About Me

2012/07/18

ப்ரிய சகி!


என் மனப் பிரபஞ்ச வெளியின்
ஒற்றை நிலா வுன்னில் 
சூழுமந்தக் கார்மேகக் கசிவால்
அழுது வடிகின்றதென் ஆத்மாவும்!

கரைந்தோடும் மேகத் துளிகளால்
வார்க்கப்பட்ட   - உன்
வியர்வைத் துளிகளெல்லாம் 
கண்ணீர்த்துளிகளாய் என்னுள்ளிறங்கி
தொட்டுப் பார்க்குதேயென்
கன்னத்தையும் சேர்த்தே !

தென்றலின் மோதுகையில் கூட
நொந்து துடிக்குமுன்  மேனி 
தாங்குமோ
பிரிவின் 
அகோரச் சீண்டலை - நீ
அடிக்கடி உள்வாங்கும் போது!-

உன் கனவு முகங்களைக் கிறுக்கிச் சென்ற
அந்த விதியைச் சபிப்பதிலேயே 
இப்பொழுதெல்லாம் - என்
பொழுதுகளின் நிமிடங்கள்
பொறுப்போடலைகின்றன  - நீ
அறியாமலே!

கலைந்தோடும் மேகங்களில் - நீ
முடித்து வைத்த தூதோலைகளின்
கற்பை 
துவம்ஷம் செய்யும் காற்றை- நீ
விரட்டும் போராட்டம் கண்டு
பேச்சற்றுக் கிடக்கின்றன - பல
கரும்பாறைகள் தம் வலிமையை
உன்னுள் கண்டு!

பனிப் பாறைக்குள் உறைந்து கிடக்கும்
உன் காதல் ஞாபகங்களை 
பிய்த்தெறியத் துடிக்கும்
சூரிய உஷ்ணம் கூட
விரண்டோட தருணம் தேடுது
உன் பெருமூச்சின் வெம்மை கண்டு !

உன் காதல் கருத்தரிப்புக்களை
கருக்கலைப்புச் செய்தே 
கானலுக்குள் ளுன்னை வீழ்த்தும்
விதியின் சூழ்ச்சியெல்லாம் 
அவிழ்ந்தோடுமினி
புதைகுழிக்குள் வீழ்ந்து கிடக்கவே!

நீ ஒளிந்து வைத்திருந்த
வண்ணக்கலவைகளை 
வீம்பாய் நீரூற்றி 
கனவு கழற்றும் பல எத்தனங்கள்
காணாமல் போகட்டுமுன்
வாழ்க்கைப் பாதையிலிருந்து
நிரந்தரமாய்!

சிலுவையறையப்பட்ட வுன் காதலின்
செந்நீர்த்துளிகளால் 
சிதையு மென்னிருதயத்தின் இருப்பும்
மனுக் கொடுத்து மன்றாடுதே - உன்
உயிரணுக்களிலின்பம் மீளச்சேரவே! 

கலங்காதே!
நீ யிடறி வீழ்ந்த - அந்த
தடைக் கற்களின் வெடிப்புக்களிலிருந்தும்
முளையெட்டிப் பார்க்குமினி - அந்த
வெற்றித் தளத்திலுன் பாதத்தை
பொறித்துச் செல்ல!

காத்திரு !
உன் காதல் யாகத்தின் வலிமை 
வேரூன்றுமுன் காலடியோரம்- அதுவுன்னுள்
எட்டிப் பார்க்கும் 
புன்னகைப் பூக்களின் நந்தவனமாய்
நிதமும் !

உன் நெஞ்சக் கூட்டில் 
மோதியெழும் கடலலைச் சங்கமமினி 
சந்தத்துடன்
இசையாகு மோர் நாள்
உன்
காதல் ராஜ்ஜியத்தின் சரித்திரத்தை
எம்முள் விட்டுச் செல்லும் இனிதாய் !

ஜன்ஸி கபூர் 

திருடிய இதயத்தை !


வாழ்க்கை..........!

அது இறைவனால் நமக்களிக்கப்பட்ட வரம்...

