About Me

2012/08/02

அனல் பூக்கள்



ஒவ்வொரு மனங்களும் அன்பு பற்றிய ஏக்கங்களுடனேயே தத்தமது வாழ்க்கையை நகர்த்துகின்றன. அழகான வாழ்க்கை.........எதிர்பார்ப்புக்களின் சேர்க்கைகளால் நெகிழும் வாழ்க்கை...ஆனால் சில , பல சமயங்களில் அவ் வாழ்க்கை ஏமாற்றங்களால் காவு கொள்ளப்பட்டு விதிக் காற்றில் சீரழிந்து விடுகின்றன.

என் மனதை அண்மையில் நெகிழ்ச்சியடையச் செய்த , நான் கேள்விப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பிண்ணப்பட்ட கதையை என் தமிழில் பகிர்கின்றேன் ......சம்பவம் உண்மை....பெயர்கள் மட்டும் கற்பனை.............

வடமத்திய மாகாணத்தின் சிற்றூர்தான் பதவியா. அங்கு வாழ்ந்த ஜெயசிங்க- ஹேமா காதல் மணம் புரிந்த ஜோடிகள்....ஜெயசிங்கவுக்கு தொழிலென்று ஒன்றும் பெரிதாக இருக்கவில்லை...எப்படியோ அன்றாடம் கூலித்தொழில் செய்து அவன் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தான்..அவன் போகும் திசையில் ஹேமாவும் இழுபட்டுச் சென்றாள்...

வாழ்க்கை வறுமைப்பட்டாலும் கூட, மனதின் பசுமையால்  இல்லறம் அவர்களுக்குள் இனித்தது. அவர்கள் காதல் நறுமணத்தில் நனைந்தவளாய் அழகான மகள் சிரோமியும் பிறந்தாள்...

வருடங்கள் வேகமாக நகர, வறுமையிலும் வாழ்வை செழிப்பாக்க போராடிக் கொண்டிருந்தனர் அவ் இளம் ஜோடிகள்........

மகள் சிரோமி ஐந்து வயதைத் தொட்டு நின்றாள். அருகிலிருந்த பாடசாலையில் மகள் சிரோமியின்  வாழ்க்கைக்கான கல்வி அத்திவாரமிடப்பட்ட போது , வாழ்க்கைப் போராட்டத்தை சமாளிக்க முடியாமல் ஜெயசிங்க தம்பதிகள் தடுமாறினர்....

" மகளும் வளர்ந்திட்டாள் இனி கஷ்டப்பட ஏலாது..பணம் சேர்க்கணும், நான் வெளி நாட்டுக்கு போறன், நீங்க மகள பார்த்துக்குங்க"

ஹேமா , தன் கணவனிடம் மகளை ஒப்படைத்து விட்டு அவசர அவசர மாக பலரிடம் கையேந்தி கடன்பட்டு அரபு நாடொன்றுக்குப் பயணமானாள்.......

பல இரவுகள் வியர்வையில் நனைந்து, தன் உணர்வுகளை மரக்கச் செய்து ஹேமா சிறுகச் சிறுக சேமித்த, உழைத்த பணத்தை தன் கணவன் பெயருக்கு தவறாமல் அனுப்பினாள்..அவள் ஒன்றரை வருடமாக அனுப்பிய சேமிப்பில், அவள் காதல் கணவன் லீலா எனும் பெண்ணை தன் வீட்டுக்கே அழைத்து வந்து குடும்பம் நடத்தத் தொடங்கினான்..லீலா தன் கணவனைப் பிரிந்து வாழ்ந்து கொண்டிருப்பவள்.ஜெயசிங்கவை வளைத்துப் பிடித்து, அவன் வீட்டுக்கே இராணியாய் முடிசூட்டிக் கொண்டாள்.

ஜெயசிங்கவின் கள்ளக் காதல் பற்றிய விடயம் அவன் மனைவி ஹேமா கேள்விப்பட முன்னரே, அவள் உழைப்பெல்லாம் அவன் காலடி சேர்ந்து லீலாவின் ஊதாரித்தனத்தில் வீணாகியது........புது மனைவியின் உல்லாச வாழ்வில் கணவன் ஜெயசிங்க மிதக்கத் தொடங்கினான்....

சிரோமி சிற்றன்னையிடம் ஒப்படைக்கப்பட்டாள். .லீலாவின் கொடுமையில் அந்த ஆறரை வயதுப் பிள்ளை  உருக்குலைந்தது, புது மனைவி மோகத்தில் ஜெயசிங்க எதனையும் கண்டு கொள்ளாதவனாய் ஊமையானான்...

சிரோமியின் உடலில் தினம் தினம் காயங்கள் தம் முகத்தைக் காட்டத் தொடங்கின...

அன்று...........

