About Me

2014/07/28

முதல் காதல்



ஒரு சிறுமி பூங்காவில் விளையாடிக் கொண்டிருக்கும்போது அழகான ஓவியமொன்றை கண்டெடுத்தாள். ரம்மியமான அந்த ஓவியம் அவள் மனதைக் கவர்ந்திழுக்கவே, அதனை பத்திரமாக தன் வீட்டுக்கு எடுத்துச் சென்று பத்திரப்படுத்தினாள். தினமும் ஐந்து நிமிடமாவது அந்த ஓவியத்தை பார்ப்பாள்.. ரசிப்பாள்.  மனமகிழ்வாள்.

காலம் உருண்டோடியது. அவளுக்கும் திருமணம் நடக்கின்றது. ஆனால் அவளின் ஓவிய ரசிப்பும் ஓயவில்லை. கணவன் உறங்கிய பின்னர் அதனை ரசிப்பது வழமையான விடயமாகி விட்டது.

ஒருநாள்

அவள் திருட்டுத்தனமாக ஓவியத்தை ரசித்துக் கொண்டிருந்தபோது கணவன் எதிரில் நின்றான்.

"கையில் என்ன வச்சிருக்கிறே" - இது அவன்

அவளோ பட்டென்று சொன்னாள்
 "இது என்னுடைய முதல் காதல்"

அவனும் அதனை வாங்கிப் பார்த்து விழிகளை விரித்தவாறே கூறினான்.

"இது நான் எனது ஒன்பதாவது வயதில் தொலைத்த சித்திரம்"

பார்த்தீர்களா......!

இந்த உலகம் சுற்றிக் கொண்டிருப்பது எங்கோ ஒரு மூலையில் நமக்காக அன்பு செலுத்தும் நெஞ்சமொன்றைத் தேடித்தர

அந்த உயிரை நாம் சந்தித்து விட்டால், அதன்பின்னர் நம் மனம் அந்த மனதின் நினைவுகளுடனேயே சுற்றுகின்றது.

- Jancy Caffoor-

சித்தத்தில்



தனிமை இனிமையானதுதான்...

ஆனால் அதைவிட இனிமையானது - தினமும்
அன்பானவர்களால் சூழ்ந்திருப்பது!

--------------------------------------------------------------------------------------


நம் வாழ்க்கையின் இயல்பு நிலையை திசைமாற்றும் ஓர் பாதை.......
அவசரமான முடிவெடுத்தலாகும்!

எந்த ஒரு விடயமும் அவசரமாக முடிவெடுக்கும்போது அங்கு உணர்ச்சிகளுக்கு மாத்திரமே இடமளிக்கின்றோம். புத்திசாலித்தனம் எங்கோ மறைந்து போகின்றது.

எனவேதான் .............

அவசரமான முடிவுகள்
அவசியமான நம் வாழ்க்கையின் நிம்மதியைக் கலைத்து விடுகின்றது!

----------------------------------------------------------------------------------------






நீயாகி



பூக்கள் விரியும் ஒலியில்
உன்
மூச்சுக்காற்றின் பேச்சும்
துல்லியமாய் கேட்கின்றது!

நீ தள்ளிப்போகும்
ஒவ்வொரு சுவட்டிலும் - என்
தவிப்புக்கள்
அனலைத் தேக்கி
உன் னிழலோரம் அலைகின்றது!

என் தவிப்புக்களின் சுமையேற்றம்
உயிர் கொஞ்சம் வருத்த
நாளை - நான்
வருவேன் உன் தாயகம் தேடி!

- Jancy Caffoor-
 28.07.2014

மௌனத்தால்


மௌனத்தால்
தினம்
எனைக் கொல்லாதே!

உன் சூரியவிழிப் பார்வையால்
உனக்காய் உருகும்
என் னாவியையும் உலர்த்தாதே!

உன் குறுநகையால்
நானாக்கும் குறுந்தொகையை- இனி
வெறுக்காதே!

என் அன்பே

உயிர்ப்பிச்சை கேட்கின்றேன்
வலி தந்து
என்னிதயம் கொல்லாதே!

- Jancy Caffoor-
 28.07.2014

நிலா மோனா - 6




நிசப்தத்தின் இம்சையில் - நீ
விட்டுச் செல்லும் மௌனமே
இனி யென் கவிதையாய்!

-----------------------------------------------------------------------------------


வான் விதைக்கும் வைரங்கள் நடுவே
நானும் முத்தாய் - உன்
மார்போரம் அணைந்திடும் தவத்திற்காய்

இருள் தேய்விலும்
காத்திருக்கு முன் நிலா நான்.......

நீயோ.......
எனை ரசிக்காதவனாய்
மேகத்திரைக்குள் மறைகின்றாய்!
------------------------------------------------------------------------------------

அன்பை வருடித் தந்தாய்....
உன்னில் உணர்ந்தேன் தாய்மையையும் தூய்மையையும்!