About Me

2012/08/04

மயக்கம்


தொலைவின்................
நிசப்த நெருடலில் - தன்
ஒளி விரல்களால் எனை வருடும்
நிலாக்கசிவில்.........
அலைந்து கொண்டிருக்கின்றது
மங்கலாய் உன் முகம்!

அன்றுன்னால்............
அழுகிப் போன - என்
கருவளையங்களின் மூச்சிரைப்பில்
மீண்டுமுன்............
ஆத்மாவின் முனகல்
ரகஸியம் பேசுகின்றது!

எல்லாமே நேற்றுப் போலிருக்கின்றது
உன்னிடம் தோற்றுப் போன
என் அன்பும்...........
கரைந்து போன கன்னமும்.........
கனவாகிப் போன நிஜங்களும்.........
எல்லாமே தோற்றுப் போய் !

எதுவுமேயில்லை என்னிடம்
இப்போது............!
நீ தந்த சோகங்களும்
காயங்களும்
அவமானங்களும் தவிர!

என் உயிரணுக்களைப் பிழிந்து
நீயிட்ட தீ..........
இன்னும் வெம்மைக் கசிவோடு
நசிந்து கொண்டுதானிருக்கின்றது
இன்னொரு ஆதவனாய்!

உன் மனதோரத்தில்
மரித்துக்கிடந்த என் ஞாபகங்கள்
மீண்டும் உயிர்த்தனவோ
உன்னுள்!
மெல்லக் கதவைத் தட்டுகின்றாய்
என்னுள் - ஆனால்
நான் மரணித்ததையறியாமலே!

அன்றுன் சுயத்திற்காய்- என்
சுயவரக் கனவுகளில்
முட்கீரீடம் வார்த்தவுன்
கரங்கள்...........
மீண்டுமென் திசைநோக்கி
அணைக்கத் துடிக்கின்றன
அப்பாவித்தனமாய்!

உன்னால்
எனக்குச் சொந்தமாகிப் போன
சமுத்திரமும்...........
பாலை நிலங்களும்
எனைப் பரிதாபமாய் பார்க்க
நீயோ
புறப்பட்டுவிட்டாய்- என்
சாலைகளில் உலா வர!

ஜன்ஸி கபூர் 










2012/08/03

என்றும் நேசத்துடன்


முகநூலில் நான் கலைப் பயணம் மேற் கொள்ள, நீங்களும் தடமாகியுள்ளீர்கள் என்பதை நன்றியுடன் நினைவுகூறுகின்றேன். என் பதிவுகளுக்கு விருப்புக்களும், பின்னூட்டங்களும் தந்துள்ள உங்களுக்கு என் நன்றி.......என்றும்


முத்து சதீஷ் குமார்


மலீக்  Sfn ***



சீனா ஷரீப் ***



உதயதர்சினி குமார் ***




பிரதீபன் ஸ்ரீனிவாசன் ***



செல்வ குமாரன் ***




Rasna Sajith



Selvi Maran



MJ Rita Raj ***





Fazaan Abdul ***



Siman  Tg




Jaffna Menan ***


Shiyam Sahana ***
Sree Dhandapani
 Mohamed Gani






இறைவனிடம் கையேந்துவோம்


புகழ் அனைத்தும் அவன் ஒருவனுக்கே!

மனித இனத்தை அற்புதமாகப் படைத்து அருள் பரிபாலிப்பவன் இறைவன் ஒருவனே. எமக்குரிய அழகிய வாழ்க்கையை , வாழ்வின் ஒழுக்க நெறிகளை அழகாக கற்றுத் தந்தவனும், கற்றுத் தருபவனும் அவனே!

நம்மைப் படைத்து நமது செயல்களை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கும் அவனே, நம் எண்ணங்களை அளந்தும், அடையாளமிட்டும் அதற்கேற்ற கூலியைத் தருபவனாக இருக்கின்றான்.

இம்மை, மறுமையின் விளைநிலம். எனவே நாம் செய்கின்ற செயல்கள் இவ்வுலகத்துடன் முற்றுப் பெறாமல், மறுமைக்கான நிகழ்வுகளின் அடித்தளமாகவும் இருக்கின்றது. மறுமை நமது நிம்மதி கூடமாக இருக்க வேண்டுமானால் இம்மையில் நாம் செய்யும் நமது செயல்கள் யாவும் இறைவனின் அருளைப் பெற்றுத் தருபவையாக இருக்க வேண்டும். அந்த வகையில் இறைவனுடன் நாம் நேரடியாகப் பேசவும், அருளையும், இறை மன்னிப்பையும் பெற்றுத் தரக்கூடியதுமான  மாதமாக ரமழான் மாதமிருக்கின்றது.

