About Me

2013/04/21

நவீன காதல்


உறவினர் வருகை கண்டு
பூரித்த மனசு கொஞ்சம்
மறந்ததே அவள் நினைவின்று!

துடித்திருப்பாளோ
அருகிலிருந்தால் கடித்து மிருப்பாளோ

"செல்"லுக்கினி விடுமுறையென்று
சொல்லிக் கொண்டாள் என் மனசோரம்!

அவள் வதை கூட தேன்கூடென்றும்
கள்ளின் மொழியென்றும்
இறுமாற முடியவில்லை

செல்லமென்றவள்
சொல்லிக் கொள்ளாமலே மறைந்து விட்டாள்

பேசா மடந்தை பேசாமலே
வாசமிழக்கச் செய்தாளோ கனவுகளை!

போடீ!

வழியனுப்பி வைத்தேன்
மீள என்னிடம் வராதேயென்று!


- Jancy Caffoor-
     21.04.2013

மனசோரம்



வீசும் காற்றில் விழுந்திருக்கும் இலை
அழவில்லை...........
அழிந்துவிட்டேனென!

உரமாகும் மகிழ்வில்
உரத்துச் சிரிக்கின்றது!

ஒவ்வொரு துன்பத்துக்குள் நன்மையுண்டு. அதை ஏனோ நாம் காலதாமதமாகித்தான் உணர்கின்றோம்!
-------------------------------------------------------- 
எட்டப்பன் கெட்டவன்தான்
கூடிக் கெடுத்தான் தன்னினத்தை!
இருந்தும்.............
கட்டபொம்பன் புகழ் பரப்பும்
சுட்டியும் அவனே!


நம்மை வீழ்த்துவதாய் நினைத்து செயற்படும் எதிரியின் விமர்சனங்கள் கூட நம்மை முன்னேற்றும் துடுப்புக்கள்!

---------------------------------------------------- 
என்னையே எடுத்துச் சென்றாய்
நான் திருப்பிக் கேட்பது உன் னிதயத்தை மட்டுமே!
------------------------------------------------------------------------------------------


ரசிக்கும் மனதிருந்தால்
இயற்கை கூட பேரழுகே!
ரசனை நம் வசமானால்
சோகம் கூட வெறுந் தூசே!
-------------------------------------------------- 


மௌனங்கள் வலிக்கலாம்........
ஆனால்...........
அதன் வலிமையில்தானே
உணர்வுகள் தம் மனதை மீளத் திரும்பிப் பார்க்கின்றன!

வலி கூட அழகான மொழிதான்!
------------------------------------------------------ 


அழகான ரோசாவை
ஆசை கொண்டு பறித்த போது........
விரலோரம் வழிந்தது
பூவின் நிறம் மெல்ல!
முள்ளோ...................
கள்ளமாய் சிரித்தது!

ஆசையும், அழகும் துன்பத்தின் வடிகால்கள். பலருக்கு பட்ட பின்னர்தான் புத்திக்குள் எட்டுது!
------------------------------------------------------ 


மாற்றங்கள் நிறைந்ததே வாழ்க்கை!
மாறும் உலகிற்கேற்ப ...............
தன் ஒழுக்க நெறி பிசகாமல் வாழ்வோர்
ஏற்றம் பெறுவார் எந்நாளும்!
------------------------------------------------------ 


தன் குறைகளையெல்லாம் தான் திருத்தார்
பிறர் நிறைகளைத் தானும் அறியார்...........
இவரெல்லாம் நன்மக்கள் எனின்
பாரெல்லாம் தலைகீழாய் சுழலும்!
------------------------------------------------------- 



ஆரயா.........சேட்டை விடுறது!
ஹன்ஸிகாவைக் காணவில்லை!


- Ms. Jancy Caffoor -





2013/04/20

இதோ என் வீடு



இதோ...........

என் வீடு!
வெறும் எலும்புக்கூடாகி...............

என் படுக்கையறையும்
படிப்பறையும்
முட்களின் சேமிப்பாய் உருமாறிக் கிடக்க

சுவற்றில் பதித்த கிறுக்கல்கள்
மழைநீரில் அழுதழிந்து பாசிக் காயங்களாய்
பரிகசித்து வியர்க்க....

வனாந்தரமாகிப் போன - என்
மனையின் கற்குவியலுக்குள்
தடம் பதிக்கின்றேன்

ஐயகோ.............

என் இராஜங்கத்தின் கிரீடங்கள்
கறையான் புற்றுக்களோடு
இம்சித்துக் கிடக்கின்றதே!!

என் கனவுப் புன்னகைகள் எல்லாம்
குருதிப் பிழம்பாகி
சீழ் வடிய.........

என் வீட்டோரக் கற்சிதைவுகள்
கண்ணீரைப் பிழிந்து
பால்யத்தை ஞாபகத்துள் நிரப்புகின்றது!

அம்மா..............
பூக்களின் சுவாசத்தில்
சுவாரஸியமாய் தன்னைக் கரைத்தவர்!

அழகு பார்த்து அழகு பார்த்து
பதியம் வைத்த
சிவப்பு ரோஜாக்கள்........
முற்றத்து மண்ணுக்குள் எச்சமாகியிருக்குமோ!

வீதியோரத்தில் தன் கிளைகளைப் பரப்பி
காற்றுக்குள் வாசம் நுழைத்த - எங்கள்
கறிவேப்பிலை மரங்கள்........
பறிப்பவர் யாருமின்றி ஏக்கத்தில் தன்னை
அழித்திருக்குமோ!

முற்றத்து நிழலாய் தன் முகம் பதித்த
சிறு நெல்லி கூட.......
தன் ஆயுள் குறைத்து ஆழ் துயிலில்!

