About Me

2019/06/23

"சீ " தனம்



பெண் மலர்களுக்கிடப்படும்
முள்வேலி

வாழ்க்கை வியாபாரத்திற்கான
முதலீடு

பெண்மை ஸ்பரிசங்களுக்கான
நுழைவுச்சீட்டு

ஏழைக்கன்னியரின் சுயம்வர
கைவிலங்கு

திருமணத்தின் வருங்காலத்திற்கான
உத்தரவாதம்!

ஆணிண் வாழ்வியலுக்காக பரிந்துரைக்கப்படும்
நன்கொடை

பணத்திற்கேற்ப விலை நிர்ணயிக்கப்படும்
பண்டம்

சொகுசு வாழ்விற்காக வழங்கப்படும்
அனுமதி

' சீ ' தனம் சொல்லாதோர் கையேந்தும்
பிச்சை

ஏழைகளின் கனவுகளுக்கு விதிக்கப்படும்
அபராதம்

சோம்பேறிகள் கணக்கில் வைக்கும்
அதிஷ்டலாபச் சீட்டு!


யுத்தம்





நிமிடங்களை யுகங்களாய் மாற்றிய யுத்தம்
உன்னை ................
வாசித்துச் சென்றதில் வலிப்புடன்
வீழ்ந்து கிடக்கின்றாய் அகதியாய்!

சுகம் மறந்த சுவாசம்
விட்டுச் சென்ற சோகங்களின் வரலாறாய் ........
விரல் பிடிக்கின்றாய் - உன்
வெற்றுடல்களில் பீதியை நிரப்பியவாறு!

யுத்த டயறிக்குள் வரிகளான - உன்
வாழ்க்கையின் தொடக்கத்தில்........
கழுகுகளும் காட்டேறிகளும் காவல் காக்கின்றன
உன் னிரத்தத்தை உறிஞ்சியவாறு!

வாழ்வை இன்னும் நீ
தொடங்கவேயில்லையில்லை
ஆனால்........
முடிவுரைகளின் விண்ணப்பங்கள்
உன்னிடம் வந்து குவிகின்றன ஆர்வமாய்!

இன்னும் நீ பூக்கவேயில்லை
முட்கள் குதறுகின்றன உன்
அழகான மேனியை சாம்பல் மேட்டுக்குள்
சிறைவைத் தழிக்க!..

உன் பிள்ளைச் சரிதத்தில்....
கறைகளாக்கப்பட்ட அகதி வாழ்வில்
வேரறுக்கப்பட்ட வசந்தங்களின் வலியே
உன் பேச்சொலியாய் உருளுது அகிலத்தில்!

மகளே.....!

உன் பிஞ்சு விழிக்  கனாக்களில்
விசம் தடவுமிந்த
சாத்தான்கள்........
இருந்தென்ன....இறந்தென்ன
அழிந்தே போகட்டும் ஓர் நாள்!


உன் விடியலுக்கு நாள் குறிக்குமிந்த
நரபலியினர் - அன்று
மரித்துப் போவார்  தம்
ஊழ்வினைப் பயனால்!

தோற்றுப் போன வசந்தங்கள்


சோலைக்குள் தீச்சுவாலைகள்
வேலியாய் முளைத்திருக்க.......
வறுமையின் முகவரியாய் இவர்கள்
வாழ்க்கை அடிக்கடி!

தோற்றுப் போன வசந்தங்கள்
இவர்களுக்கு.........
வேரறுந்து போனதில்.............
கண்ணீர்ச் சந்ததியினராய் - தம்மை
அறிவிப்புச் செய்கின்றனர் !

ஒட்டியுலர்ந்த மேனியில்
எட்டியுதைக்கும் என்புகளும்.......
ஏக்கம் நிறைந்த வாழ்வும்
இவர்களின்
உரிமைகளாய் பிசைந்து கிடக்க...

புறப்பட்டு விட்டனர்
பசியின் நிழல்களில் கோலம் போட்டே
தம் உயிரணுக்களில் மரணம் தேக்கி!

