About Me

2012/07/29

அழகான பெண்டாட்டியே


என் அழகான பெண்டாட்டியே
என் ஆத்துக்கும் நீதான் குளிரூட்டியே

நீ நாலு வார்த்தை பேசவில்லை
எந் நாளும் நீ அருகிலில்லை
உன் ஊடலின்னும் குறையவில்லை
என் காதல் மோகம் கலையவில்லை
என் செல்லப் பெண்டாட்டியே

ஊருப் பொண்ணுக பார்வை கண்டு
பாவை நீயும் என்னைக் கொல்ல
ஊருப்பயல்கள் சீண்டிச் சீண்டி
என்னைத்தான்டி ஏத்தி விட
நீ ஒதுங்கிப் போற
என்ன உசுப்பிப் போறே
என் செல்லப் பொண்டாட்டியே

சாதி மறந்து  காதலிச்சேன்
என் மூச்சுக் காத்தில உன்ன தைச்சேன்
என் உசுருக்குள்ள உன்னை வைச்சன்
என் கண்ணுக்குள்ள காத்துநின்றேன்
என் செல்லப் பொண்டாட்டியே

காலை எழுந்ததும் உன் முகம்தான்
கண்ணுக்குள்ள தெரியுது நிசம்தான்
காபி தண்ணி குடிக்கலியே
என் களத்துக்குள்ள எறங்கி உரசும்
என செல்லப் பொண்டாட்டியே

காரெடுத்து போகையிலே
ரோட்டெங்கும் உன் நினைவு மறைக்கும்
சிறுக்கி மக உன்ன என்ன செய்ய
இறுக்கி நசுக்கிறீயே என் உசுரை நித்தம்
என் செல்லப் பொண்டாட்டியே

பொய்தான்டீ  பேசிபுட்டேன்
என் பொண்டாட்டி நீதான் மன்னிக்கணும்
என் மெய்யே நீதான்டீ
என் நெஞ்சுக்குள்ள நீ மட்டும் தான்டீ
என் செல்லப் பொண்டாட்டியே

சத்தியமா நம்பு புள்ள
என் சாதி தாண்டி வந்தேன் மெல்ல
உன் முத்தச் சூடு ஆற முன்னர்- நீ
என் மொத்தத் தேகம் எரிக்கும் எண்ணெய்
என் செல்லப் பொண்டாட்டியே

கண்ணச் சுற்றி விண்ணப் பார்த்தால்
கண்ணகியாய் என்னை எரிக்கிறாய்
என்னடி ஆச்சு என் பொண்டாட்டியுனக்கு
என்னய கவனிக்கலயே நேத்தில இருந்து
என் செல்லப் பொண்டாட்டியே

ஆத்தோரம் போய் நின்றால்
ஆத்தாடி யுன் ஞாபகம் புள்ள
ஆருமில்ல எனக்குள்ள
ஆணையிட்டுச் சொல்வேனில்ல
என் செல்லப் பொண்டாட்டியே

மருதாணிச் சாறெடுத்து
ஆசையில உன் னகம் பூசவா
நிலாவைக் காட்டிக் காட்டி
நிசமாவே தோசையூட்டவா
என்னைக்கும் நீதான்டீ
என் செல்லப் பொண்டாட்டியே

ஆசையாய் அருகில் வந்தால்
அக்கினியாய் முறைப்புக் காட்டி
ரோசா நீ முள்ளெடுத்து
ராசா என் கண்ணில் நோண்டுறெ நோண்டுறே
என் செல்லப் பொண்டாட்டியே

வாடி என் பொண்டாட்டி பக்கத்தில
வாடித்தான் போனேனடி மொத்தத்திலே
ஜோடி நாம சொர்க்கம் போகத்தான்டி
ஓடித்தான்  போகலாம் மெல்ல மெல்ல
செல்லப் பொண்டாட்டியே

(ஹா.ஹா........இதை வாசித்து சிரிப்பு வந்தால் சிரியுங்கோ, கோபம் வந்தால் .மொறைக்காதீங்க.....................நான் பாவங்க )





ஜன்ஸி கபூர் 


சர்வதேச மலேரியா ஒழிப்புத் தினம்


ஏப்ரல் 25
--------------
ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தின்படி ஏப்ரல் 25 சர்வதேச மலேரியா தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

