2012/07/01
அட...செல்லமே!
ஏந்திழையே!
நமக்குள் முகிழ்த்தது நட்பென்று
என்னுள் வீறாப்புத் தொட்டாலும் .................
ஏனோ......
உயிரோர வேலிகளில்
எட்டிப் பார்க்கின்றாய் வாஞ்சையுடன்
நீயென் காதலியாய்!
சகியே.!
சல்லடை போட்டுத் தேடுகின்றேன்
உன்னை......!
மயிலிறகின் ஸ்பரிசமாய்
என்னுள் வீழ்ந்துகிடக்குமுன்னுள்
என்னுயிர் நாட்டிட!
வெட்ட வெளியில் மோகம் பிழிந்து
எட்டிப் பார்க்கும் நிலாவாய் நீ காத்திருக்க..........
மொட்டைமாடிக் குளிரில்
லாப்டொப்பின் நரம்புகளாய்
நான் புடைத்திருக்க......
பயணிக்கின்றேன் உனைக் கோர்த்தவாறே!
உன்னிதழில் எனைப் பிழிந்து
விழியுறக்கம் தனைக் கலைத்து- நம்
நெஞ்சுக்குள் சாரல் துளைக்குமந்த
நெருடலே "காதலாய்" மொழி பேச............
கைபேசியினில் உரசிடும் வார்த்தைகளில்
சித்தம் கரைந்து கிடக்கின்றேன்- உன்னுள்
என் முத்தத்தை நனைத்தவாறே!
என் வெம்மையை உடைத்தெறிந்தே............
உன்னுள் எனைப் பத்திரப்படுத்தும்
உன் ஆன்மாவுக்குள்
நானே நிரந்தரமாகின்றேன்
இப்போதெல்லாம்!
என் கவித் தேசத்தின் உலாவுகை
இப்பொழுதெல்லாம் - உன்
விரல் பற்றியே எழுதுகின்றது
உன் காதலை என்னுள்
வார்த்தபடி!
மேகம் பிழிந்தோடும்
தூறல்கள் நீயாக !
உன்னுடன் சயனிக்கையில்
நீயே என் கவிதைகளாய்
களமிறங்குகின்றாய்
உன் செவ்விதழ் வடிக்கும்
குறும்புகளில் நசிந்தும்............
என் விரல் ரேகைக்குள்
தடம் பதித்தும்.............
கூத்தடிக்குமுன்னை
பிரியேன் ஓர் பொழுதும்!
அடச்....செல்லமே!
அறிவாயா..இப்பொழுதெல்லாம்............
ஊடலுக்குள் உனை வீழ்த்தி
கூடிக் களிக்குமென் னாசைகள்
காதல் அவஸ்தைகளாய்
அறுத்தெறிகின்றதுன் மௌனத்தையும்
உயிரை வருடியபடி!
ஜன்ஸி கபூர்
2012/06/30
முத்து !
வாழ்க்கையென்பது மிக நீண்ட பயணம்.............
இப் பயணத்தில் நம்மை நிலைப்படுத்த உறவு, நட்பு, அறிந்தவர் எனும் தரிப்பிடங்கள் நம் வெட்டுமுகங்களாகின்றன. சில நட்புக்கள் காலவோட்டத்தில் கரைந்து போக, சிலவோ ஞாபகப் பரப்பிலிருந்தும் அழியாத உணர்வுப் பதிவாகிக் கிடக்கின்றன.
பாரதம் தந்த பாசக்கிளி.
"உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே"
இந்தத் தாரக மந்திரத்தால் தன் உள்ளத்தை உரப்பேற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் நல்லிதயம்..............
முத்து .......!
அன்று...
என் முகநூல் ஆரம்பப் பயணத்தில் நண்பராக என்னுள் இறங்கி, இன்று அன்புத் தம்பியாக என் வாழ்க்கைப் பூமியில் நிலையூன்றியிருக்கும் உறவுத் துடுப்பிவர். பெயரில் முத்து இருந்தாலும் அவர் எண்ணங்கள் யாவும் வைரத்தை விட பெறுமதியானவை!
அன்பான உள்ளம் அவருக்கு இறைவன் கொடுத்த அருட்கொடை. நிறையப் படித்தும் கூட துளியளவு கூட கர்வம் கிடையாதவர். நட்புக்கு இன்முகமும் நேசமும் காட்டி மனசுக்குள் மானசீகமாய் பரவிக் கிடப்பவர்.
மதம் மனிதங்களை மலினப்படுத்தும். ஆனால் முத்தோ மதத்தில் "மதம்" கொள்ளாமல், பிற மதத்தவரின் உணர்வுகளைக் கொல்லாமல் தன் மதமாய் பிற மதங்களையும் நேசிக்கும் மானிடப்பண்புள்ள நல்ல இளைஞர்.
பல சோதனை ஆர்ப்பாட்டத்திலும் அமைதி காக்கும் இந்த இளைஞர். தன்னம்பிக்கையுடன் வாழ்வை ஜெயிக்கும் செயல்வீரர்.
