About Me

2012/07/26

யப்பானின் 5 S முறை

5 எஸ் என்பது பணித்தள அல்லது பணியிட அமைப்பு முறையைக் குறிப்பதாகும்.இது யப்பானியர்களால் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு வழிமுறையாகும். ஜப்பானியப் பொருள்கள் தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பதற்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்றாகும் .

1வது எஸ் -   செய்றி               - வகைப்படுத்து    (Sort)
2 வது எஸ் -  செய்டன்           -  நிலைப்படுத்து  (Stabilize)
3 வது எஸ் -  செய்ச்சோ        - ஒளிர்                      (Shine)
4 வது எஸ் -  செய்கொட்சு    - தரப்படுத்து           (Standardize)
5 வது எஸ் -  ஷிட்சுகே          - நீடிக்கச் செய்       (Sustain)

இவை ஐந்தும் பணித்தளத்தில் பொருட்களைத் திரட்டும், ஒழுங்குபடுத்தும் வழிமுறையினைக் குறிப்பதாகும்.

செய்றி
-----------
இது பொருட்களைப் பிரித்தெடுத்து அவற்றுள் தேவையானவற்றைத் திரட்டி தேவையற்றதை அப்புறப்படுத்தும் செயலைக் குறிக்கும்.


செய்டன் -
-------------
இது பொருட்களுக்குரிய இடத்தையும் ,இடத்துக்குரிய பொருட்களையும் தேர்ந்தெடுத்து பெயர்க்குறியீட்டுடன் பராமரிக்கும் செயலாகும். இச்செயல் ஒவ்வொரு பணியையும் எளிமைப்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

செய்சோ
------------
இது பொருட்களையும் பணித்தளத்தையும் சுத்தமாகவும், ஒழுங்காகவும் வைத்துக்கொள்வதை குறிக்கும் சொல். பணித்தொடக்கத்திலும், பணிமுடிவிலும் பொருட்களையும், பணித்தளத்தையும் சுத்தமாகவும் ஒழுங்காகவும் வைத்துக் கொள்வதை வழக்கப்படுத்தி கொள்வதை வற்புறுத்தும் சொல்லாகவும் இது அமைகின்றது. அசுத்தமான பொருட்களை சுத்தம் செய்யும் போது பொருட்களின் தரக்குறைபாடுகள் இருக்குமானால் அவற்றை வெளிப்படுத்தவும் நீக்கவும் இம்முறையால் முடிகின்றது. இதனால் வாடிக்கையாளருக்கு தரமான பொருட்கள் மட்டுமே சென்றடைகின்றது.

செய்கொட்சு
-------------------
இது முன் சொல்லப்பட்ட 3 செயல்களை வரையறுக்கப்பட்ட வழிமுறையில் செய்வதைக் குறிக்கும் சொல்லாகும். இந்த வரையறைகள் பொறுப்புக்கள், பொறுப்பாளர்கள், செய்முறைகள், செய்கருவிகள் இவை யனைத்தையும் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.
ஷிட்சுகே
-------------
இது முன் சொல்லப்பட்ட 4 செயல்களையும் தொடர்ச்சியாகவும் தொய்வில்லாமலும் தன்னொழுக்கத்துடனும் செய்வதைக் குறிப்பதாகும்.

ஒவ்வொருவரும் தத்தமது வாழ்வை அழகாகவும் நேர்த்தியாகவும்  வாழ ஆசைப்படுவதும் முயற்சிப்பதும் இயற்கை. அதன் பொருட்டு நல்ல விடயங்களின்பால் தேடல்களும், அவை தொடர்பான பின்பற்றுகைகளும் நமக்குள் இருக்க வேண்டும். இதற்கு யப்பானின் 5 எஸ் முறையும் நமக்கு பயிற்சியளிக்கின்றது.