ஞாயிற்றுக்கிழமை....வீட்டில் கணவனுக்கான விசேட விருந்தோம்பலுக்காக விதம் விதமாய் சமையல் படைக்க முடிவு செய்தாள் புது மனைவி லீலா!
வேலையில் மும்முரமாய் ஈடுபட்டு அறுசுவையில் தன் கணவளைத் திணறடிக்க காத்திருந்தவளுக்கு சிரோமி இடையூறானாள்......

உரிய நேரம் தாண்டியும் அவள் அந்தச் சின்னப்பிள்ளைக்கு உணவு கொடுக்க வில்லை.பெற்றவனுக்கே இல்லாத அக்கறை புறத்தியாளுக்கு வருமா என்ன?

சிரோமி பசியால் அழுதாள்...ஆத்திரம் கொண்ட சிற்றன்னை எனும் அந்தப் பூதம் அந்தப் பிஞ்சுக் குழந்தையின் நாக்கை இழுத்து பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கோலால் சூடு போட்டாள்......

சிரோமி கதறிய கதறல் கேட்டும் கூட ஜயசிங்க ஊமையாய் இருந்தான். புதுப் மனைவி மயக்கத்தில் பிள்ளைப் பாசம் பூச்சியமானது...

நாக்கில் தீக்காயத்தால்  உணவு உண்ணவும் முடியாமல், யாருடனும் பேசவும் முடியாமல் சிரோமி எனும் அந்த 2ம் வகுப்புப் பிள்ளை தனிமைக்குள் சிறையிருந்தது..

ஒருவாரம் நெருப்புக்கணங்களாய் சிரோமி உணர்ந்தாள். உடல் மெலிந்து , அவள் அழகும் உருக்குலைந்தது. .ஒரு வாரம் பாடசாலைக்கு செல்லாததால் சிரோமியின் வகுப்பாசிரியை சிற்றன்னை லீலாவைக் காணும் போதெல்லாம் சிரோமியை விசாரிக்கத் தொடங்கினார்....

இனியும் அவளை சிறை வைக்கமுடியாத நிலையில் சிற்றன்னைப் பிசாசு அவளை பாடசாலைக்கு மீள அனுப்பினாள்..

ஆனால் பிள்ளையால் பாடசாலையில் பேச முடியவில்லை.கற்க இயலவில்லை..எந்த நேரமும் அழுது கொண்டே இருந்தாள். வகுப்பாசிரியை விடவில்லை..துருவித் துருவி சிரோமியை ஆராய்ந்ததில் தீப்பட்ட நாக்கின் புண்கள் பற்றிய கதையும் கண்ணீரும் அவலமும் வெளியே கசிந்தன..

சிற்றன்னையின் கொடுமையால் கொதித்தெழுந்த பாடசாலை நிர்வாகம் உடனடியாக பொலிஸூக்குத் தகவல் அனுப்ப, பொலீஸார் லீலாவை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தினர்..

இப்பொழுது அவள் சிறைக்கம்பிகளின் பின்னால் தனது மனிதாபிமானமற்ற இதயத்தை காட்சிப்படுத்திக் கொண்டிருக்க, கணவனோ தலைமறைவாகி விட்டான்..

சிரோமி எனும் அந்த ஆறரை வயதுப்பிள்ளை பூக்க முன்னரே கருகி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாள்..

பெற்றவளுக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டுள்ளதா.........தாய் மீள மகளைத் தேடி வருவாளா......தந்தை எங்கே இருக்கிறான்.......இனி அந்தப் பிள்ளையின் வாழ்க்கைக்கு யார் காவல்...இவை போன்ற பல வினாக்கள் எனக்குள் தொக்கிக் கிடக்கின்றன...!

வாழ்க்கையில் பிண்ணப்பட்ட வறுமையும், சபல புத்திக்காரக் கணவனின் புத்தியும் சேர்ந்து ஹேமாவின் வாழ்க்கையுடன் மட்டுமல்ல, அவள் வயிற்றில் கருவாகிய பாவத்திற்காய் அவள் மகளின் வாழ்வையும் விளையாடி விட்டன.  புழுதியில் வீணே வீசியெறியப்பட்டுள்ள அந்தக் கருகிய மலர்........இன்று அனாதையாய் விடியலின் முன் இருளாகி நிற்கின்றாள் தன் சந்தோஷங்களை யும் உதிர்த்தபடி !.....

லீலாவைப் போன்ற இரக்கமற்ற பிசாசுகளும் நாக்கறுபட்டு , தீக்குவியலுக்குள் தள்ளி விடப்பட்டு எரிக்கப்பட வேண்டும். இந்தக் கொடுமை இனி எந்த மலரையும் கசக்கி விடக்கூடாது என்பதே என் பிரார்த்தனையும் கூட !




No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!