மலேரியா நோயினால் பீடிக்கப்பட்டு உயிரிழக்கும் 10 லட்சம் பேரில் அதிகமானோர் 5 வயதிற்குட்பட்டவராவார். இலங்கையில் வருடாந்தம் 450 மலேரியா நோயால் ஏற்படும் மரணங்கள் சம்பவிப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மலேரியா, சிக்கன்குன்யா,டெங்கு,ஜப்பானிய மூளைக்காய்ச்சல், மஞ்சள் காமாலை, யானைக்கால நோய் போன்ற நுளம்புகளால் பரப்பப்படும் நோய்களால் வருடாந்தம் 21 கோடி மக்கள் பாதிக்கப்படுவதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

பூமத்திய ரேகையைச்சுற்றியுள்ள மித வெப்பமுள்ள நாடுகளிலேயே நுளம்புகள் அதிகம் பரவுகின்றன. ஓர் நுளம்பின் சராசரி ஆயுட்காலம் 12 நாட்களாகும். அதிக பட்சம் 34 நாட்கள் உயிர் வாழும். பெண் நுளம்புகளை விட ஆண் நுளம்புகள் உயிர் வாழும் நாட்களினளவு குறைவாகும். சுமார் 11 கிலோ மீற்றர் சுற்றளவுக்கு நுளம்புகளால் பறக்க முடியும்.

பெண் நுளம்பு முட்டையிடும் நேரத்தில்தான் உயிரினங்களில் இரத்தம் குடிக்கும். 0.025 மில்லிகிராம் எடையுள்ள நுளம்பு தனது வாழ்நாளில் 3,000 முட்டைகளை இடும்..ஆண் நுளம்பு தாவரச்சாற்றைப் பருகும்.

பொதுவாக எல்லா வகை நுளம்புகளும் மாலை, இரவு நேரத்தில் தான் கடிக்கின்றன. டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் "ஏடிஸ்" மற்றும் சிக்கன் குன்யா நுளம்புகள் மட்டும் பகலில் கடிக்கும்.

அனோபிலிஸ் நுளம்புகள் சுத்தமான நீரிலும்
க்யூலக்ஸ் நுளம்புகள் அசுத்தமான நீரிலும் முட்டையிடும்
ஏடிஸ் நுளம்புகள் தாவர இலை , தழைகளிலும் முட்டையிடும்..

மலேரியா நோய்க்குரிய "பிளாஸ்மோடியம்" எனும் ஒட்டுண்ணியை மனிதரிடத்தில் பரப்பும் காவியே மலேரியா நுளம்பு ஆகும். இது பகலில் மறைந்து வாழ்ந்து இரவில் உலா வருகின்றது. ..நோய் ஒட்டுண்ணியைக் கொண்டுள்ள நுளம்பு மனிதர்களைக் கடிக்கும் போது அவை நுளம்பின் உமிழ்நீர் வழியாக மனித உடலையடைந்து அங்கிருந்து குருதியினூடாக கல்லீரலை அடைகின்றது..3 நாட்கள் முதல் 1 வாரம் வரை கல்லீரலில் பல்கிப் பெருகும்.. பின்னர் "முத்திரை மோதிர நிலையினாலான வித்திச்சிற்றுயிராக மாறி" குருதியை அடைந்து அதிலுள்ள செங்குருதிச்சிறுதுணிக்கைகளை அழிக்கத் தொடங்கும். அப்போதுதான் காய்ச்சல் ஏற்படும்.

மலேரியா காய்ச்சலின் 3 கட்டங்களாவன -
-----------------------------------------------------------
1, நோயாளிக்கு லேசான காய்ச்சல், தலைவலி, உடல்வலி, வாந்தி, சோர்வு இருக்கும். இதனைத் தொடர்ந்து குளிர் காய்ச்சலும் உடல் நடுக்கமும் ஏற்படும். இந்நிலை அரை மணித்தியாலயம் நீடிக்கும்.

2, இரண்டாவது கட்டத்தில் காய்ச்சல் கடுமையாகும். உடல் அனலாகக் கொதிக்கும். இது சுமார் 6 மணி நேரம் நீடிக்கும்

3.இப்போது நோயாளி சாதாரணமாகக் காணப்படுவார்.