- Ms. Jancy Caffoor -






2012/07/25

ஆட்டோகிராப்


அந்தக்காலம் மனசெங்கும் ஏமாற்றம் தராத , எதிர்பார்ப்புக்களையும் ஏக்கம் நிறைந்த கனவுகளையும் மட்டுமே சுமக்கக் கூடிய பள்ளிப்பருவம். எமக்கு க.பொ.த (சா/த ) பரீட்சை நெருங்கிக் கெண்டிருந்தது. நாம் எழுதப் போகும் முதல் பொதுப்பரீட்சையிது,,,,,,அதனால் பரீட்சை பற்றிய பயம், டென்ஷன் அதிகமாகவே இருந்தது.

 மறுபுறமோ பிரியப் போகும் நட்புள்ளங்கள் பற்றிய கவலை. தம்   கண்ணீர்த்துளிகளால்   பாடசாலை நாட்களின் நினைவுகளையும் அந் நினைவுகள் சேமித்து வைத்திருக்கும் அன்பையும் , நட்பையும்   நண்பிகள் ஆட்டோகிராப்பினில் வார்த்தையாக்கிக் கொண்டிருந்தார்கள்....

நான் கற்றுக் கொண்டிருந்த பாடசாலை யாழ் நகரின் பிரபல்யமான பெண்கள் பாடசாலையென்பதால் பல திசைகளைச் சேர்ந்த நண்பிகள் என் அன்புக்குள் அடைக்கலமாகிக் கொண்டிருந்தனர். ஜாதி, பேதம், மதம் எனும் வேறுபாடுகளை மறந்த, துறந்த இனிமையான நட்பு எம் வசம் இறுக்கமாகவே இருந்தது !

"புஷ்பா".............

அது அவளின் பெயர்ச் சுருக்கம். காரைநகரின் இளைய கன்னி. குறும்புக்காரி...எப்பொழுதும் வம்பளப்பாள். அடுத்தவருக்கு  பாதிப்புத் தராத வம்பது...அந்த அன்பும் ,வம்பும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

நாங்கள் பிரிவைத் தொட நெருங்கிக் கொண்டிருக்கும் அந்தக்காலத்தில்தான் என் ஆட்டோகிராப்பும் நண்பிகளிடம் தாவியது..............ஈற்றில் புஷ்பா கரம் தொட்டது.

"உமக்கு நிறைய எழுதணும்....நாளைக்குத் தாரன் "

இயல்பாகச் சொன்ன அவளிடம் அரைமனதுடன் சம்மதித்தேன். என்னிடமுள்ள கெட்ட பழக்கம் என் பொருட்களை யாரிடமும் இலேசில் கொடுக்க மாட்டேன்..அவர்கள் அதனை என்னைப் போலப் பத்திரப்படுத்தமாட்டார்களோ எனும் ஐயமே அதற்குக் காரணம்...

கேட்பது அவளாச்சே.............!

நான் சம்மதித்த போது கண்களைச்சுருக்கி மெல்லிய புன்னகையை தவழவிட்டாள் தன் னிதழோரம்.. அவள் பாடசாலை விடுதி மாணவி என்பதால் என் பொருள் பத்திரமாக வந்துசேரும் எனும் நம்பிக்கை மனதில் கனத்தவாறே என்னை அமைதிப்படுத்தியது.

மறுநாள் விடிந்தது. அன்று நேரத்துடனேயே பாடசாலை சென்றேன். ஆனால் புஸ்பா பாடசாலை ஆரம்பிக்கும் நேரத்திலேயே வந்தாள். காலை ஆராதனை முடிந்து என் ஆட்டோகிராப் அவளிடத்திலிருந்து  என் கைகளுக்குள் தாவிய போது பாடத்திற்கான மணியும் ஒலித்து விட்டது..

அவளின் வரிகளை என் விழிகள் மேயத் துடித்த போது , அருகிலிருந்த அவள் மெதுவாக எனக்கு மட்டும் கேட்கும்படியாகக் குசுகுசுத்தாள்.

"டீ ..சயன்ஸ் ரீச்சர் வாரா..................பிடிபட்டே அவ்வளவு தான்"

அவளின் ஞாபகமூட்டலில் அந்த ஆசையும் அறுந்து போக ..................., அப்பாவித்தனமாய் எனக்குள் மட்டும் அசடுவழிந்தேன்.. அவள் மௌனமாகச் சிரித்ததைக் கண்டு போலியாக முறைத்தேன்.

