About Me

2012/07/29

சர்வதேச மலேரியா ஒழிப்புத் தினம்


ஏப்ரல் 25
--------------
ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தின்படி ஏப்ரல் 25 சர்வதேச மலேரியா தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

மலேரியா நோயினால் பீடிக்கப்பட்டு உயிரிழக்கும் 10 லட்சம் பேரில் அதிகமானோர் 5 வயதிற்குட்பட்டவராவார். இலங்கையில் வருடாந்தம் 450 மலேரியா நோயால் ஏற்படும் மரணங்கள் சம்பவிப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மலேரியா, சிக்கன்குன்யா,டெங்கு,ஜப்பானிய மூளைக்காய்ச்சல், மஞ்சள் காமாலை, யானைக்கால நோய் போன்ற நுளம்புகளால் பரப்பப்படும் நோய்களால் வருடாந்தம் 21 கோடி மக்கள் பாதிக்கப்படுவதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

பூமத்திய ரேகையைச்சுற்றியுள்ள மித வெப்பமுள்ள நாடுகளிலேயே நுளம்புகள் அதிகம் பரவுகின்றன. ஓர் நுளம்பின் சராசரி ஆயுட்காலம் 12 நாட்களாகும். அதிக பட்சம் 34 நாட்கள் உயிர் வாழும். பெண் நுளம்புகளை விட ஆண் நுளம்புகள் உயிர் வாழும் நாட்களினளவு குறைவாகும். சுமார் 11 கிலோ மீற்றர் சுற்றளவுக்கு நுளம்புகளால் பறக்க முடியும்.

பெண் நுளம்பு முட்டையிடும் நேரத்தில்தான் உயிரினங்களில் இரத்தம் குடிக்கும். 0.025 மில்லிகிராம் எடையுள்ள நுளம்பு தனது வாழ்நாளில் 3,000 முட்டைகளை இடும்..ஆண் நுளம்பு தாவரச்சாற்றைப் பருகும்.

பொதுவாக எல்லா வகை நுளம்புகளும் மாலை, இரவு நேரத்தில் தான் கடிக்கின்றன. டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் "ஏடிஸ்" மற்றும் சிக்கன் குன்யா நுளம்புகள் மட்டும் பகலில் கடிக்கும்.

அனோபிலிஸ் நுளம்புகள் சுத்தமான நீரிலும்
க்யூலக்ஸ் நுளம்புகள் அசுத்தமான நீரிலும் முட்டையிடும்
ஏடிஸ் நுளம்புகள் தாவர இலை , தழைகளிலும் முட்டையிடும்..

மலேரியா நோய்க்குரிய "பிளாஸ்மோடியம்" எனும் ஒட்டுண்ணியை மனிதரிடத்தில் பரப்பும் காவியே மலேரியா நுளம்பு ஆகும். இது பகலில் மறைந்து வாழ்ந்து இரவில் உலா வருகின்றது. ..நோய் ஒட்டுண்ணியைக் கொண்டுள்ள நுளம்பு மனிதர்களைக் கடிக்கும் போது அவை நுளம்பின் உமிழ்நீர் வழியாக மனித உடலையடைந்து அங்கிருந்து குருதியினூடாக கல்லீரலை அடைகின்றது..3 நாட்கள் முதல் 1 வாரம் வரை கல்லீரலில் பல்கிப் பெருகும்.. பின்னர் "முத்திரை மோதிர நிலையினாலான வித்திச்சிற்றுயிராக மாறி" குருதியை அடைந்து அதிலுள்ள செங்குருதிச்சிறுதுணிக்கைகளை அழிக்கத் தொடங்கும். அப்போதுதான் காய்ச்சல் ஏற்படும்.

மலேரியா காய்ச்சலின் 3 கட்டங்களாவன -
-----------------------------------------------------------
1, நோயாளிக்கு லேசான காய்ச்சல், தலைவலி, உடல்வலி, வாந்தி, சோர்வு இருக்கும். இதனைத் தொடர்ந்து குளிர் காய்ச்சலும் உடல் நடுக்கமும் ஏற்படும். இந்நிலை அரை மணித்தியாலயம் நீடிக்கும்.

2, இரண்டாவது கட்டத்தில் காய்ச்சல் கடுமையாகும். உடல் அனலாகக் கொதிக்கும். இது சுமார் 6 மணி நேரம் நீடிக்கும்

3.இப்போது நோயாளி சாதாரணமாகக் காணப்படுவார்.

இதே காய்ச்சல் மறுநாளோ,  2 அல்லது  3,4 நாட்களுக்கு ஒரு தடவையோ ஏற்படும்.

இப்பொதுவான அறிகுறிகள் தென்பட்டவுடன் இரத்தப்பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்

கடும் காய்ச்சல், கண்சிவத்தல், உடல் வலி என்பன கடுமையான நோய்த்தாக்கத்தின் விளைவாகும். உடனே சிகிச்சை பெறவேண்டும். இல்லாவிடில் மரணமும் ஏற்படலாம்.

எனவே பின்வரும் வழிகளில் நுளம்புகள்  பெருகாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு நமக்குண்டு
----------------------------------------------------------------------------------------------

1.வீட்டைச் சுற்றியும், சுற்றுப்புறச்சூழலைச்சுற்றியும் "டி.டி.டி" "டெல்டாமெத்திரின்" போன்ற மருந்துகளைத் தெளிக்கலாம்.
2.நுளம்புப் பெருக்கமுள்ள 1000 கன அடி இடத்துக்கு 4 அவுன்ஸ் "கிரிசாலை" ப் புகைய விட்டால் நுளம்புகள் இறக்கும்.
3. சுத்தமான நீர் நிலைகளை (தண்ணீர்த்தொட்டிகள்) மூடி விட வேண்டும். வாரம் ஒருமுறை தண்ணீர்த் தொட்டிகளை கழுவிச் சுத்தம் செய்து, 2 மணித்தியாலம் வரை காய வைக்க  வேண்டும். இவ்வாறே வீடுகளிலுள்ள வாளி நீரையும் பராமரித்தல் வேண்டும்.
4. நீர் தேங்கக்கூடிய பகுதிகளை மூடி விடல் வேண்டும் (சிரட்டை, டயர், குரும்பை, யோகட் கோப்பை ,டப்பாக்கள் போனறவை)
5. மீன்தொட்டிகளில் "கப்பிஸ்" போன்ற மீன்களை வளர்த்தல்..
6. சூழலை அசுத்தப்படுத்துவோர்க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல்.
7. பாடசாலைகளில் இது தொடர்பான செயற்றிட்டங்கள், சிரமதானம், போட்டிகள், கண்காட்சி நடத்தல்

மலேரியா நோய் எற்படுவதன் மூலமாக ஏற்படக்கூடிய மனப்பாதிப்புக்களை இழிவாக்கி, மக்கள் மனதில் விழிப்புணர்வை ஏற்படுத்த இத் தினம் பயன்படுகிறது.

"சுத்தம் பேணி மலேரியாத் தாக்கத்திலிருந்து எம்மைப் பாதுகாப்போமாக!"

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!