About Me

2012/07/19

அறிவோம் எம்மை


கல்விசார் ஞாபகமூட்டல்
--------------------------------------
இப் பதிவை வாசிப்பதற்கு முன் உங்களுடன் நான் சில நிமிடங்கள் பேச வேண்டும் :



2012.07.21 ந் திகதி என் கல்விமாணிப் பரீட்சை- இரண்டாம் வருடத்திற்கான உயிரியல் வினாப்பத்திரத்தை எதிர்நோக்கிய நிலையில் நான் கற்ற விடயங்களை பரீட்சைக்கு ஆயத்தமாகும் பொருட்டான ஞாபகப்படுத்தலுக்காகவும், விஞ்ஞானப் பாடவிதானத்தில் இவ்விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதால் மாணவர்கள் தகவல்களைப் பெற்றுக் கொள்ளவுமே இவ்விடயங்களைச் மிகச்சுருக்கமாக என் வலையப்பூவில் பதிவிட்டுள்ளேனே தவிர வேறெந்த தவறான நோக்கமுமல்ல என்பதைத் தெரிவிக்கின்றேன்...........!

கற்பித்தலின் போது இவ் விடயங்கள் விரிவுரை மூலம் மாணவர்களுக்கு விளக்கமாக கற்பிக்க முடியாத சங்கடம் எனக்கு ஏற்படுவதுண்டு. எனவே அவர்களுக்கு இவ்விடயங்கள் பரீட்சைக்கான வழிகாட்டலாய் அமையும்.

மனித வாழ்க்கையானது பிறப்பு, இறப்பு எனும் எல்லைப்படுத்தலுடன் மட்டுப்படுத்தப்படக்கூடியது. நாம் இப்புவியில் பிறந்துள்ளோம் என்பதை ஏற்றுக்கொள்பவர்களாக நாமிருப்பினும் நம் பிறப்பு பற்றிய ரகஸியங்களை விஞ்ஞானம் கற்பவர்களைத் தவிர இன்னும் பலர் அறியாமலே உள்ளோம். 

ஓரினமானது தனது பாரம்பரீயங்களை தனது எச்சங்களை புதிய இனங்களுக்குப் பரப்பி, புதிய இனங்களை உருவாக்கும் செயற்பாடு இனப்பெருக்கம் எனப்படுகிறது. மனித இனப் பெருக்கமானது அகக்கருக்கட்டலாகவும், இலிங்கமுறை இனப்பெருக்கமாகவும் அமைந்துள்ளது. அதாவது ஆண், பெண் எனும் இலிங்கங்களின் இணைதலால் புதிய உயிரினம் பெண்ணில் பராமரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது இப்புவி வாழ்க்கைக்காக!



------------------------------------------
ஆண் இனப்பெருக்கத் தொகுதி
------------------------------------------
இது பின்வரும் பகுதிகளைக் கொண்டுள்ளது.

1. விதை
2. விதைமேற்றிணிவு
3. அப்பாற் செலுத்தி
4  வீசற்கான்
5. சிறுநீர் வழி



ஆண் இனப்பெருக்கத் தொகுதியானது  விந்துற்பத்தி, பெண் இனப்பெருக்கத்தொகுதியில் விந்து செலுத்துகை, ஓமோன் உற்பத்தி, சுக்கிலப்பாயம் உருவாக்கல், துணைப்பாலியல் உற்பத்தி போன்ற தொழில்களை மேற்கொள்கின்றன.

விந்துற்பத்தியின் வினைத்திறனை அதிகரிப்பதற்காக விதையானது விதைப்பையினுள் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1 - 2 பாகை வெப்பநிலை பேணல் உடலுக்கு வெளியே மேற்கொள்ளப்படுகின்றது.

விதையின் அமைப்பு பின்வருமாறு -
-------------------------------------------------
இது 800 வரையிலான சிறு சோணைகளைக் கொண்டுள்ளது, ஒவ்வொரு சோணையும் 1- 4 வரையிலான சுக்கிலச் சிறுகுழாய்களைக் கொண்டுள்ளது. சுக்கிலச் சிறுகுழாயின் வெளிப்புறமாக மூலவுயிர் மேலணிக் கலங்களும், Sertoli கலங்களும் காணப்படுகின்றன. மூலவுயிர் மேலணிக் கலங்களில் பின்வரும் கலங்கள் காணப்படுகின்றன.



 1. விந்துப் பிறப்பாக்கும் கலங்கள்

            
 2. முதலான விந்துக்குழியங்கள்


 3. துணை விந்துக்குழியங்கள்    

                  
 4. விந்தாகு கலங்கள்



Sertoli கலங்களானது இவை பயணிப்பதற்குரிய பாதையையும், போசணையையும் வழங்குகின்றன.



சுக்கிலச்சிறுகுழாயின் இடைவெளிகளிற் காணப்படுகின்ற Laydig கலமானது தெஸ்தெஸ்திரோஜின் எனும் ஓமோனைச் சுரக்கின்றது.



விதைமேற்றிணிவு
---------------------------
இதன் தொழில்களானவை:-

1. தற்காலிகமாக விந்துற்பத்தி
2. விந்தின் அசைவைக்கும், விருத்திக்கும் உதவுதல்
3.சுக்கிலப்பாயத்தின் ஓர் பகுதியைச் சுரத்தல்

அப்பாற் செலுத்தி
------------------------
ஒவ்வொரு விதைமேற்றிணிவுடன் தொடர்புபட்டதாக 2 காணப்படும். இதன் முனைவில் விரிமுனையொன்றும் காணப்படுகின்றது. இது வீசற்கானில் திறக்கின்றன. அவ்வாறே சுக்கிலச்சிறுகுழாயின் கானும் வீசற்கானில் திறக்கின்றன. இவ் வீசற்கான் சிறுநீர்வழியிற்கு கொண்டு செல்லப்படுகின்றன.

வீசற்கான்
--------------
2 வீசற்கானும், சுக்கிலப்புடகக் கானும் முன்னிற்கும் சுரப்பியினூடாகச் சென்று ஆண்குறியையும் அதனூடாக சிறுநீர்வழியையும் அடைகின்றன.

ஆண்குறி
----------------
இது தசை செறிவானது.

இதன் தொழில்களாவன
----------------------------------
1. சிறுநீர் வெளியேற்றம்
2. யோனியினுள் விந்துக்களை விசிறுதல்.