அந்த வாழ்க்கையில் நிரம்பி வழியும் அழகான ஞாபகப் பொழுதுகளே நமக்குள் அடிக்கடி உயிர்ப்பைத் தந்து கொண்டிருக்கும் அழகான வர்ணங்கள்

 ஒவ்வொரு மனங்களுக்குள்ளும் தேடலும், எதிர்பார்ப்புக்களும், உறவுகளின் சூழ்கைகளும் பரவித்தான் கிடக்கின்றன. சிலர் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் அல்லது வெளிப்படுத்தத் தெரியாமல் தம் கற்பனைகளை , கனவுகளை, நிஜம் தொட்டுச் சொல்லும் வாஞ்சைகளை சிதைத்துக் கொண்டிருக்கின்றனர்.....

சிலரோ தன் உள்ளக் கிடக்கையை ரசனையுடன் வெளிப்படுத்தி, அந்த கனவுலகை இப் பிரபஞ்ச வெளியில் அள்ளித் தெறித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

நான் இரண்டாம் வகையில் இருப்பதையெண்ணி மகிழ்ந்தவளாய் , எனக்கிந்த ஆற்றலைத் தந்த வல்லோனைப் பணிந்தவளாய் என் பார்வையை நகர்த்துக்கின்றேன் .......

வரிகள் விரல்களின் விசையோடு கணனித் திரையில் தன்னைத் தடம் பதிக்கத் தொடங்குகின்றது வாஞ்சையோடு !நினைவுகளின் சேமிப்புக்களை பகிர்கின்றேனின்று!

அழகு எல்லோருக்கும் பிடித்ததொன்று...அதன் மயக்கத்தில் கிறக்கத்தில் மயங்காத உள்ளங்களில்லை!


கடந்து போன என் இருபதின் இளமையானது , சரீர அழகின் ஈர்ப்பில் கட்டுண்டு, திரை நிழல்களோடு கதைபேசும் நாயக முகங்களோடு லயித்து , ரகஸியக் காதல் வளர்த்துக் கிடந்த அந்த நாட்களை இன்று நினைக்கும் போதெல்லாம் நெஞ்சக்குழியில் வெட்கம் மட்டுமல்ல, அறியாமையும் இடறி கேலி செய்கின்றது...

அழகில் மொய்த்த மனம் அந்த அறியாமையைக் கழுவி , அன்பின் தேடலில் மொய்க்கத் தொடங்கும் போது............

வயதும் கடந்து விடுகின்றது.அனுபவங்களும் பரந்து , உறவுகள், நட்புக்களின் உள்ளத்திலுள்ள உண்மையான அன்பைச் சுற்றி  எதிர்பார்ப்புக்களும் அசையத் தொடங்கி விடுகின்றன....

அன்பு இந்த உலக வாழ்வின் உயிர்த்துடிப்பான நாடி.அந்த அன்பின் பரவசம் தரும் அமைதி, அழகு, ரசனை , ஈர்ப்பு இவற்றில் லயித்து விடுகின்ற மனம் இயற்கையின் காதலிலும் சொக்கித்துக் கிடக்கின்றது.

இன்று இயற்கையோடு ரசித்திருந்த அந்த பரவசத்தை பகிரப் போகின்றேன்.நம் மனதின் பரவசத்தை அழகு வரிகளில் கோர்த்து விடுவது கூட அற்புதமான ஓர் சுகமே!

இதோ.........

எனக்குப் பிடித்த சில, உங்களுக்கும் பிடித்திருக்கா.............!

உங்கள் உள்ளம் நுழைந்து நான் தேடும் வினா, வெளியேறட்டும்  உங்கள் வார்த்தைகளினூடே.............!

வான் வயிறை தன் சூரியக்கதிர்களால் மெதுவாய் வருடி , நெற்றியில்  நாணமேற்ற மெதுவாய் களமிறங்கத் துடிக்கும் அந்த ஆதவனையும்,


அவன் வரவு கண்டு அந்த அதிகாலைப் பொழுதில், பாதி விடிந்தும் பாதி இருளுமாய்  அப்பிக் கிடக்கின்ற அந்த மௌனப் பொழுதில் கைபேசி "ரிங்டோனாய்" என்னை எழுப்பி விடும் சிட்டுக்களின் சிரிப்புச் சத்தமும்


என் மனதேசத்தின் பரவச அணுக்களை உசுப்பேற்றி வேடிக்கை பார்க்கும்..எப்பொழுதும் !

