About Me

2012/07/25

ரமழான் சிந்தனை



இது ரமழான் மாதம்....முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் புனித மாதம்...நோன்பின் 27 ம் நாளான லைலதுல் கத்ர் இரவினிலேயே தான் அல்குர் ஆன் அருளப்பட்டது..

இந்த ரமழானைச் சிறப்பிக்கும் வகையில் நானும் என் வலைப்பூவில் ஹதீஸ், அல் குர்ஆனில் அருளப்பட்ட, நவிலப்பட்ட வசனங்களை பதிவிடுகின்றேன். இன்ஷா அல்லாஹ்....ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வசனங்களாக என் வலைப்பூவினிதயம் அதனைச் சுமக்கும் !

எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே .அல்ஹம்துலில்லாஹ்!

 *****
இறைதூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்-

"நீங்கள் பிறை கண்டதும் நோன்பு வையுங்கள். (மறு) பிறை கண்டதும் நோன்பை விடுங்கள். உங்களுக்கு (வானில்) மேகம் தென்பட்டால் நாள்களை எண்ணிக்கொள்ளுங்கள் "

அறிவிப்பவர் - இப்னு உமர் (ரலி) அவர்கள்                                          (2:30)

*****
இறைதூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள் :

"ரமழான் வந்துவிட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றார்கள்"

அறிவிப்பவர் - அபு ஹூரைரா (ரலி) அவர்கள்                                      (2:30)

*****
ரமழான் மாதத்தைப் பற்றி அல்லாஹ் த ஆலா திருமறையாம் அல் குர்ஆனில் கூறுவதாவது-

"ஈமான் கொண்டவர்களே! உங்கள் முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டது போல உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது. (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்"

ஆதாரம் - அல் குர்-ஆன்  2:183

*****
இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள்-

"சொர்க்கத்தில் 'ரய்யான்' என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கின்றது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். " நோன்பாளிகள் எங்கே" என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ் வாசல் அடைக்கப்பட்டு விடும். அதன் வழியாக வேறு எவரும்  நுழைய மாட்டார்கள்"

அறிவிப்பவர் ஸஹீல் (ரலி ) அவர்கள்                                              (2:30)

*****
 இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் -

நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும். எனவே நோன்பாளி கெட்ட பேச்சுக்களை பேச வேண்டாம். முட்டாள்தனமான செயல்களில் ஈடுபட  வேண்டாம். யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் "நான் நோன்பாளி" என்று இருமுறை கூறட்டும். என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும். (மேலும்) எனக்காக நோன்பாளி தம் உணவையும் , பானத்தையும், இச்சையையும் விட்டு விடுகிறார்.நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது.அதற்கு நானே கூலி கொடுப்பேன்.! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்!" (என்று அல்லாஹ் கூறினான்) "

அறிவிப்பவர் -   அபூ ஹூரைரா (ரலி)                                                   (2:30)

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!