ஆண் இனப்பெருக்கத் தொகுதியுடன் தொடர்பான சுரப்பிகளாவன!
----------------------------------------------------------------------------------------------
1. சுக்கிலப்புடகம்       2. முன்னிற்கும் சுரப்பி      3. கூபரின் சுரப்பி

சுக்கிலப்புடகம்
---------------------


இது 1 சோடி காணப்படுகின்றது. அப்பாற்செலுத்தியுடன் இணைந்து காணப்படும். சுக்கிலப்பாயத்தின் பெரும்பகுதியை இதுவே சுரக்கின்றன.

இதன் தொழில்களாவன
-------------------------------------
1. யோனிமடலில் காணப்படும் அமிலத் தன்மையை நடுநிலைப்படுத்தல்.
2. மசகிடல்
3.விந்திற்கான சக்திமுதல்கள்
4. விந்து அசைதல்

முன்னிற்கும் சுரப்பி
-----------------------------


இது சிறுநீர்வழியைச் சூழ, சிறுநீர்ப்பைக்கு நேர் கீழே காணப்படுகின்றது, சுக்கிலப்பாயத்தின் 20 % இதனால் சுரக்கப்படுகின்றது. பால் போன்ற நிறம் இதன் மூலமே பெறப்படுகின்றது.

தொழில்கள்
------------------
1. யோனிமடலின் அமிலத்தன்மையை நடுநிலைப்படுத்தல்
2. விந்துக்களின் அசைவிற்கான ஊடகத்தை வழங்குதல்
3. மசகிடல்
4. சிறுநீர் வழியில் காணப்படும் அமிலத்தன்மையை நீக்குதல்

கூபரின் சுரப்பி
---------------------

பட்டாணியுருவான ஒரு சோடிச் சுரப்பியாகும். இது முன்னிற்கும் சுரப்பிக்கு கீழாகவும், சிறுநீரகத்தின் பக்கத்திற்கொன்றாகவும் காணப்படுகின்றன.

தொழில்கள்
--------------------
1. மசகிடல்
2. சிறுநீர்வழியில் காணப்படக்கூடிய அமிலத்தன்மையை நடுநிலையாக்கல்

சுக்கிலம் என்பது
-----------------------

விந்துக்களையும் துணைச்சுரப்பிகளின் சுரப்பிகளையும் உள்ளடக்கிய பாய்பொருளாகும். ஒரு தடவை இவை வீசப்படும் போது 2-5 மி.லீ சுக்கிலம் வீசப்படும். 1 லீற்றர் சுக்கிலத்தில் 20 மில்லியன் வரையிலான விந்துகள் காணப்படுகின்றன.

விந்தாக்கம்
----------------


இது சுக்கிலச் சிறுகுழாயில் நடைபெறும். இங்கு விந்துப்பிறப்புக்கலங்கள் (2n) இழையுருப்பிரிவடைந்து 2 கலங்களைக் கொடுக்கும். அவற்றுள் ஒன்று விந்துப்பிறப்பாக்கும் கலமாக மாற, மற்றையது முதல் விந்துக்குழியமாகக் காணப்படும்.

முதல் விந்துக்குழியம் ஒடுங்கற்பிரிவடைந்து - 1 துணை விந்துக்குழியத்தைத் தோற்றுவிக்கும்.

துணைவிந்துக்குழியம் ஒடுங்கற்பிரிவு-2 ஐ அடைந்து விந்தாகு கலங்கள் 4 இனைத் தோற்றுவிக்கும்.

ஒவ்வொரு விந்தாகு கலங்களும் 4 விந்துக்களை உருவாக்கும்.

விந்துக்களும், விந்தாகு கலங்களும் குழியவுருவை பெருமளவு இழந்திருக்கும்.

இவ் விந்துக்கள் சுக்கிலச்சிறுகுழாயின் உள்ளடக்கத்தை அடையும். ஆனால் மேற்பரப்பையடையும் போதே அவை இயக்கத்தன்மையை அடைகின்றது.

விந்துப்பிறப்பாக்கத்திற்கு எடுக்கும் காலம் 72 மணித்தியாலயங்கள்.

விந்தாக்கத்தில் ஓமோன்களின் பங்களிப்புக்கள்
-------------------------------------------------------------------
  • பரிவகக்கீழினால் GnRH ஓமோன் சுரக்கப்படும்.
  • இது முற்பக்க கபச்சுரப்பியினால் FSH, LH ஓமோன்கள் சுரப்பதைத் தூண்டுகின்றன.
  • FSH ஆனது Sertoli ஓமோனைத் தூண்டும். இது விந்துப்பிறப்பாக்கத்தைத் தூண்டும்.



Sertoli ஆனது அதிகளவு விந்துற்பத்தியை தடுப்பதற்காக Inhibin ஓமோனைச் சுரக்கும்.

LH ஓமோனானது Leydig கலங்களைத் தூண்டி Testosterone இனைச் சுரக்கச் செய்யும். இது விந்துப்பிறப்புக்கலங்களை வளர்ச்சி பெறச் செய்வதுடன், விந்தின் உற்பத்தியையும் அதிகரிக்கச் செய்யும்.


தெஸ்திரோஜன் ஓமோனின் கட்டமைப்பு
---------------------------------------------------------
விந்தின் அமைப்பு
-------------------------


  • தனிக்கலம்,  நுண்ணிய அமைப்பு
  • தலை,  நடுத்துண்டு, வால் ஆகிய மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது
  • தலையானது வட்டவடிவமானதாகவும், தடடையானதாகவும் காணப்படும்.
  • தலையில் கரு (தந்தை வழி இயல்பைக் கடத்த), உச்சிமூர்த்தம் (விந்து முட்டையை ஊடுறுவ உதவுதல் ) காணப்படும்.
  • தலைக்கும் நடுத்துண்டுக்குமிடையில் கழுத்துக் காணப்படும். இதில் 1 சோடி புன்மையத்திகள் உண்டு.
  • புன்மையத்தியிலிருந்து எழும் அச்சிழை வால் பகுதி வரை நீண்டு சவுக்குமுளை போன்று அசைவிற்கு உதவும்.
  • வீசலின் பின்னர் விந்தின் ஆயுட்காலம் 48 மணி தொடக்கம் 72 மணி வரை.
  • விந்தாக்கம் ஆண்களின் பிறப்பிலிருந்து ஆயுள் வரை நடைபெறும்.
- Ms.A.C.Jancy -


2012/07/18

கற்றலில் வீழ்ந்தே !