.அந்த அழகான உலகிலிருந்து நழுவிப் போக மனமின்றி, கண்களை இறுக்கி போர்வைக்குள் ஒளிந்து கிடக்கும் கள்ளத்தனம் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது....

   அந்த அதிகாலைத் தென்றலில் தம் சிறகுகளின் ஈரம் துடைத்து வீட்டுமுற்றத்தில் இரைதேடும் சின்னப்பறவைகளின் சொக்கலின் லயிப்பில் தினம் தினம் கவிதைகள் ஊறிக் கொண்டேயிருக்கும். இந்த இயந்திரவுலகின் இதயமாய் ஒட்டிக் கிடக்கும் இயற்கையின் மானசீக காதலியாய் எனை நானுருமாற்றியதன் விளைவாய் பல நாட்காட்டிகள் கைகாட்டிச் சென்றும் விட்டன..

    
நாணத்திரைக்குள் ஒளிந்திருந்து, வண்டுகளின் காமப் பார்வைச் சிதறல்களை களைந்தெறிய வலியுடன் போராடிக் கொண்டிருக்கும் பாதி மலர்ந்த மொட்டுக்களைத் தொட்டு மெட்டமைத்து இட்டுக் கட்டும் பாட்டுக்கள் இஷ்டத்துடன் ஆக்கிரமித்துக் கிடக்கின்றன இன்னும் என் மன வைப்பகத்திலே


மாலைக் காற்றில் கரைந்து மஞ்சள் தெளிக்கும் அந்த வெயிலோடு இம்சை சேர்க்கும் மழைத் தோரணங்களின் சீண்டலில் என் மேனி சிலிர்த்துக் கிடக்கும் அந்தப் பொழுதுகளுக்காய் எத்தனை பொழுதுகள் தவமிருந்திருக்கின்றேன்..இன்றும் கூட அந்த ஈரலிப்புக் காற்றில் என் ஆடைகளை சிறகாக்கி பறந்திடத் துடிக்கும் அந்த சிறு பிள்ளைத் தனம் வம்படிக்கின்றது அடிக்கடி என்னுள் வில்லத்தனமாய் !


காற்று.........!

இயற்கைக் காற்றில் வெட்கம் களைந்து நனைந்திட துடிக்கும் அசைவுகளை நான் கட்டுப்படுத்துவதில்லை. துச்சாதனனாயென்னைத் துகிலுரிக்கும் அதன் வன்மத்தை நான் சினப்பதுமில்லை. ஏனெனில் என்னுள் நுழைந்து என்  மூச்சுக்களைச் சேமிக்கும் அந்தப் பிராண வாயுவும் என்னைத் தொட்டுச் செல்ல வலைவிரிக்கும் நேரமல்லவா அது!

வான வயலிலே விதைக்கப்பட்ட மேகக் கூட்டங்களையும் நான் ரசிப்பதுண்டு..மேகங்கள் ஓடி விளையாடுகையில் தம் உருவை மாற்றும் வெவ்வேறு முகமூடிகளை என்னுள்ளல்லவா விட்டுச் செல்கின்றன.....


அறுவடைக்கு இன்னும் தயாராகாத கன்னி நெல் மணிகளின் பருவச் செழிப்பிலும் நான் கிறங்கியதுண்டு........காற்றின் முதுகினிலே பயணித்தவாறே நம்முள் கடலலையை ஞாபகப்படுத்தும் நெற்கதிரின் அசைவை விழியில் தரிக்க வைத்து நான் ரசித்த கணங்கள் அப்பப்பா ...ஏராளம்!