தொடர்ந்து வந்த நிமிடங்களில் பாட விடயங்களுக்குள் மூழ்கிப் போனதில் அந்த ஆட்டோகிராப் நினைவும் மறந்து போனது..

சயன்ஸ் ரீச்சர் பொல்லாதவர்..சற்றுக் கண்டிப்பு.....என் வகுப்பாசிரியை ......எங்கள் வகுப்பில் நானும் இன்னுமொருவர் தான் முஸ்லிம்கள் என்பதால் எங்கள் மீது அவர் வேற்றுமை காட்டமாட்டார். அதுமட்டுமல்ல விஞ்ஞானம் எனக்கு மிகவும் பிடித்த பாடமென்பதால் அவவுக்கும் என்னை ரொம்பப்பிடிக்கும்........

"குணரட்ணம் மிஸ்"

அப்படித்தான் நாங்கள் அவரை அழைப்போம்.. சற்று வயதான ஆசிரியைதான். இருந்தும் அவ படிப்பிக்கும் விதம் என்னை ரொம்பக் கவரும்..நான் தனியார் வகுப்புக்களுக்குச்  செல்வதில்லை. அவரையே நம்பியிருந்து அவர் கற்றுத் தருபவற்றை மட்டுமே உள்வாங்கி அதிக புள்ளிகளைப் பெறுவது அவருக்கு என்னைப் பிடித்துப் போக இன்னுமொரு காரணமாகும்..

மிஸ்ஸையும் நாங்கள் பிரியப் போகின்றோம் எனும் கவலை மனதைப் பிறாண்ட என் ஆட்டோகிராப்பை ரீச்சரிடம் நீட்டினேன்.

"மிஸ் சைன் பண்ணித் தாங்கோ"

தயக்கத்தில் நா தடுமாறியது

"தாரும்"

இயல்பாகவே வாங்கியவர் ஆட்டோகிராப் பக்கங்களை வேகமாகப் புரட்டினார்.ஆட்டோகிராப் பக்கங்களை நிறைத்துக் கொண்டிருந்த என் நண்பிகளின் சீண்டலை அவர் ரசித்திருக்க வேண்டும்..மெதுவாகப் புன்னகைத்தார்.

"அப்பாடா..........மிஸ்ட மூட் நல்லம்"

மனது தைரியப்பட்டு ஒட்டிக் கொண்டிருந்த பயத்தை வெளியேற்றிக் கொண்டிருந்தது. ஆனால் அந்த சந்தோஷம் அதிக நேரம் கூட நிலைக்கவில்லை. மெடம் தன் மூக்குக் கண்ணாடியைச் சற்றுத் தாழ்த்தி என்னை உற்றுப் பார்த்தார்.........

" இங்க வாரும்" என் பெயரோடு சேர்ந்து உச்சரித்த வார்தைகளிவை!.

அவர் சுட்டிக்காட்டிய பக்கத்தில் நிறைத்திருந்த அந்த வசனங்களில் விழிகள் குத்திட்டு நின்றன..நானே இப்பொழுதுதானே இதனைப் பார்க்கின்றேன்.. ஒருவேளை இது புஷ்பாவின் வேலையோ ! கவலை மனதை நிறைக்க அவளைப் பார்த்த போது அவள் அவசரமாக தானில்லையென தலையசைத்தாள்.

என் நாடித்துடிப்பு அடங்கிப்போகும் வலி.......வரிகளாக காதல் கவிதையொன்று எட்டிப்பார்த்தது..ஆண் நண்பர்களே எனக்கில்லாத போது காதலன் எங்கிருந்து முளைத்தான்...?

வியர்த்தது...காதல் அனுபவமில்லாத மனசு......அந்தப் பேரிடியால் சிதைந்த போது அழுதே விட்டேன்.......