"ஓதுவீராக"

எம் பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முதன்முறையாக அருளப்பட்டதன் வாயிலாக எம் வாழ்வுக்குள் வழிகாட்டப்பட்ட புனித திருமறை வசனமிது.

"வல்லோனும் மாண்புடையோனுமாகிய அல்லாஹ் கூறுகின்றான் :
என் இறைவா, கல்வி ஞானத்தை எனக்கு அதிகமாக்குவாயாக! என்று (நபியே) நீர் பிரார்த்திப்பீராக (20:114)

இதுவும் கல்வியை இயம்பும் திருமறை வசனமே!

"கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க வதற்குத் தக"

திருக்குறளின் கல்வி பற்றிய அதிகாரத்தில் (391வது குறள்) திருவள்ளுவர் அழகாக கல்வியின் சிறப்பையுணர்த்தி நிற்கின்றார் மேலே காட்டப்பட்டவாறு!

"இளமையிற் கல்வி சிலையிலெழுத்து"

இது அழகிய அனுபவப் பழமொழி !

இவ்வாறாக மனிதனுக்குள் மானுடப்பண்பைப் போதிக்கும் சகல மதங்களும் கல்வியை முக்கியத்துவப்படுத்துகின்றன. இந்து மக்கள் கல்விக்குரிய கடவுளாக சரஸ்வதியை வழிபடுகின்றனர்.


இவ்வாறான சிறப்புப்பெற்ற கல்வியானது மனிதருள் நடத்தை மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியது. பாடசாலை, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் நாம் பெற்றுக் கொள்ளும் கல்வியறிவை விட வாழ்க்கையனுபவங்களால் பெற்றுக் கொள்ளும் அறிவு தரும் திறனே விசாலித்து பயன் தரக்கூடியது.

அன்று ஆசிரியர்கள்  எம்முள் அறிவைத் திணித்து மனநிறைவு கண்டார்கள். ஆனாலின்று நாங்கள் (இன்றைய ஆசிரியர்கள்) அந்த வழிப்படுத்தலை மேற்கொள்ளக் கூடாதவராய் தடைப்பட்டு நிற்கின்றோம்.  

கற்பித்தல் என்பது போதித்தலல்ல வழிப்படுத்தல் எனும் தத்துவத்தை நவீனத்துவத்துடன் சுருங்கிக் காணப்படும் உலகம் எமக்கு போதித்து நிற்பதால் கற்பித்தல் வழங்கலும் அதற்கேற்ப மாற்றம் கண்டுள்ளது.

பொதுவாக ஒருநாட்டின் கல்வியமைப்பில் சமூக, பொருளாதார, அரசியல் துறைகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. அரசியல் மாற்றங்களால் கல்வி வழங்கும் நடைமுறைகள் அடிக்கடி புனரமைக்கப்படுவது தவிர்க்க முடியாத தொன்றாகக் காணப்படுகின்றது. காலத்துக்கு காலம் உலகமயமாக்கலின் விளைவும் கல்வியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதால் இவ்வாறான மாற்றங்களை உள்வாங்குவது அத்தியாவசியமாகவே உள்ளது. இலங்கையைப் பொறுத்தவரை கல்வி வழங்கல் ஐக்கிய இராச்சியத்தின் சுவட்டிலேயே பதிக்கப்படுகின்றது.

இன்றைய கல்வி வழங்கலானது எம் நாட்டில் தேர்ச்சிமுறைக்கல்வி முறையாக வழங்கப்படுகின்றது. இதன் எதிர்பார்ப்பானது ஒரு பிள்ளை பாடசாலைக் காலத்தில் தான் பெறும் கல்வியறிவு, அனுபவத்தை தனது வாழ்க்கை காலம் முழுவதும் பிரயோகிக்க வேண்டுமென்பதே!

எம் நாட்டைப் பொறுத்தவரை கல்வியறிவைப் பெற்றுள்ளோர் தொகை 98% ஆகக் காணப்படுவது ஓர் ஆரோக்கிய சமூகத்திற்கான தொடக்கவுரையாகக் கருதலாம்.

அந்த தொடக்கவுரை பற்றிய திருப்தியான மனநிலையுடன் ,என் பாடசாலை தந்த அனுபவங்களுடன் பயணித்தவாறு என் தொழில் சார் பார்வையை செலுத்துகின்றேனிப்போது . .......

அதன் வெட்டுமுகப்பார்வையில் ஆசிரியர்கள் பொதுவாக எதிர்நோக்கும் சவால்களே பதிவாகின்றன.

கல்விக்கான நோக்கங்கள், வழங்கல் பற்றிய முன்னாயத்தங்கள் யாவும் மிகச்சிறப்பாகவே அரசால் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால் சிக்கல் ஏற்படுவது அதனை வழிப்படுத்தும் போதே

மாணவர்கள் விரிந்த சூழல் அனுபவங்கள், தேடல், எதிர்பார்ப்புக்கள் என்பவற்றுடன் பாடசாலை வருகின்றார்கள். இவர்களுக்கேற்ற ஆற்றலை வழங்காத போது அவர்கள் கல்வி மீது அசிரத்தையும், கற்பிப்போன் மீது விருப்பமின்மையையும் வெளிப்படுத்தி கற்றலின் இலக்கிலிருந்து விலகிப் போகின்றனர். இவ்வாறான மனநிலையில் மாணவர்களை அணுகுவதென்பது ஆசிரியர்களுக்கான சவாலாகும்.

"எழுத்தறிவித்தவன் இறைவனாவான்"

எனப் புனிதப் படுத்தப்பட்ட ஆசான் கேலிப்படுத்தப்படும் மலினம் ஒருசிலரின் நடவடிக்கைகளால் கல்வித்துறையில் பொதுவாகவே காணப்படுகின்றது....

அன்று நாங்கள் கற்கும் போது எமக்கும் ஆசிரியருக்குமிடையில் நீண்ட இடைவெளி காணப்பட்டது. ஆனால் இன்றோ அந்த இடைவெளியை நாங்கள் இயன்றளவு சுருக்கி விட்டோம். மாணவர்கள் தோழமையுடன் எம்மை நெருங்கி தமக்குத் தேவையான அறிவை , திறனை அள்ளிக் கொள்ள நாங்கள் பாதையமைத்து கொடுத்துள்ளோம்!

ஒழுக்கத்திலிருந்து இடறும் ஓரிரு சந்தர்ப்பங்களைத் தவிர பிரம்பு மறந்து போகக் கூடிய இந் நாளில் அன்பைக் குலைத்தே நாம் கல்வியூட்ட முயற்சிப்பதால் பல மாணவர்களின் சிந்தையைத் தொட்டு எம்மாலும் கல்வியை வழங்க முடிகின்றமை பெரும் பாக்கியமே!

