About Me

2012/07/16

பேபி அஸ்கா !


புன்னகை மழையில் - என்
சோகம் கரைத்திடும் நேச மழையிவள்!

அவள் மல்லிகைச் சிரிப்பு - என்னுள்
கோடி சுகத்தின் சேமிப்பு !

தன் மழலைச் சொல்லில்...........
யாழ் நெய்யும் அதிசய ராகமிவள்!

என் வாழ்க்கையை வசீகரிக்கும்
அழகான மழலைக்காரி!

இயற்கையே மெய் மறக்கச் செய்யும்
வண்ண நிலவுக்காரி !

என் நகர்வின் அச்சாணியாய் ......
உருமாறிக் கிடக்கும் அழகுக்காரி!

அஸ்கா குஞ்சு................!

இப்பொழுதெல்லாம் ................
இவள் மழலைக்குள் தொலைந்தே
அந்நியமாகின்றேன் எனக்குள் நானே!







2012/07/15

சிகிரியா !


கலை, கலாசாரம்,பண்பாடு என்பது மனித வாழ்வியலை வெளிப்படுத்தும் கண்ணாடியாகும். நமது நடத்தைக் கோலங்களை வெளிப்படுத்தும் அம்சங்களாக அவற்றைக் கருதலாம்.

மக்கள் தம் அன்றாட நிகழ்வுகளின் செயல்களை ஆவணப்படுத்தும் போது, அவை  அவர்களைத் தொடரும் சந்ததியினருக்குரிய கைகாட்டிகளாகவும், வழிகாட்டிகளாகவும்  உருமாற்றம் பெறுகின்றன.

அந்த வகையில் இலங்கைக் கலாசாரத் தூறல்களின் ஓர் துளியாக, ஆவணப்படுத்தப்பட்டுள்ள ஓரம்சமாக சிகிரியா குகை ஓவியத்தினைக் கருதலாம்.

நான் க.பொ.த சாதாரண தரம் படித்துக் கொண்டிருக்கும் காலத்தில் எனது பாடங்களுள் ஒன்றாக சித்திரத்தை தெரிவு செய்திருந்தேன். என் தந்தை ஓவியம் வரைவதுடன், என் சகோதரியினருக்கும் பிடித்த துறையாக ஓவியம் பரிமாணித்ததால் என் குருதியுடன் கலந்த ரசனையாக ஓவிய ரசனை என்னை ஆக்கிரமித்துள்ளது. அழகுமிகு, அர்த்தமிகு ஓவியங்களை அவற்றின் வரலாற்றுடன் சேர்ந்து ரசிப்பது என் அழகியல் சார் பொழுதுபோக்காகும்!

அந்த லயிப்பே இன்று என் கண்முன் பரவி "சிகிரியா" வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் முனைப்பாகி கணனி விசைப் பலகையில் என் விரல்களை ஸ்பரிக்கச் செய்கின்றது...

ஒரு நாட்டின் கலைப் பாரம்பரீயம் என்பது அந்நாட்டின் கட்டிடங்கள், ஓவியங்கள், நடனங்கள் போன்றவற்றின் வெளிப்பாட்டுடனேயே நம்மைத் தொட்டுச் செல்கின்றன. அந்த வகையில் இலங்கைத் திருநாட்டின் எழிலை உலகெங்கும் பறைசாற்றும் நகரமாக சிகிரியா விளங்குகின்றது. சிகிரிய கட்டிடத் தொகுதியில் காணப்படும் பாறைகள், நீர்த்தோட்டங்கள், நந்தவனங்கள் என்பவை பேசும் அழகின் ரகஸியங்களால் ஆசிய நகரத்தின் மிகச் சிறந்த நகரமாக சிகிரியாக விளங்கின்றது. இது எம் நாட்டின் பெருமையை உலகில் பறைசாற்றுகின்றது.


வடமத்திய மாகாணத்திலுள்ள தம்புள்ள நகரத்தில் சிகிரியாஅமைந்துள்ளது. இது மாத்தளை மாவட்டத்திற்கு கிழக்குப் புறமாகவும், கொழும்பிலிருந்து 186 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது . சிகிரியாக் குன்றின் உயரம் 370 மீற்றராகும். இதன் விசேட அம்சமென்னவென்றால் இம்மலைக்குன்றிலிருந்து இலங்கையின் சகல காடுகளையும் பார்க்க முடியும். இதிலுள்ள ஓவியங்கள் 6 ம் நூற்றாண்டுக்குரியவை.