இதே காய்ச்சல் மறுநாளோ,  2 அல்லது  3,4 நாட்களுக்கு ஒரு தடவையோ ஏற்படும்.

இப்பொதுவான அறிகுறிகள் தென்பட்டவுடன் இரத்தப்பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்

கடும் காய்ச்சல், கண்சிவத்தல், உடல் வலி என்பன கடுமையான நோய்த்தாக்கத்தின் விளைவாகும். உடனே சிகிச்சை பெறவேண்டும். இல்லாவிடில் மரணமும் ஏற்படலாம்.

எனவே பின்வரும் வழிகளில் நுளம்புகள்  பெருகாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு நமக்குண்டு
----------------------------------------------------------------------------------------------

1.வீட்டைச் சுற்றியும், சுற்றுப்புறச்சூழலைச்சுற்றியும் "டி.டி.டி" "டெல்டாமெத்திரின்" போன்ற மருந்துகளைத் தெளிக்கலாம்.
2.நுளம்புப் பெருக்கமுள்ள 1000 கன அடி இடத்துக்கு 4 அவுன்ஸ் "கிரிசாலை" ப் புகைய விட்டால் நுளம்புகள் இறக்கும்.
3. சுத்தமான நீர் நிலைகளை (தண்ணீர்த்தொட்டிகள்) மூடி விட வேண்டும். வாரம் ஒருமுறை தண்ணீர்த் தொட்டிகளை கழுவிச் சுத்தம் செய்து, 2 மணித்தியாலம் வரை காய வைக்க  வேண்டும். இவ்வாறே வீடுகளிலுள்ள வாளி நீரையும் பராமரித்தல் வேண்டும்.
4. நீர் தேங்கக்கூடிய பகுதிகளை மூடி விடல் வேண்டும் (சிரட்டை, டயர், குரும்பை, யோகட் கோப்பை ,டப்பாக்கள் போனறவை)
5. மீன்தொட்டிகளில் "கப்பிஸ்" போன்ற மீன்களை வளர்த்தல்..
6. சூழலை அசுத்தப்படுத்துவோர்க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல்.
7. பாடசாலைகளில் இது தொடர்பான செயற்றிட்டங்கள், சிரமதானம், போட்டிகள், கண்காட்சி நடத்தல்

மலேரியா நோய் எற்படுவதன் மூலமாக ஏற்படக்கூடிய மனப்பாதிப்புக்களை இழிவாக்கி, மக்கள் மனதில் விழிப்புணர்வை ஏற்படுத்த இத் தினம் பயன்படுகிறது.

"சுத்தம் பேணி மலேரியாத் தாக்கத்திலிருந்து எம்மைப் பாதுகாப்போமாக!"

அன்னையர் தினம்


மே 13
----------

தாயே ......

இவ்வுலக சகல ஜீவராசிகளின் உயிர்நாடிகளாகும். கருவறைச் சிறைப்படுத்தலில் குருதிப்பிண்டமாய் திரண்டிருக்கும் எம் உயிர்ப்படுத்தலைப் பேணி, உருவம் எமக்குள் நிலையூன்றும் வரை பேணி பாதுகாக்கும் ஒப்பற்ற உறவே தாய் !

அலையடித்து கடல் விலகாது என்பது போல, தாயின் சின்னச் சின்னக் கண்டிப்புக்களும், தண்டனைகளும் கூட எம்மீதான வழிப்படுத்தலுக்கே!

எம்மின்பத்தை தன் மகிழ்வாய் தனக்குள் நிரப்பி ,நாம் சிந்தும் கண்ணீரைத் தன் விழிகளுள் ஏந்தி , நம் மனச்சோகங்களை உணர்ந்து துடைக்கும் ஒப்பற்ற கரங்கள் அன்னைக்குரியது. 

எத்தனை நாட்கள்......
எத்தனை நொடிகள்........

தன் விழித்தூக்கத்தைக் கழற்றியெறிந்து விட்டு எம்மசைவுகளைக் காத்திடும் உன்னத உறவே அன்னை !

இத்தகைய உயரிய பண்புகளைக் கொண்ட அன்னைக்கு சர்வதேச ரீதியில் வைரக்கிரீடம் சூட்டும் நாளின்றாகும்..