உள்ளத்திலும், உடலிலும் அழகின் சேமிப்போடு யாழின் இசையாய் தம் மழலைப் பேச்சுக்களை உதிர்க்கும் சிறு கிள்ளைகளும், அவர்களின் ரசிப்புக்களும் என்னை கட்டிப் போடும் அன்பான அவஸ்தைகள் தான்.........


அலைகளின் மோதுகைகளோடு புரண்டெழும் கடற்கரை மணலில் கால் புதைத்தும், கரையோரங்களில் அவஸ்தையோடு வீழ்ந்து கிடக்கும் நீரில் கால் நனைப்பதும் இன்றும் தொடரும் சிறுபிள்ளைத்தனமான ஆசைதான்!


பன்னீர் தூவும் வானத்தில் இயற்கை வரைந்த நிறக் கோடுகளாய் நம்மை எட்டிப் பார்க்கும் வானவில்லின் அழகும்,...................


சுட்டெறிக்கும் வெயிற் பொழுதில் வீதியில் விழுந்து கிடக்கும் மாயநீரின் வலை விரிப்பாய் நம்மை ஆட்கொள்ளும் கானல் நீரும் ..............
என் ரசிப்புக் குளத்தில் நீச்சலடிக்கும் இனிமையான காட்சிக் குவிப்புக்கள்!

முட்டை மஞ்சள் கருவாய் பௌனர்ணமி தினங்களில் வீழ்ந்து கிடக்கும் மஞ்சள் நிலவு.......என் நெஞ்சைத் தொட்டுச் செல்லும் அழகிய மதிமுகம் !


இவற்றின் சேமிப்புக்களை உள்வாங்கும் என் மனக்கூடம்,  நிழல் தேட தெரிவு செய்யும்............அழகான வீடும் என் கற்பனையுலகில் அடங்கிக் கிடக்கும் !


கனவுத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு ,அழகுச் சுவடுகளை கற்களாகப் பதித்து உயிர்ப்பேற்றிக் கொண்டிருக்கும் என் வசந்த மாளிகையில் நான்  வீழ்ந்து கிடக்கும் ஒவ்வொரு நொடிகளிலும் என் சுவாசத்தின் மீது சுகம் பன்னீர் தெளித்து விட்டுத்தான் மறைகின்றது!

இன்னும் எத்தனையோ எத்தனையோ..........!

ரசிப்பு வீரியங்களுடன் என் உணர்வை நசித்துக் கொண்டிருக்கின்றன

இயற்கையின் இதயம் கசிந்துருகும் இந்த ஆனந்த மயக்கத்தில் நான் கிறங்கிக் கிடக்கும் போதெல்லாம் நானும் சிறு கிள்ளையாகி வீழ்ந்து கிடக்கின்றேன் மகிழ்ச்சி வெளிகளில்!






2012/07/16

பேபி அஸ்கா !


புன்னகை மழையில் - என்
சோகம் கரைத்திடும் நேச மழையிவள்!

அவள் மல்லிகைச் சிரிப்பு - என்னுள்
கோடி சுகத்தின் சேமிப்பு !

தன் மழலைச் சொல்லில்...........
யாழ் நெய்யும் அதிசய ராகமிவள்!

என் வாழ்க்கையை வசீகரிக்கும்
அழகான மழலைக்காரி!

இயற்கையே மெய் மறக்கச் செய்யும்
வண்ண நிலவுக்காரி !

என் நகர்வின் அச்சாணியாய் ......
உருமாறிக் கிடக்கும் அழகுக்காரி!

அஸ்கா குஞ்சு................!

இப்பொழுதெல்லாம் ................
இவள் மழலைக்குள் தொலைந்தே
அந்நியமாகின்றேன் எனக்குள் நானே!







2012/07/15

சிகிரியா !


கலை, கலாசாரம்,பண்பாடு என்பது மனித வாழ்வியலை வெளிப்படுத்தும் கண்ணாடியாகும். நமது நடத்தைக் கோலங்களை வெளிப்படுத்தும் அம்சங்களாக அவற்றைக் கருதலாம்.

