரத்தில்
துவம்ஷத்துடன்
என்னுள் மரண அவஸ்தை
வார்க்கின்றாய்
வில்லத்தனத்துடன்!

அன்றோ 
முழுமையாய் எனை ஆக்கிரமித்து
சிறை வைத்தாய் எனை !
இன்றோ 
என் வாழ்க்கை மன்றத்தில்
நீயொரு விசாரணைக் கைதியாய்
தீர்ப்பளிக்கப்பட்டுள்ளாய்!

அன்றோ 
சிறகடிக்குமுன் விழிகளில்
உனை நிரப்பிக் காத்திருந்தாய்!
இன்றோ 
பொய்மைக்குள் எனை விழுத்தி
புன்னகைக்கின்றாய்
இரக்கமில்லாதவனாய்!

அன்றோ 
ஓவியமாய் ஒளிந்திருந்தாய்
என்னுள் கருத்தோடு!
இன்றோ 
வீழ்ந்து கிடக்கின்றாய் சர்வாதிகாரியாய்
துரோகச் சரிதத்தில் !


அன்றுன் 
பார்வையால் எனை விழுங்கி
களவெடுத்த என்னை!
இன்றோ 
இருப்பிடம் பிடுங்கி
ஏலமிடுகின்றாய் வேரொறுவனுக்கு!


ஜன்ஸி கபூர் 


ஞாபகம் வருதே!






















சின்னக் கண்ணில் ஏக்கம் விதைத்து
வண்ண நிலாவை எட்டிப் பிடிக்க 
கண்ட கனவின் புல்லரிப்பு
மீண்டெழுமிந்தப் பொழுதில்!

பூவின் மேனி நடுங்கச் செய்து
வண்டின் தேனை களவில் பருகி 
மலர்ச் செண்டில் முகம் நனைத்த
ஞாபகங்கள் நெஞ்சைக் கிறுக்கும்!

காற்றின் காலில் பட்டம் கட்டி
சேற்று மணலில் உருண்டு பிரண்ட 
மழலைப் பொழுது மனதைக் கௌவும்
மானசீக ரசிப்பில் இறுகிக் கிடக்கும்!

ஊஞ்சல் இறக்கை உயரப் பறக்கும்
அஞ்சாச் சிட்டின் சாகசம் வியக்கும் 
வாஞ்சையோடு உறவும் ரசிக்கும்
பிஞ்சின் நெஞ்சில் மகிழ்வும் பூக்கும்!

மணல் சோறு ஆக்கியெடுத்து
மாலையும் சோகியும் கோர்த்தெடுத்து 
பாவைப் பிள்ளை திருமணம் நடத்தும் - அந்தப்
பால்ய பருவம் வெட்கித்துக் கிடக்கும்!

நட்புக்களோடு கிட்டியுமடித்து
பள்ளிக்கூடம் "கட் " டுமடித்தே 
நல்ல பிள்ளை பெயர் கெடுத்த - அந்தப்
பொல்லாக் கணங்கள் மிரட்டி விரட்டும்!

இரட்டை ஜடை கட்டி ஆட்டி
கொசுவம் வைத்து சேலையு முடுத்தி 
பெரிய மனுஷியாய் போட்ட வேசம்
வில்லத்தனமாய் மனசுல் இறங்கும்!

அழுது விம்மி ஆர்ப்பரித்து நானே
அம்மாவிடம் அபகரித்தவையெல்லாம் 
அள்ளியெடுத்து ரசித்த கணங்கள்
துள்ளி வந்து நெஞ்சை முட்டும்!

தம்பி பறப்பான் தும்பி பிடிக்க
எம்பிக் குதிப்பேன் எனக்கும் தாவென்று 
கவலை மறந்த அந்தக் காலம்
கண்ணீரறியா பொற் காலம் !

முதுகை உதைக்கும் தோற்பையும்
வெம்மையில் புரளும் காலுறையும் 
அழுக்காகத் துடிக்கும் வெள்ளையுடையும்
அடையாளப்படுத்தும் பள்ளி வாழ்வை!

கவலை மறந்த அந்தக் காலம்
கண்ணில் வாழும் நாள்தோறும் 
களிப்பில் புன்னகை கோர்த்துத் தந்த
பிள்ளைப் பருவம் வாராதோ 
மீள வாராதோ!

ஜன்ஸி கபூர் 

முதுமையினில்!

நம் வசந்த வாழ்வின்
கடைசி வரிகள் 
மறுமைத் தேடலுக்கு
மனுப்போடும் விண்ணப்பம்!

நம் வாலிபப் பாறையைக்
பெயர்த்தெடுத்து - காலம்
வரையும்
கடைசிச் சிற்பம்!