என் முகநூலின் பல பக்கங்களின் விடியல் அவர் காலை வணக்கத்துடனேயே விடிந்திருக்கின்றது.
"அக்கா"
மலர்ச்சியில் பல வார்த்தைப்பனித்துளிகள் செய்திகளாய் பரவசப்பட்டுக் கொண்டிருக்கின்றன அவர் விடும் பாசத்தூதாய்!
அவர் முகநூல் பக்கங்களிலும் கூட காலை வணக்கம் வெறுமையாக அல்ல நல்ல படிப்பினையூட்டும் சிந்தனை தாங்கிய செய்தியுடன் கூடிய புகைப்படத்துடனேயே எப்பொழுதும் சிரிக்கின்றன....
முத்து............
கலாரசிகன்......கலைத்திறனில் பிடிப்புள்ள கலைஞன்.....!
அவர் சிந்தனைக்குள் வீழ்ந்து கிடப்பவை உயிர்ப்போட்டமுள்ள புகைப்படங்கள் தான்..அவரது புகைப்பட ஆல்பம்...கருத்துச் செறிவுள்ள சேமிப்பகம்!
அந்தச் சேமிப்பிலிருந்து சில துளிகள் இப் பக்கத்தை நிறைக்கின்றன பெருமிதத்துடன்........
தான் ரசிக்கும் அழகான , அறிவுபூர்வமான, அற்புதமான, கருத்துச் செறிவுள்ள புகைப்படங்களை ரசிப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல், அப் படம் பேசும் பின்னணியையும் அழகாகப் பதிப்பதில் அவருக்கு நிகர் அவரே!
இவரது புகைப்படங்கள் அழகு, வறுமை, அன்பு, இயற்கை, வாழ்க்கை,பொழுதுபோக்கு என பல வார்ப்புக்களிலும் தெறித்துக் கிடக்கின்றன முகநூல் பக்கங்களில்!
தான் கற்ற படிப்பினை, அறிவுத்துடிப்பாக்கி சாதனைகளின் பக்கம் சாய்ந்திருக்கத் துடிக்கும் இந்தச் சகோதரனின் வெற்றியின் கனம் நாளுக்கு நாள் ஏறுமுகம் காட்டியே நிற்கும் என்பதில் ஐயமில்லை.
நம் வாழ்வின் ஆயுட் பரப்புக்களின் எல்லைக்குள் நாம் சாதிக்கும் சாதனைகளே நம் பெயரை இப் புவியில் பதிக்கவல்லன. அந்த வகையில் முத்தின் நேசத்துக்குள் பொதிந்திருக்கும் பல உறவுகள் அவர் பெயரை அன்போடு வாசித்துக் கொண்டுதானிருக்கின்றன. எப்பொழுதும் வாசித்துக் கொண்டுதானிருக்கும்.
தொடர்பாடலே மனித உணர்வுகள் பகிரப்படும் வாசற்றலம்!
தொடர்பாடலின் போது மனமுரண்பாடுகளும் தாக்குவது இயற்கையே!
அவ்வாறான சந்தர்ப்பங்களில் சகிப்புத்தன்மையுடன், கண்ணீர்க்கசிவின் வெளிப்படுத்துகையை ரகஸியப்படுத்தி உள்ளத்துக்குள் போராடும் போராட்டமும், அதன் சுமையும் நானறிவேன். இருந்தும் அத்தகைய நிலையில் கூட வழுக்களை வெற்றிப்படுத்தும் ஆற்றலை நானும் கண்ணீரில் கரைந்து உணர்ந்திருக்கின்றேன்...
வாழ்க்கை எட்டாத தூரத்தில் விரிந்து கிடந்தாலும் அதனைத் தொட்டுவிடும் மனோபலத்தின் இருக்கை முத்துவிடம் அதிகமாக இருப்பதைக் காணும் போது மனம் மகிழ்வே.......!
இவற்றுக்கும் மேலாக நான் பதிவிடுபவற்றை உடனுக்குடன் ஆதரித்து விருப்புக்களையும், பின்னூட்டங்களையும் தரும் இந்த நேசக்கிளியின் பாசத்திற்கு எல்லை கட்டுவது சாத்தியமற்றதே!
உங்கள் வாழ்க்கைப் பயணம் சந்தோஷமாக விடியட்டும் !
என் வாழ்த்துக்களின் புன்னகை உங்கள் மனதை நிறைக்கட்டும்!
2012/06/28
சொர்க்கத் தீவு !
வெள்ளி நிலாக் கொஞ்சலில்
உணர்வுகள் களித்துக் கிடக்கின்றன
இப்போதெல்லாம்!
நேர்த்தியான என் மாளிகையில்
சிதறிக் கிடக்கின்ற பொருட்களெல்லாம்
கண்ணடிக்கின்றன வெகுளியாய்!
தூசு கூடச் செல்லாத என் காற்றில்
மாசற்ற அவள் பேச்சொலி
சிலிர்த்துக் கிடக்கின்றன சில்லறையாய்!
காலைப் பனிக்குள்ளும் பண்ணிசைக்கும்
சிட்டுக்களின் சிரிப்பலையாய் - அவள்
என்னுள் நிரம்பிக் கிடக்கின்றாள்!