இதனைக் கட்டியவர் காசியப்பன் மன்னராவார். (கி.பி 477- 495). காசியப்பன் மன்னன், தாதுசேனன் மன்னனின் இரண்டாம் மனைவிக்கு பிறந்த மகன் ஆவார். தாழ்ந்த குலத்தில் பிறந்ததால் அவரது பட்டத்து உரிமை சகோதரன் முகலனைச் சென்றடையப் போகின்றதென்ற நிலையில், தானே பட்டத்து ராஜாவாக முடிசூட்ட வேண்டுமென்ற நோக்கில் தன் தந்தையைக் கொன்று அரசபீடம் ஏறினான் காசியப்பன் மன்னன். இவனது ஆட்சிபீடம் சீகிரியாக் கோட்டையில் அமைக்கப்பட்டது. தென்னிந்தியாவிற்கு தப்பியோடிய சகோதரன் முகலன் தன்னைத் தாக்கக் கூடும் எனும் அச்சத்தில் எதிரிகளிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அநுராதபுரத்திலிருந்த தனது இராஜதானியை சிகிரியாவிற்கு மாற்றியதாக வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கோட்டையைச் சூழ பெரிய அகழியும் காணப்படுகின்றது. இவ் அகழி 14 அடி ஆழம், 82 அடி அகலமாகும்..இச் சிகிரியாக் குகையை அமைக்க ஐந்து ஆண்டுகள் சென்றன.

தந்தையைக் கொன்று ஆட்சிபீடமேறிய மன்னன் காசியப்பனுக்கு சமூகத்தினரும், பௌத்த மதத்தினரும் முக்கியத்துவம் அளிக்கவில்லை. அவனைப் பாவியாகக் கருதி மகாவிகாரை பிக்குகள் அவனது கொடைகளைக் கூட நிராகரித்தனர். அவ்வாறான சூழ்நிலையிலேயே காசியப்பன் மன்னரால் அவ்வோவியங்கள் வரையப்பட்டன.


சீகிரிய மலையில் படிக்கட்டுக்கள் அமைக்கப்பட்டு அதனூடாக மலையின் மத்திய பகுதிக்குச் செல்ல முடியும். இதிலிருந்து மலையின் வடக்குப் பக்கத்திலுள்ள மேடைக்குச் செல்ல மண்ணாலான படிக்கட்டுக்கள் காணப்படுகின்றன. இது பெரிய சிங்கத்தின் கடைவாய்ப்பகுதியினூடாக ஊடுறுவிக் காணப்படுகின்றது. மலையின் உச்சியில் அரண்மனையும், மேற்குப் புறப் பாறைச்சுவரில் ஓவியங்களும் வரையப்பட்ட கலைத்துவமான படைப்பாக சிகிரியா காணப்படுகின்றது. காசியப்பன் மன்னன் தன்னை கடவுளாகக் கருதியதால் மலை உச்சியில் தேவராசராக தனது அரண்மணையை நிறுவினான் என்பதும் வரலாற்றாசிரியர்கள் ஊகம்.

பாறையின் தளத்தில் சுண்ணாம்பு, தேன், கபக்கல் என்பவற்றின் கலவைப் பூச்சின் மேல், பிராஸ்கோ முறையில் இயற்கை வர்ணங்களைக் கொண்டு வரையப்பட்டுள்ள 27 ஓவியங்களுள் தற்போது அழிவடையாமல் 7 ஓவியங்கள் மாத்திரமே உண்டு.


சிகிரியா ஓவியங்கள் பெண்களையே சித்தரிக்கின்றன. முகத்தில் பக்தி பரவசம், கைகளில் அல்லி மலர், தட்டுகைகள் ஏந்துகை என்பவற்றைக் கொண்டு சில வரலாற்றாசிரியர்கள் இவர்களை புத்தரை தரிசிக்கப் போகும் பெண்களாக விபரிக்க, சிலரோ இப் பெண்களை மன்னனின் அங்கப்பாத்து மகளிர் என வர்ணிக்கின்றனர். இப்பெண்ணோவியங்கள் சில மேலாடையுடனும், சில மேலாடையின்றியும், சில கூட்டங்களாகவும் சில தனித்திருப்பவர்களாகவும் வரையப்பட்டுள்ளன. இவ்வோவியங்களின் முகவமைப்பு, இடையமைப்பு என்பவற்றின் தோற்றுகை அஜந்தா ஓவியத்தின் சாயலாகவும், பல்லவர் கால சித்தான வாசல் ஓவியங்களின் சாயல்களாகவும் உள்ளது.

இயற்கை எழில் கொஞ்சும் "சீயகிரி" எனப்படும் சிகிரியா 1982 ம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனத்தால் கலை, கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அறிவிக்கப்பட்டது. இன்று பல உல்லாசப் பயணிகளைக் கவரும் இந்த கலைக்குகை இலங்கையின் பொருளாதார உயர்வுக்கான அதிஷ்ட சாதனமெனலாம்.

- Ms. Jancy Caffoor -


முன் பக்கம் செல்ல










2012/07/14

பரீட்சை !