"அன்னா ஜார்விஸ்" .........

அவர்தான் அன்னையர் தின உயிர்ப்புக்காகப் போராடிய கன்னித் தாய். .திருமணமாகாத அன்னையாய் சேவை செய்தவர். அன்னையரின் நலமேம்பாட்டுக்காய் தன்னையே வார்த்த அன்பு நெஞ்சமவர். அவரை மையப்படுத்தியே இவ் அன்னையர் தினம் கொண்டாடப்படுகின்றது.

"அன்னா ஜார்விஸ்" தாயின் ஒப்பற்ற பணியை, பாசத்தை, தியாகத்தை ஓர் நாளாவது கண்ணியப்படுத்த வெண்டுமென விரும்பி, அதனைச் செயற்படுத்த முனையும் போது  பல போராட்டங்களைச் சந்தித்தார்.  அந்தச் சவால்களை முறியடிக்க அன்னாவுக்கு ஆதரவாளர்கள் உறுதுணையாகவிருந்தனர். தமது எண்ணங்களை சமூகத்தினரிடையே உட்புகுத்தி அவர்களுக்கிடையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி அதனூடாக அன்னையர் தொடர்பான ஆதரவினைத்திரட்டி 1911 ஆம் ஆண்டு அமெரிக்காவின் பல மாகாணங்களிலும்  குறித்த நாளில் அன்னையர் தினம் கொண்டாடப்படக் காரணமாகவிருந்தார்.

1912 ஆம் ஆண்டில் "அன்னா ஜர்விஸ்" "மே மாதத்தில் 2 வது ஞாயிற்றுக்கிழமை", மற்றும் "அன்னையர் தினம்"  ஆகிய வாக்கியங்களைப்பதிவு செய்து அன்னையர் தின சர்வதேச அமைப்பை உருவாக்கினார். அதுமாத்திரமின்றி தன் தாயைப் பெருமைப்படுத்தி அன்னையர் தினம் கொண்டாடிய முதல் பெண்மணியாகவும் இவர் திகழ்கின்றார்.

அதனைத் தொடர்ந்து 1914 அம் ஆண்டு மே 8 ஆம் திகதி அமெரிக்க அதிபர் "உட்ரோவ் வில்சன்"  கூட்டறிக்கையொன்றில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை அன்னையர் தினமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

இன்றைய அன்னையர் தினத்தில் வெறும் வாழ்த்துக்களும், அன்பளிப்புக்களும் குவிக்கப்படுவதை விட பாசத்துடன் தாயவளின் அன்புப்பிள்ளையாக வாழ்வதை உறுதிப்படுத்துங்கள். இதுவே அன்னைக்கு நாம் வழங்கும் அற்புதப் பரிசாகும். தாயின் காலடியில் கிடக்கும் அந்த சொர்க்கம் எமக்கும் உறுதிப்படுத்தப்படும்.

உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்



ஏப்ரல் 23
-------------
புத்தக வாசிப்பினை ஊக்குவித்தல், புதிய புத்தகங்கள் வெளியிடுதல், புத்தக பதிப்புரிமையை அதிகரித்தல் போன்ற கருப்பொருட்களுடன் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 23ந் திகதி இத் தினம் கொண்டாடப்படுகின்றது. ஐரோப்பியாவில் வாழ்ந்த சிறந்த இலக்கியவாதியும், நாடக மேதையுமான வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்ததும், இறந்ததும் இந்த நாளிலேயே என்பதால் இத் தெரிவு இடம்பெற்றது . 1995 ம் ஆண்டு முதல் யுனெஸ்கோ அறிவித்தலின் பிரகாரம்  இத்தினம் அனுஷ்டிக்கப்பட்டு இத்தினத்தில் இலக்கியவாதிகள் கௌரவிக்கப்படுகின்றனர். இத்தினத்தில் பரவலகாக புத்தகக் கண்காட்சி, புதிய நூல்வெளியீடு, இவை தொடர்பான கூட்டங்கள் நடத்தப்படல், நூலாசிரியர் கௌரவிப்பு போன்ற பலவும் நடைபெறுவது சிறப்பம்சமாகும்.