இன்று எம்மைப் பொறுத்தவரையில் கற்பித்தலில் நாம் எதிர்நோக்கும் முக்கியமான பிரச்சினைகளுள் ஒன்று பெரும்பாலான மாணவர்களின் சுயகற்றல் ஆர்வம் பூச்சியநிலையைத் தொட்டு நிற்பதே! கற்பிக்கும் விடயங்கள் அவர்கள் உள்வாங்கும் போது மாத்திரமே ஞாபகநிலையைத் தொட்டு நிற்கின்றது. மறுநாள் அவை பற்றிய வினாக்களை எழுப்பும் போது அப்பாவிகளாய் "திருதிரு" வென முழிப்பதைத் தவிர அவர்களால் வேறொன்றும் செய்ய முடிவதில்லை. இந்த இயலாமைக்குக் காரணம் அவர்களின் சுயகற்றல் இன்மையும், போதிய பயிற்சியின்மையுமாகும் !

தமது கனவுகளை பிள்ளைகள் மீது சுமத்தி விட்டு அவர்களின் நகர்வுகளுக்கான பாதையை செப்பனிட்டு கொடுக்க காத்திருக்கும் பெற்றோரின் எதிர்பார்ப்பை நசுக்கும் இந்த இளஞ்சமுதாயம் தோல்விகளின் விளிம்பிலிருந்து தம் வரலாற்றையெழுத முயற்சிப்பது வேதனையே!

இன்றைய கல்விச் சூழலில் நாங்கள் எதிர்நோக்கும் இன்னுமொரு பிரச்சினை "தனியார் கல்வி நிறுவனங்கள்" ஆகும்....பாடசாலையில் ஏனோ தானோ வென்று கற்பிக்கும் பலர் இந்த தனியார் நிறுவனக் கல்வியில் மிகக் கரிசனத்துடன் செயல்வீரர்களாகத் தம்மை இனங்காட்ட முனைவதை நான் அனுபவரீதியாக உணர்ந்துள்ளேன்..மாணவர்களின் தனியாள் வேறுபாடுகளை கண்டறிந்து அவர்களுக்கேற்ற கல்வியூட்டலை ரியூஷன் ஆசிரியர்கள் வழங்கினால் அது சேவையாக எமக்கும் பயன் தரும்..ஆனால் இந்த நிறுவனங்களில் கடைப் பொருட்களைப் போல் மாணவர்கள் நிரப்பப்பட்டு தலையாட்டும் கிளிப்பிள்ளைகளாக தம்மை உருமாற்றுகின்றனர். நன்கு கற்கும் பிள்ளைக்கு தனியார் நிறுவன வழிகாட்டல் பேருதவியாக இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இந் நிறுவனங்களில் தம் பெரும் பொழுதுகளைக் கழித்து விட்டு வெறும் பூச்சியமாக வகுப்பறைக்குள் நுழையும் மாணவர்கள் வகுப்பில் கற்கும் பாடத்தையும் கவனிக்காது தவணைப்பரீட்சைகளில் புள்ளிகளைக் "கோட்டை விடுபவர்களாக மாறுவதை நினைத்தால் கவலை நெஞ்சையடைக்கின்றது.


மேலும் இந்த மாணவர்கள் வகுப்பில் ஆசிரியர் வருகை தராத சந்தர்ப்பங்களில் தாம் ஏற்கனவே கற்ற பாடங்களை மீட்டல் செய்யும் பண்பும் மிகக் குறைவாகவேயுள்ளது. அந்நேரங்களில் தாமாகவே அதி "சுதந்திரத்தை " கைப்பற்றிக் கொண்டு பெரும் சப்தத்துடன் வகுப்பறையைச் சந்தையாக மாற்றிக் கொண்டு பிற வகுப்பு மாணவர்களின் கற்றலையும் குழப்பும் வன்முறையாளர்களாக தம்முள் பதவி சூடிக் கொண்டு ஆசிரியர்களிடம் தண்டனை பெறும் நிலையும் இன்றைய கால கட்டத்தில் அதிகமாகவே காணப்படுகின்றது..

இன்று தகவல் தொழினுட்பம் அதி வேகமாக நம் வாழ்வை பிணைத்துக் கொண்டிருக்கின்றது. இதனால் பிற கலாசார தாக்கங்களும் பண்பாடுகளும் இம் மாணவர்களின் மொழி, வாழ்க்கை நடைமுறைகளை மாற்றியமைத்துக் கொண்டிருக்கின்றன. பாடசாலைகளில் களவாக கைபேசி பாவிப்பதும், இணையங்களினூடாக பெற்றுக் கொள்ளும் பாலியல் சார் விடயங்களை நண்பர்களினூடாக பரிமாறிக் கொள்வதும், அதன் தூண்டுதலால் அப் பாதை வழியில் தாம் இயங்க முயற்சிப்பதும் இன்று மாணவர்களை நெறிபிறழ வைத்துள்ளது..

மாணவர்கள் பெரிதும் விரும்பும் விடயங்கள் பாலியல் சார் விடயங்கள். இவற்றினை நண்பர்கள் வாயிலாகப் பெற்றுக் கொள்ளும் போது வழி தவறிவிடப்படுகின்றனர். இதனால் பாலியல்சார் விடயங்கள் பாடத்திட்டத்தில் உட்புகுத்தப்பட்டு விஞ்ஞான ஆசிரியர்களாகிய எமக்கு பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது....இருந்த போதிலும் வளர்ந்த ஆண் மாணவர்களுக்கு பெண் ஆசிரியர்களாகிய எம்மால் பாலியல் விடயங்களைப் போதிப்பது சற்று சங்கடம் தருவதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆனாலும் மறைமுகமாக சில வழிப்படுத்தல்களை வழங்கிக் கொண்டுதான் இருக்கின்றோம். இதுவும் எமக்கு சவாலே!