இம் மாதத்தில் ஒருவர் நோன்பிருப்பது இறைவனுக்காகவே. அந்த நோன்பினூடாகவே இறைவன் தன் அடியார்களுடன் நெருக்கமாகின்றான் .நமது தேவைகளை நிறைவேற்றுவதற்காக இறைவன் நோன்பை மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளான்.

அல்லாஹ் முக்கிய அம்சங்களைக் கொண்ட பத்து நாட்கள் எனும் விதத்தில் வைத்திருப்பதாக நபி (ஸல்) அவர்கள் அடையாளம் காட்டியுள்ளார்கள்.

"ரமளானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் ரஹ்மத் எனும் அருட்கொடையாகவும், நடுப்பத்து நாட்கள்  மக்ஃ  பிரத் எனும் பாவ மன்னிப்புக்குரியதாகவும், கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து விடுதலை அளிக்கக்க;டியதாகவும் உள்ளது "

என நபி (ஸல்) அவர்கள் கூறுவதாக  நூல் இப்னு குஜைமா வை ஆதாரப்படுத்தி ஸஹ்ல் ரளியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

நாம் நமது வாழ்வில் பல நல்ல செயல்களைச் செய்யவே முயற்சிக்கின்றோம். ஊக்கப்படுத்தப்படுகின்றோம்.  எனினும் நமது தேவைகளை நிறைவேற்ற நாம் முற்படும் போது நம்மையுமறியாமல் பலஹீன நுழைவாயினுள் தள்ளப்படுகின்றோம். சுயநலம் என்பதும் ஓர் பலஹீனமான உணர்வே. ஏனெனில் சுயநலத்தின் பொருட்டு நமது உளம் உறுதியற்று தளம்பலடைந்து பிறருடன் முரண்படக்கூடிய, பாவம் தரக்கூடிய செயல்களிலும் ஈடுபட்டு விடுகின்றது. நாம் ஒருபுறம் இறையருளை நாடி நற்செயல்களிலீடுபட்டுக் கொண்டிருக்க மறுபுறம் நம்மையமறியாமல் சில பாவங்களையும் தொட்டு விடுகின்றோம். பொய் பேசுதல், புறங் கூறுதல், விரோதம் கொள்ளுதல், பொறாமைப்படல், களவெடுத்தல் போன்ற உணர்வுகள் கூட பாவத்திற்கான சமிக்ஞ ஆகும்.

எனவே எம்மை நாம் உணர்ந்து, எமது செயல்களை அடையாளப்படுத்தி அவற்றில் அதிகமதிகமான நன்மைகளைச் சேர்க்கவும்,  அறியாமற் செய்த தவறுகளை மானசீகமான உணர்ந்து, இறையோனிடத்தில் மன்றாடி பாவ மன்னிப்புக் கோரவும்  நமது சிந்தனையை வழிப்படுத்த வேண்டும். எனவே இந்த மாதம் அல்லாஹ்வுடன் நம்மை அதிகம் நெருங்க வைப்பதால் நமது சிந்தனையை அவன் பால் பொருத்தி அதிக சிரத்தையுடன் நம்மை வழிப்படுத்த முயலவேண்டும்.

றமழான் மாதத்தில் அதிகமாக "லாஇலாஹா இல்லல்லாஹ் "என்ற திருக்கலீமா ஓதுவதும், குர் ஆனுடன் அதிக தொடர்பு கொள்வதும், அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கேட்பதும், அல்லாஹ்விடம் சொர்க்கம் தரும்படி கேட்பதும், நரக நெருப்பிலிருந்து பாதுகாப்புப் பெறுவதும் நாம் இம் மாதத்தில் செய்ய வேண்டிய முக்கிய விடயங்களாக உள்ளது. இவை அல்லாஹ்வுடனான நெருக்கத்தை மேலும் பலப்படுத்தும். இந்த மாதத்தில் அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறுவதற்காக நாம் செய்கின்ற எந்த நன்மைகளும் பர்ளுக்கான அந்தஸ்தைப் பெற்று விடுகின்றது என்பது அண்ணல் நபிகளாரின் வாக்காகும்.