அனைவருக்கும் வாசிக்கும் உரிமை, மக்கள் வாழ்விடங்களில் நூலக உரிமை, உலகில் நாம் பெறக்கூடிய அனைத்து அறிவுச்செல்வங்களையும் தத்தம் தாய்மொழியில் பெறுதல், தத்தமது தாய்மொழியில் இலக்கியச் செல்வங்களைப் பாதுகாப்பதன் பொருட்டு ஆவணப்படுத்தல், புத்தகம்,வாசகர்,எழுத்தாளர்களுக்கிடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தல் உள்ளிட்ட 10 கட்டளைகளை நிறைவேற்றுவதன் மூலம் உலகளாவிய ரீதியில் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை விரிவுபடுத்தும் நோக்கில் இத்தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

"வாசிப்பானது மனிதனைப் பூரணப்படுத்துகின்றது" என்பதை நாமறிந்தும் கூட, இந்த இயந்திரமயமான வாழ்க்கைமுறையில் அந்த எண்ணம் நம்மிலிருந்து காணாமல் போய்விடுகின்றது. இளைய தலைமுறையினர் இ-புக், இ-ரீடர் தொலைக்காட்சி போன்ற நவீனத்தின்பால் தமது கவனத்தைச் செலுத்தி வருவதால் புத்தகங்களின் வாசிப்புப்பழக்கமும் அருகி வருகின்றது.

தேடலானது புதிய கருத்துக்களை நமக்குள் உட்செலுத்தும் மார்க்கமாகும். தேடலுக்கான பயிற்சி வாசிப்பு மூலம் கிடைக்கின்றது. மனிதர்களின் விழுமியம், பண்பாடு, கலாசாரம், வாழ்க்கைநெறிமுறைகள், பழக்கவழக்கங்கள் என்பவற்றை புத்தகங்கள் வாயிலாக  நாமறிந்து கொள்ளலாம்.

வாசிப்பின் முக்கியத்துவத்தை பாடசாலை மாணவர்களுக்குணர்த்தும் வகையில் பாடசாலைக் கலைத்திட்டத்திலும் ,நூலகப் பாடவேளைக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாடசாலை நூலகங்களும் அபிவிருத்தி செய்யப்படுகின்றன.

தற்போது எமக்குக் கிடைக்கும் ஒய்வுநேரம் குறைவாகவே உள்ளது. இந்நேரத்தை நாம் பயன்படுத்த வேண்டும். நம் சிந்தனையை ஆரோக்கியப்படுத்தும் நல்ல நூல்களைத் தேடி வாசிக்க வேண்டும். நிறைய வாசிக்கும் போது சொற்பிழைகள் ஏற்படாது, அத்துடன் மொழிவளம் ,ஆளுமை, சிறந்த தொடர்பாடலும் நமக்குள் ஏற்படும்.

இலங்கையில் எழுத்தறிவு வீதம் 95% ஆக இருப்பதனால் இங்கு வாசிக்கும் திறனும் அதிகமாகவே காணப்படுகின்றது. புத்தகங்களை வாசிக்கும் போது பிறர் வாழ்வில் நுழையும் வீண் நுழைச்சலுக்கும் நேரம் கிடைப்பதில்லை. அதுமாத்திரமின்றி நம் மன அழுத்தமும் குறைக்கப்படுகின்றது. வாழ்க்கையிலெழும் சவால்களை தைரியமாக எதிர்கொள்ளும் மனப்பக்குவமும் ஏற்படுகின்றது.

நாம் தினமும் வீணாக்கும் பணத்தின் சிறுபகுதியிலாவது புத்தகங்களை வாங்குவதன் மூலம் நாமும் வாசித்து, பிறரையும் வாசிக்கத்தூண்டலாம். பாடசாலைகளிலும் வாசிப்புத் தொடர்பான பல்வேறு போட்டிகளை நடத்தி மாணவர்களை ஊக்கப்படுத்தலாம்.

தாய்மொழியிலான தரமான பதிப்புக்களும், அவற்றை உடனடியாக சந்தைப்படுத்தலும் இன்றைய காலத்தின் கட்டாயத் தேவையாகும். எமது அறிவை வளர்த்தும், பிறருடன் பகிர்ந்தும் பூரணத்துவம் பெறுவோமாக!

"நிறைய வாசிப்போம்- நம்
வாழ்வின் குறை போக்குவோம்!