"சென்ற வருடம் தரம் 11 கற்கும் மாணவனிடமிருந்து "போன் ஷிப்" ஒன்று கைப்பற்றப்பட்டது. அதனை கைபேசியிலிட்டு பரீட்சித்த போது அதில் நிறைந்திருந்தவை "நீலப் படங்களே". அம் மாணவன் இன்னுமொரு மாணவனிடம் அதனைப் பார்வையிடக் கொடுக்கும் போதே பிடிபட்டான். விசாரணை தொடர்ந்த போது, அவன் சொன்ன பதில் தனது தந்தையார் அதனை அடிக்கடி பார்ப்பதாகவும், அதனாலேயே அதனை தான் தந்தையின் கைபேசியிலிருந்து களவாகக் கழற்றி பாடசாலைக்குக் கொண்டு வந்ததாகவும் வாக்களித்தான். அவனைச் சீர்படுத்த வேண்டிய தாயாரோ வெளிநாட்டில் மாடாய் உழைக்க, தந்தையோ பொறுப்பற்றுத் திரிய .........

வழிப்படுத்த வேண்டிய பிள்ளையோ சீர்கெட்டவனாய் சமூகத்துள் நுழைய முயற்சிக்கின்றான்.

யாரைத் தண்டிப்பது பெற்றோரையா......பிள்ளையையா !

ஆசிரியர்கள் வெறும் அறிவு போதிப்பவர்களலல்ல.....

ஆலோசகர்களாகவும் வகிபாகம் காட்ட வேண்டிய நிலையிலுள்ளார்கள்.

ஏனெனில் மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் வெளிப்படுத்த விரும்பாத பல பிரச்சினைகளை எம்முடன் பரிமாறி தீர்வைத் தேடி நாடி துடித்து நிற்கின்றனர்..இவர்களை வழிப்படுத்துவது எம் கடமை. சேவை. இக் கடமையைப் புறக்கணிக்கும் ஆசிரியர்கள் மாணவர்களால் அந்நியப்படுத்தப்படுகின்றார்கள் இது வரலாறு.

இன்று பாடசாலைகளில் நாங்கள் எதிர்நோக்கும் இன்னுமொரு பிரச்சினையே மாணவ- மாணவியர்களுக்கிடையிலான காதல் தொடர்பு...........கட்டிளமைப் பருவத்தினரிடையே "இலிங்க ஓமோன்" செயற்பாட்டினால் ஏற்படக்கூடிய இயல்பான நிகழ்வொன்றே இந்தக் காதல். விஞ்ஞானம் போதித்து நிற்கும் உண்மையிது! எதிர்ப்பாலியல் கவர்ச்சி இயல்பாகவே மனித சமூகத்தை ஊடுறுவிக் காணப்படும் வேர். இதனை வலுக்கட்டாயமாக அறுத்தெடுக்கும் போதே சமூகம் அங்கீகரிக்காத பல தவறுகள் மேடையேற்றப்படுகின்றன.


ஆனால் இந்த உண்மையை மறுதலிக்கும் சில ஆசிரியர்கள் இவர்களை கையும் மெய்யுமாகப் பிடித்து "கூச்சல்" போட்டு அம்பலப்படுத்தும் போது இம் மாணவர்களின் சிறு தவறுகள் வழிப்படுத்தலின்றி பெரிதாக்கப்பட்டு பறைசாட்டப்படுகின்றது. இதனால் இவர்கள் எதிர்காலம் மட்டுமல்ல தவறான பாதைக்குள் தம்மை வீம்போடு நுழைத்துக் கொள்ளத் தூண்டப்படுகின்றார். தற்கொலைகளும், தவறான வாழ்க்கைத் தெரிவுகளும் இதன் விளைவுகளாக இன்றும் சமுகத்தை எட்டிப்பார்க்கின்றன..

பள்ளிக் காதலும் காலைப் பனியும் நிலையற்றது. ஒருவருடைய ஏதோவொரு கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு அவருடன் விசேட தொடர்புகளை பேணும் போது இயற்கையாகவே அன்பு உருவாகும். அந்த அன்பே பிறர் பார்வையில் "காதலாக" பெயர் சூடிக் கொள்கின்றது. ஆனாலிந்த அன்பு பாடசாலைப்பருவத்தில் பெரும்பாலும் வெறும் இளமைக் கவர்ச்சியாகவே தன்னை இனங்காட்ட முனைகின்றது, தம் உணர்வுகளை கடிதங்களினூடாகப் பரிமாறிய இந்த இளசுகள் பிறரின் தவறான பார்வை, வழிப்படுத்தலின்மையால் முத்தம் வரை தம்மையிழந்து நிற்கின்றனர். பள்ளிப்பருவத்தில் முத்தம் தந்த ஈர்ப்பால் மொத்தமாக தம்மையிழந்து வாழ்வை பறிகொடுத்த பலர் இன்றும் இந்த சமுகத்தின் "விமர்சனச் சகதிக்குள்" வீழ்ந்து துடித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆசான்களைக் கனம் பண்ணாமை, பாடசாலைச் சொத்துக்களை சேதப்படுத்தல் போன்ற வன்முறையாளர்களையும் பாடசாலைகள் தான் உருவாக்குின்றன என்பதும் வேதனையான வெட்கப்பட வேண்டிய உண்மையாகும்.

இயந்திரமயமான இவ்வுலக வாழ்வில் போராட பல மணித்தியாலயங்களைச் செலவிட வேண்டிய நிலையில் , ஆசிரியர்கள் தம் போராட் வாழ்விலிருந்து விலகி மிக அர்ப்பணிப்புடன் ஒவ்வொரு மாணவர் மீதும் தனிப்பட்ட கரிசனத்துடன் செயற்படும் போதே கல்வியின் நோக்கம் நிறைவேற்றப்பட முடியும்...

சிறந்த கல்விப் பாதையொன்றைச் செதுக்க ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை நிர்வாகம், அதிகாரிகள், சமூகம், அரசு ஆகிய மானுட வளங்கள் ஓரணியில் திரள வேண்டும். ஓர் புள்ளியில் அவர்கள் சிந்தனை மையப்படுத்தப்பட வேண்டும்..

ஆசிரியர்த் தொழில் ஓர் தொழிலல்ல சேவை........கால் இலட்சத்தை தொட்டு நிற்கும் எமது ஊதியத்தை ஒவ்வொரு மாதமும் 20 ம் திகதி பெற்றுக் கொள்ளும் போது அந்தக் காசோலை எம் மனசாட்சியைத் தொட்டுப்பார்க்க வேண்டும்..மக்களால் சேகரிக்கப்பட்ட வரிப்பணத்திலிருந்து அரசு தரும் இந்தச் சம்பளப் பணத்திற்காக சமூகம் எதிர்பார்க்கும் நற் பிரஜைகளை நாம் திருப்பி அவர்களுக்கு வழங்குகின்றோமா எனும் கேள்வியே ஆசிரியர் மனங்களைத் தட்டியெழுப்பும் வினாவாகும்..........!