எனவே முதல் பத்து நோன்பிருந்து அல்லாஹ்வின் அருளையும், கருணையையும் பெற்றுக் கொண்ட நாம், தற்போது அடுத்த பத்திற்குள் உள்ளடங்கும் நோன்பிலிருக்கின்றோம். இரண்டாவது பத்து நோன்பு நமக்கு பாவமன்னிப்பு பெற்றுத் தருகின்ற நாட்களாகும். எனவே இந் நாட்களில் நாம் இறைஞ்சுகின்ற பாவமன்னிப்புக்கள் அங்கீகரிக்கப்படுகின்றன.

இது தொடர்பாக எம் பெருமானார் (ஸல் ) அவர்கள் கூறுகின்றார்கள்.

"நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ்வானத்திற்கு இறங்கி, இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கின்றேன். யாரேனும் பாவமன்னிப்பு கேட்டால் அவரை நான் மன்னிக்கின்றேன்"

எனக் கூறுகின்றார்கள். (ஆதாரம் - நூல் புகாரி )

இந்த மாதத்தில் அல்லாஹ்விடம் நாம் உதவிகோரி கையேந்தும் போது அவன் தன் அருளினாலும், நோன்பின் பரகத்தினாலும் நம் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கின்றான். ஷிர்க்கைத் தவிர நாம் செய்த தவறுகளையும் மன்னித்து தனது கருணையால் நமக்குள் ஈடேற்றம் தருகின்றான்.

இறைவன் கூறியதை நபிகள் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்:-

"ரமளானில் நம்பிக்கையுடன் நன்மையை எதிர்பார்த்து (தொழுது) வணங்குகிறவரின் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்"

(நூல் - புகாரி)

ஒரு நோன்பாளி, இறைவன் தன்னை எந்நேரமும் அவதானித்துக் கொண்டிருக்கின்றான் எனும் சிந்தனை மேலீட்டால் , கடந்த காலத்தில் தான் செய்த பாவங்களை நினைத்துப் பார்ப்பான். அப்பொழுது அப்பாவ நினைவுகள் அவன் மனதை வருத்தும். அப் பாவங்களை மீண்டும் செய்தால் இறைவனின் கோபத்திற்கு ஆளாக வேண்டுமன்ற எண்ண மேலீட்டால், மீண்டும் அப்பாவங்களின் பால் தான் செல்லக்கூடாதென உறுதியெடுத்தவனாக, மனமுறுகி முறையாக பாவ மன்னிப்புக் கேட்கும் போது, அவனது நோன்பின் பரகத்தால் அல்லாஹ்வும் பாவ மன்னிப்பைத் தருபவனாக இருக்கின்றான். ஒவ்வொரு தொழுகையின் பின்பும் , தஹஜ்ஜத் தொழுகையின் பின்னும் பாவ மன்னிப்பு நாம் கோர வேண்டும்.

நம்மை இறைவன் எந்நேரமும் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான். அதனால் நமது நல்ல செயல்களுக்கு நன்மையும், தீய செயலுக்கு தீமையும் நிச்சயம் வழங்குபவனாகவும் இருக்கின்றான் எனும் எண்ணத்தை உள் வாங்கி
நோன்பிருப்போமானால், அந் நோன்பு நிச்சயம் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, ரஹ்மத் எனும் கருணையை நமக்குப் பெற்றுத் தரும். அது மாத்திரமின்றி இறை மன்னிப்பால் நரக நெருப்பில் வீழாமல், ஈடேற்றம் பெற்று சுவர்க்கத்தில் நுழையும் பாக்கியவாதிகளாக மாறுவோம்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்-

"சொர்க்கத்தில் "ரய்யான்" என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள். (அவர்களைத் தவிர) வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும்
அவ்வாசல் அடைக்கப்பட்டு விடும்"

(அறிவிப்பவர் :- ஸஹ்ல் ரளியல்லாஹூ அன்ஹூ , நூல் - புஹாரி )

நமது குற்றங் குறைகளின் கறை போக்கிடவே, அல்லாஹ் த ஆலா விடம் பாவமன்னிப்பைப் பெற்று ஈடேற்றம் காண எமது நோன்பும், துஆ ப் பிரார்த்தனைகளும் வழி தரட்டும்........மனதில் ஈமானிய பசுமைகள் பூக்கட்டும்!

வஸ்ஸலாம்



2012/08/02

அனல் பூக்கள்



ஒவ்வொரு மனங்களும் அன்பு பற்றிய ஏக்கங்களுடனேயே தத்தமது வாழ்க்கையை நகர்த்துகின்றன. அழகான வாழ்க்கை.........எதிர்பார்ப்புக்களின் சேர்க்கைகளால் நெகிழும் வாழ்க்கை...ஆனால் சில , பல சமயங்களில் அவ் வாழ்க்கை ஏமாற்றங்களால் காவு கொள்ளப்பட்டு விதிக் காற்றில் சீரழிந்து விடுகின்றன.

