2012/06/24
ஒற்றையாய் !
நிசப்தக் காற்றின் சீண்டலில்
மூச்சு வியர்த்துக் கிடக்கும்
மெலிதாய் எனைச் சீண்டியபடி!
வெளி வானில் உடைந்திருக்கும்
வட்ட நிலா மௌனத்தில் - ஏனோ
கனவுகள் மூச்சையற்றுக் கிடக்கும்!
தன் முகம் தேடியலையும்
காற்றின் மூர்க்கத்தன வேட்டையில்
இருள் கசங்கிக் கிடக்கும்!
வெட்கம் துறந்த வண்ணப்பூக்கள்- தம்
ஆடை களைந்து வீழ்ந்து கிடக்கும்
இரவுச் சயனத்தில்!
அண்டவெளியில் விரல் தொடும்
நம் மௌனம் மட்டும் - அழகாய்
ஏறுமுகம் காட்டிக்கிடக்கும்!
இந்த இரவோ
இன்னும் தேடிக்கொண்டிருக்கும்
தொலைந்து போன என்னுறக்கத்தை!
ஒற்றையாய் உடைந்து கிடக்கும்
நம் நட்பு மட்டும்- விழியோரத்தில்
கண்ணீருக்குள் அடைக்கலமாகிக் கிடக்க
நாமோ
வறட்டுப் பிடிவாதத்தால்- நம்
கவிக்காதலை நசுக்கியபடி
பயணிக்கின்றோம் நம்மை மறைத்தபடி!
ஜன்ஸி கபூர்
2012/06/23
மனசெல்லாம் !
மனசெல்லாம் நீயே உருகிறேன் என்னுயிரே!
என் நெஞ்சில் படர்ந்த துடிப்பொலியே
என் ஞாபகத் தேசத்தின் பொன்முடியே
உருகிறேன் என்னுள் நானே மருகிறேன்
கரைகிறேன் மெழுகாய் நானும் உறைகிறேன்
சிலிர்க்கிறேன் மெல்ல உன்னில் நனைகிறேன்
வெயிலில் கரைந்த பனித்துளியானோம்
வானவில் பிழிந்த ஞாபகங்களானோம்
விரல் பேசும் வீணைகளானோம்
என்னுயிரே என்னுயிரே
என் விழியில் உனை நட்டிப் போகின்றாய்
காதலில் உயிர் நனைத்துக் கொல்கின்றாய்
நாணத்தில் ஒவியமும் வரைகின்றாய்
என்னுயிரே என்னுயிரே
என் மனசெங்கும் உந்தன் வாசமே
என்னிழலெங்கும் உந்தன் பூவாசமே
இதழில் மின்னலைத் தைத்தவனே
காற்றை கூந்தலில் முடித்தவனே
தேகத்தில் தங்கம் எடுத்தவனே
என்னுயிரே என்னுயிரே
என் மனசெங்கும் உன்தன் வாசம் கோர்க்கிறேன்
என் நெஞ்சில் உன் பாசம் சேர்க்கிறேன்
என்னுயிரே என்னுயிரே
என்னை வார்த்தையால் செதுக்கும் சிற்பியே
என்தன் நிழலுள் வீழ்ந்திட்ட சொப்பனமே
பனிக்குள்ளே உறைந்திட்ட தென்றலே
பறக்கின்றேன் உன்தன் விரல் நனைத்தே
விண் மொட்டில் கோலம் போடத் துடிக்கிறேன்
துடிக்கிறேன் என் தேகம் வேர்த்தே
சிரிக்கிறேன் நானும் சிலிர்க்கிறேன்!
உன் வெள்ளிக் கொலுசின் நாதங்களாய்
என்றும் நாமும் சிரித்திடலாம்
உறையும் பனிக்குள் பதுங்கி நாம்
காதல் தேகம் சிலிர்த்திடலாம்
என்னுயிரே என்னுயிரே
உன்தன நிழலாய் நானும் படர்வேன்
அருகில் வாவா எந்தன் ஜீவனே
விண்ணில் பறக்கலாம் இறக்கை கட்டி
அந்த நிலவை உடைத்தும் வாழ்ந்திடலாம்
மண்ணில் மின்னலை நட்டிடலாம்
என் பொன்னுலடலில் பூவைக் கோர்த்திடலாம்
என்னுயிரே என்னுயிரே
உன்தன் மனம் எங்கும் உந்தன் வாசமே
வெயிலில் கரையும் தங்கச் சிட்டே
கார்க்கூந்தலில் மறையும் வண்ணநிலவே
என்னுயிரே என்னுயிரே
நீயின்றி வாழ்வதும் சாத்தியமோ
உன்னுள் உறைந்திட்ட பாறையும் நானே
என்னுள் வீழ்ந்திட்ட பார்வையும் நீயே
என்னை பிரிப்பதும் சாத்தியமோ
என்னுயிரே என்னுயிரே
என் மனசெங்கும் உந்தன் வாசமே
காதலில் வீழ்ந்தோம் சரித்திரமாய்
இரவிலே அமிழ்ந்தோம் கனவுகளாய்
அடைக்கலமுமானோம் ஆத்மாவினில்
என்னுயிரே என்னுயிரே
என் விழியில் உனை நட்டிப் போகின்றாய்
மனசெங்கும் தென்றலை விட்டுப் போகின்றாய்
என்னுயிரே என்னுயிரே
உன்னை மறப்பதும் சாத்தியமோ
என்னுயிரே என்னுயிரே
ஜன்ஸி கபூர்
மாற்றம்
என்னுள் தினசரி இறக்கை விரிக்கும்
உன் கனவுகளை
கத்தரித்தது நீதான்!