சூரிய உதயத்தின்
இரகஸியங்களை அம்பலப்படுத்தும்
கைபேசி அழைப்புக்களாய் 
சிரிக்கும் சிட்டுக்களின் குரலேனோ
இன்னும் 
ரசிக்கவேயில்லை !

விரல்களின் ஸ்பரிசத்திலே
துவண்டிருக்கும் 
புத்தகங்களின் சிலிர்ப்பேனோ
இன்னும் 
சிந்தைக்குள் குவியவுமில்லை!

வண்ணத்தியின் சிறகுடைத்தே
கைப்பற்றும் 
அறிவின் மனனத்திற்காய்
அலையும் மனசின் அங்கலாய்ப்பும்
இன்னும் 
தணியவேயில்லை!

உணர்வுகள் களைந்த
இயந்திரமாய்
உருமாறிய மனதும்  
பாட வரிகளுள் இளைப்பாறிக்
கிடக்கும் ஒலியலைகளும்
இன்னும் 
தொலைவாகிப் போகவேயில்லை!

விழிக்குள் சுருண்ட கனவெல்லாம்
வில்லத்தனத்தோடு
பரீட்சையாய் முறைக்கையில் 
உதடுகளின் மௌனித்தலில்
கிறங்கிய பாட ங்களின் இறக்கம்
இன்னும் 
இறக்கவேயில்லை ஞாபகம் விட்டு!

என் உணர்வு தேசத்தின்
அறிவிப்புக்களெல்லாம்
பரீட்சையில் விழுந்து கிடக்க 
நாட்களோ 
நாடியறுத்து
மனவழுத்தத்தின் வீரியத்தை
இன்னும் 
நெஞ்சிலே பரப்பத்தான் செய்கிறது!

மனமோ வெற்றி யுத்தத்திற்காய்
பரீட்சைக் களத்தில் போராட 
பல 
நம்பிக்கை எதிர்வுகூறலில்
இரவும் பகலும் நசிந்து கிடக்கின்றன
தோல்வியின் மீட்சிக்காய்!

ஒளி விரல்களில்- என்
சுபீட்சம் பூட்டி 
விடைத்தாள்களின் தடத்தில் 
பயணிக்கும் என் பேனாச் சுவடுகளால்
நாளை 
என் இலட்சியங்கள் பேசப்படலாம்
நம்பிக்கைதனை உள்வாங்கியபடி!

ஜன்ஸி கபூர் 







2012/07/11

பெருமிதம்


ஒவ்வொரு பொழுதுகளும் அழகாகத்தான் விடிகின்றன. குருவிகளின் இசைச் சுரங்களின் இனிமையில் மனம் வீழ்ந்திடத்தான் துடிக்கின்றது.இருந்தும் அந்தக் கொடுப்பனையில்லாத பாவி மகளாய் இந்தப் புவிப் பரப்புக்குள் வீழ்ந்து கிடக்கின்றேனே!.

பாசம் தர உறவிருந்தும் சிறகறுந்த சின்னச் சிட்டாய் சோக முற்றத்தில் விளையாடிடும் கண்ணீர் வாழ்வின் மொத்த உருவமாய் நான்!

" அப்பா"

எனக்குள் ஓர் உருவமும் உயிரும் கொடுக்கக் காரணமாய் இருந்தவர். எல்லாப் பிள்ளைகளைப் போல் எனக்கும் ஓர் அன்பான அப்பா இருக்கிறார். மனசு சொல்லத் துடித்த கணங்கள் பற்பல. ஆனால் ஏனோ வார்த்தைகள் சிறைப்பட்டு வெளியேற மறுக்கின்றது.

நான் வாழ்க்கையைக் கற்றுக் கொண்டதே அவரிடமிருந்துதான்..எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அவர் தந்த அனுபவங்களே என்னைச் செதுக்கியிருக்கின்றன. என் வயதை விட அனுபவச் செறிவின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதனாலோ என்னவோ நானும் சராசரி பெண்ணாய் இல்லாமல் இன்னும் இன்னும் வாழ்வின் தன்மையைப் படிக்க பல தேடலுக்குள் உள்ளிறங்கித் தேடுகின்றேன்..

அப்பா........!

இப்புவியில் உங்கள் பிள்ளையாய் நான் பிறந்ததால் என் வயதையொத்த பெண்கள் தொலைத்த எல்லாவற்றையும் என்னுள் நிரப்பி அதிசய பெண்ணாய் அடுத்தவர் என்மீது வீசும் புதிர்ப் பார்வையையும் சுமந்தபடி விதி வழியே போகின்றேன்.....