விழிச் சுருக்கத்தின் கிறக்கத்தில்
இறுகிக் கிடக்கும் சோகம் 
நம் தளர் நடையிலோ
பாதச்சுவடு
உலர்ந்து வெடிக்கும்!

வாழ்க்கை தேசம்
தாழ்போட்டமிழும்  
ஆன்மீகக் குளியலுக்காய்!
சுவாச நீரோட்டமோ 
சுகம் காட்டும் நோய்களுக்கு!

மனப்புலத்தின் நிழலிலே
மங்கிப் போகும் ஞாபகம் !
ஐம்புலன் ஒலிபரப்பில்
இயலாமை உலாவாகும்!

வாலிப மிடுக்கெல்லாம்
தொலை நோக்கி வழிந்தோடும் 
அநுபவங்களின் வீரியங்கள்
வந்தமரும் வாழ்வினிலே!

வேரறுந்த கனாக்கள்
வேவு பார்க்கும் உறக்கத்தை 
விரக்திக் களைப்போ
உயிரை அறுத்துப்போகும்!

இரங்காத உறவுகளின் இம்சையில்
இதயம் இளைப்பாறும் 
உறக்கத்தின் அருமை
ஏக்கத்தில் வீழ்ந்து கிடக்கும்!

காலத் தேய்வில் வயசோ
நழுவிப் போக 
வீணாய்ப் போன விழுதாய்
நீண்ட தனிமை
கதறித் துடிக்கும்!

நரை வடுக்களுடன்
நாடியும் தளர்ந்து 
மூப்புத் திரையோட்டத்தில்
மூச்சும் அந்நியமாகிப் போகும் !

விறைத்த மனசுக்குள்
சிறைப்பிடிக்கும் ஆசையொன்று!
மறை கழற முன் - என்
ஆவி பிரியாதே இப் புவிதனை நீங்கி !


ஜன்ஸி கபூர் 




2012/06/13

ஓர் நாள்!


இப் பிரபஞ்சத்துள் தடம் பதிக்கின்றேன்
உறக்கத்திலிருக்கும் 
வண்ணப்பூச்சிகளின் சிறகுகள்
என் ஹிருதயத்துள்
நீயாகி 
முத்தமிடத் துடிக்கின்றன!

விண் தொடுகின்றது - என்
காட்சிப்புலம் !
விண்மொட்டுக்களின் வில்லத்தனத்தில்
உன் ஞாபக விம்பங்கள்
மயங்கிக் கிடக்கின்றன!

இருளோடு சரசமாடும்
மல்லிகையின் மோகனத்தில் - என்
கூந்தல் 
தன்னைத் திணிக்க தடுமாறிக்
கொண்டிருக்கின்றது
அப்பாவித்தனமாய்!

ஊர்க் குருவிகளின் அட்டகாசம்
என் கனவுகளையறுத்து
விழிப்புத் தொட்டிலை
நிறைத்துக் கொண்டிருக்கின்றது
வீம்பாய்!

அந்த மயானப் பொழுதினின்
தூறல்களில் 
தூசி படிந்து கிடக்கும் - என்
தனிமைச் சாளரத்தை உடைத்தே
உன் நினைவுகள் - என்
மனவெளிகளில் அப்பிக் கிடக்கிறது
விதவைப் பெண்ணாய்!

நீ தந்த 
இதய வலிகளிலேனோ - என்
உதயமும் வழி தவறி
எங்கோ அலைந்து கொண்டிருக்கின்றன 
வெறும் பிரமையாய் 
உன்னைப் போல!

என்னாச்சு என்னுயிருக்கு!
உன் 
(ஏ)மாற்றங்கள் நகம் பிடுங்கியதால்
கண்ணீருக்குள் தன்னை
அடகு வைத்தே 
அது சோரம் போனதோ!

எங்கோ ஓர் மூலையில்
பதுங்கியிருக்கும் உன் நிழல் மாத்திரம்
ரகஸியமாய் - நம்
பந்தத்தை மறு ஒலிபரப்புக்காய்
ஆவணப்படுத்திக் கொண்டிருக்கின்றது!

உன்னால் மறுக்கப்படும் - என்
நியாயங்கள் 
ஊமை வலியில் முனகிக் கிடக்க
நீயோ 
எனை இராட்சகி முடி சூட்டி
குருதிப் பிழம்புக்குள் தள்ளிவிட்டே
வேடிக்கை பார்க்கின்றாய்!

தோல்விகள் நிரந்தரமல்ல 
நேச வேள்வியில் வெந்து கருகும் - நம்
நெஞ்சின் சாலைப் பரப்பு
என்றோவொரு நாள் - நம்
பிரிவுக்கு நாள் குறித்து
வழி தரும் 
வலி போக !