என் மனதை அண்மையில் நெகிழ்ச்சியடையச் செய்த , நான் கேள்விப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பிண்ணப்பட்ட கதையை என் தமிழில் பகிர்கின்றேன் ......சம்பவம் உண்மை....பெயர்கள் மட்டும் கற்பனை.............

வடமத்திய மாகாணத்தின் சிற்றூர்தான் பதவியா. அங்கு வாழ்ந்த ஜெயசிங்க- ஹேமா காதல் மணம் புரிந்த ஜோடிகள்....ஜெயசிங்கவுக்கு தொழிலென்று ஒன்றும் பெரிதாக இருக்கவில்லை...எப்படியோ அன்றாடம் கூலித்தொழில் செய்து அவன் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தான்..அவன் போகும் திசையில் ஹேமாவும் இழுபட்டுச் சென்றாள்...

வாழ்க்கை வறுமைப்பட்டாலும் கூட, மனதின் பசுமையால்  இல்லறம் அவர்களுக்குள் இனித்தது. அவர்கள் காதல் நறுமணத்தில் நனைந்தவளாய் அழகான மகள் சிரோமியும் பிறந்தாள்...

வருடங்கள் வேகமாக நகர, வறுமையிலும் வாழ்வை செழிப்பாக்க போராடிக் கொண்டிருந்தனர் அவ் இளம் ஜோடிகள்........

மகள் சிரோமி ஐந்து வயதைத் தொட்டு நின்றாள். அருகிலிருந்த பாடசாலையில் மகள் சிரோமியின்  வாழ்க்கைக்கான கல்வி அத்திவாரமிடப்பட்ட போது , வாழ்க்கைப் போராட்டத்தை சமாளிக்க முடியாமல் ஜெயசிங்க தம்பதிகள் தடுமாறினர்....

" மகளும் வளர்ந்திட்டாள் இனி கஷ்டப்பட ஏலாது..பணம் சேர்க்கணும், நான் வெளி நாட்டுக்கு போறன், நீங்க மகள பார்த்துக்குங்க"

ஹேமா , தன் கணவனிடம் மகளை ஒப்படைத்து விட்டு அவசர அவசர மாக பலரிடம் கையேந்தி கடன்பட்டு அரபு நாடொன்றுக்குப் பயணமானாள்.......

பல இரவுகள் வியர்வையில் நனைந்து, தன் உணர்வுகளை மரக்கச் செய்து ஹேமா சிறுகச் சிறுக சேமித்த, உழைத்த பணத்தை தன் கணவன் பெயருக்கு தவறாமல் அனுப்பினாள்..அவள் ஒன்றரை வருடமாக அனுப்பிய சேமிப்பில், அவள் காதல் கணவன் லீலா எனும் பெண்ணை தன் வீட்டுக்கே அழைத்து வந்து குடும்பம் நடத்தத் தொடங்கினான்..லீலா தன் கணவனைப் பிரிந்து வாழ்ந்து கொண்டிருப்பவள்.ஜெயசிங்கவை வளைத்துப் பிடித்து, அவன் வீட்டுக்கே இராணியாய் முடிசூட்டிக் கொண்டாள்.

ஜெயசிங்கவின் கள்ளக் காதல் பற்றிய விடயம் அவன் மனைவி ஹேமா கேள்விப்பட முன்னரே, அவள் உழைப்பெல்லாம் அவன் காலடி சேர்ந்து லீலாவின் ஊதாரித்தனத்தில் வீணாகியது........புது மனைவியின் உல்லாச வாழ்வில் கணவன் ஜெயசிங்க மிதக்கத் தொடங்கினான்....

சிரோமி சிற்றன்னையிடம் ஒப்படைக்கப்பட்டாள். .லீலாவின் கொடுமையில் அந்த ஆறரை வயதுப் பிள்ளை  உருக்குலைந்தது, புது மனைவி மோகத்தில் ஜெயசிங்க எதனையும் கண்டு கொள்ளாதவனாய் ஊமையானான்...

சிரோமியின் உடலில் தினம் தினம் காயங்கள் தம் முகத்தைக் காட்டத் தொடங்கின...

அன்று...........

ஞாயிற்றுக்கிழமை....வீட்டில் கணவனுக்கான விசேட விருந்தோம்பலுக்காக விதம் விதமாய் சமையல் படைக்க முடிவு செய்தாள் புது மனைவி லீலா!
வேலையில் மும்முரமாய் ஈடுபட்டு அறுசுவையில் தன் கணவளைத் திணறடிக்க காத்திருந்தவளுக்கு சிரோமி இடையூறானாள்......