மக்கள் தம் அன்றாட நிகழ்வுகளின் செயல்களை ஆவணப்படுத்தும் போது, அவை  அவர்களைத் தொடரும் சந்ததியினருக்குரிய கைகாட்டிகளாகவும், வழிகாட்டிகளாகவும்  உருமாற்றம் பெறுகின்றன.

அந்த வகையில் இலங்கைக் கலாசாரத் தூறல்களின் ஓர் துளியாக, ஆவணப்படுத்தப்பட்டுள்ள ஓரம்சமாக சிகிரியா குகை ஓவியத்தினைக் கருதலாம்.

நான் க.பொ.த சாதாரண தரம் படித்துக் கொண்டிருக்கும் காலத்தில் எனது பாடங்களுள் ஒன்றாக சித்திரத்தை தெரிவு செய்திருந்தேன். என் தந்தை ஓவியம் வரைவதுடன், என் சகோதரியினருக்கும் பிடித்த துறையாக ஓவியம் பரிமாணித்ததால் என் குருதியுடன் கலந்த ரசனையாக ஓவிய ரசனை என்னை ஆக்கிரமித்துள்ளது. அழகுமிகு, அர்த்தமிகு ஓவியங்களை அவற்றின் வரலாற்றுடன் சேர்ந்து ரசிப்பது என் அழகியல் சார் பொழுதுபோக்காகும்!

அந்த லயிப்பே இன்று என் கண்முன் பரவி "சிகிரியா" வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் முனைப்பாகி கணனி விசைப் பலகையில் என் விரல்களை ஸ்பரிக்கச் செய்கின்றது...

ஒரு நாட்டின் கலைப் பாரம்பரீயம் என்பது அந்நாட்டின் கட்டிடங்கள், ஓவியங்கள், நடனங்கள் போன்றவற்றின் வெளிப்பாட்டுடனேயே நம்மைத் தொட்டுச் செல்கின்றன. அந்த வகையில் இலங்கைத் திருநாட்டின் எழிலை உலகெங்கும் பறைசாற்றும் நகரமாக சிகிரியா விளங்குகின்றது. சிகிரிய கட்டிடத் தொகுதியில் காணப்படும் பாறைகள், நீர்த்தோட்டங்கள், நந்தவனங்கள் என்பவை பேசும் அழகின் ரகஸியங்களால் ஆசிய நகரத்தின் மிகச் சிறந்த நகரமாக சிகிரியாக விளங்கின்றது. இது எம் நாட்டின் பெருமையை உலகில் பறைசாற்றுகின்றது.


வடமத்திய மாகாணத்திலுள்ள தம்புள்ள நகரத்தில் சிகிரியாஅமைந்துள்ளது. இது மாத்தளை மாவட்டத்திற்கு கிழக்குப் புறமாகவும், கொழும்பிலிருந்து 186 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது . சிகிரியாக் குன்றின் உயரம் 370 மீற்றராகும். இதன் விசேட அம்சமென்னவென்றால் இம்மலைக்குன்றிலிருந்து இலங்கையின் சகல காடுகளையும் பார்க்க முடியும். இதிலுள்ள ஓவியங்கள் 6 ம் நூற்றாண்டுக்குரியவை.

இதனைக் கட்டியவர் காசியப்பன் மன்னராவார். (கி.பி 477- 495). காசியப்பன் மன்னன், தாதுசேனன் மன்னனின் இரண்டாம் மனைவிக்கு பிறந்த மகன் ஆவார். தாழ்ந்த குலத்தில் பிறந்ததால் அவரது பட்டத்து உரிமை சகோதரன் முகலனைச் சென்றடையப் போகின்றதென்ற நிலையில், தானே பட்டத்து ராஜாவாக முடிசூட்ட வேண்டுமென்ற நோக்கில் தன் தந்தையைக் கொன்று அரசபீடம் ஏறினான் காசியப்பன் மன்னன். இவனது ஆட்சிபீடம் சீகிரியாக் கோட்டையில் அமைக்கப்பட்டது. தென்னிந்தியாவிற்கு தப்பியோடிய சகோதரன் முகலன் தன்னைத் தாக்கக் கூடும் எனும் அச்சத்தில் எதிரிகளிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அநுராதபுரத்திலிருந்த தனது இராஜதானியை சிகிரியாவிற்கு மாற்றியதாக வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கோட்டையைச் சூழ பெரிய அகழியும் காணப்படுகின்றது. இவ் அகழி 14 அடி ஆழம், 82 அடி அகலமாகும்..இச் சிகிரியாக் குகையை அமைக்க ஐந்து ஆண்டுகள் சென்றன.