எங்கள் வீட்டுப்பசுமையின் சுவடுகளிலெல்லாம்
கறைப் படிவுகளாய் சோகங்கள்.............
பெயர்த்தெடுக்க இன்னும் எத்தனை யுகங்கள்!

அம்மா கொஞ்சம் அழட்டுமா...
என் தாய் வீடு சிதைந்த வலியைக்
கரைக்க வேறு வழியின்றி..........

அழுகின்றேன் இன்னும் ஆழமாய்..
என்னுயிர் தன்னிதயம் துறந்து
வலிப்பதாய் உணர்வு........
விழிக் கதவுடைத்து கண்ணீரோ
அழையா விருந்தாளியாய் வெளி நடப்புச் செய்ய!

மீண்டும் அழுகின்றேன்...........
அந்த ஓர் நொடியில்
இவ்வுலகமே இடிந்து என் தலையில்
வீழ்வதாய் பிரமை!

மண் சோறாக்கி மண்குவியல் மட்டும்
இன்னும் மலையாகி குவிந்து.....
எத்தனை பிணங்களின் கல்லறையோ அவை!

குயில்கள் கூத்தாடும்
இளம் வேப்ப மரக் கிளைகள்..........
ஷெல் கண்டு வில்லொடித்திருக்குமோ!

அழுகின்றேன் இன்னும்......
என்னுடன் சேர்ந்து.........
பெற்றவளை வேரறுத்த வலியில்
என் பிறப்பிடமும் கதறுகின்றது...
அந்நியனாய் எனை விட்டு செல்லாதே என.....

எல்லாமே முடிந்து விட்டதா
என் பால்ய நினைவுகளின் பசுமைகள் மட்டும்
என் நினைவுக்குள் பதிவாக......!

எல்லாமே முடிந்து விட்டதா
யுத்தத்தின் எச்சத்தில் எம் வாழ்க்கை நொருங்க
எல்லாமே முடிந்து விட்டதா!

வினாக்கள் மட்டுமே என் வசம்!



2013/04/19

அதுவரை



காதல்................!

அதன் வாசத்தில்

காய்ந்து போன சருகெல்லாம்
புதிதாய் தளிர்க்கும் !

விஷம் கக்கும் கள்ளிப் பாலெல்லாம்
ஓளஷடதமாய்
உயிர் வருடும் மெல்ல!

ஒவ்வொரு அஸ்தமனத்திலும்
சூரிய உதயம்
தன்னை நிலைநாட்டிக் கொள்ளும்!

முட்கள் கூட பேனா முனையாகி
கவி சிந்தும்!

ஆகாய வெளியின் விசாலப் பரப்பில்
நாம் மட்டுமே உலா வருவதாய்
மனசு சொல்லிக் கொள்ளும்!

காதல் இனிமைதான்
எல்லோரும் சொல்வதைப் போல்
கனவுக்குள் அமிழ்ந்து கிடக்க!

வாழ்வை நன்கு உணர்ந்தபின்!
காதல் செய்யலாம்
வசந்தம் நம் வசமாகும்!

அதுவரை காத்திருப்போம்
உனக்கு நானாய்
எனக்கு நீயாய்!

- Jancy Caffoor-
     19.04.2013

வானவில்


தன்னைக் கருக்கி, மெழுகுதிரிக்கு ஒளியூட்டும் தீக்குச்சி!
தீக்குச்சியின் தியாகத்தை நினைத்து கண்ணீர் வடிக்கும் மெழுகுதிரி!

அன்பும் இவ்வாறே..........இருவரும் ஒருவரையொருவர் உணர்ந்து நேசத்தைப் பகிரும் போதே, அது ஆயுள் முழுதும் நீள்கின்றது!
-------------------------------------------------------------------------------------------


பயமென்ற ஒரு சொல்லே போதும். இயக்கமுள்ள நம் வாழ்வை முடிவுக்குக் கொண்டு வரும்.
----------------------------------------------------------------------------------

சவால்களுடன் நாம் போராடும் போராட்டக்களமே வாழ்க்கை. துணிவு, விவேகம், முயற்சி எனும் ஆயுதங்கள் நம்மை வெற்றி என்னும் பக்கம் தள்ளிச் செல்லும்.
---------------------------------------------------------------------------------------

பூமியைப் பிளந்து செல்லும் வேர்களால்தான் தண்டுகளும் உறுதியாகத் தாங்கப்படுகின்றன. அதனைப் போல் மனதைப் பிளக்கும் கஷ்டங்கள் வந்தால்தான் நம் மனதிலும் வாழ வேண்டுமென வைராக்கியமும் வளர்க்கப்படும். வாழ்க்கையில் நம்பிக்கை கொள்வோம். அவ் வாழ்வையும் வெற்றி கொள்வோம்.
-----------------------------------------------------------------------------------------


சந்தர்ப்பவாதங்களே நம்மைக் குற்றவாளியாக்குகின்றன. அப்பொழுதெழும் விமர்சனங்கள் கூட  நம்மை நோக்கி பிறரைத் திசை திருப்புகின்றன.
-------------------------------------------------------------------------------------------


ரசிக்கும் மனதிருந்தால்
இயற்கை கூட பேரழுகே!
ரசனை  நம் வசமானால்
சோகம் கூட வெறுந் தூசே!

 ------------------------------------------------------------------------------


உணர்வோடு, உயிரோடு
மனதோடு , வாழ்வோடு
என்னோடு, உம்மோடு
உலகத்தின் இயக்கத்தோடு
இரண்டறக் கலக்கும் எம் தமிழுக்கு
என்றும் வீர வணக்கம்!

- Ms. Jancy Caffoor -