உரிய நேரம் தாண்டியும் அவள் அந்தச் சின்னப்பிள்ளைக்கு உணவு கொடுக்க வில்லை.பெற்றவனுக்கே இல்லாத அக்கறை புறத்தியாளுக்கு வருமா என்ன?

சிரோமி பசியால் அழுதாள்...ஆத்திரம் கொண்ட சிற்றன்னை எனும் அந்தப் பூதம் அந்தப் பிஞ்சுக் குழந்தையின் நாக்கை இழுத்து பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கோலால் சூடு போட்டாள்......

சிரோமி கதறிய கதறல் கேட்டும் கூட ஜயசிங்க ஊமையாய் இருந்தான். புதுப் மனைவி மயக்கத்தில் பிள்ளைப் பாசம் பூச்சியமானது...

நாக்கில் தீக்காயத்தால்  உணவு உண்ணவும் முடியாமல், யாருடனும் பேசவும் முடியாமல் சிரோமி எனும் அந்த 2ம் வகுப்புப் பிள்ளை தனிமைக்குள் சிறையிருந்தது..

ஒருவாரம் நெருப்புக்கணங்களாய் சிரோமி உணர்ந்தாள். உடல் மெலிந்து , அவள் அழகும் உருக்குலைந்தது. .ஒரு வாரம் பாடசாலைக்கு செல்லாததால் சிரோமியின் வகுப்பாசிரியை சிற்றன்னை லீலாவைக் காணும் போதெல்லாம் சிரோமியை விசாரிக்கத் தொடங்கினார்....

இனியும் அவளை சிறை வைக்கமுடியாத நிலையில் சிற்றன்னைப் பிசாசு அவளை பாடசாலைக்கு மீள அனுப்பினாள்..

ஆனால் பிள்ளையால் பாடசாலையில் பேச முடியவில்லை.கற்க இயலவில்லை..எந்த நேரமும் அழுது கொண்டே இருந்தாள். வகுப்பாசிரியை விடவில்லை..துருவித் துருவி சிரோமியை ஆராய்ந்ததில் தீப்பட்ட நாக்கின் புண்கள் பற்றிய கதையும் கண்ணீரும் அவலமும் வெளியே கசிந்தன..

சிற்றன்னையின் கொடுமையால் கொதித்தெழுந்த பாடசாலை நிர்வாகம் உடனடியாக பொலிஸூக்குத் தகவல் அனுப்ப, பொலீஸார் லீலாவை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தினர்..

இப்பொழுது அவள் சிறைக்கம்பிகளின் பின்னால் தனது மனிதாபிமானமற்ற இதயத்தை காட்சிப்படுத்திக் கொண்டிருக்க, கணவனோ தலைமறைவாகி விட்டான்..

சிரோமி எனும் அந்த ஆறரை வயதுப்பிள்ளை பூக்க முன்னரே கருகி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாள்..

பெற்றவளுக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டுள்ளதா.........தாய் மீள மகளைத் தேடி வருவாளா......தந்தை எங்கே இருக்கிறான்.......இனி அந்தப் பிள்ளையின் வாழ்க்கைக்கு யார் காவல்...இவை போன்ற பல வினாக்கள் எனக்குள் தொக்கிக் கிடக்கின்றன...!

வாழ்க்கையில் பிண்ணப்பட்ட வறுமையும், சபல புத்திக்காரக் கணவனின் புத்தியும் சேர்ந்து ஹேமாவின் வாழ்க்கையுடன் மட்டுமல்ல, அவள் வயிற்றில் கருவாகிய பாவத்திற்காய் அவள் மகளின் வாழ்வையும் விளையாடி விட்டன.  புழுதியில் வீணே வீசியெறியப்பட்டுள்ள அந்தக் கருகிய மலர்........இன்று அனாதையாய் விடியலின் முன் இருளாகி நிற்கின்றாள் தன் சந்தோஷங்களை யும் உதிர்த்தபடி !.....

லீலாவைப் போன்ற இரக்கமற்ற பிசாசுகளும் நாக்கறுபட்டு , தீக்குவியலுக்குள் தள்ளி விடப்பட்டு எரிக்கப்பட வேண்டும். இந்தக் கொடுமை இனி எந்த மலரையும் கசக்கி விடக்கூடாது என்பதே என் பிரார்த்தனையும் கூட !