நாங்கள் ஓர் தொழில் பார்க்கும் தகைமைக்குப் பொருத்தமாக கற்றவர்கள்.  பயிற்சி பெற்றவர்கள். ஆனால் எங்கள் கற்றல் பயணம் குறுகியதல்ல.. முடிவுறக்கூடாது..முடிவிலியாக தொடர வேண்டும். ஏனெனில் இவ்வுலகின் புதுப்பிக்கப்படும் ஒவ்வொரு அறிவையும் மாணவர்களுக்கு ஆற்றலாக வழங்க வேண்டிய கடப்பாடு எமக்குண்டு........

அதற்கேற்ப எங்களை நாங்கள் புதுப்பிக்க வேண்டும்.


என்னைப் பொறுத்தவரை என் ஆசிரியர்த் தொழிலில் நான் மானசீகமாக அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு, என்னை நம்பி என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும்  மாணவ சமுதாயத்திற்குரிய வழிகாட்டலை என் விஞ்ஞானப் பாடத்தினூடாக வழங்கிக் கொண்டிருப்பது மறுக்க முடியாத உண்மையே!  என் பொறுப்புணர்ச்சி காரணமாக என்னுடன் கடமையாற்றுபவர்கள் சிலர் வெளிப்படுத்தும் தடைகளைக் கூடத் தகர்த்தெறிந்து எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளோடு தடையின்றி என் பயணத்தைத் தொடர்கின்றேன். அவற்றின் வெற்றி வாசம் மேலும் என்னை உற்சாகப்படுத்துகின்றது.......

நான் ஆசிரியப் பயிற்சி பெறும் காலத்தில் என் பயிற்சிப் பாடங்கள் சகலவற்றிலும் பெற்ற அதி திறமை A சித்திகள், என் மொழி வள மேம்பாட்டுக்காக மஹரகம கல்வி நிறுவனம் நடத்திய ALIC பாடநெறி சிங்கள, ஆங்கிலப் பரீட்சைகளில் பெற்ற A திறமைச்சித்திகள், கல்விமாணிப் பட்டப் பயிற்சி நெறி தெரிவுப் பரீட்சையில் வவுனியா நிலையம் சார்பில் பெற்ற முதலிடம் , வடமத்திய மாகாணத்தின் தமிழ்மூல சிறந்த ஆசிரியையாக 2005ம் ஆண்டு நான் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டமை போன்ற என் ஒவ்வொரு வெற்றியும்  புதுப்பிக்கப்பட்டவாறே என்னை இன்னும் இன்னும் ஊக்குவிக்கின்றது. என்னை நன்கறிந்த நட்புக்கள், பெற்றோர், சகோதரிகள், உறவுகள் என விரியும் என்னைச் சூழவுள்ளோரின் அன்பும் ஆதரவும் இந்த வெற்றியின் ரகஸியங்களில் படிந்து கிடக்கும் வைரத்துளிகள்.

ஊக்கமளிக்காத பாடசாலை நிர்வாகம் கூட என் உந்து சக்தியை மிகைப்படுத்தி சாதனைகளின் முகடுகளை தொடச் செய்கின்றது.பழைய அதிபரின் முகாமைத்துவப் பணிகளை சிறப்பாக நிறைவேற்றியமைக்காக மறைமுகப் பழிவாங்கலைத் தூவி நிற்கும் நிர்வாகத்தின் அலட்சியம் கூட என் நகர்வைத் தடுக்கவில்லை..என் திறமையை சிதைக்கவில்லை. இன்று நான் என்னையே பட்டை தீட்ட இவர்கள் எல்லோரும் தம்மையுமறியாமல் காரணமாகி விட்டார்கள். அண்மையில் வெளியிடப்பட்ட இலங்கை கல்வி நிர்வாகப் பரீட்சையில் 183 புள்ளிகள் பெற்று எனது பாடசாலையில் மட்டுமல்ல எனது பிரதேசத்திலும் நான் தலை நிமிர்ந்து நிற்க "இந்த ஒடுக்கலும் " ஓர் காரணமே!

என் மீது வீசப்படும் கற்களைக் கூட மாலையாக்கும் பொறுமையும், இறைநம்பிக்கையும், தன்னம்பிக்கையும், முயற்சியும் என்னிடம் அதிகமாகவேயுள்ளது. அந்த தைரியமூட்டலில் நான் பயணிக்கும் பாதையெல்லாம் என் சோகங்களையும் மறைத்து வசந்தத்தின் அரவணைப்புடன் என்னையும் அழைத்துச் செல்லட்டும்.




- Ms. Jancy Caffoor -









ப்ரிய சகி!


என் மனப் பிரபஞ்ச வெளியின்
ஒற்றை நிலா வுன்னில் 
சூழுமந்தக் கார்மேகக் கசிவால்
அழுது வடிகின்றதென் ஆத்மாவும்!

கரைந்தோடும் மேகத் துளிகளால்
வார்க்கப்பட்ட   - உன்
வியர்வைத் துளிகளெல்லாம் 
கண்ணீர்த்துளிகளாய் என்னுள்ளிறங்கி
தொட்டுப் பார்க்குதேயென்
கன்னத்தையும் சேர்த்தே !

தென்றலின் மோதுகையில் கூட
நொந்து துடிக்குமுன்  மேனி 
தாங்குமோ
பிரிவின் 
அகோரச் சீண்டலை - நீ
அடிக்கடி உள்வாங்கும் போது!-

உன் கனவு முகங்களைக் கிறுக்கிச் சென்ற
அந்த விதியைச் சபிப்பதிலேயே 
இப்பொழுதெல்லாம் - என்
பொழுதுகளின் நிமிடங்கள்
பொறுப்போடலைகின்றன  - நீ
அறியாமலே!

கலைந்தோடும் மேகங்களில் - நீ
முடித்து வைத்த தூதோலைகளின்
கற்பை 
துவம்ஷம் செய்யும் காற்றை- நீ
விரட்டும் போராட்டம் கண்டு
பேச்சற்றுக் கிடக்கின்றன - பல
கரும்பாறைகள் தம் வலிமையை
உன்னுள் கண்டு!

பனிப் பாறைக்குள் உறைந்து கிடக்கும்
உன் காதல் ஞாபகங்களை 
பிய்த்தெறியத் துடிக்கும்
சூரிய உஷ்ணம் கூட
விரண்டோட தருணம் தேடுது
உன் பெருமூச்சின் வெம்மை கண்டு !