"மிஸ்..நான்தான் எழுதினேன்'

என் கண்ணீர் அந்த நண்பியின் உள்ளத்தை கரைத்திருக்க வேண்டும். விளையாட்டின் விபரீதமறிந்த அவள் தன் மௌனத்தைக் கலைத்து குற்றவாளியாய் தலைகுனிந்து நின்றாள்............புஷ்பா !.

ரீச்சரோ சூடானார்..........

"படிக்கிற வேலைய மட்டும் பாரும்"

புஷ்பாவை ஆசிரியை கண்டிக்க கண்டிக்க அவளோ தன் விழிகளால் "சொறி கேட்டு என்னிடம் கெஞ்சத் தொடங்கினாள்...அவள் அபிநயம் கண்டு நானோ கவலை மறந்து சிரித்தே விட்டேன்..

அந்த நட்பு, அன்பு எல்லாமே பசுமையாய் இன்றும் நெஞ்சில் இனிக்கின்றது..
யுத்தத்தால் நாங்கள் அகதிகளாக்கப்பட்ட போது அந்த ஆட்டோகிராப்பும் எங்கோ சிதைந்து போனது.. ஆனால் அந்த நண்பிகளின் நேச வரிகள் மட்டும் மறக்காமல் மனதுக்குள் பத்திரப்படுத்தப்பட்டு கிடக்கின்றன...

புஷ்பமலர். அன்பரசி, சசிகலா, கௌரி, சந்திரிகா, கவிதா விஜியவேணி,யசோதரா, சுஜாதா,ஜிற்னீஸ், கீதா, அன்பு, இளமதி, சசிரேகா என நீளும் அந்த நேசமுகங்கள் இன்று எங்கோ ஓர் மூலையில்........திசையில் !

எல்லோரும் வளர்ந்திருப்பார்கள்..குடும்பம் ,பிள்ளை குட்டி, பதவிகளென  வாழ்ந்து கொண்டிருப்பார்கள் . அவர்கள் மனதிலும் நான் ஞாபகங்களாக விழுவேனா.......காலத்தின் காலடியில்  என் வினா தொக்கி நிற்கின்றது. இருந்தும் என் மனதில் அவர்கள் உருவம் இன்னும் அந்த மாணவப் பருவத்தின் சாயலில்தான் அப்பிக் கிடக்கின்றது...

எங்கள் பெருநாள் விசேடத்திற்கு எல்லா நண்பிகளும் என் வீட்டுக்குப் படையெடுத்து விருந்தும் கலகலப்புமாய் எங்கள் மனையை நிறைத்துச் செல்லும் அந்த நினைவுகள் எல்லாம் இன்னும் காயாமல் ஈரலிப்பாகத்தான் உள்ளது...

பெருநாள், கிறிஸ்மஸ், பொங்கல், தீபாவளியென பண்டிகைகள் எம்மை நாடி வருகையில் வாழ்த்தட்டைகளை மறவாது பகிர்வதும், தபாலட்டைகள் வீட்டில் நிறைவதும் வசந்தகால ராக நினைவுகளாய் என்னை மீட்டிச்செல்கின்றது.

நான் ஆசிரியையாக கடமைபுரிவதால் என்னிடம் கற்கும் மாணவர்கள் தங்கள் ஆட்டோகிராப்பை என்னிடம் நீட்டும் போதெல்லாம் என் நண்பிகளின் ராஜ்ஜியமும் அதன் நினைவுகளும் எனக்குள் ஒட்டிக் கொள்கின்றது..

பசுமையான பள்ளி நினைவுகள் இனிமையான சுகம் !

ஒலிம்பிக் போட்டி


2012 ம் ஆண்டுக்கான கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் எதிர்வரும் 27 ம் திகதி (2012.07.27 ---12.08.2012) ஐக்கிய ராஜ்ஜியத்தின் லண்டன் மாநகரத்தில் நடைபெற இருப்பது யாவரும் அறிந்ததே! ஒலிம்பிக் பூங்காவானது  கிழக்கு இலண்டனில் ஸ்ட்ராஃபோர்டில்  200 எக்டேர் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குதான் லண்டன் ஒலிம்பிக் நடைபெறவுள்ளது. 