விருப்பம்

Image result for விருப்பம்

ஒரு விடயம் தேவை என்று எண்ணும் எண்ணமே விருப்பத்துக்கு வித்திடுவதாக உளவியல் மற்றும் சமூகவியல் நிபுணர்கள் கூறுகின்றார்கள்.  விருப்பம் என்பது மனதில் படிந்துள்ள ஆசைகளின் படிமம் ஆகும். உள்ளத்தின் எதிர்பார்ப்புக்கள்.  இதனை உள்ளத்தின் ஈர்ப்பு மையமாகமாகவும் கருதலாம். விருப்பம்  மனிதர்களுக்கிடையில் வேறுபடுவதால்தான் ஆசைகளின் அளவுகளும் வேறுபட்டு முரண்பாடுகள் தோன்றக் காரணமாகின்றன. ஆழ்மனதினை தொட்ட விருப்பங்கள் மாறுவதில்லை.  நம்மை தங்கி நிற்கும் மனதை போசிக்கக் கூடியது விருப்பு.  கால மாற்றத்தின் வேகத்திற்கு இது ஈடு கொடுக்கக் கூடியது.  

விருப்பு ஏற்படும் செயல்கள் நமக்குள் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன. அந்த ஆர்வ நிலையானது செய்யும் செயல்களில் தொய்வு ஏற்படாமல் தடுக்கின்றன.  விருப்போடு செய்கின்ற செயல்களுக்கு சக்தி அதிகம். எனவே அவை மாற்றங்களைக் கொண்டு வரக்கூடியவை. மனித வாழ்வில் ஒவ்வொரு வயதுக் கட்டமைப்பிலும் விருப்பங்களின் தன்மை மாறுபடுகின்றன.

ஒருவர் தனக்குப் பிடித்த ஒன்றை அல்லது தனக்கு பொருத்தமான ஒன்றை அடைய வேண்டும் என்ற உணர்வே விருப்பம் எனப்படுகிறது. உறவுகளில் ஏற்படுகின்ற விருப்பம் அன்பாக மாற்றப்படுகிறது. ஒன்றின் மீது ஏற்படும்  விருப்பத்தினால் மனம் முழுமையாக ஈர்க்கப்பட்டால் அவ்விருப்பின் எல்லையில் இருந்து விலகாமல் தன் விருப்பத்தை நிலை நாட்ட மனம் முழுமையாகப்   போராடும்.  

இன்று இந்த பூகோளத்தின் பல சவால்களுக்கும் மனிதன் தனது விருப்பினால் இயற்கையை வசியப்படுத்த எடுக்கும் முயற்சிகளே காரணமாக இருக்கின்றன. அளவுக்கதிகமான விருப்பு அழிவின் வாசற்படி  என்பதை பலர் காலம் கடந்தே உணர்கின்றார்கள். 

தேவைகளின் அடிப்படையில் இயற்கை பரிமாணம் அடைந்துள்ளது. ஒருவரின் தேவைகளை நாம் இனங்கண்டு நிறைவேற்றும்போது  அவர் நம் மீது விருப்பம் கொண்டிருப்பார். அவரின் பற்றுதல் அன்பாக மாறும். இதனால் இருவரின் உறவுகளும் உறுதியாகி  இறுக்கமான தொடர்பைப் பேணும்.

உணர்ச்சிமிகுந்த சுயநல நாட்டத்தின் காரணமாக ஏற்படும் விருப்பமானது பல திசை உறவுகளையும்  ஈர்த்து வைத்திருக்கின்றது. நமது மனம் பிடிக்காதவர் கள் எது சொன்னாலும் அவர்கள் கருத்துக்களை நாம் உள்வாங்கிக் கொள்வதில்லை.  முரண்பாடுகள் பிசைந்து   விலகிக் கொள்கின்றோம். காரணம் நமது மனம் விரும்பாத ஒன்றின் மீது ஆர்வமோ பற்றோ ஏற்படுவதில்லை. 

- Jancy Caffoor -
   23.06.2019