உன் காதல் கருத்தரிப்புக்களை
கருக்கலைப்புச் செய்தே 
கானலுக்குள் ளுன்னை வீழ்த்தும்
விதியின் சூழ்ச்சியெல்லாம் 
அவிழ்ந்தோடுமினி
புதைகுழிக்குள் வீழ்ந்து கிடக்கவே!

நீ ஒளிந்து வைத்திருந்த
வண்ணக்கலவைகளை 
வீம்பாய் நீரூற்றி 
கனவு கழற்றும் பல எத்தனங்கள்
காணாமல் போகட்டுமுன்
வாழ்க்கைப் பாதையிலிருந்து
நிரந்தரமாய்!

சிலுவையறையப்பட்ட வுன் காதலின்
செந்நீர்த்துளிகளால் 
சிதையு மென்னிருதயத்தின் இருப்பும்
மனுக் கொடுத்து மன்றாடுதே - உன்
உயிரணுக்களிலின்பம் மீளச்சேரவே! 

கலங்காதே!
நீ யிடறி வீழ்ந்த - அந்த
தடைக் கற்களின் வெடிப்புக்களிலிருந்தும்
முளையெட்டிப் பார்க்குமினி - அந்த
வெற்றித் தளத்திலுன் பாதத்தை
பொறித்துச் செல்ல!

காத்திரு !
உன் காதல் யாகத்தின் வலிமை 
வேரூன்றுமுன் காலடியோரம்- அதுவுன்னுள்
எட்டிப் பார்க்கும் 
புன்னகைப் பூக்களின் நந்தவனமாய்
நிதமும் !

உன் நெஞ்சக் கூட்டில் 
மோதியெழும் கடலலைச் சங்கமமினி 
சந்தத்துடன்
இசையாகு மோர் நாள்
உன்
காதல் ராஜ்ஜியத்தின் சரித்திரத்தை
எம்முள் விட்டுச் செல்லும் இனிதாய் !

ஜன்ஸி கபூர் 

திருடிய இதயத்தை !


வாழ்க்கை..........!

அது இறைவனால் நமக்களிக்கப்பட்ட வரம்...

அந்த வாழ்க்கையில் நிரம்பி வழியும் அழகான ஞாபகப் பொழுதுகளே நமக்குள் அடிக்கடி உயிர்ப்பைத் தந்து கொண்டிருக்கும் அழகான வர்ணங்கள்

 ஒவ்வொரு மனங்களுக்குள்ளும் தேடலும், எதிர்பார்ப்புக்களும், உறவுகளின் சூழ்கைகளும் பரவித்தான் கிடக்கின்றன. சிலர் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் அல்லது வெளிப்படுத்தத் தெரியாமல் தம் கற்பனைகளை , கனவுகளை, நிஜம் தொட்டுச் சொல்லும் வாஞ்சைகளை சிதைத்துக் கொண்டிருக்கின்றனர்.....

சிலரோ தன் உள்ளக் கிடக்கையை ரசனையுடன் வெளிப்படுத்தி, அந்த கனவுலகை இப் பிரபஞ்ச வெளியில் அள்ளித் தெறித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

நான் இரண்டாம் வகையில் இருப்பதையெண்ணி மகிழ்ந்தவளாய் , எனக்கிந்த ஆற்றலைத் தந்த வல்லோனைப் பணிந்தவளாய் என் பார்வையை நகர்த்துக்கின்றேன் .......

வரிகள் விரல்களின் விசையோடு கணனித் திரையில் தன்னைத் தடம் பதிக்கத் தொடங்குகின்றது வாஞ்சையோடு !நினைவுகளின் சேமிப்புக்களை பகிர்கின்றேனின்று!

அழகு எல்லோருக்கும் பிடித்ததொன்று...அதன் மயக்கத்தில் கிறக்கத்தில் மயங்காத உள்ளங்களில்லை!


கடந்து போன என் இருபதின் இளமையானது , சரீர அழகின் ஈர்ப்பில் கட்டுண்டு, திரை நிழல்களோடு கதைபேசும் நாயக முகங்களோடு லயித்து , ரகஸியக் காதல் வளர்த்துக் கிடந்த அந்த நாட்களை இன்று நினைக்கும் போதெல்லாம் நெஞ்சக்குழியில் வெட்கம் மட்டுமல்ல, அறியாமையும் இடறி கேலி செய்கின்றது...

அழகில் மொய்த்த மனம் அந்த அறியாமையைக் கழுவி , அன்பின் தேடலில் மொய்க்கத் தொடங்கும் போது............

வயதும் கடந்து விடுகின்றது.அனுபவங்களும் பரந்து , உறவுகள், நட்புக்களின் உள்ளத்திலுள்ள உண்மையான அன்பைச் சுற்றி  எதிர்பார்ப்புக்களும் அசையத் தொடங்கி விடுகின்றன....

அன்பு இந்த உலக வாழ்வின் உயிர்த்துடிப்பான நாடி.அந்த அன்பின் பரவசம் தரும் அமைதி, அழகு, ரசனை , ஈர்ப்பு இவற்றில் லயித்து விடுகின்ற மனம் இயற்கையின் காதலிலும் சொக்கித்துக் கிடக்கின்றது.

இன்று இயற்கையோடு ரசித்திருந்த அந்த பரவசத்தை பகிரப் போகின்றேன்.நம் மனதின் பரவசத்தை அழகு வரிகளில் கோர்த்து விடுவது கூட அற்புதமான ஓர் சுகமே!

இதோ.........

எனக்குப் பிடித்த சில, உங்களுக்கும் பிடித்திருக்கா.............!

உங்கள் உள்ளம் நுழைந்து நான் தேடும் வினா, வெளியேறட்டும்  உங்கள் வார்த்தைகளினூடே.............!

வான் வயிறை தன் சூரியக்கதிர்களால் மெதுவாய் வருடி , நெற்றியில்  நாணமேற்ற மெதுவாய் களமிறங்கத் துடிக்கும் அந்த ஆதவனையும்,


அவன் வரவு கண்டு அந்த அதிகாலைப் பொழுதில், பாதி விடிந்தும் பாதி இருளுமாய்  அப்பிக் கிடக்கின்ற அந்த மௌனப் பொழுதில் கைபேசி "ரிங்டோனாய்" என்னை எழுப்பி விடும் சிட்டுக்களின் சிரிப்புச் சத்தமும்


என் மனதேசத்தின் பரவச அணுக்களை உசுப்பேற்றி வேடிக்கை பார்க்கும்..எப்பொழுதும் !