அந்நிகழ்வையொட்டி என் விசைப்பலகையும் சில ஞாபகங்களை வலைப்பூவில் பதிக்கின்றது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் மாற்றி மாற்றி பல்வேறு விளையாட்டுக்களுக்கு நடத்தப்படும் அனைத்துலகப் போட்டியே ஒலிம்பிக் ஆகும். பண்டைய கிரீஸ் நாட்டில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் இருந்து வந்தது.


ஒலிம்பிக் போட்டியானது கி.மு 776 ஆம் ஆண்டு கிரிஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில் ஆரம்பமானது. தடையேதுமின்றி 4 வருடங்களுக்கொரு முறை கிரமமாக நடைபெற்ற இப் போட்டியானது கி.பி.393 வரை தொடர்ந்து நடைபெற்றது


கிரேக்க கவிஞர் பானாஹியோடியஸ் ஸௌட்ஸாஸ் என்பவர் கி.பி.1833இல் எழுதிய "இறந்தவர்களின் உரையாடல்" என்னும் கவிதை இப்போட்டிகளை மீண்டும் தொடங்கும் ஆர்வத்தை உருவாக்கியது.

பின்னர் கி.பி 393 ல் அப்போதைய கிரேக்க அரசர் தியோடிசியல் இப் போட்டிக்கு தடை விதித்தமையால் போட்டி நிறுத்தப்பட்டது.

1890 ல் மீண்டும் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டன.





கிரேக்கர்கள் தமது கடவுள்களில் ஒருவரான "ஜியஸ்" எனும் கடவுளைப் போற்றும் வகையில் திருவிழா கொண்டாடுவார்கள். அதன் ஒரு பகுதிதான் இந்த ஒலிம்பிக் போட்டியாகும். அப்பொழுது கிரேக்க சாம்ராஜ்ய எல்லைகள் ஸ்பெயின் துருக்கி வரை வியாபித்திருந்த நிலையில் கிரேக்கர்கள் மட்டும் இப் போட்டியில் பங்குபற்றினார்கள்.

போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு "ஆலிவ் இலைகளால்" ஆன கிரீடம் சூட்டப்பட்டது.

அப்போதைய கிரிஸ் அரசர் முதலாம் ஜார்ச் முன்னிலையில் பல நாடுகள் பங்குபற்றும் ஒலிம்பிக் போட்டி 19 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் 1896.04.06ல் எதென்ஸ் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. பேரன் பியரி டி குபர்டின் எனும் பிரான்ஸ் நாட்டவரின் முயற்சியால் மீண்டும் இப் போட்டி புதுப்பிக்கப்பட்டது.

முதல் ஒலிம்பிக் போட்டியில் 14 நாடுகள் கலந்து கொண்டன..தடகள போட்டிகள் , குத்துச் சண்டை, மல்யுத்தம், துப்பாக்கி சுடுதல், டென்னிஸ், சைக்கிள் ரேஸ், நீச்சல், ஜிம்னாஸ்டிக், பளுதூக்குதல் ஆகிய போட்டிகள் இதில் இடம் பெற்றன..

ஒலிம்பிக்கின்  11 வது நாள் மரதன் ஆரம்பிக்கப்பட்டது















1914 ம் ஆண்டு பேரான் டி குபர்ட் ஒலிம்பிக் கமிட்டியின் 20 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதமாக வெள்ளை நிறமான ஒலிம்பிக் கொடியை நிர்வாகிகளிடம் கையளித்தார். இக் கொடி 1913 ல் வடிவமைக்கப்பட்டு 1914 ல் அங்கீகரிக்கப்பட்டு 1920 ல் நடைபெற்ற ஆன்ட்லெப் நகர ஒலிம்பிக்கில் பயன்படுத்தப்பட்டது. 1984 வரை இக் கொடியே பயன்படுத்தப்பட்டது.

1988 சியோல் ஒலிம்பிக்கில் பழைய கொடி மாற்றப்பட்டு புதிய கொடி அறிமுகப்படுத்தப்பட்டது.