தந்தையைக் கொன்று ஆட்சிபீடமேறிய மன்னன் காசியப்பனுக்கு சமூகத்தினரும், பௌத்த மதத்தினரும் முக்கியத்துவம் அளிக்கவில்லை. அவனைப் பாவியாகக் கருதி மகாவிகாரை பிக்குகள் அவனது கொடைகளைக் கூட நிராகரித்தனர். அவ்வாறான சூழ்நிலையிலேயே காசியப்பன் மன்னரால் அவ்வோவியங்கள் வரையப்பட்டன.


சீகிரிய மலையில் படிக்கட்டுக்கள் அமைக்கப்பட்டு அதனூடாக மலையின் மத்திய பகுதிக்குச் செல்ல முடியும். இதிலிருந்து மலையின் வடக்குப் பக்கத்திலுள்ள மேடைக்குச் செல்ல மண்ணாலான படிக்கட்டுக்கள் காணப்படுகின்றன. இது பெரிய சிங்கத்தின் கடைவாய்ப்பகுதியினூடாக ஊடுறுவிக் காணப்படுகின்றது. மலையின் உச்சியில் அரண்மனையும், மேற்குப் புறப் பாறைச்சுவரில் ஓவியங்களும் வரையப்பட்ட கலைத்துவமான படைப்பாக சிகிரியா காணப்படுகின்றது. காசியப்பன் மன்னன் தன்னை கடவுளாகக் கருதியதால் மலை உச்சியில் தேவராசராக தனது அரண்மணையை நிறுவினான் என்பதும் வரலாற்றாசிரியர்கள் ஊகம்.

பாறையின் தளத்தில் சுண்ணாம்பு, தேன், கபக்கல் என்பவற்றின் கலவைப் பூச்சின் மேல், பிராஸ்கோ முறையில் இயற்கை வர்ணங்களைக் கொண்டு வரையப்பட்டுள்ள 27 ஓவியங்களுள் தற்போது அழிவடையாமல் 7 ஓவியங்கள் மாத்திரமே உண்டு.


சிகிரியா ஓவியங்கள் பெண்களையே சித்தரிக்கின்றன. முகத்தில் பக்தி பரவசம், கைகளில் அல்லி மலர், தட்டுகைகள் ஏந்துகை என்பவற்றைக் கொண்டு சில வரலாற்றாசிரியர்கள் இவர்களை புத்தரை தரிசிக்கப் போகும் பெண்களாக விபரிக்க, சிலரோ இப் பெண்களை மன்னனின் அங்கப்பாத்து மகளிர் என வர்ணிக்கின்றனர். இப்பெண்ணோவியங்கள் சில மேலாடையுடனும், சில மேலாடையின்றியும், சில கூட்டங்களாகவும் சில தனித்திருப்பவர்களாகவும் வரையப்பட்டுள்ளன. இவ்வோவியங்களின் முகவமைப்பு, இடையமைப்பு என்பவற்றின் தோற்றுகை அஜந்தா ஓவியத்தின் சாயலாகவும், பல்லவர் கால சித்தான வாசல் ஓவியங்களின் சாயல்களாகவும் உள்ளது.

இயற்கை எழில் கொஞ்சும் "சீயகிரி" எனப்படும் சிகிரியா 1982 ம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனத்தால் கலை, கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அறிவிக்கப்பட்டது. இன்று பல உல்லாசப் பயணிகளைக் கவரும் இந்த கலைக்குகை இலங்கையின் பொருளாதார உயர்வுக்கான அதிஷ்ட சாதனமெனலாம்.

- Ms. Jancy Caffoor -


முன் பக்கம் செல்ல