முக்காட்டுக்குள் மறைந்திருந்த
என்னுயிருள்
அமிலம் வார்த்தாய் இன்றேனோ!
அன்றோ
கல்புல் விரல் தொட்டு
கனவுள் உரு தந்து
காட்சிப் பிழம்பில் நிழல் கலந்து
நெஞ்சில் வளர்ந்தாய் நெடுமரமாய்!
இன்றோ
அன்பில் கல்லெறிந்து - நீ
காணாமல் போன போது
இடறி வீழ்ந்த சோகங்களை
உறிஞ்சியெடுத்தேன் கண்ணீருக்குள்!
நாளை
என் கண்கள் மீண்டுமுன்னிடம்
ஏமாறாமலிருக்க!
புவிச்சுழற்சி வீச்சைப் போல்
என்னுள் வீழ்ந்து கிடந்தவுன்னை
அவிழ்த்து விட்டேனின்று
பறந்து விடு
உன் சுதந்திர பூமி தேடி!
உன் வாசலில் வீழ்ந்து கிடந்த
என் காலடித் தடங்களை
பெயர்த்து விடு!
நாளை அவை
சாட்சி சொல்லக் கூடும்
நம்மை
உன்னவளிடம்!
ஜன்ஸி கபூர்
2012/06/15
தோழமைக்காக !
உன் கிராமச் சாரலில்
தடமாய் பதிந்த என் சுவடுகளில்
நம் தோழமை விம்பமாய்ச் சிரிக்கும்!
நீண்டு செல்லும் உன்
ஒற்றையடிப் பாதையும்
விழுதுகளால் காலூன்றும் அந்த
ஆலமரமும் - உன்
ஞாபகப் புலம்பலை
எனக்குள் நிறைத்துக் கிடக்கும்!
உன் நிழற்படுக்கையில் கூட
வெம்மைத் தணல்கள் - தம்
மார் தட்டி நிற்கும்!
மூங்கிலுடைத்து ஸ்வரம் கண்ட
உன் கவிப்புல்லரிப்புக்களில்
சிலிர்த்த மனசின்னும்
பொலிவு துறக்கவில்லை!
இருந்தும்
என் கண்ணீருறிஞ்சும் உனக்காய்
சோகப்பூக்கள்
தலைவணங்கிக் கிடக்கின்றன
பொறுக்கிக் கொள்!
நீ சிரிக்கின்ற போது
பூரித்துக் கிடந்தேன்
புரிந்ததின்று
பரிவற்ற உன் வார்த்தைகளால்
கருமை பூசின என் பொழுதுகள்!
அன்புக்குள் பொய்மை பூசி
வம்பு வளர்த்தவுன் ஆணவம்- என்
மூச்சு வேர்களை அறுத்தெறிந்தன
இரக்கமின்றி!
உன் அப்பாவித்தனமும்
அழகான பேச்சும்
அடடா
உயர் விருதுகளின் கௌரவிப்புக்களாய்
சமர்ப்பணமாகும்
உன் அரிதாரப்பூச்சுக்களுக்கே!
மல்லிகை பொறுக்கி
மாலை தொடுத்து - அதை
அள்ளியெடுத்த என் கூந்தலின்
கண்டனப் பேரணி - உன்
வில்லத்தனத்திற்கெதிராய்
ஊர்கோலம் போகும்!
என் விழிநீர்த் தோரணங்கள்
கன்னச் சேமிப்பறையில்
உறைய முன்
உரித்தெடு அவற்றை!
ஏனெனில்
நாளையவை சாட்சி சொல்லக்கூடும்
உனக்கெதிராய்!
என்னுள்
கள்ளிப் பாலூட்டி நிதம்
புள்ளிக்கோலம் போடுமுன்
ஆத்மதிருப்திக்காய்
பாதாள மெத்தையில் தனித்திருக்கின்றேன்
வா- உன்
துரோதச் சரிதங்களை
அங்கேயாவது ஒலிபரப்புச் செய்யலாம்!
இருந்தும்
முள்வேலிகளாலிப்போ
எல்லைப்படுத்தும் நம் நட்பு
பிரிவு உடன்படிக்கையில்
கைச்சாத்திட்டதால்
சுதந்திரமானோம் - புதுவுலகில்!
ஜன்ஸி கபூர்
Subscribe to:
Posts (Atom)