1900ம் ஆண்டு பாரிஸில் நடந்த 2 வது ஒலிம்பிக் போட்டியில் முதன் முதல் பெண்கள் 3 விளையாட்டுக்களில் அனுமதிக்கப்பட்டனர். கோல்ப், வில்வித்தை,டென்னிஸ் என்பனவே அவ் விளையாட்டுக்களாகும்.

1928 ல் பெண்கள் தடகள போட்டியில் பங்குபற்ற அனுமதி கிடைத்தது.

இருந்தும் ஒருசில நாடுகள் பெண்கள் அனுமதியை மறுத்து விட்டன.        இன்றும் சில நாடுகளில் பங்குபற்றும் பெண்கள் விமர்சனத்திற்குள்ளாகி நிற்கின்றனர்.

தொடக்கத்தில் கோடை கால மற்றும் குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஒரே ஆண்டில் நடத்தப்பட்டு வந்தன. 1994 முதல் கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன.

1908, 1948, ஆகிய ஆண்டுகளில் இப் போட்டி லண்டனிலேயே நடத்தப்பட்டது. மூன்றாவது முறையாக லண்டனில் நடத்தும் பெருமையை லண்டன் பெற்றுள்ளது. முதலிடத்தில் 4 முறை நடத்திய அமெரிக்கா உள்ளது.

ஒலிம்பிக்கில் தம் சாதனைகளை நிலைநாட்டி பதக்கம் சூடுவது போட்டியில் பங்குபற்றும் ஒவ்வொரு வீரர்- வீராங்கனைகளின் கனவாகவே உள்ளது















இம்முறை நடைபெறவுள்ள போட்டித் தலைப்புக்களாவன:

1. தட கள விளையாட்டுக்கள்
2. நீர் விளையாட்டுக்கள்                                                    
3. சீருடற் பயிற்சிகள்
4. தற்காப்புக் கலைகள்
5.ஊர்தி ஓட்டங்கள்
6. குழு விளையாட்டுக்கள்
7. கருவி விளையாட்டுக்கள்








                                         




நடத்தும்- நகரம்இலண்டன்இங்கிலாந்து
பங்குபற்றும்- நாடுகள்148 (தகுதி)
204 (எதிர்பார்க்கப்படுவது)
பங்குபற்றும்- வீரர்கள்10,500 (எதிர்பார்ப்பு)
நிகழ்ச்சிகள்302 - 26 விளையாட்டுக்கள்
ஆரம்ப- நிகழ்வுஜூலை 27
இறுதி- நிகழ்வுஆகஸ்ட் 12

அரங்கம்ஒலிம்பிக் விளையாட்டரங்கம்
இம்முறை ஒலிம்பிக் நிகழ்வில் "வணக்கம்" ஒலித்தது. இது தமிழுக்கு கிடைத்த பெருமை எனலாம்.

உலகப் போர் நடைபெற்ற காலங்களைத் தவிர்த்து 1896 ம் ஆண்டு முதல் 4 வருடங்களுக்கொரு முறை நடத்தப்பட்டு வருகின்றது.


ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற நாடுகள் பின்வருமாறு :


வருடம்இடம்வருடம்இடம்
1896ஏதென்ஸ், கிரீஸ்1900பாரீஸ், பிரான்ஸ்
1904செயிண்ட் லூயிஸ், ஐக்கிய அமெரிக்கா USA1908லண்டன், இங்கிலாந்து
1912ஸ்டாக்ஹோம், ஸ்வீடன்1920ஆண்ட்வெர்ப், பெல்ஜியம்
1924பாரீஸ், பிரான்ஸ்1928ஆம்ஸ்டர்டாம், ஹாலந்து
1932லாஸ் ஏஞ்சலீஸ், ஐக்கிய அமெரிக்கா USA1936பெர்லின், ஜெர்மனி
1948லண்டன், இங்கிலாந்து1952ஹெல்சின்கி, பின்லாந்து
1956மெல்போர்ன், ஆஸ்திரேலியா1960ரோம், இத்தாலி
1964டோக்கியோ, ஜப்பான்1968மெக்ஸிகோ சிட்டி, மெக்ஸிகோ
1972ம்யூனிச், ஜெர்மனி1976மாண்ட்ரீல், கனடா
1980மாஸ்கோ, சோவியத் யூனியன்1984லாஸ் ஏஞ்சல்ஸ், ஐக்கிய அமெரிக்கா USA
1988சியோல், தென் கொரியா1992பார்சிலோனா, ஸ்பெயின்
1996அட்லாண்டா, ஐக்கிய அமெரிக்கா USA2000சிட்னி, ஆஸ்திரேலியா
2004ஏதென்ஸ், கிரீஸ்2008பெய்ஜிங், மக்கள் சீனக் குடியரசு
2012இலண்டன், ஐக்கிய இராச்சியம்2016ரியோ டி ஜனேரோ, பிரேசில்