வாழ்வின் அழகிய பருவம் மழலைப் பருவம்....அம்மா அடிக்கடி சொல்வார்....தாங்கள் திருமணமாகி பல வருடங்கள் தவமிருந்து பெற்ற பிள்ளையாம் நான்... என்னுள் தந்தையின் முகச் சாயல் அதிகமாய் இருப்பதால்  அப்பாக்கு என் மீது கொள்ளைப் பிரியமாம்........பல நாட்கள் என்னைத் தோளிலிட்டு பாட்டுப் படித்து நீங்கள் தூங்க வைத்ததும் சின்னச் சின்ன ஞாபகங்களாக இன்னும் நெஞ்சக் குழியில் இறங்கிக் கிடக்கின்றன..

நான் சின்னவளாய் உங்கள் நெஞ்சை உதைத்த போது கோபங் கொள்ளாமல் ரசித்த சராசரித் தந்தையாகவும் இருந்ததை எண்ணி என்னுயிர்க் கணுக்கள் ஒரு கணம் மகிழ்வோடு தம்மை மறந்து உணர்ச்சிவசப்படுகின்றன....

அப்பா

உங்களை நான் நல்ல பாடசாலை அதிபராக, கலைஞனாக, எழுத்தாளனாக , சிறந்த ஓவியனாக கண்டு ரசித்துள்ளேன். ஒரு மருத்துவனாக, தொழினுட்பவியலாளனாக, பொறியியலாளராக, நல்ல ஆலோசகராகவும் கண்டு பெருமிதப்பட்டுள்ளேன். யாருக்கிந்த கொடுப்பனை கிடைக்கும். நீங்கள் பல் துறை வேந்தர். 

கல்வி கற்றவர்கள் கூட உங்கள் ஆங்கிலப்புலமை கண்டு மெச்சாத நாள் உங்கள் வாழ்க்கையில் குறைவென்று தான் சொல்லுவேன். உங்கள் அந்தத் திறமைகள் தான் பாரம்பரீய வழியாக என்னையும் ஆட்கொண்டு நானும் ஏதோ கல்வித் துறைக்குள் என்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளேன். நன்றி தந்தையே !

 
 
ஜன்ஸி கபூர் 
  



2012/07/10

சிப்பிக்குள் முத்து!


என்.........
வாழ்க்கைச் சாலையில்
அவன்............
பயணிப்பெல்லா மிப்போது
முகங்காட்டுகின்றன நேசச் சுவடுகளாய் !

விண் சுற்றும் மேகங்களில்............
பவ்வியமாய் தனையொளித்தே
எட்டிப் பார்ப்பவன்............
நனைந்தே கிடக்கின்றான்
மழைத்தூறல்களாய்.............
என் வீட்டுமுற்றங்களில்!

தோற்றுப் போகும் வாழ்விலும்
நேற்று முளைத்த காளானாய்- என்
மனப்பூமி வெம்மையெல்லாம்
உறிஞசியவனாய்...........
விட்டுச் செல்கின்றான் தன்
சரிதங்களை!

தரிசனங்கள் மறுக்கப்பட்ட
எம் பக்கங்களின்...................
முன்னுரையாய்
வீழ்ந்து கிடக்கின்றது
அவன் முகவரி!

அன்புத் துடிப்போடு...........
அலையு மெங்கள் நாட்காட்டியில்.........
வலைப்பின்னலின் வருடல்
தகவலாகின்றன தினமும் எங்கள்
வாசிப்புக்களைச் சுமந்த படி!

அவன் புன்னகைச் சாறைப்
பிழிந்தெடுத்தே.............
என் தோட்டத்துப் பூக்களெல்லாம்
சாயம் பூசிக் கொள்கின்றன
தம் மழகைப் பறைசாட்ட!



காற்றின் மௌனம்
தொலைக்கும் அவன் குரலலைகள்.......
நினைவகத்தின் நரம்புகளில்
நசிந்து கிடக்கின்றன
நினைவுகளாய் !
.
"அக்கா"வென்பான் அடிக்கடி.........
அவன் பெருமிதம் கண்டு
ஆகாயம் குடைபிடிக்க
சமுத்திரங்கள் தரைக்குள் ஒடுங்கி
பாசவேலிக்குள் தனை
முடிந்து கொள்ளும்!

கனவுகள் புல்லரித்துக் கிடக்க
விரல் தருகின்றான்- என்
கன்னப் பருக்களாய் வீழ்ந்து கிடக்கும்
கண்ணீர் கழற்றி
தன்னுள் ஒற்றிக்கொள்ளவே!

நம்பிக்கையிருக்கின்றது!
நாளை..............
என் மூச்சின் வேரறுக்கப்பட்டாலும்
கண்ணீரஞ்சலி தரும்
பாச விழிகளாய் அவன்................
ஊடுறுவிக் கிடப்பான் ஆத்ம சரீரத்துள்!