தனிமைக்குள் மந்திரிக்கப்பட்டு
இருளுக்குள் கவிழ்ந்திருந்த என்னுள்
இப்பொழுதெல்லாம் அவளே விடிவெள்ளி!
என் மனதின் துன்பவலைகளெல்லாம்
அவள் புன்னகைக்குள்
கலைந்து செல்கின்றன இதமாய்!
என் விழிகள் விரிகையில்
விடியலை சுட்டும் மலரிதழாய்
வாசனை விட்டுச் செல்வதும் அவளே!
என் பெயரில் இத்தனை அமிர்தமா !
அவளென்னை உச்சரிக்கையில்
சிறகடிக்கின்றேன் பல வெளி தாண்டி!
அவள் பார்வை வீச்சில்
இத்தனை வசீகரமோ - என்
மனமோ பித்தாகிக் அலைகின்றது
அவள் பின்னால்!
விடியலின் கரமசைப்பில் - எனை
தொட்டுத் தழுவும் அலாரமாய்
வந்து போகின்றாள் அடிக்கடி!
இந்தக் கிளிப்பேச்சில் மயக்கத்தில்
என் சினக் கவசங்கள்
துகிலுரிக்கப்படுகின்றன மென்னிசையாய்!
இவள் பதிக்கும் முத்தத்தில்
பவனி வரும் பழரசங்களோ
இடறி வீழ்கின்றன என்னிதழில்!
இப்பொழுதெல்லாம் என் கவனம்
அவள் மீதே சிதறிக்கிடக்கின்றன- இந்த
வெளியுலக வில்லத்தனத்திலிருந்து மீண்டபடி!
உணர்கின்றேன் என்னை நானே
உணர்கின்றேன் - அவள்
தந்திருக்கும் மொத்த அன்பையும் சேமித்தபடி!
இவள்
குறும்புகளில் கரும்பு பிசைந்து
பயணிக்கின்றேன் - அந்தச்
சொர்க்கத்தீவின் ஆட்சிக்குள் நான் !
(அஸ்கா எங்கள் வீட்டுச் செல்லம். வயது 2 1/2 . அவள் என்னுள் தந்த பாச அருட்டலிது.)
Doctor Jano இம் மழலையை எமக்களித்த என் சகோதரி
ஜன்ஸி கபூர்
காத்திரு!
என்னிடம் திரும்பி வா
எனக்குன் காதல் வேண்டும்!
என் காற்றில் நெய்த தூதோலைகள்
சமுத்திரம் துளைத்துன் கரம் சேரட்டும்!
விண்வெளிச் சூரியப் பூ- நம்
பிரிவின் தீ வார்ப்பில் நசுங்கிப் போகட்டும்!
என்னிடம் திரும்பி வா
எனக்குன் காதல் வேண்டும்!
என் வழிப் பாதையில் ஒட்டிக்கொண்ட
உன் நேசிப்புக்களால்
என்னுயிரின் பெண்மை சிலிர்க்கட்டும்!
நம் வேடிக்கைச் சிதறலின்
ஈரத்தில் கூடல் கொஞ்சம்
வெட்கித்து மோகித்துக் கிடக்கட்டும்!
என்னிடம் திரும்பி வா
எனக்குன் காதல் வேண்டும்!
ஒவ்வொரு நிசப்தங்களிலும்
என் மூச்சின் விரல்களில் - உன்
முத்த ரேகைகள் சுகமாய் சயனிக்கட்டும்!
நீ தந்த தனிமைப் பொழுதின்
காயங்கள் யாவும்
கண்ணீரில் மௌனித்து கரையட்டும்!
என்னிடம் திரும்பி வா!
எனக்குன் காதல் வேண்டும்!
உன் நிழலோடு
என் தடங்கள் அலையும் பயணத்தில்
உன் தேசமே சொந்தமாய் வீழட்டும்!
சோகத்தின் துவம்சத்தில் சொக்கிக் கிடக்கும்
இப் பாவையின் ஏக்கம் தீரவே
மாரியாய் உன் தூறல் மாறட்டும்!
என்னிடம் திரும்பி வா!
எனக்குன் காதல் வேண்டும்!
இருள் கவிந்து மிரட்டும் - என்
திக்குத் தெரியா காட்டின்
திசைகாட்டியாய் உன் ஞாபகம் வீழட்டும்!
நிசர்சனங்களில் உனையேந்தி
நிழலுக்குள் மறைந்திருக்குமென்னை
உன் கண்கள் மட்டுமே துகிலுரிக்கட்டும்!
என்னிடம் திரும்பி வா!
எனக்குன் காதல் வேண்டும்!
உன் காத்திருப்புக்களின் சுயம்வரத்தில்
தொட்டுக் கொள்ளும் கணங்கள் தோறும்
உன் மாலை என் தோள் சேரட்டும்!
என்றோ திரும்பி வருவேன்
உன் காத்திருப்புக்கள் எனக்கானால்
உன் வசம் சேர்ந்திருப்பேன்!
ஜன்ஸி கபூர்
Subscribe to:
Posts (Atom)