.அந்த அழகான உலகிலிருந்து நழுவிப் போக மனமின்றி, கண்களை இறுக்கி போர்வைக்குள் ஒளிந்து கிடக்கும் கள்ளத்தனம் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது....

   அந்த அதிகாலைத் தென்றலில் தம் சிறகுகளின் ஈரம் துடைத்து வீட்டுமுற்றத்தில் இரைதேடும் சின்னப்பறவைகளின் சொக்கலின் லயிப்பில் தினம் தினம் கவிதைகள் ஊறிக் கொண்டேயிருக்கும். இந்த இயந்திரவுலகின் இதயமாய் ஒட்டிக் கிடக்கும் இயற்கையின் மானசீக காதலியாய் எனை நானுருமாற்றியதன் விளைவாய் பல நாட்காட்டிகள் கைகாட்டிச் சென்றும் விட்டன..

    
நாணத்திரைக்குள் ஒளிந்திருந்து, வண்டுகளின் காமப் பார்வைச் சிதறல்களை களைந்தெறிய வலியுடன் போராடிக் கொண்டிருக்கும் பாதி மலர்ந்த மொட்டுக்களைத் தொட்டு மெட்டமைத்து இட்டுக் கட்டும் பாட்டுக்கள் இஷ்டத்துடன் ஆக்கிரமித்துக் கிடக்கின்றன இன்னும் என் மன வைப்பகத்திலே


மாலைக் காற்றில் கரைந்து மஞ்சள் தெளிக்கும் அந்த வெயிலோடு இம்சை சேர்க்கும் மழைத் தோரணங்களின் சீண்டலில் என் மேனி சிலிர்த்துக் கிடக்கும் அந்தப் பொழுதுகளுக்காய் எத்தனை பொழுதுகள் தவமிருந்திருக்கின்றேன்..இன்றும் கூட அந்த ஈரலிப்புக் காற்றில் என் ஆடைகளை சிறகாக்கி பறந்திடத் துடிக்கும் அந்த சிறு பிள்ளைத் தனம் வம்படிக்கின்றது அடிக்கடி என்னுள் வில்லத்தனமாய் !


காற்று.........!

இயற்கைக் காற்றில் வெட்கம் களைந்து நனைந்திட துடிக்கும் அசைவுகளை நான் கட்டுப்படுத்துவதில்லை. துச்சாதனனாயென்னைத் துகிலுரிக்கும் அதன் வன்மத்தை நான் சினப்பதுமில்லை. ஏனெனில் என்னுள் நுழைந்து என்  மூச்சுக்களைச் சேமிக்கும் அந்தப் பிராண வாயுவும் என்னைத் தொட்டுச் செல்ல வலைவிரிக்கும் நேரமல்லவா அது!

வான வயலிலே விதைக்கப்பட்ட மேகக் கூட்டங்களையும் நான் ரசிப்பதுண்டு..மேகங்கள் ஓடி விளையாடுகையில் தம் உருவை மாற்றும் வெவ்வேறு முகமூடிகளை என்னுள்ளல்லவா விட்டுச் செல்கின்றன.....


அறுவடைக்கு இன்னும் தயாராகாத கன்னி நெல் மணிகளின் பருவச் செழிப்பிலும் நான் கிறங்கியதுண்டு........காற்றின் முதுகினிலே பயணித்தவாறே நம்முள் கடலலையை ஞாபகப்படுத்தும் நெற்கதிரின் அசைவை விழியில் தரிக்க வைத்து நான் ரசித்த கணங்கள் அப்பப்பா ...ஏராளம்!


உள்ளத்திலும், உடலிலும் அழகின் சேமிப்போடு யாழின் இசையாய் தம் மழலைப் பேச்சுக்களை உதிர்க்கும் சிறு கிள்ளைகளும், அவர்களின் ரசிப்புக்களும் என்னை கட்டிப் போடும் அன்பான அவஸ்தைகள் தான்.........


அலைகளின் மோதுகைகளோடு புரண்டெழும் கடற்கரை மணலில் கால் புதைத்தும், கரையோரங்களில் அவஸ்தையோடு வீழ்ந்து கிடக்கும் நீரில் கால் நனைப்பதும் இன்றும் தொடரும் சிறுபிள்ளைத்தனமான ஆசைதான்!


பன்னீர் தூவும் வானத்தில் இயற்கை வரைந்த நிறக் கோடுகளாய் நம்மை எட்டிப் பார்க்கும் வானவில்லின் அழகும்,...................


சுட்டெறிக்கும் வெயிற் பொழுதில் வீதியில் விழுந்து கிடக்கும் மாயநீரின் வலை விரிப்பாய் நம்மை ஆட்கொள்ளும் கானல் நீரும் ..............
என் ரசிப்புக் குளத்தில் நீச்சலடிக்கும் இனிமையான காட்சிக் குவிப்புக்கள்!

முட்டை மஞ்சள் கருவாய் பௌனர்ணமி தினங்களில் வீழ்ந்து கிடக்கும் மஞ்சள் நிலவு.......என் நெஞ்சைத் தொட்டுச் செல்லும் அழகிய மதிமுகம் !


இவற்றின் சேமிப்புக்களை உள்வாங்கும் என் மனக்கூடம்,  நிழல் தேட தெரிவு செய்யும்............அழகான வீடும் என் கற்பனையுலகில் அடங்கிக் கிடக்கும் !


கனவுத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு ,அழகுச் சுவடுகளை கற்களாகப் பதித்து உயிர்ப்பேற்றிக் கொண்டிருக்கும் என் வசந்த மாளிகையில் நான்  வீழ்ந்து கிடக்கும் ஒவ்வொரு நொடிகளிலும் என் சுவாசத்தின் மீது சுகம் பன்னீர் தெளித்து விட்டுத்தான் மறைகின்றது!

இன்னும் எத்தனையோ எத்தனையோ..........!

ரசிப்பு வீரியங்களுடன் என் உணர்வை நசித்துக் கொண்டிருக்கின்றன

இயற்கையின் இதயம் கசிந்துருகும் இந்த ஆனந்த மயக்கத்தில் நான் கிறங்கிக் கிடக்கும் போதெல்லாம் நானும் சிறு கிள்ளையாகி வீழ்ந்து கிடக்கின்றேன் மகிழ்ச்சி வெளிகளில்!