லண்டன்: முற்றிலும் பெண்களைக் கொண்ட பாப் குழுவான ஸ்பைஸ் கேர்ள்ஸ் குழுவினர், லண்டன் ஒலிம்பிக் நிறைவு விழாவில் ஒரு கச்சேரி செய்யவுள்ளனர்.







ரமழான் சிந்தனை



இது ரமழான் மாதம்....முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் புனித மாதம்...நோன்பின் 27 ம் நாளான லைலதுல் கத்ர் இரவினிலேயே தான் அல்குர் ஆன் அருளப்பட்டது..

இந்த ரமழானைச் சிறப்பிக்கும் வகையில் நானும் என் வலைப்பூவில் ஹதீஸ், அல் குர்ஆனில் அருளப்பட்ட, நவிலப்பட்ட வசனங்களை பதிவிடுகின்றேன். இன்ஷா அல்லாஹ்....ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வசனங்களாக என் வலைப்பூவினிதயம் அதனைச் சுமக்கும் !

எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே .அல்ஹம்துலில்லாஹ்!

 *****
இறைதூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்-

"நீங்கள் பிறை கண்டதும் நோன்பு வையுங்கள். (மறு) பிறை கண்டதும் நோன்பை விடுங்கள். உங்களுக்கு (வானில்) மேகம் தென்பட்டால் நாள்களை எண்ணிக்கொள்ளுங்கள் "

அறிவிப்பவர் - இப்னு உமர் (ரலி) அவர்கள்                                          (2:30)

*****
இறைதூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள் :

"ரமழான் வந்துவிட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றார்கள்"

அறிவிப்பவர் - அபு ஹூரைரா (ரலி) அவர்கள்                                      (2:30)

*****
ரமழான் மாதத்தைப் பற்றி அல்லாஹ் த ஆலா திருமறையாம் அல் குர்ஆனில் கூறுவதாவது-

"ஈமான் கொண்டவர்களே! உங்கள் முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டது போல உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது. (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்"

ஆதாரம் - அல் குர்-ஆன்  2:183

*****
இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள்-

"சொர்க்கத்தில் 'ரய்யான்' என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கின்றது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். " நோன்பாளிகள் எங்கே" என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ் வாசல் அடைக்கப்பட்டு விடும். அதன் வழியாக வேறு எவரும்  நுழைய மாட்டார்கள்"

அறிவிப்பவர் ஸஹீல் (ரலி ) அவர்கள்                                              (2:30)

*****
 இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் -

நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும். எனவே நோன்பாளி கெட்ட பேச்சுக்களை பேச வேண்டாம். முட்டாள்தனமான செயல்களில் ஈடுபட  வேண்டாம். யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் "நான் நோன்பாளி" என்று இருமுறை கூறட்டும். என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும். (மேலும்) எனக்காக நோன்பாளி தம் உணவையும் , பானத்தையும், இச்சையையும் விட்டு விடுகிறார்.நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது.அதற்கு நானே கூலி கொடுப்பேன்.! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்!" (என்று அல்லாஹ் கூறினான்) "

அறிவிப்பவர் -   அபூ ஹூரைரா (ரலி)                                                   (2:30)